|
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
இயற்றிய
தேவாரம் (திருமுறை 7)
திரு சுந்தரமூர்த்தி நாயனார் திருவடிகளில் சமர்ப்பணம் 🌻🌻🌷🌷🌺🌺🌸🌸🌹🌹🪷🪷💐💐❤️🙏🏻👣🙇♂️🙇🏻♂️🙇♂️👣🙏🏻❤️💐🌹💐❤️🙏🪷🪷🌹🌹🌸🌸🌺🌺🌷🌷🌻🌻 |
|---|
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்) - தேவாரம் 7. ஏழாம் திருமுறை
சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
1. திருவெண்ணெய் நல்லூர் - பண் : இந்தளம்
#1
பித்தா பிறைசூடீ பெருமானே அருளாளா
எத்தால் மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
வைத்தாய் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அத்தா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே
மேல்
#2
நாயேன் பல நாளும் நினைப்பு இன்றி மனத்து உன்னை
பேயாய் திரிந்து எய்த்தேன் பெறல் ஆகா அருள் பெற்றேன்
வேய் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆயா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே
மேல்
#3
மன்னே மறவாதே நினைக்கின்றேன் மனத்து உன்னை
பொன்னே மணிதானே வயிரமே பொருது உந்தி
மின் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அன்னே உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே
மேல்
#4
முடியேன் இனி பிறவேன் பெறின் மூவேன் பெற்றம் ஊர்தீ
கொடியேன் பல பொய்யே உரைப்பேனை குறிக்கோள் நீ
செடி ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அடிகேள் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே
மேல்
#5
பாதம் பணிவார்கள் பெறும் பண்டம் அது பணியாய்
ஆதன் பொருள் ஆனேன் அறிவில்லேன் அருளாளா
தாது ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆதி உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே
மேல்
#6
தண் ஆர் மதிசூடீ தழல் போலும் திருமேனீ
எண்ணார் புரம் மூன்றும் எரியுண்ண நகைசெய்தாய்
மண் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அண்ணா உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே
மேல்
#7
ஊனாய் உயிர் ஆனாய் உடல் ஆனாய் உலகு ஆனாய்
வானாய் நிலன் ஆனாய் கடல் ஆனாய் மலை ஆனாய்
தேன் ஆர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆனாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே
மேல்
#8
ஏற்றார் புரம் மூன்றும் எரியுண்ண சிலை தொட்டாய்
தேற்றாதன சொல்லி திரிவேனோ செக்கர் வான் நீர்
ஏற்றாய் பெண்ணை தென்பால் வெண்ணெய் நல்லூர் அருள் துறையுள்
ஆற்றாய் உனக்கு ஆளாய் இனி அல்லேன் எனல் ஆமே
மேல்
#9
மழுவாள் வலன் ஏந்தீ மறைஓதி மங்கை_பங்கா
தொழுவார் அவர் துயர் ஆயின தீர்த்தல் உன தொழிலே
செழு வார் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
அழகா உனக்கு ஆளாய் இனி இல்லேன் எனல் ஆமே
மேல்
#10
கார் ஊர் புனல் எய்தி கரை கல்லி திரை கையால்
பார் ஊர் புகழ் எய்தி திகழ் பல் மா மணி உந்தி
சீர் ஊர் பெண்ணை தென்பால் வெண்ணெய்நல்லூர் அருள் துறையுள்
ஆரூரன் எம்பெருமாற்கு ஆள் அல்லேன் எனல் ஆமே
மேல்
2. திருப்பரங்குன்றம் - பண் : இந்தளம்
(திருக்கோத்திட்டையும் திருக்கோவலூரும்)
#11
கோத்திட்டையும் கோவலும் கோவில்கொண்டீர் உம்மை கொண்டு உழல்கின்றது ஓர் கொல்லை சில்லை
சே திட்டு குத்தி தெருவே திரியும் சில் பூதமும் நீரும் திசை திசையன
சோத்திட்டு விண்ணோர் பலரும் தொழ நும் அரை கோவணத்தோடு ஒரு தோல் புடை சூழ்ந்து
ஆர்த்திட்டதும் பாம்பு கை கொண்டதும் பாம்பு அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே
மேல்
#12
முண்டம் தரித்தீர் முதுகாடு உறைவீர் முழு நீறு மெய் பூசுதிர் மூக்க பாம்பை
கண்டத்திலும் தோளிலும் கட்டி வைத்தீர் கடலை கடைந்திட்டது ஓர் நஞ்சை உண்டீர்
பிண்டம் சுமந்து உம்மொடும் கூடமாட்டோம் பெரியாரொடு நட்பு இனிது என்று இருந்தும்
அண்டம் கடந்து அ புறத்தும் இருந்தீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே
மேல்
#13
மூடு ஆய முயலகன் மூக்க பாம்பு முடை நாறிய வெண் தலை மொய்த்த பல் பேய்
பாடாவரு பூதங்கள் பாய் புலி தோல் பரிசு ஒன்று அறியாதன பாரிடங்கள்
தோடு ஆர் மலர் கொன்றையும் துன் எருக்கும் துணை மா மணி நாகம் அரைக்கு அசைத்து ஒன்று
ஆடாதனவே செய்தீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே
மேல்
#14
மஞ்சு உண்ட மாலை மதி சூடு சென்னி மலையான்மடந்தை மணவாள நம்பி
பஞ்சு உண்ட அல்குல் பணை மென் முலையாளொடு நீரும் ஒன்றாய் இருத்தல் ஒழியீர்
நஞ்சு உண்டு தேவர்க்கு அமுதம் கொடுத்த நலம் ஒன்று அறியோம் உம் கை நாகம் அதற்கு
அஞ்சு உண்டு படம் அது போக விடீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே
மேல்
#15
பொல்லா புறங்காட்டகத்து ஆட்டு ஒழியீர் புலால் வாயன பேயொடு பூச்சு ஒழியீர்
எல்லாம் அறவீர் இதுவே அறியீர் என்று இரங்குவேன் எல்லியும் நண்பகலும்
கல்லால் நிழல் கீழ் ஒரு நாள் கண்டதும் கடம்பூர் கரக்கோயிலில் முன் கண்டதும்
அல்லால் விரகு ஒன்று இலம் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே
மேல்
#16
தென்னாத்தெனாத்தெத்தெனா என்று பாடி சில் பூதமும் நீரும் திசைதிசையன
பல் நான்மறை பாடுதிர் பாசூர் உளீர் படம்பக்கம் கொட்டும் திரு ஒற்றியூரீர்
பண்ஆர்மொழியானை ஓர்பங்கு உடையீர் படுகாட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியீர்
அண்ணாமலையேன் என்றீர் ஆரூர் உளீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே
மேல்
#17
சிங்கத்து உரி மூடுதிர் தேவர் கணம் தொழ நிற்றீர் பெற்றம் உகந்து ஏறிடுதிர்
பங்கம் பல பேசிட பாடும் தொண்டர்-தமை பற்றிக்கொண்டு ஆண்டுவிடவும்கில்லீர்
கங்கை சடையீர் உம் கருத்து அறியோம் கண்ணும் மூன்று உடையீர் கண்ணேயாய் இருந்தால்
அங்கத்து உறு நோய் களைந்து ஆளகில்லீர் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே
மேல்
#18
பிணி வண்ணத்த வல்வினை தீர்ந்து அருளீர் பெருங்காட்டகத்தில் பெரும் பேயும் நீரும்
துணிவண்ணத்தின் மேலும் ஓர் தோல் உடுத்து சுற்றும் நாகத்தராய் சுண்ண நீறு பூசி
மணி வண்ணத்தின் மேலும் ஓர் வண்ணத்தராய் மற்றும் மற்றும் பல்பல வண்ணத்தராய்
அணி வண்ணத்தராய் நிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே
மேல்
#19
கோள் ஆளிய குஞ்சரம் கோள் இழைத்தீர் மலையின் தலை அல்லது கோயில்கொள்ளீர்
வேள் ஆளிய காமனை வெந்து அழிய விழித்தீர் அது அன்றியும் வேய் புரையும்
தோளான் உமை நங்கை ஓர்பங்கு உடையீர் உடு கூறையும் சோறும் தந்து ஆளகில்லீர்
ஆள் ஆளியவேகிற்றீர் எம்பெருமான் அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே
மேல்
#20
பாரோடு விண்ணும் பகலும் ஆகி பனி மால் வரை ஆகி பரவை ஆகி
நீரோடு தீயும் நெடும் காற்றும் ஆகி நெடு வெள்ளிடை ஆகி நிலனும் ஆகி
தேர் ஓட வரை எடுத்த அரக்கன் சிரம் பத்து இறுத்தீர் உம் செய்கை எல்லாம்
ஆரோடும் கூடா அடிகேள் இது என் அடியோம் உமக்கு ஆட்செய அஞ்சுதுமே
மேல்
#21
அடிகேள் உமக்கு ஆட்செய அஞ்சுதும் என்று அமரர் பெருமானை ஆரூரன் அஞ்சி
முடியால் உலகு ஆண்ட மூவேந்தர் முன்னே மொழிந்த ஆறும் ஓர் நான்கும் ஓர் ஒற்றினையும்
படியா இவை கற்று வல்ல அடியார் பரங்குன்றம் மேய பரமன் அடிக்கே
குடி ஆகி வானோர்க்கும் ஓர் கோவும் ஆகி குல வேந்தராய் விண் முழுது ஆள்பவரே
மேல்
3. திருநெல்வாயில் அரத்துறை - பண் : இந்தளம்
#22
கல்-வாய் அகிலும் கதிர் மா மணியும் கலந்து உந்தி வரும் நிலவின் கரை மேல்
நெல்வாயில் அரத்துறை நீடு உறையும் நில வெண் மதி சூடிய நின்மலனே
நல் வாய் இல்செய்தார் நடந்தார் உடுத்தார் நரைத்தார் இறந்தார் என்று நானிலத்தில்
சொல்லாய் கழிகின்றது அறிந்து அடியேன் தொடர்ந்தேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே
மேல்
#23
கறி மா மிளகும் மிகு வல் மரமும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல்
நெறி வார்குழலார் அவர் காண நடம்செய் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
வறிதே நிலையாத இ மண்ணுலகில் நரன் ஆக வகுத்தனை நான் நிலையேன்
பொறிவாயில் இ ஐந்தினையும் அவிய பொருது உன் அடியே புகும் சூழல் சொல்லே
மேல்
#24
புற்று ஆடு அரவம் அரை ஆர்த்து உகந்தாய் புனிதா பொரு வெள் விடைஊர்தியினாய்
எற்றே ஒரு கண் இலன் நின்னை அல்லால் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மற்றே ஒரு பற்று இலன் எம்பெருமான் வண்டு ஆர் குழலாள் மங்கை_பங்கினனே
அற்று ஆர் பிறவி கடல் நீந்தி ஏறி அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே
மேல்
#25
கோடு உயர் கோங்கு அலர் வேங்கை அலர் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல்
நீடு உயர் சோலை நெல்வாயில் அரத்துறை நின்மலனே நினைவார் மனத்தாய்
ஓடு புனல் கரை ஆம் இளமை உறங்கி விழித்தால் ஒக்கும் இ பிறவி
வாடி இருந்து வருந்தல்செய்யாது அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே
மேல்
#26
உலவும் முகிலின் தலை கல் பொழிய உயர் வேயொடு இழி நிலவின் கரை மேல்
நிலவும் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
புலன் ஐந்தும் மயங்கி அகம் குழைய பொரு வேல் ஓர் நமன் தமர்தாம் நலிய
அலமந்து மயங்கி அயர்வதன் முன் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே
மேல்
#27
ஏலம் இலவங்கம் எழில் கனகம் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல்
நீலம் மலர் பொய்கையில் அன்னம் மலி நெல்வாயில் அரத்துறையாய் ஒரு நெல்
வால் ஊன்ற வருந்தும் உடம்பு இதனை மகிழாது அழகா அலந்தேன் இனி யான்
ஆல நிழலில் அமர்ந்தாய் அமரா அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே
மேல்
#28
சிகரம் முகத்தில் திரள் ஆர் அகிலும் மிக உந்தி வரும் நிலவின் கரை மேல்
நிகர் இல் மயிலார் அவர்தாம் பயிலும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
மகரக்குழையாய் மணக்கோலம் அதே பிணக்கோலம் அது ஆம் பிறவி இதுதான்
அகரம் முதலின் எழுத்து ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே
மேல்
#29
திண் தேர் நெடு வீதி இலங்கையர்_கோன் திரள் தோள் இரு பஃதும் நெரிந்து அருளி
ஞெண்டு ஆடு நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
பண்டே மிக நான் செய்த பாக்கியத்தால் பரஞ்சோதி நின் நாமம் பயிலப்பெற்றேன்
அண்டா அமரர்க்கு அமரர் பெருமான் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே
மேல்
#30
மாணா உரு ஆகி ஓர் மண் அளந்தான் மலர்மேலவன் நேடியும் காண்பு அரியாய்
நீள்நீள் முடி வானவர் வந்து இறைஞ்சும் நெல்வாயில் அரத்துறை நின்மலனே
வாண் ஆர் நுதலால் வலைப்பட்டு அடியேன் பலவின் கனி ஈ அது போல்வதன் முன்
ஆணொடு பெண் ஆம் உரு ஆகி நின்றாய் அடியேன் உய்யப்போவது ஓர் சூழல் சொல்லே
மேல்
#31
நீர் ஊரும் நெடு வயல் சூழ் புறவின் நெல்வாயில் அரத்துறை நின்மலனை
தேர் ஊர் நெடு வீதி நல் மாடம் மலி தென் நாவலர்_கோன் அடி தொண்டன் அணி
ஆரூரன் உரைத்தன நல் தமிழின் மிகு மாலை ஓர் பத்து இவை கற்று வல்லார்
கார் ஊர் களி வண்டு அறை யானை மன்னர் அவர் ஆகி ஓர் விண் முழுது ஆள்பவரே
மேல்
4. திருஅஞ்சைக்களம் - பண் : இந்தளம்
#32
தலைக்கு தலை மாலை அணிந்தது என்னே சடை மேல் கங்கை வெள்ளம் தரித்தது என்னே
அலைக்கும் புலி தோல் கொண்டு அசைத்தது என்னே அதன் மேல் கத நாகம் கச்சு ஆர்த்தது என்னே
மலைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அலைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
மேல்
#33
பிடித்து ஆட்டி ஓர் நாகத்தை பூண்டது என்னே பிறங்கும் சடை மேல் பிறை சூடிற்று என்னே
பொடித்தான் கொண்டு மெய் முற்றும் பூசிற்று என்னே புகர் ஏறு உகந்து ஏறல் புரிந்தது என்னே
மடித்து ஓட்டந்து வன் திரை எற்றியிட வளர் சங்கம் அங்காந்து முத்தம் சொரிய
அடித்து ஆர் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
மேல்
#34
சிந்தித்து எழுவார்க்கு நெல்லி கனியே சிறியார் பெரியார் மனத்து ஏறலுற்றால்
முந்தி தொழுவார் இறவார் பிறவார் முனிகள் முனியே அமரர்க்கு அமரா
சந்தி தட மால் வரை போல் திரைகள் தணியாது இடறும் கடல் அம் கரை மேல்
அந்தி தலை செக்கர் வானே ஒத்தியால் அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
மேல்
#35
இழைக்கும் எழுத்துக்கு உயிரே ஒத்தியால் இலையே ஒத்தியால் உளையே ஒத்தியால்
குழைக்கும் பயிர்க்கு ஓர் புயலே ஒத்தியால் அடியார்-தமக்கு ஓர் குடியே ஒத்தியால்
மழைக்கு நிகர் ஒப்பன வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அழைக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
மேல்
#36
வீடின் பயன் என் பிறப்பின் பயன் என் விடை ஏறுவது என் மத யானை நிற்க
கூடும் மலைமங்கை ஒருத்தி உடன் சடை மேல் கங்கையாளை நீ சூடிற்று என்னே
பாடும் புலவர்க்கு அருளும் பொருள் என் நிதியம் பல செய்த கல செலவில்
ஆடும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
மேல்
#37
இரவத்து இடுகாட்டு எரி ஆடிற்று என்னே இறந்தார் தலையில் பலி கோடல் என்னே
பரவி தொழுவார் பெறு பண்டம் என்னே பரமா பரமேட்டி பணித்து அருளாய்
உரவத்தொடு சங்கமொடு இப்பி முத்தம் கொணர்ந்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அரவ கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
மேல்
#38
ஆக்கும் அழிவும் அமைவும் நீ என்பன் நான் சொல்லுவார் சொல்பொருள் அவை நீ என்பன் நான்
நாக்கும் செவியும் கண்ணும் நீ என்பன் நான் நலனே இனி நான் உனை நன்கு உணர்ந்தேன்
நோக்கும் நிதியம் பல எத்தனையும் கலத்தில் புக பெய்து கொண்டு ஏற நுங்கி
ஆர்க்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
மேல்
#39
வெறுத்தேன் மனை வாழ்க்கையை விட்டொழித்தேன் விளங்கும் குழை காது உடை வேதியனே
இறுத்தாய் இலங்கைக்கு இறை ஆயவனை தலை பத்தொடு தோள் பல இற்று விழ
கறுத்தாய் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கடுக பிரமன் தலை ஐந்திலும் ஒன்று
அறுத்தாய் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
மேல்
#40
பிடிக்கு களிறே ஒத்தியால் எம்பிரான் பிரமற்கும் பிரான் மற்றை மாற்கும் பிரான்
நொடிக்கும் அளவில் புரம் மூன்று எரிய சிலை தொட்டவனே உனை நான் மறவேன்
வடிக்கின்றன போல் சில வன் திரைகள் வலித்து எற்றி முழங்கி வலம்புரி கொண்டு
அடிக்கும் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனே
மேல்
#41
எம்தம் அடிகள் இமையோர் பெருமான் எனக்கு என்றும் அளிக்கும் மணி_மிடற்றன்
அம் தண் கடல் அம் கரை மேல் மகோதை அணி ஆர் பொழில் அஞ்சைக்களத்து அப்பனை
மந்தம் முழவும் குழலும் இயம்பும் வளர் நாவலர்_கோன் நம்பி ஊரன் சொன்ன
சந்தம் மிகு தண் தமிழ் மாலைகள் கொண்டு அடி வீழ வல்லார் தடுமாற்று இலரே
மேல்
5. திருஓணகாந்தந்தளி - பண் : இந்தளம்
#42
நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யலுற்றார்
கையில் ஒன்றும் காணம் இல்லை கழல் அடி தொழுது உய்யின் அல்லால்
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி ஆழ்குழிப்பட்டு அழுந்துவேனுக்கு
உய்யும் ஆறு ஒன்று அருளிச்செய்யீர் ஓணகாந்தன்தளி உளீரே
மேல்
#43
திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல் வாய் திறவாள் கணபதியேல் வயிறுதாரி
அம் கை வேலோன் குமரன் பிள்ளை தேவியார் கொற்று அடியாளால்
உங்களுக்கு ஆட்செய்யமாட்டோம் ஓணகாந்தன்தளி உளீரே
மேல்
#44
பெற்ற போழ்தும் பெறாத போழ்தும் பேணி உன் கழல் ஏத்துவார்கள்
மற்று ஓர் பற்று இலர் என்று இரங்கி மதியுடையவர் செய்கை செய்யீர்
அற்ற போழ்தும் அலந்த போழ்தும் ஆபற்காலத்து அடிகேள் உம்மை
ஒற்றிவைத்து இங்கு உண்ணல் ஆமோ ஓணகாந்தன்தளி உளீரே
மேல்
#45
வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும் வாய் திறந்து ஒன்று
இல்லை என்னீர் உண்டும் என்னீர் எம்மை ஆள்வான் இருப்பது என் நீர்
பல்லை உக்க படு தலையில் பகல் எலாம் போய் பலி திரிந்து இங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழியமாட்டீர் ஓணகாந்தன்தளி உளீரே
மேல்
#46
கூடிக்கூடி தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே
ஆடி பாடி அழுது நெக்கு அங்கு அன்புடையவர்க்கு இன்பம் ஓரீர்
தேடித்தேடி திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்கமாட்டீர்
ஓடி போகீர் பற்றும் தாரீர் ஓணகாந்தன்தளி உளீரே
மேல்
#47
வார் இரும் குழல் மை வாள் நெடும் கண் மலைமகள் மது விம்மு கொன்றை
தார் இரும் தட மார்பு நீங்கா தையலாள் உலகு உய்ய வைத்த
கார் இரும் பொழில் கச்சி மூதூர் காமக்கோட்டம் உண்டாக நீர் போய்
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே ஓணகாந்தன்தளி உளீரே
மேல்
#48
பொய்மையாலே போது போக்கி புறத்தும் இல்லை அகத்தும் இல்லை
மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர் மேலைநாள் ஒன்று இடவும்கில்லீர்
எம்மை பெற்றால் ஏதும் வேண்டீர் ஏதும் தாரீர் ஏதும் ஓரீர்
உம்மை அன்றே எம்பெருமான் ஓணகாந்தன்தளி உளீரே
மேல்
#49
வலையம் வைத்த கூற்றம் மீவான் வந்து நின்ற வார்த்தை கேட்டு
சிலை அமைத்த சிந்தையாலே திருவடி தொழுது உய்யின் அல்லால்
கலை அமைத்த காம செற்ற குரோத லோப மத வரூடை
உலை அமைத்து இங்கு ஒன்றமாட்டேன் ஓணகாந்தன்தளி உளீரே
மேல்
#50
வாரம் ஆகி திருவடிக்கு பணிசெய் தொண்டன் பெறுவது என்னே
ஆரம் பாம்பு வாழ்வது ஆரூர் ஒற்றியூரேல் உமது அன்று
தாரம் ஆக கங்கையாளை சடையில் வைத்த அடிகேள் உம்தம்
ஊரும் காடு உடையும் தோலே ஓணகாந்தன்தளி உளீரே
மேல்
#51
ஓ வணம் ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன்தளி உளார்தாம்
ஆவணம் செய்து ஆளும் கொண்டு அரை துகிலொடு பட்டு வீக்கி
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன
பா வண தமிழ் பத்தும் வல்லார்க்கு பறையும் தாம் செய்த பாவம்தானே
மேல்
6. திருவெண்காடு - பண் : இந்தளம்
#52
படம் கொள் நாகம் சென்னி சேர்த்தி பாய் புலி தோல் அரையில் வீக்கி
அடங்கலார் ஊர் எரிய சீறி அன்று மூவர்க்கு அருள்புரிந்தீர்
மடங்கலானை செற்று உகந்தீர் மனைகள்-தோறும் தலை கை ஏந்தி
விடங்கர் ஆகி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே
மேல்
#53
இழித்து உகந்தீர் முன்னை வேடம் இமையவர்க்கும் உரைகள் பேணாது
ஒழித்து உகந்தீர் நீர் முன் கொண்ட உயர் தவத்தை அமரர் வேண்ட
அழிக்க வந்த காமவேளை அவனுடைய தாதை காண
விழித்து உகந்த வெற்றி என்னே வேலை சூழ் வெண்காடனீரே
மேல்
#54
படைகள் ஏந்தி பாரிடமும் பாதம் போற்ற மாதும் நீரும்
உடை ஓர் கோவணத்தர் ஆகி உண்மை சொல்லீர் உண்மை அன்றே
சடைகள் தாழ கரணம் இட்டு தன்மை பேசி இல் பலிக்கு
விடை அது ஏறி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே
மேல்
#55
பண் உளீராய் பாட்டும் ஆனீர் பத்தர் சித்தம் பரவி கொண்டீர்
கண் உளீராய் கருத்தில் உம்மை கருதுவார்கள் காணும் வண்ணம்
மண் உளீராய் மதியம் வைத்தீர் வானநாடர் மருவி ஏத்த
விண் உளீராய் நிற்பது என்னே வேலை சூழ் வெண்காடனீரே
மேல்
#56
குடம் எடுத்து நீரும் பூவும் கொண்டு தொண்டர் ஏவல் செய்ய
நடம் எடுத்து ஒன்று ஆடி பாடி நல்குவீர் நீர் புல்கும் வண்ணம்
வடம் எடுத்த கொங்கை மாது ஓர்பாகம் ஆக வார் கடல்-வாய்
விடம் மிடற்றில் வைத்தது என்னே வேலை சூழ் வெண்காடனீரே
மேல்
#57
மாறுபட்ட வனத்து அகத்தில் மருவ வந்த வன் களிற்றை
பீறி இட்டம் ஆக போர்த்தீர் பெய் பலிக்கு என்று இல்லம்-தோறும்
கூறுபட்ட கொடியும் நீரும் குலாவி ஏற்றை அடர ஏறி
வேறுபட்டு திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே
மேல்
#58
காதலாலே கருது தெண்டர் காரணத்தீர் ஆகி நின்றே
பூதம் பாட புரிந்து நட்டம் புவனி ஏத்த ஆட வல்லீர்
நீதி ஆக எழில் ஓசை நித்தர் ஆகி சித்தர் சூழ
வேதம் ஓதி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே
மேல்
#59
குரவு கொன்றை மதியம் மத்தம் கொங்கை மாதர் கங்கை நாகம்
விரவுகின்ற சடை உடையீர் விருத்தர் ஆனீர் கருத்தில் உம்மை
பரவும் என் மேல் பழிகள் போக்கீர் பாகம் ஆய மங்கை அஞ்சி
வெருவ வேழம் செற்றது என்னே வேலை சூழ் வெண்காடனீரே
மேல்
#60
மாடம் காட்டும் கச்சி உள்ளீர் நிச்சயத்தால் நினைப்புளார்-பால்
பாடும் காட்டில் ஆடல் உள்ளீர் பரவும் வண்ணம் எங்ஙனேதான்
நாடும் காட்டில் அயனும் மாலும் நணுகா வண்ணம் அனலும் ஆய
வேடம் காட்டி திரிவது என்னே வேலை சூழ் வெண்காடனீரே
மேல்
#61
விரித்த வேதம் ஓத வல்லார் வேலை சூழ் வெண்காடு மேய
விருத்தன் ஆய வேதன்-தன்னை விரி பொழில் சூழ் நாவலூரன்
அருத்தியால் ஆரூரன் தொண்டன் அடியன் கேட்ட மாலை பத்தும்
தெரித்த வண்ணம் மொழிய வல்லார் செம்மையாளர் வான் உளாரே
மேல்
7. திருஎதிர்கொள்பாடி - பண் : இந்தளம்
#62
மத்த யானை ஏறி மன்னர் சூழ வருவீர்காள்
செத்த போதில் ஆரும் இல்லை சிந்தையுள் வைம்-மின்கள்
வைத்த உள்ளம் மாற்ற வேண்டா வம்-மின் மனத்தீரே
அத்தர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
மேல்
#63
தோற்றம் உண்டேல் மரணம் உண்டு துயரம் மனை வாழ்க்கை
மாற்றம் உண்டேல் வஞ்சம் உண்டு நெஞ்ச மனத்தீரே
நீற்றர் ஏற்றர் நீல_கண்டர் நிறை புனல் நீள் சடை மேல்
ஏற்றர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
மேல்
#64
செடி கொள் ஆக்கை சென்றுசென்று தேய்ந்து ஒல்லை வீழா முன்
வடி கொள் கண்ணார் வஞ்சனையுள் பட்டு மயங்காதே
கொடி கொள் ஏற்றர் வெள்ளை நீற்றர் கோவண ஆடை உடை
அடிகள் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
மேல்
#65
வாழ்வர் கண்டீர் நம்முள் ஐவர் வஞ்ச மனத்தீரே
யாவராலும் இகழப்பட்டு இங்கு அல்லலில் வீழாதே
மூவராயும் இருவராயும் முதல்வன் அவனே ஆம்
தேவர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
மேல்
#66
அரித்து நம் மேல் ஐவர் வந்து இங்கு ஆறலைப்பான்-பொருட்டால்
சிரித்த பல் வாய் வெண் தலை போய் ஊர்ப்புறம் சேரா முன்
வரி கொள் துத்தி வாள் அரக்கர் வஞ்சம் மதில் மூன்றும்
எரித்த வில்லி எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
மேல்
#67
பொய்யர் கண்டீர் வாழ்க்கையாளர் பொத்து அடைப்பான்-பொருட்டால்
மையல் கொண்டீர் எம்மோடு ஆடி நீரும் மனத்தீரே
நைய வேண்டா இம்மை ஏத்த அம்மை நமக்கு அருளும்
ஐயர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
மேல்
#68
கூசம் நீக்கி குற்றம் நீக்கி செற்றம் மனம் நீக்கி
வாசம் மல்கு குழலினார்கள் வஞ்சம் மனை வாழ்க்கை
ஆசை நீக்கி அன்பு சேர்த்தி என்பு அணிந்து ஏறு ஏறும்
ஈசர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
மேல்
#69
இன்பம் உண்டேல் துன்பம் உண்டு ஏழை மனை வாழ்க்கை
முன்பு சொன்ன மோழைமையால் முட்டை மனத்தீரே
அன்பர் அல்லால் அணிகொள் கொன்றை அடிகள் அடி சேரார்
என்பர் கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
மேல்
#70
தந்தையாரும் தவ்வையாரும் எள்தனை சார்வு ஆகார்
வந்து நம்மோடு உள் அளாவி வான நெறி காட்டும்
சிந்தையீரே நெஞ்சினீரே திகழ் மதியம் சூடும்
எந்தை கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
மேல்
#71
குருதி சோர ஆனையின் தோல் கொண்ட குழல் சடையன்
மருது கீறி ஊடு போன மால் அயனும் அறியா
சுருதியார்க்கும் சொல்ல ஒண்ணா சோதி எம் ஆதியான்
கருது கோயில் எதிர்கொள்பாடி என்பது அடைவோமே
மேல்
#72
முத்து நீற்று பவள மேனி செஞ்சடையான் உறையும்
பத்தர் பந்தந்து எதிர்கொள்பாடி பரமனையே பணிய
சித்தம்வைத்த தொண்டர்தொண்டன் சடையன் அவன் சிறுவன்
பத்தன் ஊரன் பாடல் வல்லார் பாதம் பணிவாரே
மேல்
8. திரு ஆரூர் - பண் : இந்தளம்
#73
இறைகளோடு இசைந்த இன்பம் இன்பத்தோடு இசைந்த வாழ்வு
பறை கிழித்து அனைய போர்வை பற்றி யான் நோக்கினேற்கு
திறை கொணர்ந்து ஈண்டி தேவர் செம்பொனும் மணியும் தூவி
அறை கழல் இறைஞ்சும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
மேல்
#74
ஊன் மிசை உதிர குப்பை ஒரு பொருள் இலாத மாயம்
மான் மறித்து அனைய நோக்கின் மடந்தைமார் மதிக்கும் இந்த
மானுட பிறவி வாழ்வு வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்
ஆன் நல் வெள் ஏற்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே
மேல்
#75
அறுபதும் பத்தும் எட்டும் ஆறினோடு அஞ்சு நான்கும்
துறு பறித்து அனைய நோக்கின் சொல்லிற்று ஒன்று ஆக சொல்லார்
நறு மலர் பூவும் நீரும் நாள்-தொறும் வணங்குவார்க்கு
அறிவினை கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
மேல்
#76
சொல்லிடில் எல்லை இல்லை சுவை இலா பேதை வாழ்வு
நல்லது ஓர் கூரை புக்கு நலம் மிக அறிந்தேன்அல்லேன்
மல்லிகை மாடம் நீடு மருங்கொடு நெருங்கி எங்கும்
அல்லி வண்டு இயங்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
மேல்
#77
நரம்பினோடு எலும்பு கட்டி நசையினோடு இசைவு ஒன்று இல்லா
குரம்பை-வாய் குடியிருந்து குலத்தினால் வாழமாட்டேன்
விரும்பிய கமழும் புன்னை மாதவி தொகுதி என்றும்
அரும்பு வாய் மலரும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
மேல்
#78
மணம் என மகிழ்வர் முன்னே மக்கள் தாய் தந்தை சுற்றம்
பிணம் என சுடுவார் பேர்த்தே பிறவியை வேண்டேன் நாயேன்
பணையிடை சோலை-தோறும் பைம் பொழில் வளாகத்து எங்கள்
அணைவினை கொடுக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
மேல்
#79
தாழ்வு எனும் தன்மை விட்டு தனத்தையே மனத்தில் வைத்து
வாழ்வதே கருதி தொண்டர் மறுமைக்கு ஒன்று ஈயகில்லார்
ஆழ் குழிப்பட்ட போது அலக்கண் இல் ஒருவர்க்கு ஆவர்
யாழ் முயன்று இருக்கும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
மேல்
#80
உதிரம் நீர் இறைச்சி குப்பை எடுத்தது மல குகை மேல்
வருவ மாய கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்
கரிய மால் அயனும் தேடி கழல் முடி காணமாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே அஞ்சினேனே
மேல்
#81
பொய் தன்மைத்து ஆய மாய போர்வையை மெய் என்று எண்ணும்
வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி நான் விரும்பகில்லேன்
முத்தினை தொழுது நாளும் முடிகளால் வணங்குவார்க்கு
அ தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே அஞ்சினேனே
மேல்
#82
தம் சொல் ஆர் அருள் பயக்கும் தமியனேன் தட முலை கண்
அம்சொலார் பயிலும் ஆரூர் அப்பனை ஊரன் அஞ்சி
செஞ்சொலால் நயந்த பாடல் சிந்தியா ஏத்த வல்லார்
நஞ்சு உலாம் கண்டத்து எங்கள் நாதனை நண்ணுவாரே
மேல்
9. திருஅரிசிற்கரைப்புத்தூர் - பண் : இந்தளம்
#83
மலைக்கு மகள் அஞ்ச மத கரியை உரித்தீர் எரித்தீர் வரு முப்புரங்கள்
சிலைக்கும் கொலை சே உகந்து ஏறு ஒழியீர் சில் பலிக்கு இல்கள்-தொறும் செலவு ஒழியீர்
கலை கொம்பும் கரி மருப்பும் இடறி கலவம் மயில் பீலியும் கார் அகிலும்
அலைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே
மேல்
#84
அருமலரோன் சிரம் ஒன்று அறுத்தீர் செறுத்தீர் அழல் சூலத்தில் அந்தகனை
திருமகள்_கோன் நெடு மால் பல நாள் சிறப்பு ஆகிய பூசனை செய் பொழுதில்
ஒரு மலர் ஆயிரத்தில் குறைவா நிறைவு ஆக ஓர் கண் மலர் சூட்டலுமே
பொரு விறல் ஆழி புரிந்து அளித்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே
மேல்
#85
தரிக்கும் தரை நீர் தழல் காற்று அந்தரம் சந்திரன் சவிதா இயமானன் ஆனீர்
சரிக்கும் பலிக்கு தலை அங்கை ஏந்தி தையலார் பெய்ய கொள்வது தக்கது அன்றால்
முரிக்கும் தளிர் சந்தனத்தொடு வேயும் முழங்கும் திரை கைகளால் வாரி மோதி
அரிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே
மேல்
#86
கொடி உடை மும்மதில் வெந்து அழிய குன்றம் வில்லா நாணியின் கோல் ஒன்றினால்
இடுபட எய்து எரித்தீர் இமைக்கும் அளவில் உமக்கு ஆர் எதிர் எம்பெருமான்
கடி படு பூங்கணையான் கருப்பு சிலை காமனை வேவ கடைக்கண்ணினால்
பொடிபட நோக்கியது என்னை-கொல்லோ பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே
மேல்
#87
வணங்கி தொழுவார் அவர் மால் பிரமன் மற்றும் வானவர் தானவர் மா முனிவர்
உணங்கல் தலையில் பலி கொண்டல் என்னே உலகங்கள் எல்லாம் உடையீர் உரையீர்
இணங்கி கயல் சேல் இள வாளை பாய இனம் கெண்டை துள்ள கண்டிருந்த அன்னம்
அணங்கி குணம் கொள் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே
மேல்
#88
அகத்து அடிமை செயும் அந்தணன்தான் அரிசில் புனல் கொண்டு வந்து ஆட்டுகின்றான்
மிக தளர்வு எய்தி குடத்தையும் நும் முடி மேல் விழுத்திட்டு நடுங்குதலும்
வகுத்து அவனுக்கு நித்தல் படியும் வரும் என்று ஒரு காசினை நின்ற நன்றி
புகழ் துணை கை புகச்செய்து உகந்தீர் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே
மேல்
#89
பழிக்கும் பெரும் தக்கன் எச்சம் அழிய பகலோன் முதலா பல தேவரையும்
தெழித்திட்டு அவர் அங்கம் சிதைத்தருளும் செய்கை என்னை-கொலோ மை கொள் செம் மிடற்றீர்
விழிக்கும் தழை பீலியொடு ஏலம் உந்தி விளங்கும் மணி முத்தொடு பொன் வரன்றி
அழிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே
மேல்
#90
பறை கண் நெடும் பேய் கணம் பாடல்செய்ய குறள் பாரிடங்கள் பறை தாம் முழக்க
பிறை கொள் சடை தாழ பெயர்ந்து நட்டம் பெருங்காடு அரங்கு ஆக நின்று ஆடல் என்னே
கறை கொள் மணி_கண்டமும் திண் தோள்களும் கரங்கள் சிரம்-தன்னிலும் கச்சும் ஆக
பொறி கொள் அரவம் புனைந்தீர் பலவும் பொழில் ஆர் திரு புத்தூர் புனிதனீரே
மேல்
#91
மழை கண் மடவாளை ஓர்பாகம் வைத்தீர் வளர் புன் சடை கங்கையை வைத்து உகந்தீர்
முழை கொள் அரவொடு என்பு அணிகலனா முழு நீறு மெய் பூசுதல் என்னை-கொலோ
கழை கொள் கரும்பும் கதலி கனியும் கமுகின் பழுக்காயும் கவர்ந்து கொண்டு இட்டு
அழைக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே
மேல்
#92
கடிக்கும் அரவால் மலையால் அமரர் கடலை கடைய எழு காளகூடம்
ஒடிக்கும் உலகங்களை என்று அதனை உமக்கே அமுது ஆக உண்டீர் உமிழீர்
இடிக்கும் மழை வீழ்த்து இழித்திட்டு அருவி இருபாலும் ஓடி இரைக்கும் திரை கை
அடிக்கும் புனல் சேர் அரிசில் தென்கரை அழகு ஆர் திரு புத்தூர் அழகனீரே
மேல்
#93
கார் ஊர் மழை பெய்து பொழி அருவி கழையோடு அகில் உந்திட்டு இரு கரையும்
போர் ஊர் புனல் சேர் அரிசில் தென்கரை பொழில் ஆர் திரு புத்தூர் புனிதர்-தம்மை
ஆரூரன் அரும் தமிழ் ஐந்தினொடு ஐந்து அழகால் உரைப்பார்களும் கேட்பவரும்
சீர் ஊர்தரு தேவர் கணங்களொடும் இணங்கி சிவலோகம் அது எய்துவரே
மேல்
10. திருக்கச்சியனேகதங்காவதம் - பண் : இந்தளம்
#94
தேன் நெய் புரிந்து உழல் செம் சடை எம்பெருமானது இடம் திகழ் ஐங்கணை அ
கோனை எரித்து எரி ஆடி இடம் குலவானது இடம் குறையா மறை ஆம்
மானை இடத்தது ஓர் கையன் இடம் மதம் மாறுபட பொழியும் மலை போல்
யானை உரித்த பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே
மேல்
#95
கூறு நடை குழி கண் பகு வாயன பேய் உகந்து ஆட நின்று ஓரி இட
வேறுபட குடக திலை அம்பலவாணன் நின்று ஆடல் விரும்பும் இடம்
ஏறு விடை கொடி எம்பெருமான் இமையோர் பெருமான் உமையாள்_கணவன்
ஆறு சடைக்கு உடை அப்பன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே
மேல்
#96
கொடிகளிடை குயில் கூவும் இடம் மயில் ஆலும் இடம் மழுவாள் உடைய
கடி கொள் புனல் சடை கொண்ட நுதல் கறை_கண்டன் இடம் பிறை துண்டம் முடி
செடி கொள் வினை பகை தீரும் இடம் திரு ஆரும் இடம் திரு மார்பு அகலத்து
அடிகள் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே
மேல்
#97
கொங்கு நுழைத்தன வண்டு அறை கொன்றையும் கங்கையும் திங்களும் சூடு சடை
மங்குல் நுழை மலை மங்கையை நங்கையை பங்கினில் தங்க உவந்து அருள்செய்
சங்கு குழை செவி கொண்டு அருவி திரள் பாய அவியா தழல் போல் உடை தம்
அங்கை மழு திகழ் கையன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே
மேல்
#98
பைத்த பட தலை ஆடு அரவம் பயில்கின்ற இடம் பயில புகுவார்
சித்தம் ஒரு நெறி வைத்த இடம் திகழ்கின்ற இடம் திருவான் அடிக்கே
வைத்த மனத்தவர் பத்தர் மனம்கொள வைத்த இடம் மழுவாள் உடைய
அத்தன் இடம் அழல்_வண்ணன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே
மேல்
#99
தண்டம் உடை தருமன் தமர் என் தமரை செயும் வன் துயர் தீர்க்கும் இடம்
பிண்டம் உடை பிறவி தலை நின்று நினைப்பவர் ஆக்கையை நீக்கும் இடம்
கண்டம் உடை கரு நஞ்சு கரந்த பிரானது இடம் கடல் ஏழு கடந்து
அண்டம் உடை பெருமானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே
மேல்
#100
கட்டு மயக்கம் அறுத்தவர் கைதொழுது ஏத்தும் இடம் கதிரோன் ஒளியால்
விட்ட இடம் விடை ஊர்தி இடம் குயில் பேடை தன் சேவலொடு ஆடும் இடம்
மட்டு மயங்கி அவிழ்ந்த மலர் ஒரு மாதவியோடு மணம் புணரும்
அட்ட புயங்க பிரானது இடம் கலி கச்சி அனேகதங்காவதமே
மேல்
#101
புல்லி இடம் தொழுது உய்தும் என்னாதவர்-தம் புரம் மூன்றும் பொடிப்படுத்த
வில்லி இடம் விரவாது உயிர் உண்ணும் வெம் காலனை கால்கொடு வீந்து அவிய
கொல்லி இடம் குளிர் மாதவி மவ்வல் குரா வகுளம் குருக்கத்தி புன்னை
அல்லியிடை பெடை வண்டு உறங்கும் கலி கச்சி அனேகதங்காவதமே
மேல்
#102
சங்கையவர் புணர்தற்கு அரியான் தளவு ஏல் நகையாள் தவிரா மிகு சீர்
மங்கை அவள் மகிழ சுடுகாட்டிடை நட்டம் நின்று ஆடிய சங்கரன் எம்
அங்கையில் நல் அனல் ஏந்துமவன் கனல் சேர் ஒளி அன்னது ஓர் பேர் அகலத்து
அங்கையவன் உறைகின்ற இடம் கலி கச்சி அனேகதங்காவதமே
மேல்
#103
வீடு பெற பல ஊழிகள் நின்று நினைக்கும் இடம் வினை தீரும் இடம்
பீடு பெற பெரியோர் திடம் கொண்டு மேவினர்-தங்களை காக்கும் இடம்
பாடும் இடத்து அடியான் புகழ் ஊரன் உரைத்த இ மாலைகள் பத்தும் வல்லார்
கூடும் இடம் சிவலோகன் இடம் கலி கச்சி அனேகதங்காவதமே
மேல்
11. திருப்பூவணம் - பண் : இந்தளம்
#104
திரு உடையார் திருமால் அயனாலும்
உரு உடையார் உமையாளை ஒர்பாகம்
பரிவு உடையார் அடையார் வினை தீர்க்கும்
புரிவு உடையார் உறை பூவணம் ஈதோ
மேல்
#105
எண்ணி இருந்தும் கிடந்தும் நடந்தும்
அண்ணல் எனா நினைவார் வினை தீர்ப்பார்
பண் இசை ஆர் மொழியார் பலர் பாட
புண்ணியனார் உறை பூவணம் ஈதோ
மேல்
#106
தெள்ளிய பேய் பல பூதம் அவற்றொடு
நள்ளிருள் நட்டம் அது ஆடல் நவின்றோர்
புள்ளுவர் ஆகுமவர்க்கு அவர் தாமும்
புள்ளுவனார் உறை பூவணம் ஈதோ
மேல்
#107
நிலன் உடை மான் மறி கையது தெய்வ
கனல் உடை மா மழு ஏந்தி ஓர் கையில்
அனல் உடையார் அழகு ஆர்தரு சென்னி
புனல் உடையார் உறை பூவணம் ஈதோ
மேல்
#108
நடை உடை நல் எருது ஏறுவர் நல்லார்
கடைகடை-தோறு இடு-மின் பலி என்பார்
துடி இடை நல் மடவாளொடு மார்பில்
பொடி அணிவார் உறை பூவணம் ஈதோ
மேல்
#109
மின்அனையாள் திரு மேனி விளங்க ஒர்
தன் அமர் பாகம் அது ஆகிய சங்கரன்
முன் நினையார் புரம் மூன்று எரியூட்டிய
பொன் அனையான் உறை பூவணம் ஈதோ
மேல்
#110
மிக்கு இறை ஏயவன் துன்மதியாய்விட
நக்கு இறையே விரலால் இற ஊன்றி
நெக்கு இறையே நினைவார் தனி நெஞ்சம்
புக்கு உறைவான் உறை பூவணம் ஈதோ
மேல்
#111
சீரின் மிக பொலியும் திரு பூவணம்
ஆர இருப்பிடமா உறைவான்-தனை
ஊரன் உரைத்த சொல் மாலைகள் பத்து இவை
பாரில் உரைப்பவர் பாவம் அறுப்பரே
மேல்
12. திருநாட்டுத்தொகை - பண் : இந்தளம்
#112
வீழ காலனை கால்கொடு பாய்ந்த விலங்கலான்
கூழை ஏறு உகந்தான் இடம்கொண்டதும் கோவலூர்
தாழையூர் தகட்டூர் தக்களூர் தருமபுரம்
வாழை காய்க்கும் வளர் மருகல்நாட்டு மருகலே
மேல்
#113
அண்டத்து அண்டத்தின் அ புறத்து ஆடும் அமுதன் ஊர்
தண்டந்தோட்டம் தண்டங்குறை தண்டலை ஆலங்காடு
கண்டல் முண்டல்கள் சூழ் கழிப்பாலை கடற்கரை
கொண்டல்நாட்டு கொண்டல் குறுக்கைநாட்டு குறுக்கையே
மேல்
#114
மூலனூர் முதல் ஆய முக்கண்ணன் முதல்வனூர்
நாவனூர் நரை ஏறு உகந்து ஏறிய நம்பன் ஊர்
கோலம் நீற்றன் குற்றாலம் குரங்கணில்முட்டமும்
வேலனூர் வெற்றியூர் வெண்ணிக்கூற்றத்து வெண்ணியே
மேல்
#115
தேங்கூரும் திரு சிற்றம்பலமும் சிராப்பள்ளி
பாங்கு ஊர் எங்கள் பிரான் உறையும் கடம்பந்துறை
பூங்கூரும் பரமன் பரஞ்சோதி பயிலும் ஊர்
நாங்கூர் நாட்டு நாங்கூர் நறையூர்நாட்டு நறையூரே
மேல்
#116
குழலை வென்ற மொழி மடவாளை ஓர்கூறன் ஆம்
மழலை ஏற்று மணாளன் இடம் தட மால் வரை
கிழவன் கீழைவழி பழையாறு கிழையமும்
மிழலைநாட்டு மிழலை வெண்ணிநாட்டு புரிசையே
மேல்
#117
தென்னூர் கைம்மை திரு சுழியல் திரு கானப்பேர்
பன் ஊர் புக்கு உறையும் பரமர்க்கு இடம் பாய் நலம்
என் ஊர் எங்கள் பிரான் உறையும் திரு தேவனூர்
பொன்னூர்நாட்டு பொன்னூர் புரிசைநாட்டு புரிசையே
மேல்
#118
ஈழநாட்டு மாதோட்டம் தென்நாட்டு இராமேச்சுரம்
சோழநாட்டு துருத்தி நெய்த்தானம் திருமலை
ஆழி ஊர் அளநாட்டுக்கு எல்லாம் அணி ஆகிய
கீழையில் அரனார்க்கு இடம் கிள்ளிகுடி அதே
மேல்
#119
நாளும் நன்னிலம் தென் பனையூர் வட கஞ்சனூர்
நீள நீள் சடையான் நெல்லிக்காவு நெடுங்களம்
காள_கண்டன் உறையும் கடைமுடி கண்டியூர்
வேளார்நாட்டு வேளூர் விளத்தூர்நாட்டு விளத்தூரே
மேல்
#120
தழலும் மேனியன் தையல் ஓர்பாகம் அமர்ந்தவன்
தொழலும் தொல்வினை தீர்க்கின்ற சோதி சோற்றுத்துறை
கழலும் கோவை உடையவன் காதலிக்கும் இடம்
பழனம் பாம்பணி பாம்புரம் தஞ்சை தஞ்சாக்கையே
மேல்
#121
மை கொள் கண்டன் எண் தோளன் முக்கண்ணன் வலஞ்சுழி
பை கொள் வாள் அரவு ஆட்டி திரியும் பரமன் ஊர்
செய்யில் வாளைகள் பாய்ந்து உகளும் திரு புன்கூர் நன்று
ஐயன் மேய பொழில் அணி ஆவடுதுறை அதே
மேல்
#122
பேணி நாடு அதனில் திரியும் பெருமான்-தனை
ஆணையா அடியார்கள் தொழப்படும் ஆதியை
நாணி ஊரன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொல்
பாணியால் இவை ஏந்துவார் சேர் பரலோகமே
மேல்
13. திருத்துறையூர் - பண் : தக்கராகம்
#123
மலை ஆர் அருவி திரள் மா மணி உந்தி
குலை ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
கலை ஆர் அல்குல் கன்னியர் ஆடும் துறையூர்
தலைவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே
மேல்
#124
மத்தம் மத யானையின் வெண் மருப்பு உந்தி
முத்தம் கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
பத்தர் பயின்று ஏத்தி பரவும் துறையூர்
அத்தா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே
மேல்
#125
கந்தம் கமழ் கார் அகில் சந்தனம் உந்தி
செம் தண் புனல் வந்து இழி பெண்ணை வட-பால்
மந்தி பல மா நடம் ஆடும் துறையூர்
எந்தாய் உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே
மேல்
#126
அரும்பு ஆர்ந்தன மல்லிகை சண்பகம் சாடி
சுரும்பு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
கரும்பு ஆர் மொழி கன்னியர் ஆடும் துறையூர்
விரும்பா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே
மேல்
#127
பாடு ஆர்ந்தன மாவும் பலாக்களும் சாடி
நாடு ஆர வந்து எற்றி ஒர் பெண்ணை வட-பால்
மாடு ஆர்ந்தன மாளிகை சூழும் துறையூர்
வேடா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே
மேல்
#128
மட்டு ஆர் மலர் கொன்றையும் வன்னியும் சாடி
மொட்டு ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
கொட்டு ஆட்டொடு பாட்டு ஒலி ஓவா துறையூர்
சிட்டா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே
மேல்
#129
மாது ஆர் மயில் பீலியும் வெண் நுரை உந்தி
தாது ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
போது ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்
நாதா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே
மேல்
#130
கொய்யா மலர் கோங்கொடு வேங்கையும் சாடி
செய் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
மை ஆர் தடங்கண்ணியர் ஆடும் துறையூர்
ஐயா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே
மேல்
#131
விண் ஆர்ந்தன மேகங்கள் நின்று பொழிய
மண் ஆர கொணர்ந்து எற்றி ஓர் பெண்ணை வட-பால்
பண் ஆர் மொழி பாவையர் ஆடும் துறையூர்
அண்ணா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே
மேல்
#132
மா வாய் பிளந்தானும் மலர்மிசையானும்
ஆவா அவர் தேடி திரிந்து அலமந்தார்
பூ ஆர்ந்தன பொய்கைகள் சூழும் துறையூர்
தேவா உனை வேண்டிக்கொள்வேன் தவ நெறியே
மேல்
#133
செய் ஆர் கமலம் மலர் நாவலூர் மன்னன்
கையால் தொழுது ஏத்தப்படும் துறையூர் மேல்
பொய்யா தமிழ் ஊரன் உரைத்தன வல்லார்
மெய்யே பெறுவார்கள் தவ நெறிதானே
மேல்
14. திருப்பாச்சிலாச்சிராமம் - பண் : தக்கராகம்
#134
வைத்தனன் தனக்கே தலையும் என் நாவும் நெஞ்சமும் வஞ்சம் ஒன்று இன்றி
உய்த்தனன் தனக்கே திருவடிக்கு அடிமை உரைத்த-கால் உவமனே ஒக்கும்
பைத்த பாம்பு ஆர்த்து ஓர் கோவணத்தோடு பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பித்தரே ஒத்து ஓர் நச்சிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார்
மேல்
#135
அன்னையே என்னேன் அத்தனே என்னேன் அடிகளே அமையும் என்று இருந்தேன்
என்னையும் ஒருவன் உளன் என்று கருதி இறைஇறை திருவருள் காட்டார்
அன்னம் ஆம் பொய்கை சூழ்தரு பாச்சிலாச்சிராமத்து உறை அடிகள்
பின்னையே அடியார்க்கு அருள்செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார்
மேல்
#136
உற்றபோது அல்லால் உறுதியை உணரேன் உள்ளமே அமையும் என்று இருந்தேன்
செற்றவர் புரம் மூன்று எரி எழ செற்ற செம் சடை நஞ்சு அடை கண்டர்
அற்றவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும்
பெற்றபோது உகந்து பெறாவிடில் இகழில் இவர் அலாது இல்லையோ பிரானார்
மேல்
#137
நா சில பேசி நமர் பிறர் என்று நன்று தீது என்கிலர் மற்று ஓர்
பூச்சு இலை நெஞ்சே பொன் விளை கழனி புள் இனம் சிலம்பும் ஆம் பொய்கை
பாச்சிலாச்சிராமத்து அடிகள் என்று இவர்தாம் பலரையும் ஆட்கொள்வர் பரிந்து ஓர்
பேச்சு இலர் ஒன்றை தரஇலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார்
மேல்
#138
வரிந்த வெம் சிலையால் அந்தரத்து எயிலை வாட்டிய வகையினரேனும்
புரிந்த அ நாளே புகழ்தக்க அடிமை போகும் நாள் வீழும் நாள் ஆகி
பரிந்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும்
பிரிந்து இறைப்போதில் பேர்வதேயாகில் இவர் அலாது இல்லையோ பிரானார்
மேல்
#139
செடி தவம் செய்வார் சென்றுழி செல்லேன் தீவினை செற்றிடும் என்று
அடித்தவம் அல்லால் ஆரையும் அறியேன் ஆவதும் அறிவர் எம் அடிகள்
படை தலை சூலம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பிடித்த வெண் நீறே பூசுவதானால் இவர் அலாது இல்லையோ பிரானார்
மேல்
#140
கையது கபாலம் காடு உறை வாழ்க்கை கட்டங்கம் ஏந்திய கையர்
மெய்யது புரி நூல் மிளிரும் புன் சடை மேல் வெண் திங்கள் சூடிய விகிர்தர்
பை அரவு அல்குல் பாவையர் ஆடும் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
மெய்யரே ஒத்து ஓர் பொய் செய்வதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார்
மேல்
#141
நிணம் படும் உடலை நிலைமை என்று ஓரேன் நெஞ்சமே தஞ்சம் என்று இருந்தேன்
கணம் படிந்து ஏத்தி கங்குலும் பகலும் கருத்தினால் கைதொழுது எழுவேன்
பணம் படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பிணம் படு காட்டில் ஆடுவதாகில் இவர் அலாது இல்லையோ பிரானார்
மேல்
#142
குழைத்து வந்து ஓடி கூடுதி நெஞ்சே குற்றேவல் நாள்-தொறும் செய்வான்
இழைத்த நாள் கடவார் அன்பிலரேனும் எம்பெருமான் என்று எப்போதும்
அழைத்தவர்க்கு அருள்செய் பாச்சிலாச்சிராமத்து அடிகள்தாம் யாது சொன்னாலும்
பிழைத்தது பொறுத்து ஒன்று ஈகிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார்
மேல்
#143
துணிப்படும் உடையும் சுண்ண வெண் நீறும் தோற்றமும் சிந்தித்து காணில்
மணி படு கண்டனை வாயினால் கூறி மனத்தினால் தொண்டனேன் நினைவேன்
பணி படும் அரவம் பற்றிய கையர் பாச்சிலாச்சிராமத்து எம் பரமர்
பிணிப்பட ஆண்டு பணிப்பிலராகில் இவர் அலாது இல்லையோ பிரனார்
மேல்
#144
ஒருமையே அல்லேன் எழுமையும் அடியேன் அடியவர்க்கு அடியனும் ஆனேன்
உரிமையால் உரியேன் உள்ளமும் உருகும் ஒண் மலர் சேவடி காட்டாய்
அருமை ஆம் புகழார்க்கு அருள்செயும் பாச்சிலாச்சிராமத்து எம் அடிகள்
பெருமைகள் பேசி சிறுமைகள் செய்யில் இவர் அலாது இல்லையோ பிரானார்
மேல்
#145
ஏசின அல்ல இகழ்ந்தன அல்ல எம்பெருமான் என்று எப்போதும்
பாயின புகழான் பாச்சிலாச்சிராமத்து அடிகளை அடி தொழ பல் நாள்
வாயினால் கூறி மனத்தினால் நினைவான் வள வயல் நாவல் ஆரூரன்
பேசின பேச்சை பொறுக்கிலராகில் இவர் அலாது இல்லையோ பிரானார்
மேல்
15. திருநாட்டியத்தான்குடி - பண் : தக்கராகம்
#146
பூண் நாண் ஆவது ஓர் அரவம் கண்டு அஞ்சேன் புறங்காட்டு ஆடல் கண்டு இகழேன்
பேணீராகிலும் பெருமையை உணர்வேன் பிறவேனாகிலும் மறவேன்
காணீராகிலும் காண்பன் என் மனத்தால் கருதீராகிலும் கருதி
நானேல் உம் அடி பாடுதல் ஒழியேன் நாட்டியத்தான்குடி நம்பீ
மேல்
#147
கச்சு ஏர் பாம்பு ஒன்று கட்டி நின்று இடுகாட்டு எல்லியில் ஆடலை கவர்வன்
துச்சேன் என் மனம் புகுந்திருக்கின்றமை சொல்லாய் திப்பிய மூர்த்தீ
வைச்சே இடர்களை களைந்திட வல்ல மணியே மாணிக்க_வண்ணா
நச்சேன் ஒருவரை நான் உம்மை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ
மேல்
#148
அஞ்சாதே உமக்கு ஆட்செய வல்லேன் யாதினுக்கு ஆசைப்படுகேன்
பஞ்சு ஏர் மெல் அடி மா மலைமங்கை_பங்கா எம் பரமேட்டீ
மஞ்சு ஏர் வெண் மதி செம் சடை வைத்த மணியே மாணிக்க_வண்ணா
நஞ்சு ஏர் கண்டா வெண்தலைஏந்தீ நாட்டியத்தான்குடி நம்பீ
மேல்
#149
கல்லேன்அல்லேன் நின் புகழ் அடிமை கல்லாதே பல கற்றேன்
நில்லேன்அல்லேன் நின் வழி நின்றார் தம்முடை நீதியை நினைய
வல்லேன்அல்லேன் பொன் அடி பரவ மாட்டேன் மறுமையை நினைய
நல்லேன்அல்லேன் நான் உமக்கு அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ
மேல்
#150
மட்டு ஆர் பூம் குழல் மலைமகள்_கணவனை கருதார்-தமை கருதேன்
ஒட்டீராகிலும் ஒட்டுவன் அடியேன் உம் அடி அடைந்தவர்க்கு அடிமை
பட்டேனாகிலும் பாடுதல் ஒழியேன் பாடியும் நாடியும் அறிய
நட்டேனாதலால் நான் மறக்கில்லேன் நாட்டியத்தான்குடி நம்பீ
மேல்
#151
பட பால் தன்மையின் நான் பட்டது எல்லாம் படுத்தாய் என்று அல்லல் பறையேன்
குட பாச்சில் உறை கோ குளிர் வானே கோனே கூற்று உதைத்தானே
மட பால் தயிரொடு நெய் மகிழ்ந்து ஆடும் மறைஓதி மங்கை_பங்கா
நடப்பீராகிலும் நடப்பன் உம் அடிக்கே நாட்டியத்தான்குடி நம்பீ
மேல்
#152
ஐ வாய் அரவினை மதியுடன் வைத்த அழகா அமரர்கள் தலைவா
எய்வான் வைத்தது ஓர் இலக்கினை அணைதர நினைத்தேன் உள்ளம் உள்ளளவும்
உய்வான் எண்ணி வந்து உம் அடி அடைந்தேன் உகவீராகிலும் உகப்பன்
நைவான் அன்று உமக்கு ஆட்பட்டது அடியேன் நாட்டியத்தான்குடி நம்பீ
மேல்
#153
கலியேன் மானுட வாழ்க்கை ஒன்று ஆக கருதிடின் கண்கள் நீர் பில்கும்
பலி தேர்ந்து உண்பது ஓர் பண்பு கண்டு இகழேன் பசுவே ஏறிலும் பழியேன்
வலியேயாகிலும் வணங்குதல் ஒழியேன் மாட்டேன் மறுமையை நினையேன்
நலியேன் ஒருவரை நான் உமை அல்லால் நாட்டியத்தான்குடி நம்பீ
மேல்
#154
குண்டாடி சமண் சாக்கிய பேய்கள் கொண்டாராகிலும் கொள்ள
கண்டாலும் கருதேன் எருது ஏறும் கண்ணா நின் அலது அறியேன்
தொண்டாடி தொழுவார் தொழ கண்டு தொழுதேன் என் வினை போக
நண்டு ஆடும் வயல் தண்டலை வேலி நாட்டியத்தான்குடி நம்பீ
மேல்
#155
கூடா மன்னரை கூட்டத்து வென்ற கொடிறன் கோட்புலி சென்னி
நாடு ஆர் தொல்புகழ் நாட்டியத்தான்குடி நம்பியை நாளும் மறவா
சேடு ஆர் பூம் குழல் சிங்கடி அப்பன் திரு ஆரூரன் உரைத்த
பாடீராகிலும் பாடு-மின் தொண்டீர் பாட நும் பாவம் பற்று அறுமே
மேல்
16. திருக்கலயநல்லூர் - பண் : தக்கராகம்
#156
குரும்பை முலை மலர் குழலி கொண்ட தவம் கண்டு குறிப்பினொடும் சென்று அவள்-தன் குணத்தினை நன்கு அறிந்து
விரும்பு வரம் கொடுத்து அவளை வேட்டு அருளிச்செய்த விண்ணவர்_கோன் கண்நுதலோன் மேவிய ஊர் வினவில்
அரும்பு அருகே சுரும்பு அருவ அறுபதம் பண் பாட அணி மயில்கள் நடம் ஆடும் அணி பொழில் சூழ் அயலில்
கரும்பு அருகே கருங்குவளை கண்வளரும் கழனி கமலங்கள் முகம் மலரும் கயலநல்லூர் காணே
மேல்
#157
செரு மேவு சலந்தரனை பிளந்த சுடர் ஆழி செம் கண் மலர் பங்கயமா சிறந்தானுக்கு அருளி
இருள் மேவும் அந்தகன் மேல் திரிசூலம் பாய்ச்சி இந்திரனை தோள் முரித்த இறையவன் ஊர் வினவில்
பெரு மேதை மறை ஒலியும் பேரி முழவு ஒலியும் பிள்ளை இனம் துள்ளி விளையாட்டு ஒலியும் பெருக
கரு மேதி புனல் மண்ட கயல் மண்ட கமலம் களி வண்டின் கணம் இரியும் கலயநல்லூர் காணே
மேல்
#158
இண்டை மலர் கொண்டு மணல் இலிங்கம் அது இயற்றி இனத்து ஆவின் பால் ஆட்ட இடறிய தாதையை தாள்
துண்டம் இடு சண்டி அடி அண்டர் தொழுது ஏத்த தொடர்ந்து அவனை பணிகொண்ட விடங்கனது ஊர் வினவில்
மண்டபமும் கோபுரமும் மாளிகை சூளிகையும் மறை ஒலியும் விழவு ஒலியும் மறுகு நிறைவு எய்தி
கண்டவர்கள் மனம் கவரும் புண்டரிக பொய்கை காரிகையார் குடைந்து ஆடும் கலயநல்லூர் காணே
மேல்
#159
மலைமடந்தை விளையாடி வளை ஆடு கரத்தால் மகிழ்ந்து அவள் கண் புதைத்தலுமே வல் இருளாய் எல்லா
உலகுடன்தான் மூட இருள் ஓடும் வகை நெற்றி ஒற்றைக்கண் படைத்து உகந்த உத்தமன் ஊர் வினவில்
அலை அடைந்த புனல் பெருகி யானை மருப்பு இடறி அகிலொடு சந்து உந்தி வரும் அரிசிலின் தென் கரை மேல்
கலை அடைந்து கலி கடி அந்தணர் ஓம புகையால் கண முகில் போன்ற அணி கிளரும் கலயநல்லூர் காணே
மேல்
#160
நிற்பானும் கமலத்தில் இருப்பானும் முதலா நிறைந்து அமரர் குறைந்து இரப்ப நினைந்தருளி அவர்க்காய்
வெற்பு ஆர் வில் அரவு நாண் எரி அம்பால் விரவார் புரம் மூன்றும் எரிவித்த விகிர்தன் ஊர் வினவில்
சொல்பால பொருள்பால சுருதி ஒரு நான்கும் தோத்திரமும் பல சொல்லி துதித்து இறைதன் திறத்தே
கற்பாரும் கேட்பாருமாய் எங்கும் நன்கு ஆர் கலை பயில் அந்தணர் வாழும் கலயநல்லூர் காணே
மேல்
#161
பெற்றிமை ஒன்று அறியாத தக்கனது வேள்வி பெரும் தேவர் சிரம் தோள் பல் கரம் பீடு அழிய
செற்று மதி கலை சிதைய திரு விரலால் தேய்வித்து அருள் பெருகு சிவபெருமான் சேர்தரும் ஊர் வினவில்
தெற்று கொடி முல்லையொடு மல்லிகை செண்பகமும் திரை பொருது வரு புனல் வேர் அரிசிலின் தென் கரை மேல்
கற்று இனம் நல் கரும்பின் முளை கறி கற்க கறவை கமழ் கழுநீர் கவர் கழனி கலயநல்லூர் காணே
மேல்
#162
இலங்கையர்_கோன் சிரம் பத்தோடு இருபது திண் தோளும் இற்று அலற ஒற்றை விரல் வெற்பு அதன் மேல் ஊன்றி
நிலம் கிளர் நீர் நெருப்பொடு காற்று ஆகாசம் ஆகி நிற்பனவும் நடப்பன ஆம் நின்மலன் ஊர் வினவில்
பலங்கள் பல திரை உந்தி பரு மணி பொன் கொழித்து பாதிரி சந்து அகிலினொடு கேதகையும் பருகி
கலங்கு புனல் அலம்பி வரும் அரிசிலின் தென் கரை மேல் கயல் உகளும் வயல் புடை சூழ் கலயநல்லூர் காணே
மேல்
#163
மால் அயனும் காண்பு அரிய மால் எரியாய் நிமிர்ந்தோன் வன்னி மதி சென்னி மிசை வைத்தவன் மொய்த்து எழுந்த
வேலை விடம் உண்ட மணி_கண்டன் விடை ஊரும் விமலன் உமையவளோடு மேவிய ஊர் வினவில்
சோலை மலி குயில் கூவ கோல மயில் ஆல சுரும்பொடு வண்டு இசை முரல பசும் கிளி சொல் துதிக்க
காலையிலும் மாலையிலும் கடவுள் அடி பணிந்து கசிந்த மனத்தவர் பயிலும் கலயநல்லூர் காணே
மேல்
#164
பொரும் பலம் அது உடை அசுரன் தாரகனை பொருது பொன்றுவித்த பொருளினை முன் படைத்து உகந்த புனிதன்
கரும்பு விலின் மலர் வாளி காமன் உடல் வேவ கனல் விழித்த கண்நுதலோன் கருதும் ஊர் வினவில்
இரும் புனல் வெண் திரை பெருகி ஏலம் இலவங்கம் இரு கரையும் பொருது அலைக்கும் அரிசிலின் தென் கரை மேல்
கரும் புனை வெண் முத்து அரும்பி பொன் மலர்ந்து பவள கவின் காட்டும் கடி பொழில் சூழ் கலயநல்லூர் காணே
மேல்
#165
தண் கமல பொய்கை புடை சூழ்ந்து அழகு ஆர் தலத்தில் தடம் கொள் பெருங்கோயில்-தனில் தக்க வகையாலே
வண் கமலத்து அயன் முன்நாள் வழிபாடு செய்ய மகிழ்ந்து அருளி இருந்த பரன் மருவிய ஊர் வினவில்
வெண் கவரி கரும் பீலி வேங்கையொடு கோங்கின் விரை மலரும் விரவு புனல் அரிசிலின் தென் கரை மேல்
கண் கமுகின் பூம்பாளை மது வாசம் கலந்த கமழ் தென்றல் புகுந்து உலவு கலயநல்லூர் காணே
மேல்
#166
தண் புனலும் வெண் மதியும் தாங்கிய செஞ்சடையன் தாமரையோன் தலை கலனா காமரம் முன் பாடி
உண் பலி கொண்டு உழல் பரமன் உறையும் ஊர் நிறை நீர் ஒழுகு புனல் அரிசிலின் தென் கலயநல்லூர் அதனை
நண்பு உடைய நன் சடையன் இசை ஞானி சிறுவன் நாவலர்_கோன் ஆரூரன் நாவின் நயந்து உரைசெய்
பண் பயிலும் பத்தும் இவை பத்திசெய்து நித்தம் பாட வல்லார் அல்லலொடு பாவம் இலர் தாமே
மேல்
17. திருவெண்ணெய்நல்லூர், திருநாவலூர் - பண் : நட்டராகம்
#167
கோவலன் நான்முகன் வானவர்_கோனும் குற்றேவல் செய்ய
மேவலர் முப்புரம் தீ எழுவித்தவர் ஓர் அம்பினால்
ஏவலனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட
நாவலனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே
மேல்
#168
தன்மையினால் அடியேனை தாம் ஆட்கொண்ட நாள் சபை முன்
வன்மைகள் பேசிட வன் தொண்டன் என்பது ஓர் வாழ்வு தந்தார்
புன்மைகள் பேசவும் பொன்னை தந்து என்னை போகம் புணர்த்த
நன்மையினார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே
மேல்
#169
வேகம்கொண்டு ஓடிய வெள் விடை ஏறி ஓர் மெல்லியலை
ஆகம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார்
போகம் கொண்டார் கடல் கோடியில் மோடியை பூண்பது ஆக
நாகம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே
மேல்
#170
அஞ்சும் கொண்டு ஆடுவர் ஆவினில் சேவினை ஆட்சி கொண்டார்
தஞ்சம் கொண்டார் அடி சண்டியை தாம் என வைத்து உகந்தார்
நெஞ்சம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டு
நஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே
மேல்
#171
உம்பரார்_கோனை திண் தோள் முரித்தார் உரித்தார் களிற்றை
செம்பொன் ஆர் தீ_வண்ணர் தூ வண்ண நீற்றர் ஓர் ஆவணத்தால்
எம்பிரானார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட
நம்பிரானார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே
மேல்
#172
கோட்டம் கொண்டார் குடமூக்கில் கோவலும் கோத்திட்டையும்
வேட்டம் கொண்டார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்டார்
ஆட்டம் கொண்டார் தில்லை சிற்றம்பலத்தே அருக்கனை முன்
நாட்டம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே
மேல்
#173
தாய் அவளாய் தந்தை ஆகி சாதல் பிறத்தல் இன்றி
போய் அமலாமை தன் பொன் அடிக்கு என்னை பொருந்த வைத்த
வேயவனார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட
நாயகனார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே
மேல்
#174
வாய் ஆடி மா மறை ஓதி ஓர் வேதியன் ஆகி வந்து
தீ ஆடியார் சின கேழலின் பின் சென்று ஓர் வேடுவனாய்
வேய் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட
நா ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே
மேல்
#175
படம் ஆடு பாம்புஅணையானுக்கும் பாவை நல்லாள்-தனக்கும்
வடம் ஆடு மால் விடை ஏற்றுக்கும் பாகனாய் வந்து ஒரு நாள்
இடம் ஆடியார் வெண்ணெய்நல்லூரில் வைத்து எனை ஆளும்கொண்ட
நடம் ஆடியார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே
மேல்
#176
மிடுக்கு உண்டு என்று ஓடி ஓர் வெற்பு எடுத்தான் வலியை நெரித்தார்
அடக்கம் கொண்டு ஆவணம் காட்டி நல் வெண்ணெயூர் ஆளும்கொண்டார்
தடுக்க ஒண்ணாதது ஓர் வேழத்தினை உரித்திட்டு உமையை
நடுக்கம் கண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நாவலூரே
மேல்
#177
நாதனுக்கு ஊர் நமக்கு ஊர் நரசிங்கமுனைஅரையன்
ஆதரித்து ஈசனுக்கு ஆட்செயும் ஊர் அணி நாவலூர் என்று
ஓத நல் தக்க வன் தொண்டன் ஆரூரன் உரைத்த தமிழ்
காதலித்தும் கற்றும் கேட்பவர்-தம் வினை கட்டு அறுமே
மேல்
18. திருவேள்விக்குடி, துருத்தி - பண் : நட்டராகம்
#178
மூப்பதும் இல்லை பிறப்பதும் இல்லை இறப்பது இல்லை
சேர்ப்பு அது காட்டகத்து ஊரினும் ஆக சிந்திக்கின் அல்லால்
காப்பது வேள்விக்குடி தண் துருத்தி எம் கோன் அரை மேல்
ஆர்ப்பது நாகம் அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே
மேல்
#179
கட்ட காட்டின் நடம் ஆடுவர் யாவர்க்கும் காட்சி ஒண்ணார்
சுட்ட வெண் நீறு அணிந்து ஆடுவர் பாடுவர் தூய நெய்யால்
வட்ட குண்டத்தில் எரி வளர்த்து ஓம்பி மறை பயில்வார்
அட்ட கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே
மேல்
#180
பேரும் ஓர் ஆயிரம் பேர் உடையார் பெண்ணோடு ஆணும் அல்லர்
ஊரும் அது ஒற்றியூர் மற்றை ஊர் பெற்றவா நாம் அறியோம்
காரும் கரும் கடல் நஞ்சு அமுது உண்டு கண்டம் கறுத்தார்க்கு
ஆரம் பாம்பு ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே
மேல்
#181
ஏன கொம்பும் இள ஆமையும் பூண்டு அங்கு ஓர் ஏறும் ஏறி
கான காட்டில் தொண்டர் கண்டன சொல்லியும் காமுறவே
மானை தோல் ஒன்றை உடுத்து புலி தோல் பியற்கும் இட்டு
யானை தோல் போர்ப்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே
மேல்
#182
ஊட்டிக்கொண்டு உண்பது ஓர் ஊண் இலர் ஊர் இடு பிச்சை அல்லால்
பூட்டிக்கொண்டு ஏற்றினை ஏறுவர் ஏறி ஓர் பூதம் தம்பால்
பாட்டிக்கொண்டு உண்பவர் பாழி-தொறும் பல பாம்பு பற்றி
ஆட்டிக்கொண்டு உண்பது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே
மேல்
#183
குறவனார்-தம் மகள் தம் மகனார் மணவாட்டி கொல்லை
மறவனாராய் அங்கு ஓர் பன்றி பின் போவது மாயம் கண்டீர்
இறைவனார் ஆதியார் சோதியராய் அங்கு ஓர் சோர்வு படா
அறவனார் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே
மேல்
#184
பித்தரை ஒத்து ஒரு பெற்றியர் நற்றவை என்னை பெற்ற
முற்றவை தம் அன்னை தந்தைக்கும் தவ்வைக்கும் தம்பிரானார்
செத்தவர்-தம் தலையில் பலி கொள்வதே செல்வமாகில்
அ தவம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே
மேல்
#185
உம்பரான் ஊழியான் ஆழியான் ஓங்கி மலர் உறைவான்
தம் பரம் அல்லவர் சிந்திப்பவர் தடுமாற்று அறுப்பார்
எம் பரம் அல்லவர் என் நெஞ்சத்துள்ளும் இருப்பதாகில்
அம்பரம் ஆவது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே
மேல்
#186
இந்திரனுக்கும் இராவணனுக்கும் அருள்புரிந்தார்
மந்திரம் ஓதுவர் மா மறை பாடுவர் மான் மறியர்
சிந்துரக்கண்ணனும் நான்முகனும் உடனாய் தனியே
அந்தரம் செல்வது அறிந்தோமேல் நாம் இவர்க்கு ஆட்படோமே
மேல்
#187
கூடலர் மன்னன் குல நாவலூர்_கோன் நல தமிழை
பாட வல்ல பரமன் அடியார்க்கு அடிமை வழுவா
நாட வல்ல தொண்டன் ஆரூரன் ஆட்படும் ஆறு சொல்லி
பாட வல்லார் பரலோகத்து இருப்பது பண்டம் அன்றே
மேல்
19. திருநின்றியூர் - பண் : நட்டராகம்
#188
அற்றவனாய் அடியார்-தமக்கு ஆய்_இழை பங்கினர் ஆம்
பற்றவனார் எம் பராபரர் என்று பலர் விரும்பும்
கொற்றவனார் குறுகாதவர் ஊர் நெடு வெம் சரத்தால்
செற்றவனார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே
மேல்
#189
வாசத்தின் ஆர் மலர் கொன்றை உள்ளார் வடிவு ஆர்ந்த நீறு
பூசத்தினார் புகலி நகர் போற்றும் எம் புண்ணியத்தார்
நேசத்தினால் என்னை ஆளும்கொண்டார் நெடு மால் கடல் சூழ்
தேசத்தினார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே
மேல்
#190
அம் கையில் மூ இலை வேலர் அமரர் அடி பரவ
சங்கையை நீங்க அருளி தடம் கடல் நஞ்சம் உண்டார்
மங்கை ஓர்பாகர் மகிழ்ந்த இடம் வளம் மல்கு புனல்
செங்கயல் பாயும் வயல் பொலியும் திரு நின்றியூரே
மேல்
#191
ஆறு உகந்தார் அங்கம் நான்மறையார் எங்கும் ஆகி அடல்
ஏறு உகந்தார் இசை ஏழ் உகந்தார் முடி கங்கை-தன்னை
வேறு உகந்தார் விரி நூல் உகந்தார் பரி சாந்தம் அதா
நீறு உகந்தார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே
மேல்
#192
வஞ்சம்கொண்டார் மனம் சேரகில்லார் நறு நெய் தயிர் பால்
அஞ்சும்கொண்டு ஆடிய வேட்கையினார் அதிகைப்பதியே
தஞ்சம் கொண்டார் தமக்கு என்றும் இருக்கை சரண்அடைந்தார்
நெஞ்சம் கொண்டார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே
மேல்
#193
ஆர்த்தவர் ஆடு அரவம் அரை மேல் புலி ஈர் உரிவை
போர்த்தவர் ஆனையின் தோல் உடல் வெம் புலால் கை அகல
பார்த்தவர் இன் உயிர் பார் படைத்தான் சிரம் அஞ்சில் ஒன்றை
சேர்த்தவருக்கு உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே
மேல்
#194
தலையிடை ஆர் பலி சென்று அகம்-தோறும் திரிந்த செல்வர்
மலை உடையார் ஒருபாகம் வைத்தார் கல் துதைந்த நல் நீர்
அலை உடையார் சடை எட்டும் சுழல அரு நடம்செய்
நிலை உடையார் உறையும் இடம் ஆம் திரு நின்றியூரே
மேல்
#195
எட்டு உகந்தார் திசை ஏழ் உகந்தார் எழுத்து ஆறும் அன்பர்
இட்டு உகந்து ஆர் மலர் பூசை இச்சிக்கும் இறைவர் முன்நாள்
பட்டு உகும் பாரிடை காலனை காய்ந்து பலி இரந்து ஊண்
சிட்டு உகந்தார்க்கு இடம் ஆவது நம் திரு நின்றியூரே
மேல்
#196
காலமும் ஞாயிறும் ஆகி நின்றார் கழல் பேண வல்லார்
சீலமும் செய்கையும் கண்டு உகப்பார் அடி போற்றி இசைப்ப
மாலொடு நான்முகன் இந்திரன் மந்திரத்தால் வணங்க
நீல நஞ்சு உண்டவருக்கு இடம் ஆம் திரு நின்றியூரே
மேல்
#197
வாயார் மனத்தால் நினைக்குமவருக்கு அரும் தவத்தில்
தூயார் சூடு பொடி ஆடிய மேனியர் வானில் என்றும்
மேயார் விடை உகந்து ஏறிய வித்தகர் பேர்ந்தவர்க்கு
சேயார் அடியார்க்கு அணியவர் ஊர் திரு நின்றியூரே
மேல்
#198
சேரும் புகழ் தொண்டர் செய்கை அறா திரு நின்றியூரில்
சீரும் சிவகதியாய் இருந்தானை திரு நாவல் ஆ
ரூரன் உரைத்த உறு தமிழ் பத்தும் வல்லார் வினை போய்
பாரும் விசும்பும் தொழ பரமன் அடி கூடுவரே
மேல்
20. திருக்கோளிலி - பண் : நட்டராகம்
#199
நீள நினைந்து அடியேன் உமை நித்தலும் கைதொழுவேன்
வாள் அன கண் மடவாள் அவள் வாடி வருந்தாமே
கோளிலி எம்பெருமான் குண்டையூர் சில நெல்லு பெற்றேன்
ஆள் இலை எம்பெருமான் அவை அட்டித்தர பணியே
மேல்
#200
வண்டு அமரும் குழலாள் உமை நங்கை ஓர்பங்கு உடையாய்
விண்டவர்-தம் புரம் மூன்று எரிசெய்த எம் வேதியனே
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான்
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே
மேல்
#201
பாதி ஓர் பெண்ணை வைத்தாய் படரும் சடை கங்கை வைத்தாய்
மாதர் நல்லார் வருத்தம் அது நீயும் அறிதி அன்றே
கோது இல் பொழில் புடை சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன்
ஆதியே அற்புதனே அவை அட்டித்தர பணியே
மேல்
#202
சொல்லுவது என் உனை நான் தொண்டை வாய் உமை நங்கையை நீ
புல்கி இடத்தில் வைத்தாய்க்கு ஒரு பூசல் செய்தார் உளரோ
கொல்லை வளம் புறவில் குண்டையூர் சில நெல்லு பெற்றேன்
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே
மேல்
#203
முல்லை முறுவல் உமை ஒருபங்கு உடை முக்கணனே
பல் அயர் வெண் தலையில் பலி கொண்டு உழல் பாசுபதா
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி எம்பெருமான்
அல்லல் களைந்து அடியேற்கு அவை அட்டித்தர பணியே
மேல்
#204
குரவு அமரும் குழலாள் உமை நங்கை ஒர்பங்கு உடையாய்
பரவை பசி வருத்தம் அது நீயும் அறிதி அன்றே
குரவு அமரும் பொழில் சூழ் குண்டையூர் சில நெல்லு பெற்றேன்
அரவம் அசைத்தவனே அவை அட்டித்தர பணியே
மேல்
#205
எம்பெருமான் நுனையே நினைத்து ஏத்துவன் எப்பொழுதும்
வம்பு அமரும் குழலாள் ஒருபாகம் அமர்ந்தவனே
செம்பொனின் மாளிகை சூழ் திரு கோளிலி எம்பெருமான்
அன்பு அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே
மேல்
#206
அரக்கன் முடி கரங்கள் அடர்த்திட்ட எம் ஆதிப்பிரான்
பரக்கும் அரவு அல்குலாள் பரவை அவள் வாடுகின்றாள்
குரக்கு இனங்கள் குதிகொள் குண்டையூர் சில நெல்லு பெற்றேன்
இரக்கம் அதுவாய் அடியேற்கு அவை அட்டித்தர பணியே
மேல்
#207
பண்டைய மால் பிரமன் பறந்தும் இடந்தும் அயர்ந்தும்
கண்டிலராய் அவர்கள் கழல் காண்பு அரிது ஆய பிரான்
தெண் திரை நீர் வயல் சூழ் திரு கோளிலி எம்பெருமான்
அண்டம் அது ஆயவனே அவை அட்டித்தர பணியே
மேல்
#208
கொல்லை வளம் புறவில் திரு கோளிலி மேயவனை
நல்லவர் தாம் பரவும் திரு நாவல ஊரன் அவன்
நெல் இட ஆட்கள் வேண்டி நினைந்து ஏந்திய பத்தும் வல்லார்
அல்லல் களைந்து உலகின் அண்டர் வான்_உலகு ஆள்பவரே
மேல்
21. திருக்கச்சிமேற்றளி - பண் : நட்டராகம்
#209
நொந்தா ஒண் சுடரே நுனையே நினைத்திருந்தேன்
வந்தாய் போய் அறியாய் மனமே புகுந்து நின்ற
சிந்தாய் எந்தை பிரான் திரு மேற்றளி உறையும்
எந்தாய் உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே
மேல்
#210
ஆள் தான் பட்டமையால் அடியார்க்கு தொண்டுபட்டு
கேட்டேன் கேட்பது எல்லாம் பிறவா வகை கேட்டொழிந்தேன்
சேட்டார் மாளிகை சூழ் திரு மேற்றளி உறையும்
மாட்டே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே
மேல்
#211
மோறாந்து ஓர் ஒரு-கால் நினையாது இருந்தாலும்
வேறா வந்து என் உள்ளம் புக வல்ல மெய்ப்பொருளே
சேறு ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும்
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேன்
மேல்
#212
உற்றார் சுற்றம் எனும் அது விட்டு நுன் அடைந்தேன்
எற்றால் என் குறைவு என் இடரை துறந்தொழிந்தேன்
செற்றாய் மும்மதிலும் திரு மேற்றளி உறையும்
பற்றே நுன்னை அல்லால் பணிந்து ஏத்தமாட்டேனே
மேல்
#213
எம்மான் எம் அன்னை என்றவர் இட்டு இறந்தொழிந்தார்
மெய் மால் ஆயின தீர்த்து அருள்செயும் மெய்ப்பொருளே
கைம்மா ஈர் உரியாய் கனம் மேற்றளி உறையும்
பெம்மான் உன்னை அல்லால் பெரிது ஏத்தமாட்டேனே
மேல்
#214
நானேல் உன் அடியே நினைந்தேன் நினைதலுமே
ஊன் நேர் இ உடலம் புகுந்தாய் என் ஒண் சுடரே
தேனே இன்னமுதே திரு மேற்றளி உறையும்
கோனே உன்னை அல்லால் குளிர்ந்து ஏத்தமாட்டேனே
மேல்
#215
கை ஆர் வெம் சிலை நாண் அதன் மேல் சரம் கோத்தே
எய்தாய் மும்மதிலும் எரியுண்ண எம்பெருமான்
செய் ஆர் பைம் கமல திரு மேற்றளி உறையும்
ஐயா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே
மேல்
#216
விரை ஆர் கொன்றையினாய் விமலா இனி உன்னை அல்லால்
உரையேன் நா அதனால் உடலில் உயிர் உள்ளளவும்
திரை ஆர் தண் கழனி திரு மேற்றளி உறையும்
அரையா உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே
மேல்
#217
நிலையாய் நின் அடியே நினைந்தேன் நினைதலுமே
தலைவா நின் நினைய பணித்தாய் சலம் ஒழிந்தேன்
சிலை ஆர் மா மதில் சூழ் திரு மேற்றளி உறையும்
மலையே உன்னை அல்லால் மகிழ்ந்து ஏத்தமாட்டேனே
மேல்
#218
பார் ஊர் பல்லவன் ஊர் மதில் காஞ்சி மா நகர்-வாய்
சீர் ஊரும் புறவில் திரு மேற்றளி சிவனை
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் ஆரூரன் சொன்ன
சீர் ஊர் பாடல் வல்லார் சிவலோகம் சேர்வாரே
மேல்
22. திருப்பழமண்ணிப்படிக்கரை - பண் : நட்டராகம்
#219
முன்னவன் எங்கள் பிரான் முதல் காண்பு அரிது ஆய பிரான்
சென்னியில் எங்கள் பிரான் திரு நீல மிடற்று எம்பிரான்
மன்னிய எங்கள் பிரான் மறை நான்கும் கல்லால் நிழல் கீழ்
பன்னிய எங்கள் பிரான் பழமண்ணிப்படிக்கரையே
மேல்
#220
அண்ட கபாலம் சென்னி அடி மேல் அலர் இட்டு நல்ல
தொண்டு அங்கு அடி பரவி தொழுது ஏத்தி நின்று ஆடும் இடம்
வெண் திங்கள் வெண் மழுவன் விரை ஆர் கதிர் மூ இலைய
பண்டங்கன் மேய இடம் பழமண்ணிப்படிக்கரையே
மேல்
#221
ஆடு-மின் அன்புடையீர் அடிக்கு ஆட்பட்ட தூளி கொண்டு
சூடு-மின் தொண்டருள்ளீர் உமரோடு எமர் சூழ வந்து
வாடும் இ வாழ்க்கை-தன்னை வருந்தாமல் திருந்த சென்று
பாடு-மின் பத்தருள்ளீர் பழமண்ணிப்படிக்கரையே
மேல்
#222
அடுதலையே புரிந்தான் நவை அந்தர மூஎயிலும்
கெடுதலையே புரிந்தான் கிளரும் சிலை நாணியில் கோல்
நடுதலையே புரிந்தான் நரி கான்றிட்ட எச்சில் வெள்ளை
படுதலையே புரிந்தான் பழமண்ணிப்படிக்கரையே
மேல்
#223
உம் கைகளால் கூப்பி உகந்து ஏத்தி தொழு-மின் தொண்டீர்
மங்கை ஒர்கூறு உடையான் வானோர் முதல் ஆய பிரான்
அம் கையில் வெண் மழுவன் அலை ஆர் கதிர் மூ இலைய
பங்கயபாதன் இடம் பழமண்ணிப்படிக்கரையே
மேல்
#224
செடி பட தீ விளைத்தான் சிலை ஆர் மதில் செம் புனம் சேர்
கொடி படு மூரி வெள்ளை எருது ஏற்றையும் ஏற கொண்டான்
கடியவன் காலன்-தன்னை கறுத்தான் கழல் செம்பவள
படியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே
மேல்
#225
கடுத்தவன் தேர் கொண்டு ஓடி கயிலாய நல் மா மலையை
எடுத்தவன் ஈர் ஐந்து வாய் அரக்கன் முடி பத்து அலற
விடுத்து அவன் கை நரம்பால் வேத கீதங்கள் பாடலுற
படுத்தவன் பால் வெண்நீற்றன் பழமண்ணிப்படிக்கரையே
மேல்
#226
திரிவன மும்மதிலும் எரித்தான் இமையோர்_பெருமான்
அரியவன் அட்டபுட்பம் அவை கொண்டு அடி போற்றி நல்ல
கரியவன் நான்முகனும் அடியும் முடி காண்பு அரிய
பரியவன் பாசுபதன் பழமண்ணிப்படிக்கரையே
மேல்
#227
வெற்று அரை கற்ற அமணும் விரையாது வெண் தாலம் உண்ணும்
துற்றரை துற்று அறுப்பான் துன்ன ஆடை தொழில் உடையீர்
பெற்றரை பித்தர் என்று கருதேன்-மின் படிக்கரையுள்
பற்றரை பற்றி நின்று பழிபாவங்கள் தீர்மின்-களே
மேல்
#228
பல் உயிர் வாழும் தெண் நீர் பழமண்ணிப்படிக்கரையை
அல்லி அம் தாமரை தார் ஆரூரன் உரைத்த தமிழ்
சொல்லுதல் கேட்டல் வல்லார் அவர்க்கும் தமர்க்கும் கிளைக்கும்
எல்லியும் நன்பகலும் இடர் கூருதல் இல்லை அன்றே
மேல்
23. திருக்கழிப்பாலை - பண் : நட்டராகம்
#229
செடியேன் தீவினையில் தடுமாற கண்டாலும்
அடியான் ஆவா எனாது ஒழிதல் தகவு ஆமே
முடி மேல் மா மதியும் அரவும் உடன் துயிலும்
வடிவே தாம் உடையார் மகிழும் கழிப்பாலை அதே
மேல்
#230
எங்கேனும் இருந்து உன் அடியேன் உனை நினைந்தால்
அங்கே வந்து என்னொடும் உடன் ஆகி நின்று அருளி
இங்கே என் வினையை அறுத்திட்டு எனை ஆளும்
கங்காநாயகனே கழிப்பாலை மேயானே
மேல்
#231
ஒறுத்தாய் நின் அருளில் அடியேன் பிழைத்தனகள்
பொறுத்தாய் எத்தனையும் நாயேனை பொருள்படுத்து
செறுத்தாய் வேலை விடம் மறியாமல் உண்டு கண்டம்
கறுத்தாய் தண் கழனி கழிப்பாலை மேயானே
மேல்
#232
கரும்பு ஆர் விண்ட மலர் அவை தூவி தூங்கு கண்ணீர்
அரும்பா நிற்கும் மனத்து அடியாரொடும் அன்பு செய்வன்
விரும்பேன் உன்னை அல்லால் ஒரு தெய்வம் என் மனத்தால்
கரும்பு ஆரும் கழனி கழிப்பாலை மேயானே
மேல்
#233
ஒழிப்பாய் என் வினையை உகப்பாய் முனிந்து அருளி
தெழிப்பாய் மோதுவிப்பாய் விலை ஆவணம் உடையாய்
கழிப்பால் கண்டல் தங்க சுழி ஏந்து மா மறுகின்
கழிப்பாலை மருவும் கனல் ஏந்து கையானே
மேல்
#234
ஆர்த்தாய் ஆடு அரவை அரை ஆர் புலி அதன் மேல்
போர்த்தாய் ஆனையின் தோல் உரிவை புலால் நாற
காத்தாய் தொண்டு செய்வார் வினைகள் அவை போக
பார்த்தானுக்கு இடம் ஆம் பழி இல் கழிப்பாலை அதே
மேல்
#235
பரு தாள் வன் பகட்டை படம் ஆக முன் பற்றி அதள்
உரித்தாய் ஆனையின் தோல் உலகம் தொழும் உத்தமனே
எரித்தாய் முப்புரமும் இமையோர்கள் இடர் கடியும்
கருத்தா தண் கழனி கழிப்பாலை மேயானே
மேல்
#236
படைத்தாய் ஞாலம் எலாம் படர் புன் சடை எம் பரமா
உடைத்தாய் வேள்வி-தனை உமையாளை ஓர்கூறு உடையாய்
அடர்த்தாய் வல் அரக்கன் தலை பத்தொடு தோள் நெரிய
கடல் சாரும் கழனி கழிப்பாலை மேயானே
மேல்
#237
பொய்யா நா அதனால் புகழ்வார்கள் மனத்தினுள்ளே
மெய்யே நின்று எரியும் விளக்கே ஒத்த தேவர் பிரான்
செய்யானும் கரிய நிறத்தானும் தெரிவு அரியான்
மை ஆர் கண்ணியொடு மகிழ்வான் கழிப்பாலை அதே
மேல்
#238
பழி சேர் இல் புகழான் பரமன் பரமேட்டி
கழி ஆர் செல்வம் மல்கும் கழிப்பாலை மேயானை
தொழுவான் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ்
வழுவா மாலை வல்லார் வானோர்_உலகு ஆள்பவரே
மேல்
24. திருமழபாடி - பண் : நட்டராகம்
#239
பொன் ஆர் மேனியனே புலி தோலை அரைக்கு அசைத்து
மின் ஆர் செம் சடை மேல் மிளிர் கொன்றை அணிந்தவனே
மன்னே மா மணியே மழபாடியுள் மாணிக்கமே
அன்னே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே
மேல்
#240
கீள் ஆர் கோவணமும் திருநீறு மெய் பூசி உன்தன்
தாளே வந்து அடைந்தேன் தலைவா எனை ஏன்றுகொள் நீ
வாள் ஆர் கண்ணி_பங்கா மழபாடியுள் மாணிக்கமே
கேளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே
மேல்
#241
எம்மான் எம் அன்னை என்தனக்கு எள்தனை சார்வு ஆகார்
இ மாய பிறவி பிறந்தே இறந்து எய்த்தொழிந்தேன்
மை மாம் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அம்மான் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே
மேல்
#242
பண்டே நின் அடியேன் அடியார் அடியார்கட்கு எல்லாம்
தொண்டே பூண்டொழிந்தேன் தொடராமை துரிசு அறுத்தேன்
வண்டு ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்டா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே
மேல்
#243
கண்ணாய் ஏழ்உலகும் கருத்து ஆய அருத்தமுமாய்
பண் ஆர் இன் தமிழாய் பரம் ஆய பரஞ்சுடரே
மண் ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
அண்ணா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே
மேல்
#244
நாளார் வந்து அணுகி நலியா முனம் நின்-தனக்கே
ஆளா வந்து அடைந்தேன் அடியேனையும் ஏன்றுகொள் நீ
மாளா நாள் அருளும் மழபாடியுள் மாணிக்கமே
ஆளா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே
மேல்
#245
சந்து ஆரும் குழையாய் சடை மேல் பிறை தாங்கி நல்ல
வெந்தார் வெண்பொடியாய் விடை ஏறிய வித்தகனே
மைந்து ஆர் சோலைகள் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
எந்தாய் நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே
மேல்
#246
வெய்ய விரி சுடரோன் மிகு தேவர் கணங்கள் எல்லாம்
செய்ய மலர்கள் இட மிகு செம்மையுள் நின்றவனே
மை ஆர் பூம் பொழில் சூழ் மழபாடியுள் மாணிக்கமே
ஐயா நின்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே
மேல்
#247
நெறியே நின்மலனே நெடு மால் அயன் போற்றி செய்யும்
குறியே நீர்மையனே கொடி ஏர் இடையாள் தலைவா
மறி சேர் அம் கையனே மழபாடியுள் மாணிக்கமே
அறிவே உன்னை அல்லால் இனி யாரை நினைக்கேனே
மேல்
#248
ஏர் ஆர் முப்புரமும் எரிய சிலை தொட்டவனை
வார் ஆர் கொங்கையுடன் மழபாடியுள் மேயவனை
சீர் ஆர் நாவலர்_கோன் ஆரூரன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே
மேல்
25. திருமுதுகுன்றம் - பண் : நட்டராகம்
#249
பொன் செய்த மேனியினீர் புலித்தோலை அரைக்கு அசைத்தீர்
முன் செய்த மூஎயிலும் எரித்தீர் முதுகுன்று அமர்ந்தீர்
மின் செய்த நுண்இடையாள் பரவை இவள்-தன் முகப்பே
என் செய்த ஆறு அடிகேள் அடியேன் இட்டளம் கெடவே
மேல்
#250
உம்பரும் வானவரும் உடனே நிற்கவே எனக்கு
செம்பொனை தந்து அருளி திகழும் முதுகுன்று அமர்ந்தீர்
வம்பு அமரும் குழலாள் பரவை இவள் வாடுகின்றாள்
எம்பெருமான் அருளீர் அடியேன் இட்டளம் கெடவே
மேல்
#251
பக்தா பக்தர்களுக்கு அருள்செய்யும் பரம்பரனே
முத்தா முக்கணனே முதுகுன்றம் அமர்ந்தவனே
மைத்து ஆரும் தடம் கண் பரவை இவள் வாடாமே
அத்தா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே
மேல்
#252
மங்கை ஓர்கூறு அமர்ந்தீர் மறை நான்கும் விரித்து உகந்தீர்
திங்கள் சடைக்கு அணிந்தீர் திகழும் முதுகுன்று அமர்ந்தீர்
கொங்கை நல்லாள் பரவை குணம் கொண்டு இருந்தாள் முகப்பே
அங்கணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே
மேல்
#253
மை ஆரும் மிடற்றாய் மருவார் புரம் மூன்று எரித்த
செய்யார் மேனியனே திகழும் முதுகுன்று அமர்ந்தாய்
பை ஆரும் அரவு ஏர் அல்குலாள் இவள் வாடுகின்றாள்
ஐயா தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே
மேல்
#254
நெடியான் நான்முகனும் இரவியொடும் இந்திரனும்
முடியால் வந்து இறைஞ்ச முதுகுன்றம் அமர்ந்தவனே
படி ஆரும் இயலாள் பரவை இவள்-தன் முகப்பே
அடிகேள் தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே
மேல்
#255
கொந்து அணவும் பொழில் சூழ் குளிர் மா மதில் மாளிகை மேல்
வந்து அணவும் மதி சேர் சடை மா முதுகுன்று உடையாய்
பந்து அணவும் விரலாள் பரவை இவள்-தன் முகப்பே
அந்தணனே அருளாய் அடியேன் இட்டளம் கெடவே
மேல்
#256
பரசு ஆரும் கரவா பதினெண் கணமும் சூழ
முரசார் வந்து அதிர முதுகுன்றம் அமர்ந்தவனே
விரை சேரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே
அரசே தந்தருளாய் அடியேன் இட்டளம் கெடவே
மேல்
#257
ஏத்தாது இருந்து அறியேன் இமையோர் தனி நாயகனே
மூத்தாய் உலகுக்கு எல்லாம் முதுகுன்றம் அமர்ந்தவனே
பூத்து ஆரும் குழலாள் பரவை இவள்-தன் முகப்பே
கூத்தா தந்து அருளாய் கொடியேன் இட்டளம் கெடவே
மேல்
#258
பிறை ஆரும் சடை எம்பெருமான் அருளாய் என்று
முறையால் வந்து அமரர் வணங்கும் முதுகுன்றர்-தம்மை
மறையார்-தம் குரிசில் வயல் நாவல் ஆரூரன் சொன்ன
இறை ஆர் பாடல் வல்லார்க்கு எளிது ஆம் சிவலோகம் அதே
மேல்
26. திருக்காளத்தி - பண் : நட்டராகம்
#259
செண்டு ஆடும் விடையாய் சிவனே என் செழும் சுடரே
வண்டு ஆரும் குழலாள் உமை பாகம் மகிழ்ந்தவனே
கண்டார் காதலிக்கும் கணநாதன் எம் காளத்தியாய்
அண்டா உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே
மேல்
#260
இமையோர்_நாயகனே இறைவா என் இடர் துணையே
கமை ஆர் கருணையினாய் கரு மா முகில் போல் மிடற்றாய்
உமை ஓர்கூறு உடையாய் உருவே திரு காளத்தியுள்
அமைவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே
மேல்
#261
படை ஆர் வெண் மழுவா பகலோன் பல் உகுத்தவனே
விடை ஆர் வேதியனே விளங்கும் குழை காது உடையாய்
கடை ஆர் மாளிகை சூழ் கணநாதன் எம் காளத்தியாய்
உடையாய் உன்னை அல்லால் உகந்து ஏத்தமாட்டேனே
மேல்
#262
மறி சேர் கையினனே மத மா உரி போர்த்தவனே
குறியே என்னுடைய குருவே உன் குற்றேவல் செய்வேன்
நெறியே நின்று அடியார் நினைக்கும் திரு காளத்தியுள்
அறிவே உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே
மேல்
#263
செஞ்சேல் அன்ன கண்ணார் திறத்தே கிடந்து உற்று அலறி
நஞ்சேன் நான் அடியேன் நலம் ஒன்று அறியாமையினால்
துஞ்சேன் நான் ஒரு-கால் தொழுதேன் திரு காளத்தியாய்
அஞ்சாது உன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே
மேல்
#264
பொய்யவன் நாய் அடியேன் புகவே நெறி ஒன்று அறியேன்
செய்யவன் ஆகி வந்து இங்கு இடர் ஆனவை தீர்த்தவனே
மெய்யவனே திருவே விளங்கும் திரு காளத்தி என்
ஐய நுன்தன்னை அல்லால் அறிந்து ஏத்தமாட்டேனே
மேல்
#265
கடியேன் காதன்மையால் கழல்போது அறியாத என் உள்
குடியா கோயில்கொண்ட குளிர் வார் சடை எம் குழகா
முடியால் வானவர்கள் முயங்கும் திரு காளத்தியாய்
அடியேன் உன்னை அல்லால் அறியேன் மற்று ஒருவரையே
மேல்
#266
நீறு ஆர் மேனியனே நிமலா நினை அன்றி மற்று
கூறேன் நா அதனால் கொழுந்தே என் குண கடலே
பாறு ஆர் வெண் தலையில் பலி கொண்டு உழல் காளத்தியாய்
ஏறே உன்னை அல்லால் இனி ஏத்தமாட்டேனே
மேல்
#267
தளிர் போல் மெல்லடியாள்-தனை ஆகத்து அமர்ந்து அருளி
எளிவாய் வந்து என் உள்ளம் புகுத வல்ல எம்பெருமான்
களி ஆர் வண்டு அறையும் திரு காளத்தியுள் இருந்த
ஒளியே உன்னை அல்லால் இனி ஒன்றும் உணரேனே
மேல்
#268
கார் ஊரும் பொழில் சூழ் கணநாதன் எம் காளத்தியுள்
ஆரா இன்னமுதை அணி நாவல் ஆரூரன் சொன்ன
சீர் ஊர் செந்தமிழ்கள் செப்புவார் வினை ஆயின போய்
பேரா விண்ணுலகம் பெறுவார் பிழைப்பு ஒன்று இலரே
மேல்
27. திருக்கற்குடி - பண் : நட்டராகம்
#269
விடை ஆரும் கொடியாய் வெறி ஆர் மலர் கொன்றையினாய்
படை ஆர் வெண் மழுவா பரம் ஆய பரம்பரனே
கடி ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற
அடிகேள் எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே
மேல்
#270
மறையோர் வானவரும் தொழுது ஏத்தி வணங்க நின்ற
இறைவா எம்பெருமான் எனக்கு இன் அமுது ஆயவனே
கறை ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற
அறவா அங்கணனே அடியேனையும் அஞ்சல் என்னே
மேல்
#271
சிலையால் முப்புரங்கள் பொடி ஆக சிதைத்தவனே
மலை மேல் மா மருந்தே மட மாது இடம் கொண்டவனே
கலை சேர் கையினனே திரு கற்குடி மன்னி நின்ற
அலை சேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சல் என்னே
மேல்
#272
செய்யார் மேனியனே திரு நீல_மிடற்றினனே
மை ஆர் கண்ணி_பங்கா மத யானை உரித்தவனே
கை ஆர் சூலத்தினாய் திரு கற்குடி மன்னி நின்ற
ஐயா எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே
மேல்
#273
சந்து ஆர் வெண் குழையாய் சரி கோவண ஆடையனே
பந்து ஆரும் விரலாள் ஒருபாகம் அமர்ந்தவனே
கந்து ஆர் சோலைகள் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற
எந்தாய் எம்பெருமான் அடியேனையும் ஏன்றுகொள்ளே
மேல்
#274
அரை ஆர் கீளொடு கோவணமும் அரவும் அசைத்து
விரை ஆர் கொன்றையுடன் விளங்கும் பிறை மேல் உடையாய்
கரை ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற
அரையா எம்பெருமான் அடியேனையும் அஞ்சல் என்னே
மேல்
#275
பாரார் விண்ணவரும் பரவி பணிந்து ஏத்த நின்ற
சீர் ஆர் மேனியனே திகழ் நீல_மிடற்றினனே
கார் ஆர் பூம் பொழில் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற
ஆரா இன்னமுதே அடியேனையும் அஞ்சல் என்னே
மேல்
#276
நிலனே நீர் வளி தீ நெடு வானகம் ஆகி நின்ற
புலனே புண்டரிகத்து அயன் மாலவன் போற்றிசெய்யும்
கனலே கற்பகமே திரு கற்குடி மன்னி நின்ற
அனல் சேர் கையினனே அடியேனையும் அஞ்சல் என்னே
மேல்
#277
வரும் காலன் உயிரை மடிய திரு மெல்விரலால்
பெரும் பாலன்-தனக்காய் பிரிவித்த பெருந்தகையே
கரும்பு ஆரும் வயல் சூழ் திரு கற்குடி மன்னி நின்ற
விரும்பா எம்பெருமான் அடியேனையும் வேண்டுதியே
மேல்
#278
அலை ஆர் தண் புனல் சூழ்ந்து அழகு ஆகி விழவு அமரும்
கலை ஆர் மா தவர் சேர் திரு கற்குடி கற்பகத்தை
சிலை ஆர் வாள்_நுதலாள் நல்ல சிங்கடி அப்பன் உரை
விலை ஆர் மாலை வல்லார் வியல் மூஉலகு ஆள்பவரே
மேல்
28. திருக்கடவூர் வீரட்டம் - பண் : நட்டராகம்
#279
பொடி ஆர் மேனியனே புரி நூல் ஒருபால் பொருந்த
வடி ஆர் மூ இலை வேல் வளர் கங்கை இன் மங்கையொடும்
கடி ஆர் கொன்றையனே கடவூர்-தனுள் வீரட்டத்து எம்
அடிகேள் என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே
மேல்
#280
பிறை ஆரும் சடையாய் பிரமன் தலையில் பலி கொள்
மறை ஆர் வானவனே மறையின் பொருள் ஆனவனே
கறை ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம்
இறைவா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே
மேல்
#281
அன்று ஆலின் நிழல் கீழ் அறம் நால்வர்க்கு அருள்புரிந்து
கொன்றாய் காலன் உயிர் கொடுத்தாய் மறையோனுக்கு மான்
கன்று ஆரும் கரவா கடவூர் திரு வீரட்டத்துள்
என் தாதை பெருமான் எனக்கு ஆர் துணை நீஅலதே
மேல்
#282
போர் ஆரும் கரியின் உரி போர்த்து பொன் மேனியின் மேல்
வார் ஆரும் முலையாள் ஒருபாகம் மகிழ்ந்தவனே
கார் ஆரும் மிடற்றாய் கடவூர்-தனுள் வீரட்டானத்து
ஆரா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே
மேல்
#283
மை ஆர் கண்டத்தினாய் மத மா உரி போர்த்தவனே
பொய்யாது என் உயிருள் புகுந்தாய் இன்னம் போந்து அறியாய்
கை ஆர் ஆடு அரவா கடவூர்-தனுள் வீரட்டத்து எம்
ஐயா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே
மேல்
#284
மண் நீர் தீ வெளி கால் வரு பூதங்கள் ஆகி மற்றும்
பெண்ணோடு ஆண் அலியாய் பிறவா உரு ஆனவனே
கண் ஆரும் மணியே கடவூர்-தனுள் வீரட்டத்து எம்
அண்ணா என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே
மேல்
#285
எரி ஆர் புன் சடை மேல் இள நாகம் அணிந்தவனே
நரி ஆரும் சுடலை நகு வெண் தலை கொண்டவனே
கரி ஆர் ஈர் உரியாய் கடவூர்-தனுள் வீரட்டத்து எம்
அரியாய் என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே
மேல்
#286
வேறா உன் அடியேன் விளங்கும் குழை காது உடையாய்
தேறேன் உன்னை அல்லால் சிவனே என் செழும் சுடரே
காறு ஆர் வெண்மருப்பா கடவூர் திரு வீரட்டத்துள்
ஆறு ஆர் செஞ்சடையாய் எனக்கு ஆர் துணை நீஅலதே
மேல்
#287
அயனோடு அன்று அரியும் அடியும் முடி காண்பு அரிய
பயனே எம் பரனே பரம் ஆய பரஞ்சுடரே
கயம் ஆரும் சடையாய் கடவூர் திரு வீரட்டத்துள்
அயனே என் அமுதே எனக்கு ஆர் துணை நீஅலதே
மேல்
#288
கார் ஆரும் பொழில் சூழ் கடவூர் திரு வீரட்டத்துள்
ஏர் ஆரும் இறையை துணையா எழில் நாவலர்_கோன்
ஆரூரன் அடியான் அடித்தொண்டன் உரைத்த தமிழ்
பாரோர் ஏத்த வல்லார் பரலோகத்து இருப்பாரே
மேல்
29. திருக்குருகாவூர் வெள்ளடை - பண் : நட்டராகம்
#289
இத்தனை ஆம் ஆற்றை அறிந்திலேன் எம்பெருமான்
பித்தனே என்று உன்னை பேசுவார் பிறர் எல்லாம்
முத்தினை மணி-தன்னை மாணிக்கம் முளைத்து எழுந்த
வித்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே
மேல்
#290
ஆவியை போகாமே தவிர்த்து என்னை ஆட்கொண்டாய்
வாவியில் கயல் பாய குளத்திடை மடை-தோறும்
காவியும் குவளையும் கமலம் செங்கழுநீரும்
மேவிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே
மேல்
#291
பாடுவார் பசி தீர்ப்பாய் பரவுவார் பிணி களைவாய்
ஓடு நன் கலன் ஆக உண் பலிக்கு உழல்வானே
காடு நல் இடம் ஆக கடு இருள் நடம் ஆடும்
வேடனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே
மேல்
#292
வெப்பொடு பிணி எல்லாம் தவிர்த்து எனை ஆட்கொண்டாய்
ஒப்பு உடை ஒளி நீலம் ஓங்கிய மலர் பொய்கை
அப்படி அழகு ஆய அணி நடை மட அன்னம்
மெய்ப்படு குருகாவூர் வெள்ளடை நீ அன்றே
மேல்
#293
வரும் பழி வாராமே தவிர்த்து எனை ஆட்கொண்டாய்
சுரும்பு உடை மலர் கொன்றை சுண்ண வெண்நீற்றானே
அரும்பு உடை மலர் பொய்கை அல்லியும் மல்லிகையும்
விரும்பிய குருகாவூர் வெள்ளடை நீ அன்றே
மேல்
#294
பண்ணிடை தமிழ் ஒப்பாய் பழத்தினில் சுவை ஒப்பாய்
கண்ணிடை மணி ஒப்பாய் கடு இருள் சுடர் ஒப்பாய்
மண்ணிடை அடியார்கள் மனத்து இடர் வாராமே
விண்ணிடை குருகாவூர் வெள்ளடை நீ அன்றே
மேல்
#295
போந்தனை தரியாமே நமன் தமர் புகுந்து என்னை
நோந்தன செய்தாலும் நுன்அலது அறியேன் நான்
சாம்தனை வருமேலும் தவிர்த்து எனை ஆட்கொண்ட
வேந்தனே குருகாவூர் வெள்ளடை நீ அன்றே
மேல்
#296
மலக்கு இல் நின் அடியார்கள் மனத்திடை மால் தீர்ப்பாய்
சலச்சலம் மிடுக்கு உடைய தருமனார் தமர் என்னை
கலக்குவான் வந்தாலும் கடும் துயர் வாராமே
விலக்குவாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே
மேல்
#297
படுவிப்பாய் உனக்கே ஆள் பலரையும் பணியாமே
தொடுவிப்பாய் துகிலொடு பொன் தோல் உடுத்து உழல்வானே
கெடுவிப்பாய் அல்லாதார் கேடு இலா பொன் அடிக்கே
விடுவிப்பாய் குருகாவூர் வெள்ளடை நீ அன்றே
மேல்
#298
வளம் கனி பொழில் மல்கு வயல் அணிந்து அழகு ஆய
விளங்கு ஒளி குருகாவூர் வெள்ளடை உறைவானை
இளம் கிளை ஆரூரன் வனப்பகை அவள் அப்பன்
உளம் குளிர் தமிழ் மாலை பத்தர்கட்கு உரை ஆமே
மேல்
30. திருக்கருப்பறியலூர் - பண் : நட்டராகம்
#299
சிம்மாந்து சிம்புளித்து சிந்தையினில் வைத்து உகந்து திறம்பா வண்ணம்
கைம்மாவின் உரிவை போர்த்து உமை வெருவ கண்டானை கருப்பறியலூர்
கொய் மாவின் மலர் சோலை குயில் பாட மயில் ஆடும் கொகுடிக்கோயில்
எம்மானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே
மேல்
#300
நீற்று ஆரும் மேனியராய் நினைவார்-தம் உள்ளத்தே நிறைந்து தோன்றும்
காற்றானை தீயானை கதிரானை மதியானை கருப்பறியலூர்
கூற்றானை கூற்று உதைத்து கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில்
ஏற்றானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே
மேல்
#301
முட்டாமே நாள்-தோறும் நீர் மூழ்கி பூ பறித்து மூன்று போதும்
கட்டு ஆர்ந்த இண்டை கொண்டு அடி சேர்த்தும் அந்தணர்-தம் கருப்பறியலூர்
கொட்டு ஆட்டு பாட்டு ஆகி நின்றானை குழகனை கொகுடிக்கோயில்
எட்டு ஆன மூர்த்தியை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே
மேல்
#302
விருந்து ஆய சொல் மாலை கொண்டு ஏத்தி வினை போக வேலி-தோறும்
கரும் தாள வாழை மேல் செங்கனிகள் தேன் சொரியும் கருப்பறியலூர்
குருந்து ஆய முள் எயிற்று கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில்
இருந்தானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே
மேல்
#303
பொடி ஏறு திரு மேனி பெருமானை பொங்கு அரவ கச்சையானை
கடி நாறும் பூம் பொய்கை கயல் வாளை குதிகொள்ளும் கருப்பறியலூர்
கொடி ஏறி வண்டு இனமும் தண் தேனும் பண்செய்யும் கொகுடிக்கோயில்
அடி ஏறு கழலானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே
மேல்
#304
பொய்யாத வாய்மையால் பொடி பூசி போற்றி இசைத்து பூசை செய்து
கையினால் எரி ஓம்பி மறை வளர்க்கும் அந்தணர்-தம் கருப்பறியலூர்
கொய் உலாம் மலர் சோலை குயில் கூவ மயில் ஆலும் கொகுடிக்கோயில்
ஐயனை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே
மேல்
#305
செடி கொள் நோய் உள்ளளவும் தீவினையும் தீர்ந்து ஒழிய சிந்தைசெய்-மின்
கடி கொள் பூம் தடம் மண்டி கரு மேதி கண்படுக்கும் கருப்பறியலூர்
கொடி கொள் பூ நுண்இடையாள் கோல் வளையாள் அவளோடும் கொகுடிக்கோயில்
அடிகளை என் மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே
மேல்
#306
பறையாத வல்வினைகள் பறைந்து ஒழிய பல் நாளும் பாடி ஆடி
கறை ஆர்ந்த கண்டத்தன் எண் தோளன் முக்கண்ணன் கருப்பறியலூர்
குறையாத மறை நாவர் குற்றேவல் ஒழியாத கொகுடிக்கோயில்
உறைவானை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே
மேல்
#307
சங்கு ஏந்து கையானும் தாமரையின் மேலானும் தன்மை காணா
கங்கு ஆர்ந்த வார் சடைகள் உடையானை விடையானை கருப்பறியலூர்
கொங்கு ஆர்ந்த பொழில் சோலை சூழ் கனிகள் பல உதிர்க்கும் கொகுடிக்கோயில்
எம் கோனை மனத்தினால் நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே
மேல்
#308
பண் தாழ் இன்னிசை முரல பல் நாளும் பாவித்து பாடி ஆடி
கண்டார்-தம் கண் குளிரும் களி கமுகம் பூம் சோலை கருப்பறியலூர்
குண்டாடும் சமணரும் சாக்கியரும் புறம்கூறும் கொகுடிக்கோயில்
எண் தோள் எம்பெருமானை நினைந்தபோது அவர் நமக்கு இனிய ஆறே
மேல்
#309
கலை மலிந்த தென் புலவர் கற்றோர்-தம் இடர் தீர்க்கும் கருப்பறியலூர்
குலை மலிந்த கோள் தெங்கு மட்டு ஒழுகும் பூம் சோலை கொகுடிக்கோயில்
இலை மலிந்த மழுவானை மனத்தினால் அன்பு செய்து இன்பம் எய்தி
மலை மலிந்த தோள் ஊரன் வனப்பகை அப்பன் உரைத்த வண் தமிழ்களே
மேல்
31. திருஇடையாற்றுத்தொகை - பண் : கொல்லி
#310
முந்தை ஊர் முதுகுன்றம் குரங்கணில்முட்டம்
சிந்தை ஊர் நன்று சென்று அடைவான் திரு ஆரூர்
பந்தை ஊர் பழையாறு பழனம் பைஞ்ஞீலி
எந்தை ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே
மேல்
#311
சுற்றும் ஊர் சுழியல் திரு சோபுரம் தொண்டர்
ஒற்றும் ஊர் ஒற்றியூர் திரு ஊறல் ஒழியா
பெற்றம் ஊர்தி பெண் பாதி இடம் பெண்ணை தெண் நீர்
எற்றும் ஓர் எய்து அமான் இடையாறு இடைமருதே
மேல்
#312
கடங்களூர் திரு காரிக்கரை கயிலாயம்
விடங்களூர் திரு வெண்ணி அண்ணாமலை வெய்ய
படங்கள் ஊர்கின்ற பாம்பு அரையான் பரஞ்சோதி
இடம் கொள் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே
மேல்
#313
கச்சையூர் காவம் கழுக்குன்றம் காரோணம்
பிச்சை ஊர் திரிவான் கடவூர் வடபேறூர்
கச்சி ஊர் கச்சி சிக்கல் நெய்த்தானம் மிழலை
இச்சை ஊர் எமது அமான் இடையாறு இடைமருதே
மேல்
#314
நிறையனூர் நின்றியூர் கொடுங்குன்றம் அமர்ந்த
பிறையனூர் பெருமூர் பெரும்பற்றப்புலியூர்
மறையனூர் மறைக்காடு வலஞ்சுழி வாய்த்த
இறையனூர் எய்து அமான் இடையாறு இடைமருதே
மேல்
#315
திங்களூர் திருஆதிரையான் பட்டினம்ஊர்
நங்களூர் நறையூர் நனி நால் இசை நாலூர்
தங்களூர் தமிழான் என்று பாவிக்க வல்ல
எங்களூர் எய்து அமான் இடையாறு இடைமருதே
மேல்
#316
கருக்க நஞ்சு அமுது உண்ட கல்லாலன் கொல் ஏற்றன்
தருக்கு அரக்கனை சென்று உகந்தான் தன் முடி மேல்
எருக்க நாள் மலர் இண்டையும் மத்தமும் சூடி
இருக்கும் ஊர் எய்து அமான் இடையாறு இடைமருதே
மேல்
#317
தேசனூர் வினை தேய நின்றான் திரு ஆக்கூர்
பாசனூர் பரமேட்டி பவித்திர பாவ
நாசன் ஊர் நனிபள்ளி நள்ளாற்றை அமர்ந்த
ஈசனூர் எய்து அமான் இடையாறு இடைமருதே
மேல்
#318
பேறனூர் பிறை சென்னியினான் பெருவேளூர்
தேறனுர் திருமாமகள்_கோன் திருமால் ஓர்
கூறன் ஊர் குரங்காடுதுறை திரு கோவல்
ஏறனூர் எய்து அமான் இடையாறு இடைமருதே
மேல்
#319
ஊறி வாயினன் நாடிய வன் தொண்டன் ஊரன்
தேறுவார் சிந்தை தேறும் இடம் செம் கண் வெள் ஏறு
ஏறுவார் எய்து அமான் இடையாறு இடைமருதை
கூறுவார் வினை எவ்விட மெய் குளிர்வாரே
மேல்
32. திருக்கோடிக்குழகர் - பண் : கொல்லி
#320
கடிதாய் கடற்காற்று வந்து எற்ற கரை மேல்
குடிதான் அயலே இருந்தால் குற்றம் ஆமோ
கொடியேன் கண்கள் கண்டன கோடிக்குழகீர்
அடிகேள் உமக்கு ஆர் துணை ஆக இருந்தீரே
மேல்
#321
முன் தான் கடல் நஞ்சம் உண்டதனாலோ
பின் தான் பரவைக்கு உபகாரம் செய்தாயோ
குன்றா பொழில் சூழ்தரு கோடிக்குழகா
என்தான் தனியே இருந்தாய் எம்பிரானே
மேல்
#322
மத்தம் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால்
பத்தர் பலர் பாட இருந்த பரமா
கொத்து ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகா
எத்தால் தனியே இருந்தாய் எம்பிரானே
மேல்
#323
காடேல் மிக வலிது காரிகை அஞ்ச
கூடி பொந்தில் ஆந்தைகள் கூகை குழற
வேடி தொண்டர் சாலவும் தீயர் சழக்கர்
கோடிக்குழகா இடம் கோயில் கொண்டாயே
மேல்
#324
மை ஆர் தடம் கண்ணி_பங்கா கங்கையாளும்
மெய் ஆகத்து இருந்தனள் வேறு இடம் இல்லை
கை ஆர் வளை காடுகாளோடும் உடனாய்
கொய் ஆர் பொழில் கோடியே கோயில்கொண்டாயே
மேல்
#325
அரவு ஏர் அல்குலாளை ஓர்பாகம் அமர்ந்து
மரவம் கமழ் மா மறைக்காடு அதன் தென்-பால்
குரவம் பொழில் சூழ்தரு கோடிக்குழகா
இரவே துணையாய் இருந்தாய் எம்பிரானே
மேல்
#326
பறையும் குழலும் ஒலி பாடல் இயம்ப
அறையும் கழல் ஆர்க்க நின்று ஆடும் அமுதே
குறையா பொழில் சூழ்தரு கோடிக்குழகா
இறைவா தனியே இருந்தாய் எம்பிரானே
மேல்
#327
ஒற்றியூர் என்ற ஊனத்தினால் அதுதானோ
அற்ற பட ஆரூர் அது என்று அகன்றாயோ
முற்றா மதி சூடிய கோடிக்குழகா
எற்றால் தனியே இருந்தாய் எம்பிரானே
மேல்
#328
நெடியானொடு நான்முகனும் அறிவு ஒண்ணா
படியான் பலி கொள்ளும் இடம் குடி இல்லை
கொடியார் பலர் வேடர்கள் வாழும் கரை மேல்
அடிகேள் அன்பு அதுவாய் இடம் கோயில் கொண்டாயே
மேல்
#329
பார் ஊர் மலி சூழ் மறைக்காடு அதன் தென்-பால்
ஏர் ஆர் பொழில் சூழ்தரு கோடிக்குழகை
ஆரூரன் உரைத்தன பத்து இவை வல்லார்
சீர் ஊர் சிவலோகத்து இருப்பவர்தாமே
மேல்
33. நமக்கடிகளாகிய அடிகள் - பண் : கொல்லி
#330
பாறு தாங்கிய காடரோ படு தலையரோ மலைப்பாவை ஓர்
கூறு தாங்கிய குழகரோ குழை காதரோ குறும் கோட்டு இள
ஏறு தாங்கிய கொடியரோ சுடு பொடியரோ இலங்கும் பிறை
ஆறு தாங்கிய சடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே
மேல்
#331
இட்டிது ஆக வந்து உரை-மினோ நமக்கு இசையுமா நினைத்து ஏத்துவீர்
கட்டி வாழ்வது நாகமோ சடை மேலும் நாறு கரந்தையோ
பட்டி ஏறு உகந்து ஏறரோ படு வெண் தலை பலி கொண்டு வந்து
அட்டி ஆளவும்கிற்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே
மேல்
#332
ஒன்றினீர்கள் வந்து உரை-மினோ நுமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்
குன்றி போல்வது ஓர் உருவரோ குறிப்பு ஆகி நீறு கொண்டு அணிவரோ
இன்றியே இலர் ஆவரோ அன்றி உடையராய் இலர் ஆவரோ
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே
மேல்
#333
தேனை ஆடு முக்கண்ணரோ மிக செய்யரோ வெள்ளைநீற்றரோ
பால் நெய் ஆடலும் பயில்வரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ
மானை மேவிய கண்ணினாள் மலைமங்கை நங்கையை அஞ்ச ஓர்
ஆனை ஈர் உரி போர்ப்பரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே
மேல்
#334
கோணல் மா மதி சூடரோ கொடுகொட்டி காலர் கழலரோ
வீணைதான் அவர் கருவியோ விடை ஏறு வேதமுதல்வரோ
நாண் அது ஆக ஒர் நாகம் கொண்டு அரைக்கு ஆர்ப்பரோ நலம் ஆர்தர
ஆணை ஆக நம் அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே
மேல்
#335
வந்து சொல்லு-மின் மூடனேனுக்கு வல்லவா நினைந்து ஏத்துவீர்
வந்த சாயினை அறிவரோ தம்மை வாழ்த்தினார்கட்கு நல்லரோ
புந்தியால் உரை கொள்வரோ அன்றி பொய் இல் மெய் உரைத்து ஆள்வரோ
அன்றியே மிக அறவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே
மேல்
#336
மெய் என் சொல்லு-மின் நமரங்காள் உமக்கு இசையுமா நினைந்து ஏத்துவீர்
கையில் சூலம் அது உடையரோ கரிகாடரோ கறை_கண்டரோ
வெய்ய பாம்பு அரை ஆர்ப்பரோ விடை ஏறரோ கடை-தோறும் சென்று
ஐயம் கொள்ளும் அ அடிகளோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே
மேல்
#337
நீடு வாழ் பதி உடையரோ அயன் நெடிய மாலுக்கும் நெடியரோ
பாடுவாரையும் உடையரோ தமை பற்றினார்கட்கு நல்லரோ
காடுதான் அரங்கு ஆகவே கைகள் எட்டினோடு இலயம் பட
ஆடுவார் எனப்படுவரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே
மேல்
#338
நமணநந்தியும் கருமவீரனும் தருமசேனனும் என்று இவர்
குமண மா மலை குன்று போல் நின்று தங்கள் கூறை ஒன்று இன்றியே
ஞமணம் ஞாஞணம் ஞாணம் ஞோணம் என்று ஓதி யாரையும் நாண் இலா
அமணரால் பழிப்பு உடையரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே
மேல்
#339
படி செய் நீர்மையின் பத்தர்காள் பணிந்து ஏத்தினேன் பணியீர் அருள்
வடிவிலான் திரு நாவலூரான் வனப்பகை அப்பன் வன் தொண்டன்
செடியனாகிலும் தீயனாகிலும் தம்மையே மனம் சிந்திக்கும்
அடியன் ஊரனை ஆள்வரோ நமக்கு அடிகள் ஆகிய அடிகளே
மேல்
34. திருப்புகலூர் - பண் : கொல்லி
#340
தம்மையே புகழ்ந்து இச்சை பேசினும் சார்வினும் தொண்டர் தருகிலா
பொய்ம்மையாளரை பாடாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள்
இம்மையே தரும் சோறும் கூறையும் எத்தல் ஆம் இடர் கெடலும் ஆம்
அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
மேல்
#341
மிடுக்கிலாதானை வீமனே விறல் விசயனே வில்லுக்கு இவன் என்று
கொடுக்கிலாதானை பாரியே என்று கூறினும் கொடுப்பார் இலை
பொடி கொள் மேனி எம் புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள்
அடுக்குமேல் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
மேல்
#342
காணியேல் பெரிது உடையனே கற்று நல்லனே சுற்றம் நல் கிளை
பேணியே விருந்து ஓம்புமே என்று பேசினும் கொடுப்பார் இலை
பூணி பூண்டு உழ புள் சிலம்பும் தண் புகலூர் பாடு-மின் புலவீர்காள்
ஆணியாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
மேல்
#343
நரைகள் போந்து மெய் தளர்ந்து மூத்து உடல் நடுங்கி நிற்கும் இ கிழவனை
வரைகள் போல் திரள் தோளனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை
புரை வெள் ஏறு உடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள்
அரையனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
மேல்
#344
வஞ்ச நெஞ்சனை மா சழக்கனை பாவியை வழக்கிலியை
பஞ்சதுட்டனை சாதுவே என்று பாடினும் கொடுப்பார் இலை
பொன் செய் செம் சடை புண்ணியன் புகலூரை பாடு-மின் புலவீர்காள்
நெஞ்சில் நோய் அறுத்து உஞ்சுபோவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
மேல்
#345
நலம்இலாதானை நல்லனே என்று நரைத்த மாந்தரை இளையனே
குலம்இலாதானை குலவனே என்று கூறினும் கொடுப்பார் இலை
புலம் எலாம் வெறி கமழும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள்
அலமராது அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
மேல்
#346
நோயனை தடந்தோளனே என்று நொய்ய மாந்தரை விழுமிய
தாய் அன்றோ புலவோர்க்கு எலாம் என்று சாற்றினும் கொடுப்பார் இலை
போய் உழன்று கண் குழியாதே எந்தை புகலூர் பாடு-மின் புலவீர்காள்
ஆயம் இன்றி போய் அண்டம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
மேல்
#347
எள் விழுந்த இடம் பார்க்குமாகிலும் ஈக்கும் ஈகிலனாகிலும்
வள்ளலே எங்கள் மைந்தனே என்று வாழ்த்தினும் கொடுப்பார் இலை
புள் எலாம் சென்று சேரும் பூம் புகலூரை பாடு-மின் புலவீர்காள்
அள்ளல்பட்டு அழுந்தாது போவதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
மேல்
#348
கற்றிலாதானை கற்று நல்லனே காமதேவனை ஒக்குமே
முற்றிலாதானை முற்றனே என்று மொழியினும் கொடுப்பார் இலை
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புகலூரை பாடு-மின் புலவீர்காள்
அத்தனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
மேல்
#349
தையலாருக்கு ஒர் காமனே என்றும் சால நல அழகு உடை ஐயனே
கை உலாவிய வேலனே என்று கழறினும் கொடுப்பார் இலை
பொய்கை ஆவியில் மேதி பாய் புகலூரை பாடு-மின் புலவீர்காள்
ஐயனாய் அமர்_உலகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
மேல்
#350
செறுவினில் செழும் கமலம் ஓங்கு தென் புகலூர் மேவிய செல்வனை
நறவம் பூம் பொழில் நாவலூரன் வனப்பகை அப்பன் சடையன்-தன்
சிறுவன் தொண்டன் ஊரன் பாடிய பாடல் பத்து இவை வல்லவர்
அறவனார் அடி சென்று சேர்வதற்கு யாதும் ஐயுறவு இல்லையே
மேல்
35. திருப்புறம்பயம் - பண் : கொல்லி
#351
அங்கம் ஓதியோர் ஆறைமேற்றளி-நின்றும் போந்து வந்து இன்னம்பர்
தங்கினோமையும் இன்னது என்றிலர் ஈசனார் எழு நெஞ்சமே
கங்குல் ஏமங்கள் கொண்டு தேவர்கள் ஏத்தி வானவர்தாம் தொழும்
பொங்கு மால் விடை ஏறி செல்வ புறம்பயம் தொழ போதுமே
மேல்
#352
பதியும் சுற்றமும் பெற்ற மக்களும் பண்டையார் அலர் பெண்டிரும்
நெதியில் இ மனை வாழும் வாழ்க்கையும் நினைப்பு ஒழி மட நெஞ்சமே
மதியம் சேர் சடை கங்கையான் இடம் மகிழும் மல்லிகை சண்பகம்
புதிய பூ மலர்ந்து எல்லி நாறும் புறம்பயம் தொழ போதுமே
மேல்
#353
புறம் திரைந்து நரம்பு எழுந்து நரைத்து நீ உரையால் தளர்ந்து
அறம் புரிந்து நினைப்பது ஆண்மை அரிது காண் இஃது அறிதியேல்
திறம்பியாது எழு நெஞ்சமே சிறுகாலை நாம் உறு வாணியம்
புறம் பயத்து உறை பூதநாதன் புறம்பயம் தொழ போதுமே
மேல்
#354
குற்று ஒருவரை கூறை கொண்டு கொலைகள் சூழ்ந்த களவு எலாம்
செற்று ஒருவரை செய்த தீமைகள் இம்மையே வரும் திண்ணமே
மற்று ஒருவரை பற்று இலேன் மறவாது எழு மட நெஞ்சமே
புற்று அரவு உடை பெற்றம் ஏறி புறம்பயம் தொழ போதுமே
மேல்
#355
கள்ளி நீ செய்த தீமை உள்ளன பாவமும் பறையும்படி
தெள்ளிதா எழு நெஞ்சமே செம் கண் சே உடை சிவலோகன் ஊர்
துள்ளி வெள் இள வாளை பாய் வயல் தோன்று தாமரை பூக்கள் மேல்
புள்ளி நள்ளிகள் பள்ளிகொள்ளும் புறம்பயம் தொழ போதுமே
மேல்
#356
படை எலாம் பகடு ஆர ஆளிலும் பௌவம் சூழ்ந்து அரசு ஆளிலும்
கடை எலாம் பிணை தேரை வால் கவலாது எழு மட நெஞ்சமே
மடை எலாம் கழுநீர் மலர்ந்து மருங்கு எலாம் கரும்பு ஆட தேன்
புடை எலாம் மணம் நாறு சோலை புறம்பயம் தொழ போதுமே
மேல்
#357
முன்னை செய்வினை இம்மையில் வந்து மூடுமாதலின் முன்னமே
என்னை நீ தியக்காது எழு மட நெஞ்சமே எந்தை தந்தை ஊர்
அன்ன சேவலோடு ஊடி பேடைகள் கூடி சேரும் அணி பொழில்
புன்னை கன்னிகள் அக்கு அரும்பு புறம்பயம் தொழ போதுமே
மேல்
#358
மலம் எலாம் அறும் இம்மையே மறுமைக்கும் வல்வினை சார்கிலா
சலம் எலாம் ஒழி நெஞ்சமே எங்கள் சங்கரன் வந்து தங்கும் ஊர்
கலம் எலாம் கடல் மண்டு காவிரி நங்கை ஆடிய கங்கை நீர்
புலம் எலாம் மண்டி பொன் விளைக்கும் புறம்பயம் தொழ போதுமே
மேல்
#359
பண்டு அரியன செய்த தீமையும் பாவமும் பறையும்படி
கண்டு அரியன கேட்டியேல் கவலாது எழு மட நெஞ்சமே
தொண்டு அரியன பாடி துள்ளி நின்று ஆடி வானவர் தாம் தொழும்
புண்டரீகம் மலரும் பொய்கை புறம்பயம் தொழ போதுமே
மேல்
#360
துஞ்சியும் பிறந்தும் சிறந்தும் துயக்கு அறாத மயக்கு இவை
அஞ்சி ஊரன் திரு புறம்பயத்து அப்பனை தமிழ் சீரினால்
நெஞ்சினாலே புறம்பயம் தொழுது உய்தும் என்று நினைத்தன
வஞ்சியாது உரைசெய்ய வல்லவர் வல்லர் வான்_உலகு ஆளவே
மேல்
36. திருப்பைஞ்ஞீலி - பண் : கொல்லி
#361
கார் உலாவிய நஞ்சை உண்டு இருள் கண்ட வெண் தலை ஓடு கொண்டு
ஊர் எலாம் திரிந்து என் செய்வீர் பலி ஓர் இடத்திலே கொள்ளும் நீர்
பார் எலாம் பணிந்து உம்மையே பரவி பணியும் பைஞ்ஞீலியீர்
ஆரம் ஆவது நாகமோ சொலும் ஆரணீய விடங்கரே
மேல்
#362
சிலைத்து நோக்கும் வெள் ஏறு செம் தழல் வாய பாம்பு அது மூசெனும்
பலிக்கு நீர் வரும்போது நும் கையில் பாம்பு வேண்டா பிரானிரே
மலைத்த சந்தொடு வேங்கை கோங்கமும் மன்னு கார் அகில் சண்பகம்
அலைக்கும் பைம் புனல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே
மேல்
#363
தூயவர் கண்ணும் வாயும் மேனியும் துன்ன ஆடை சுடலையில்
பேயொடு ஆடலை தவிரும் நீர் ஒரு பித்தரோ எம்பிரானிரே
பாயும் நீர் கிடங்கு ஆர் கமலமும் பைம் தண் மாதவி புன்னையும்
ஆய பைம் பொழில் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரே
மேல்
#364
செந்தமிழ் திறம் வல்லிரோ செம் கண் அரவம் முன்கையில் ஆடவே
வந்து நிற்கும் இது என்-கொலோ பலி மாற்றமாட்டோம் இடகிலோம்
பைம் தண் மா மலர் உந்து சோலைகள் கந்தம் நாறும் பைஞ்ஞீலியீர்
அந்தி வானம் உம் மேனியோ சொலும் ஆரணீய விடங்கரே
மேல்
#365
நீறு நும் திரு மேனி நித்திலம் நீள் நெடுங்கண்ணினாளொடும்
கூறராய் வந்து நிற்றிரால் கொணர்ந்து இடுகிலோம் பலி நட-மினோ
பாறு வெண் தலை கையில் ஏந்தி பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்
ஆறு தாங்கியா சடையரோ சொலும் ஆரணீய விடங்கரே
மேல்
#366
குரவம் நாறிய குழலினார் வளை கொள்வதே தொழில் ஆகி நீர்
இரவும் இ மனை அறிதிரே இங்கே நடந்து போகவும் வல்லிரே
பரவி நாள்-தொறும் பாடுவார் வினை பற்று அறுக்கும் பைஞ்ஞீலியீர்
அரவம் ஆட்டவும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே
மேல்
#367
ஏடு உலாம் மலர் கொன்றை சூடுதிர் என்பு எலாம் அணிந்து என் செய்வீர்
காடு நும் பதி ஓடு கையது காதல்செய்பவர் பெறுவது என்
பாடல் வண்டு இசை ஆலும் சோலை பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
ஆடல் பாடலும் வல்லிரோ சொலும் ஆரணீய விடங்கரே
மேல்
#368
மத்தம் மா மலர் கொன்றை வன்னியும் கங்கையாளொடு திங்களும்
மொய்த்த வெண் தலை கொக்கு இறகொடு வெள் எருக்கம் உம் சடைய தாம்
பத்தர் சித்தர்கள் பாடி ஆடும் பைஞ்ஞீலியேன் என்று நிற்றிரால்
அத்தி ஈர் உரி போர்த்திரோ சொலும் ஆரணீய விடங்கரே
மேல்
#369
தக்கை தண்ணுமை தாளம் வீணை தகுணிச்சம் கிணை சல்லரி
கொக்கரை குடமுழவினோடு இசை கூடி பாடி நின்று ஆடுவீர்
பக்கமே குயில் பாடும் சோலை பைஞ்ஞீலியேன் என நிற்றிரால்
அக்கும் ஆமையும் பூண்டிரோ சொலும் ஆரணீய விடங்கரே
மேல்
#370
கை ஒர் பாம்பு அரை ஆர்த்த ஒர் பாம்பு கழுத்து ஒர் பாம்பு அவை பின்பு தாழ்
மெய் எலாம் பொடிக்கொண்டு பூசுதிர் வேதம் ஓதுதிர் கீதமும்
பையவே விடங்கு ஆக நின்று பைஞ்ஞீலியேன் என்றீர் அடிகள் நீர்
ஐயம் ஏற்குமிது என்-கொலோ சொலும் ஆரணீய விடங்கரே
மேல்
#371
அன்னம் சேர் வயல் சூழ் பைஞ்ஞீலியில் ஆரணீய விடங்கரை
மின்னும் நுண் இடை மங்கைமார் பலர் வேண்டி காதல் மொழிந்த சொல்
மன்னு தொல் புகழ் நாவலூரன் வன் தொண்டன் வாய்மொழி பாடல் பத்து
உன்னி இன்னிசை பாடுவார் உமை_கேள்வன் சேவடி சேர்வரே
மேல்
37. திரு ஆரூர் - பண் : கொல்லி
#372
குருகு பாய கொழும் கரும்புகள் நெரிந்த சாறு
அருகு பாயும் வயல் அம் தண் ஆரூரரை
பருகும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் நினைந்து
உருகும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே
மேல்
#373
பறக்கும் எம் கிள்ளைகாள் பாடும் எம் பூவைகாள்
அற கண் என்ன தகும் அடிகள் ஆரூரரை
மறக்ககில்லாமையும் வளைகள் நில்லாமையும்
உறக்கம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே
மேல்
#374
சூழும் ஓடி சுழன்று உழலும் வெண் நாரைகாள்
ஆளும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரர்க்கு
வாழும் ஆறும் வளை கழலும் ஆறும் எனக்கு
ஊழும் மாறும் இவை உணர்த்த வல்லீர்களே
மேல்
#375
சக்கிரவாளத்து இளம் பேடைகாள் சேவல்காள்
அக்கிரமங்கள் செயும் அடிகள் ஆரூரர்க்கு
வக்கிரம் இல்லாமையும் வளைகள் நில்லாமையும்
உக்கிரம் இல்லாமையும் உணர்த்த வல்லீர்களே
மேல்
#376
இலை கொள் சோலை தலை இருக்கும் வெண் நாரைகாள்
அலை கொள் சூல படை அடிகள் ஆரூரர்க்கு
கலைகள் சோர்கின்றதும் கன வளை கழன்றதும்
முலைகள் பீர் கொண்டதும் மொழிய வல்லீர்களே
மேல்
#377
வண்டுகாள் கொண்டல்காள் வார் மணல் குருகுகாள்
அண்டவாணர் தொழும் அடிகள் ஆரூரரை
கண்ட ஆறும் காம தீ கனன்று எரிந்து மெய்
உண்ட ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே
மேல்
#378
தேன் நலம் கொண்ட தேன் வண்டுகாள் கொண்டல்காள்
ஆன் நலம் கொண்ட எம் அடிகள் ஆரூரர்க்கு
பால் நலம் கொண்ட எம் பணை முலை பயந்து பொன்
ஊன் நலம் கொண்டதும் உணர்த்த வல்லீர்களே
மேல்
#379
சுற்றுமுற்றும் சுழன்று உழலும் வெண் நாரைகாள்
அற்றம் முற்ற பகர்ந்து அடிகள் ஆரூரர்க்கு
பற்று மற்று இன்மையும் பாடு மற்று இன்மையும்
முற்றும் மற்று இன்மையும் மொழிய வல்லீர்களே
மேல்
#380
குரவம் நாற குயில் வண்டு இனம் பாட நின்று
அரவம் ஆடும் பொழில் அம் தண் ஆரூரரை
பரவி நாடுமதும் பாடி நாடுமதும்
உருகி நாடுமதும் உணர்த்த வல்லீர்களே
மேல்
#381
கூடும் அன்ன பெடைகாள் குயில் வண்டுகாள்
ஆடும் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை
பாடும் ஆறும் பணிந்து ஏத்தும் ஆறும் கூடி
ஊடும் ஆறும் இவை உணர்த்த வல்லீர்களே
மேல்
#382
நித்தம் ஆக நினைந்து உள்ளம் ஏத்தி தொழும்
அத்தன் அம் பொன் கழல் அடிகள் ஆரூரரை
சித்தம்வைத்த புகழ் சிங்கடி அப்பன் மெய்
பத்தன் ஊரன் சொன்ன பாடு-மின் பத்தரே
மேல்
38. திரு அதிகைத் திருவீரட்டானம் - பண் : கொல்லிக்கௌவாணம்
#383
தம்மானை அறியாத சாதியார் உளரே சடை மேல் கொள் பிறையானை விடை மேற்கொள் விகிர்தன்
கைம்மாவின் உரியானை கரிகாட்டில் ஆடல் உடையானை விடையானை கறை கொண்ட கண்டத்து
அம்மான் தன் அடி கொண்டு என் முடி மேல் வைத்திடும் என்னும் ஆசையால் வாழ்கின்ற அறிவு இலா நாயேன்
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
மேல்
#384
முன்னே எம்பெருமானை மறந்து என்-கொல் மறவாது ஒழிந்து என்-கொல் மறவாத சிந்தையால் வாழ்வேன்
பொன்னே நல் மணியே வெண் முத்தே செய் பவள குன்றமே ஈசன் என்று உன்னையே புகழ்வேன்
அன்னே என் அத்தா என்று அமரரால் அமரப்படுவானை அதிகை மா நகருள் வாழ்பவனை
என்னே என் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
மேல்
#385
விரும்பினேற்கு எனது உள்ளம் விடகிலா விதியே விண்ணவர்-தம் பெருமானே மண்ணவர் நின்று ஏத்தும்
கரும்பே என் கட்டி என்று உள்ளத்தால் உள்கி காதல் சேர் மாதராள் கங்கையாள் நங்கை
வரும் புனலும் சடைக்கு அணிந்து வளராத பிறையும் வரி அரவும் உடன் துயில் வைத்து அருளும் எந்தை
இரும் புனல் வந்து எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
மேல்
#386
நால் தானத்து ஒருவனை நான் ஆய பரனை நள்ளாற்று நம்பியை வெள்ளாற்று விதியை
காற்றானை தீயானை கடலானை மலையின் தலையானை கடும் கலுழி கங்கை நீர் வெள்ள
ஆற்றானை பிறையானை அம்மானை எம்மான் தம்மானை யாவர்க்கும் அறிவு அரிய செம் கண்
ஏற்றானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
மேல்
#387
சேந்தர் தாய் மலைமங்கை திரு நிறமும் பரிவும் உடையானை அதிகை மா நகருள் வாழ்பவனை
கூந்தல் தாழ் புனல் மங்கை குயில் அன்ன மொழியாள் கடை இடையில் கயல் இனங்கள் குதிகொள்ள குலாவி
வாய்ந்த நீர் வர உந்தி மராமரங்கள் வணங்கி மறி கடலை இடம் கொள்வான் மலை ஆரம் வாரி
ஏந்து நீர் எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
மேல்
#388
மை மான மணி நீல_கண்டத்து எம்பெருமான் வல் ஏன கொம்பு அணிந்த மா தவனை வானோர்
தம்மானை தலைமகனை தண் மதியும் பாம்பும் தடுமாறும் சடையானை தாழ் வரை கை வென்ற
வெம் மான மத கரியின் உரியானை வேத விதியானை வெண் நீறு சண்ணித்த மேனி
எம்மானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
மேல்
#389
வெய்து ஆய வினை கடலில் தடுமாறும் உயிர்க்கு மிக இரங்கி அருள்புரிந்து வீடுபேறு ஆக்கம்
பெய்தானை பிஞ்ஞகனை மை ஞவிலும் கண்டத்து எண் தோள் எம்பெருமானை பெண்பாகம் ஒருபால்
செய்தானை செக்கர் வான் ஒளியானை தீ வாய் அரவு ஆடு சடையானை திரிபுரங்கள் வேவ
எய்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
மேல்
#390
பொன்னானை மயில் ஊர்தி முருகவேள் தாதை பொடி ஆடு திரு மேனி நெடு மால்-தன் முடி மேல்
தென்னானை குட-பாலின் வட-பாலின் குண-பால் சேராத சிந்தையான் செக்கர் வான் அந்தி
அன்னானை அமரர்கள்-தம் பெருமானை கரு மான் உரியானை அதிகை மா நகருள் வாழ்பவனை
என்னானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
மேல்
#391
திருந்தாத வாள் அவுணர் புரம் மூன்றும் வேவ சிலை வளைவித்து ஒரு கணையால் தொழில் பூண்ட ச ¢வனை
கரும் தான மத களிற்றின் உரியானை பெரிய கண் மூன்றும் உடையானை கருதாத அரக்கன்
பெரும் தோள்கள் நால்_ஐந்தும் ஈர்_ஐந்து முடியும் உடையானை பேய் உருவம் ஊன்றும் உற மலை மேல்
இருந்தானை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
மேல்
#392
என்பினையே கலன் ஆக அணிந்தானை எங்கள் எருது ஏறும் பெருமானை இசை ஞானி சிறுவன்
வன் பனைய வளர் பொழில் கூழ் வயல் நாவலூர்_கோன் வன் தொண்டன் ஆரூரன் மதியாது சொன்ன
அன்பனை யாவர்க்கும் அறிவு அரிய அத்தர் பெருமானை அதிகை மா நகருள் வாழ்பவனை
என் பொன்னை எறி கெடில வட வீரட்டானத்து உறைவானை இறைபோதும் இகழ்வன் போல் யானே
மேல்
39. திருத்தொண்டத்தொகை - பண் : கொல்லிக்கௌவாணம்
#393
தில்லை வாழ் அந்தணர்-தம் அடியார்க்கும் அடியேன் திரு நீல_கண்டத்து குயவனார்க்கு அடியேன்
இல்லையே என்னாத இயற்பகைக்கும் அடியேன் இளையான்-தன் குடி மாறன் அடியார்க்கும் அடியேன்
வெல்லுமா மிக வல்ல மெய்ப்பொருளுக்கு அடியேன் விரி பொழில் சூழ் குன்றையார் விறல் மிண்டற்கு அடியேன்
அல்லி மென் முல்லை அம் தார் அமர்நீதிக்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே
மேல்
#394
இலை மலிந்த வேல் நம்பி எறிபத்தற்கு அடியேன் ஏனாதிநாதன்-தன் அடியார்க்கும் அடியேன்
கலை மலிந்த சீர் நம்பி கண்ணப்பற்கு அடியேன் கடவூரில் கலயன்-தன் அடியார்க்கும் அடியேன்
மலை மலிந்த தோள் வள்ளல் மானக்கஞ்சாறன் எஞ்சாத வாள் தாயன் அடியார்க்கும் அடியேன்
அலை மலிந்த புனல் மங்கை ஆனாயற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே
மேல்
#395
மும்மையால் உலகு ஆண்ட மூர்த்திக்கும் அடியேன் முருகனுக்கும் உருத்திரபசுபதிக்கும் அடியேன்
செம்மையே திருநாளைப்போவார்க்கும் அடியேன் திருக்குறிப்புத்தொண்டர்-தம் அடியார்க்கும் அடியேன்
மெய்ம்மையே திரு மேனி வழிபடாநிற்க வெகுண்டு எழுந்த தாதை தாள் மழுவினால் எறிந்த
அம்மையான் அடி சண்டிப்பெருமானுக்கு அடியேன் ஆரூரான் ஆரூரில் அம்மானுக்கு ஆளே
மேல்
#396
திரு நின்ற செம்மையே செம்மையா கொண்ட திருநாவுக்கரையன்-தன் அடியார்க்கும் அடியேன்
பெரு நம்பி குலச்சிறை-தன் அடியார்க்கும் அடியேன் பெருமிழலை குறும்பற்கும் பேயார்க்கும் அடியேன்
ஒரு நம்பி அப்பூதி அடியார்க்கும் அடியேன் ஒலி புனல் சூழ் சாத்தமங்கை நீலநக்கற்கு அடியேன்
அரு நம்பி நமிநந்தி அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே
மேல்
#397
வம்பு அறா வரி வண்டு மணம் நாற மலரும் மது மலர் நல் கொன்றையான் அடி அலால் பேணா
எம்பிரான் சம்பந்தன் அடியார்க்கும் அடியேன் ஏயர் கோன் கலிக்காமன் அடியார்க்கும் அடியேன்
நம்பிரான் திருமூலன் அடியார்க்கும் அடியேன் நாட்டம் மிகு தண்டிக்கும் மூர்க்கற்கும் அடியேன்
அம்பரான் சோமாசிமாறனுக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே
மேல்
#398
வார் கொண்ட வனமுலையாள் உமை_பங்கன் கழலே மறவாது கல் எறிந்த சாக்கியற்கும் அடியேன்
சீர் கொண்ட புகழ் வள்ளல் சிறப்புலிக்கும் அடியேன் செங்காட்டங்குடி மேய சிறுத்தொண்டற்கு அடியேன்
கார் கொண்ட கொடை கழறிற்றறிவாற்கும் அடியேன் கடல் காழி கணநாதன் அடியாற்கும் அடியேன்
ஆர் கொண்ட வேல் கூற்றன் களந்தை கோன் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே
மேல்
#399
பொய் அடிமை இல்லாத புலவர்க்கும் அடியேன் பொழில் கருவூர் துஞ்சிய புகழ் சோழற்கு அடியேன்
மெய் அடியான் நரசிங்கமுனைஅரையற்கு அடியேன் விரி திரை சூழ் கடல் நாகை அதிபத்தற்கு அடியேன்
கை தடிந்த வரி சிலையான் கலிக்கம்பன் கலியன் கழல் சக்தி வரிஞ்சையர்_கோன் அடியார்க்கும் அடியேன்
ஐயடிகள் காடவர்_கோன் அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே
மேல்
#400
கறை_கண்டன் கழல் அடியே காப்பு கொண்டிருந்த கணம்புல்லநம்பிக்கும் காரிக்கும் அடியேன்
நிறை கொண்ட சிந்தையான் நெய்வேலி வென்ற நின்ற சீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்
துறை கொண்ட செம்பவளம் இருள் அகற்றும் சோதி தொல் மயிலை வாயிலான் அடியார்க்கும் அடியேன்
அறை கொண்ட வேல் நம்பி முனையடுவாற்கு அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு அளே
மேல்
#401
கடல் சூழ்ந்த உலகு எலாம் காக்கின்ற பெருமான் காடவர் கோன் கழல் சிங்கன் அடியார்க்கும் அடியேன்
மடல் சூழ்ந்த தார் நம்பி இடங்கழிக்கும் தஞ்சை மன்னவன் ஆம் செருத்துணை-தன் அடியார்க்கும் அடியேன்
புடை சூழ்ந்த புலி அதள் மேல் அரவு ஆட ஆடி பொன் அடிக்கே மனம் வைத்த புகழ்த்துணைக்கும் அடியேன்
அடல் சூழ்ந்த வேல் நம்பி கோட்புலிக்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே
மேல்
#402
பத்தராய் பணிவார்கள் எல்லார்க்கும் அடியேன் பரமனையே பாடுவார் அடியார்க்கும் அடியேன்
சித்தத்தை சிவன்-பாலே வைத்தார்க்கும் அடியேன் திரு ஆரூர் பிறந்தார்கள் எல்லார்க்கும் அடியேன்
முப்போதும் திரு மேனி தீண்டுவார்க்கு அடியேன் முழு நீறு பூசிய முனிவர்க்கும் அடியேன்
அப்பாலும் அடி சார்ந்த அடியார்க்கும் அடியேன் ஆரூரன் ஆரூரில் அம்மானுக்கு ஆளே
மேல்
#403
மன்னிய சீர் மறை நாவன் நின்றவூர் பூசல் வரிவளையாள் மானிக்கும் நேசனுக்கும் அடியேன்
தென்னவனாய் உலகு ஆண்ட செங்கணாற்கு அடியேன் திரு நீல_கண்டத்து பாணனார்க்கு அடியேன்
என்னவன் ஆம் அரன் அடியே அடைந்திட்ட சடையன் இசை ஞானி காதலன் திரு நாவலூர் கோன்
அன்னவன் ஆம் ஆரூரன் அடிமை கேட்டு உவப்பார் ஆரூரில் அம்மானுக்கு அன்பர் ஆவாரே
மேல்
40. திருக்கானாட்டு முள்ளூர் - பண் : கொல்லிக்கௌவாணம்
#404
வள் வாய மதி மிளிரும் வளர் சடையினானை மறையவனை வாய்மொழியை வானவர்-தம் கோனை
புள் வாயை கீண்டு உலகம் விழுங்கி உமிழ்ந்தானை பொன் நிறத்தின் முப்புரி நூல் நான்முகத்தினானை
முள் வாய மடல் தழுவி முடத்தாழை ஈன்று மொட்டு அலர்ந்து விரை நாறும் முருகு விரி பொழில் சூழ்
கள் வாய கருங்குவளை கண்வளரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
மேல்
#405
ஒரு மேக முகில் ஆகி ஒத்து உலகம்தானாய் ஊர்வனவும் நிற்பனவும் ஊழிகளும் தானாய்
பொரு மேவு கடல் ஆகி பூதங்கள் ஐந்தாய் புனைந்தவனை புண்ணியனை புரிசடையினானை
திரு மேவு செல்வத்தார் தீ மூன்றும் வளர்த்த திரு தக்க அந்தணர்கள் ஓதும் நகர் எங்கும்
கரு மேதி செந்தாமரை மேயும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
மேல்
#406
இரும்பு உயர்ந்த மூ இலைய சூலத்தினானை இறையவனை மறையவனை எண்குணத்தினானை
சுரும்பு உயர்ந்த கொன்றையொடு தூ மதியம் சூடும் சடையானை விடையானை சோதி எனும் சுடரை
அரும்பு உயர்ந்த அரவிந்தத்து அணி மலர்கள் ஏறி அன்னங்கள் விளையாடும் அகன் குறையின் அருகே
கரும்பு உயர்ந்து பெரும் செந்நெல் நெருங்கி விளை கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
மேல்
#407
பூளை புனை கொன்றையொடு புரி சடையினானை புனல் ஆகி அனல் ஆகி பூதங்கள் ஐந்தாய்
நாளை இன்று நெருநல்லாய் ஆகாயம் ஆகி ஞாயிறாய் மதியமாய் நின்ற எம்பரனை
பாளை படு பைம் கமுகின் சூழல் இளம் தெங்கின் படு மதம் செய் கொழும் தேறல் வாய் மடுத்து பருகி
காளை வண்டு பாட மயில் ஆலும் வளர் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
மேல்
#408
செருக்கு வாய் பைம் கண் வெள் அரவு அரையினானை தேவர்கள் சூளாமணியை செம் கண் விடையானை
முருக்கு வாய் மலர் ஒக்கும் திரு மேனியானை முன்னிலையாய் முழுது உலகம் ஆய பெருமானை
இருக்கு வாய் அந்தணர்கள் எழுபிறப்புள் எங்கும் வேள்வி இருந்து இரு நிதியம் வழங்கும் நகர் எங்கும்
கருக்கு வாய் பெண்ணையொடு தெங்கு மலி சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
மேல்
#409
விடை அரவ கொடி ஏந்தும் விண்ணவர்-தம் கோனை வெள்ளத்து மால் அவனும் வேதமுதலானும்
அடி இணையும் திரு முடியும் காண அரிது ஆய சங்கரனை தத்துவனை தையல் மடவார்கள்
உடை அவிழ குழல் அவிழ கோதை குடைந்து ஆட குங்குமங்கள் உந்தி வரு கொள்ளிடத்தின் கரை மேல்
கடைகள் விடுவார் குவளை களைவாரும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
மேல்
#410
அரு மணியை முத்தினை ஆன் அஞ்சும் ஆடும் அமரர்கள்-தம் பெருமானை அரு மறையின் பொருளை
திரு மணியை தீம் கரும்பின் ஊறல் இரும் தேனை தெரிவு அரிய மா மணியை திகழ் தகு செம்பொன்னை
குரு மணிகள் கொழித்து இழிந்து சுழித்து இழியும் திரை-வாய் கோல் வளையார் குடைந்து ஆடும் கொள்ள ¢டத்தின் கரை மேல்
கரு மணிகள் போல் நீலம் மலர்கின்ற கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
மேல்
#411
இழை தழுவு வெண் நூலும் மேவு திரு மார்பின் ஈசன் தன் எண் கோள்கள் வீசி எரிஆட
குழை தழுவு திரு காதில் கோள் அரவம் அசைத்து கோவணம் கொள் குழகனை குளிர் சடையினானை
தழை தழுவு தண் நிறத்த செந்நெல் அதன் அயலே தடம் தரள மென் கரும்பின் தாழ் கிடங்கின் அருகே
கழை தழுவி தேன் தொடுக்கும் கழனி சூழ் பழன கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
மேல்
#412
குனிவு இனிய கதிர் மதியம் சூடு சடையானை குண்டலம் சேர் காதவனை வண்டு இனங்கள் பாட
பனி உதிரும் சடையானை பால் வெண்நீற்றானை பல உருவும் தன் உருவே ஆய பெருமானை
துனிவு இனிய தூய மொழி தொண்டை வாய் நல்லார் தூ நீலம் கண்வளரும் சூழ் கிடங்கின் அருகே
கனிவு இனிய கதலி வனம் தழுவு பொழில் சோலை கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
மேல்
#413
தேவி அம் பொன் மலை கோமான்-தன் பாவை ஆக தனது உருவம் ஒருபாகம் சேர்த்துவித்த பெருமான்
மேவிய வெம் நரகத்தில் அழுந்தாமை நமக்கு மெய்ந்நெறியை தான் காட்டும் வேதமுதலானை
தூவி வாய் நாரையொடு குருகு பாய்ந்து ஆர்ப்ப துறை கெண்டை மிளிர்ந்து கயல் துள்ளி விளையாட
காவி வாய் வண்டு பல பண் செய்யும் கழனி கானாட்டுமுள்ளூரில் கண்டு தொழுதேனே
மேல்
#414
திரையின் ஆர் கடல் சூழ்ந்த தென் இலங்கை_கோனை செற்றவனை செம் சடை மேல் வெண்மதியினானை
கரையின் ஆர் புனல் தழுவு கொள்ளிடத்தின் கரை மேல் கானாட்டுமுள்ளூரில் கண்டு கழல் தொழுது
உரையின் ஆர் மத யானை நாவல் ஆரூரன் உரிமையால் உரைசெய்த ஒண் தமிழ்கள் வல்லார்
வரையின் ஆர் வகை ஞாலம் ஆண்டவர்க்கும் தாம் போய் வானவர்க்கும் தலைவராய் நிற்பர் அவர்தாமே
மேல்
41. திருக்கச்சூர் ஆலக்கோயில் - பண் : கொல்லிக்கௌவாணம்
#415
முது வாய் ஓரி கதற முதுகாட்டு எரி கொண்டு ஆடல் முயல்வானே
மது வார் கொன்றை புது வீ சூடும் மலையான்மகள்-தன் மணவாளா
கதுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் கவலாரே
அதுவே ஆம் ஆறு இதுவோ கச்சூர் ஆலக்கோயில் அம்மானே
மேல்
#416
கச்சு ஏர் அரவு ஒன்று அரையில் அசைத்து கழலும் சிலம்பும் கலிக்க பலிக்கு என்று
உச்சம்போதா ஊர்ஊர் திரிய கண்டால் அடியார் உருகாரே
இச்சை அறியோம் எங்கள் பெருமான் ஏழ்ஏழ் பிறப்பும் எனை ஆள்வாய்
அச்சம் இல்லா கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே
மேல்
#417
சால கோயில் உள நின் கோயில் அவை என் தலை மேல் கொண்டாடி
மாலை தீர்ந்தேன் வினையும் துரந்தேன் வானோர் அறியா நெறியானே
கோல கோயில் குறையா கோயில் குளிர் பூம் கச்சூர் வட-பாலை
ஆலக்கோயில் கல்லால் நிழல் கீழ் அறம் கட்டுரைத்த அம்மானே
மேல்
#418
விடையும் கொடியும் சடையும் உடையாய் மின் நேர் உருவத்து ஒளியானே
கடையும் புடை சூழ் மணி மண்டபமும் கன்னிமாடம் கலந்து எங்கும்
புடையும் பொழிலும் புனலும் தழுவி பூ மேல் திருமாமகள் புல்கி
அடையும் கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே
மேல்
#419
மேலை விதியே வினையின் பயனே விரவார் புரம் மூன்று எரிசெய்தாய்
காலை எழுந்து தொழுவார்-தங்கள் கவலை களைவாய் கறை_கண்டா
மாலை மதியே மலை மேல் மருந்தே மறவேன் அடியேன் வயல் சூழ்ந்த
ஆலை கழனி பழன கச்சூர் ஆலக்கோயில் அம்மானே
மேல்
#420
பிறவாய் இறவாய் பேணாய் மூவாய் பெற்றம் எறி பேய் சூழ்தல்
துறவாய் மறவாய் சுடுகாடு என்றும் இடமா கொண்டு நடம் ஆடி
ஒறுவாய் தலையில் பலி நீ கொள்ள கண்டால் அடியார் உருகாரே
அறவே ஒழியாய் கச்சூர் வட-பால் ஆலக்கோயில் அம்மானே
மேல்
#421
பொய்யே உன்னை புகழ்வார் புகழ்ந்தால் அதுவும் பொருளா கொள்வோனே
மெய்யே எங்கள் பெருமான் உன்னை நினைவார் அவரை நினைகண்டாய்
மை ஆர் தடம் கண் மங்கை பங்கா கங்கு ஆர் மதியம் சடை வைத்த
ஐயா செய்யாய் வெளியாய் கச்சூர் ஆலக்கோயில் அம்மானே
மேல்
#422
ஊனை பெருக்கி உன்னை நினையாது ஒழிந்தேன் செடியேன் உணர்வு இல்லேன்
கான கொன்றை கமழ மலரும் கடி நாறு உடையாய் கச்சூராய்
மானை புரையும் மட மென்நோக்கி மடவாள் அஞ்ச மறைத்திட்ட
ஆனை தோலாய் ஞானக்கண்ணாய் ஆலக்கோயில் அம்மானே
மேல்
#423
காதல்செய்து களித்து பிதற்றி கடி மா மலர் இட்டு உனை ஏத்தி
ஆதல்செய்யும் அடியார் இருக்க ஐயம் கொள்வது அழகிதே
ஓத கண்டேன் உன்னை மறவேன் உமையாள்_கணவா எனை ஆள்வாய்
ஆதல் பழன கழனி கச்சூர் ஆலக்கோயில் அம்மானே
மேல்
#424
அன்னம் மன்னும் வயல் சூழ் கச்சூர் ஆலக்கோயில் அம்மானை
உன்ன முன்னும் மனத்து ஆரூரன் ஆரூரன் பேர் முடி வைத்த
மன்னு புலவன் வயல் நாவலர்_கோன் செஞ்சொல் நாவன் வன்தொண்டன்
பன்னு தமிழ் நூல் மாலை வல்லார் அவர் என் தலை மேல் பயில்வாரே
மேல்
42. திருவெஞ்சமாக்கூடல் - பண் : கொல்லிக்கௌவாணம்
#425
எறிக்கும் கதிர் வேய் உதிர் முத்தமொடு ஏலம் இலவங்கம் தக்கோலம் இஞ்சி
செறிக்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
முறிக்கும் தழை மா முடப்புன்னை ஞாழல் குருக்கத்திகள் மேல் குயில் கூவல் அறா
வெறிக்கும் கலைமா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
மேல்
#426
குளங்கள் பலவும் குழியும் நிறைய குட மா மணி சந்தனமும் அகிலும்
துளங்கும் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
வளம் கொள் மதில் மாளிகை கோபுரமும் மணி மண்டபமும் இவை மஞ்சு-தன்னுள்
விளங்கும் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
மேல்
#427
வரை மான் அனையார் மயில் சாயல் நல்லார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்ச
திரை ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
நிரை ஆர் கமுகும் நெடும் தாள் தெங்கும் குறும் தாள் பலவும் விரவி குளிரும்
விரை ஆர் பொழில் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
மேல்
#428
பண் நேர் மொழியாளை ஓர்பங்கு உடையாய் படு காட்டகத்து என்றும் ஓர் பற்று ஒழியாய்
தண் ஆர் அகிலும் நல சாமரையும் அலைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
மண் ஆர் முழவும் குழலும் இயம்ப மடவார் நடம் ஆடும் மணி அரங்கில்
விண் ஆர் மதி தோய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
மேல்
#429
துளை வெண் குழையும் சுருள் வெண் தோடும் தூங்கும் காதில் துளங்கும்படியாய்
களையே கமழும் மலர் கொன்றையினாய் கலந்தார்க்கு அருள்செய்திடும் கற்பகமே
பிளை வெண்பிறையாய் பிறங்கும் சடையாய் பிறவாதவனே பெறுவதற்கு அரியாய்
வெளை மால் விடையாய் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
மேல்
#430
தொழுவார்க்கு எளியாய் துயர் தீர நின்றாய் சுரும்பு ஆர் மலர் கொன்றை துன்றும் சடையாய்
உழுவார்க்கு அரிய விடை ஏறி ஒன்னார் புரம் தீ எழ ஓடுவித்தாய் அழகா
முழவு ஆர் ஒலி பாடலொடு ஆடல் அறா முதுகாடு அரங்கா நடம் ஆட வல்லாய்
விழவு ஆர் மறுகின் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
மேல்
#431
கடம் மா களி யானை உரித்தவனே கரிகாடு இடமா அனல் வீசி நின்று
நடம் ஆட வல்லாய் நரை ஏறு உகந்தாய் நல்லாய் நறும் கொன்றை நயந்தவனே
படம் ஆயிரம் ஆம் பரு துத்தி பைம் கண் பகு வாய் எயிற்றொடு அழலே உமிழும்
விட வார் அரவா வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
மேல்
#432
காடும் மலையும் நாடும் இடறி கதிர் மா மணி சந்தனமும் அகிலும்
சேடன் உறையும் இடம்தான் விரும்பி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
பாடல் முழவும் குழலும் இயம்ப பணைத்தோளியர் பாடலொடு ஆடல் அறா
வேடர் விரும்பும் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
மேல்
#433
கொங்கு ஆர் மலர் கொன்றை அம் தாரவனே கொடுகொட்டி ஒர் வீணை உடையவனே
பொங்கு ஆடு அரவும் புனலும் சடை மேல் பொதியும் புனிதா புனம் சூழ்ந்து அழகு ஆர்
துங்கு ஆர் புனலுள் பெய்துகொண்டு மண்டி திளைத்து எற்று சிற்றாறு அதன் கீழ் கரை மேல்
வெம் கார் வயல் சூழ் வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே
மேல்
#434
வஞ்சி நுண்இடையார் மயில் சாயல் அன்னார் வடி வேல் கண் நல்லார் பலர் வந்து இறைஞ்சும்
வெஞ்சமாக்கூடல் விகிர்தா அடியேனையும் வேண்டுதியே என்று தான் விரும்பி
வஞ்சியாது அளிக்கும் வயல் நாவலர்_கோன் வனப்பகை அப்பன் வன் தொண்டன் சொன்ன
செஞ்சொல் தமிழ் மாலைகள் பத்தும் வல்லார் சிவலோகத்து இருப்பது திண்ணம் அன்றே
மேல்
43. திருமுதுகுன்றம் - பண் : கொல்லிக்கௌவாணம்
#435
நஞ்சி இடை இன்று நாளை என்று உம்மை நச்சுவார்
துஞ்சியிட்டால் பின்னை செய்வது என் அடிகேள் சொலீர்
பஞ்சி இட புட்டில் கீறுமோ பணியீர் அருள்
முஞ்சியிடை சங்கம் ஆர்க்கும் சீர் முதுகுன்றரே
மேல்
#436
ஏரி கனக கமல மலர் அன்ன சேவடி
ஊர் இத்தனையும் திரிந்த-கால் அவை நோம்-கொலோ
வாரி-கண் சென்று வளைக்கப்பட்டு வருந்தி போய்
மூரி களிறு முழக்கு அறா முதுகுன்றரே
மேல்
#437
தொண்டர்கள் பாட விண்ணோர்கள் ஏத்த உழிதர்வீர்
பண்டு அகம்-தோறும் பலிக்கு செல்வது பான்மையே
கண்டகர் வாளிகள் வில்லிகள் புறங்காக்கும் சீர்
மொண்ட கை வேள்வி முழக்கு அறா முதுகுன்றரே
மேல்
#438
இளைப்பு அறியீர் இம்மை ஏத்துவார்க்கு அம்மை செய்வது என்
விளைப்பு அறியாத வெம் காலனை உயிர் வீட்டினீர்
அளை பிரியா அரவு அல்குலாளொடு கங்கை சேர்
முளை பிறை சென்னி சடை முடி முதுகுன்றரே
மேல்
#439
ஆடி அசைந்து அடியாரும் நீரும் அகம்-தொறும்
பாடி படைத்த பொருள் எலாம் உமையாளுக்கோ
மாடம் மதில் அணி கோபுரம் மணி மண்டபம்
மூடி முகில் தவழ் சோலை சூழ் முதுகுன்றரே
மேல்
#440
இழை வளர் நுண் இடை மங்கையொடு இடுகாட்டிடை
குழை வளர் காதுகள் மோத நின்று குனிப்பதே
மழை வளரும் நெடும் கோட்டிடை மத யானைகள்
முழை வளர் ஆளி முழக்கு அறா முதுகுன்றரே
மேல்
#441
சென்று இல்லிடை செடி நாய் குரைக்க செடிச்சிகள்
மன்றிலிடை பலி தேர போவது வாழ்க்கையே
குன்றிலிடை களிறு ஆளி கொள்ள குறத்திகள்
முன்றிலிடை பிடி கன்று இடும் முதுகுன்றரே
மேல்
#442
அந்தி திரிந்து அடியாரும் நீரும் அகம்-தொறும்
சந்திகள்-தோறும் பலிக்கு செல்வது தக்கதே
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம்
முந்தி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே
மேல்
#443
செட்டு நின் காதலி ஊர்கள்-தோறும் அறம் செய
அட்டு-மின் சில் பலிக்கு என்று அகம் கடை நிற்பதே
பட்டி வெள் ஏறு உகந்து ஏறுவீர் பரிசு என்-கொலோ
முட்டி அடி தொழ நின்ற சீர் முதுகுன்றரே
மேல்
#444
எ திசையும் திரிந்து ஏற்ற-கால் பிறர் என் சொலார்
பத்தியினால் இடுவாரிடை பலி கொண்-மினோ
எ திசையும் திரை ஏற மோதி கரைகள் மேல்
முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரே
மேல்
#445
முத்தி முத்தாறு வலம்செயும் முதுகுன்றரை
பித்தன் ஒப்பான் அடித்தொண்டன் ஊரன் பிதற்று இவை
தத்துவஞானிகள் ஆயினார் தடுமாற்றிலார்
எ தவத்தோர்களும் ஏத்துவார்க்கு இடர் இல்லையே
மேல்
44. முடிப்பது கங்கை (திருவஞ்சைக்களம்) - பண் : கொல்லிக்கௌவாணம்
#446
முடிப்பது கங்கையும் திங்களும் செற்றது மூஎயில்
நொடிப்பது மாத்திரை நீறு எழ கணை நூறினார்
கடிப்பதும் ஏறும் என்று அஞ்சுவன் திரு கைகளால்
பிடிப்பது பாம்பு அன்றி இல்லையோ எம்பிரானுக்கே
மேல்
#447
தூறு அன்றி ஆடு அரங்கு இல்லையோ சுடலை பொடி
நீறு அன்றி சாந்தம் மற்று இல்லையோ இமவான்மகள்
கூறு அன்றி கூறு மற்று இல்லையோ கொல்லை சில்லை வெள்
ஏறு அன்றி ஏறுவது இல்லையோ எம்பிரானுக்கே
மேல்
#448
தட்டு எனும் தட்டு எனும் தொண்டர்காள் தடுமாற்றத்தை
ஒட்டு எனும் ஒட்டு எனும் மா நிலத்து உயிர் கோறலை
சிட்டனும் திரிபுரம் சுட்ட தேவர்கள்தேவனை
வெட்டென பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே
மேல்
#449
நரி தலை கவ்வ நின்று ஓரி கூப்பிட நள்ளிருள்
எரி தலை பேய் புடை சூழ ஆர் இருள் காட்டிடை
சிரி தலை மாலை சடைக்கு அணிந்த எம் செல்வனை
பிரிதலை பேசன்-மின் தொண்டர்காள் எம்பிரானையே
மேல்
#450
வேய் அன தோளி மலைமகளை விரும்பிய
மாயம் இல் மாமலைநாடன் ஆகிய மாண்பனை
ஆயன சொல்லி நின்றார்கள் அல்லல் அறுக்கிலும்
பேயனே பித்தனே என்பரால் எம்பிரானையே
மேல்
#451
இறைவன் என்று எம்பெருமானை வானவர் ஏத்த போய்
துறை ஒன்றி தூ மலர் இட்டு அடி இணை போற்றுவார்
மறை அன்றி பாடுவது இல்லையோ மல்கு வான் இளம்
பிறை அன்றி சூடுவது இல்லையோ எம்பிரானுக்கே
மேல்
#452
தாரும் தண் கொன்றையும் கூவிளம் தன் மத்தமும்
ஆரும் அளவு அறியாத ஆதியும் அந்தமும்
ஊரும் ஒன்று இல்லை உலகு எலாம் உகப்பார் தொழ
பேரும் ஓர் ஆயிரம் என்பரால் எம்பிரானுக்கே
மேல்
#453
அரியொடு பூமிசையானும் ஆதியும் அறிகிலார்
வரிதரு பாம்பொடு வன்னி திங்களும் மத்தமும்
புரிதரு புன் சடை வைத்த எம் புனிதற்கு இனி
எரி அன்றி அங்கைக்கு ஒன்று இல்லையோ எம்பிரானுக்கே
மேல்
#454
கரிய மன சமண் காடி ஆடு கழுக்களால்
எரிய வசவுணும் தன்மையோ இமவான்மகள்
பெரிய மனம் தடுமாற வேண்டி பெம்மான் மத
கரியின் உரி அல்லது இல்லையோ எம்பிரானுக்கே
மேல்
#455
காய் சின மால் விடை மாணிக்கத்து எம் கறை_கண்டத்து
ஈசனை ஊரன் எட்டோடு இரண்டு விரும்பிய
ஆயின சீர் பகைஞானி அப்பன் அடித்தொண்டன்தான்
ஏசின பேசு-மின் தொண்டர்காள் எம்பிரானையே
மேல்
45. திருஆமாத்தூர் - பண் : கொல்லிக்கௌவாணம்
#456
காண்டனன் காண்டனன் காரிகையாள்-தன் கருத்தனாய்
ஆண்டனன் ஆண்டனன் ஆமாத்தூர் எம் அடிகட்கு ஆள்
பூண்டனன் பூண்டனன் பொய் அன்று சொல்லுவன் கேண்-மின்கள்
மீண்டனன் மீண்டனன் வேதவித்து அல்லாதவர்கட்கே
மேல்
#457
பாடுவன் பாடுவன் பார் பதி-தன் அடி பற்றி நான்
தேடுவன் தேடுவன் திண்ணென பற்றி செறிதர
ஆடுவன்ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளை
கூடுவன் கூடுவன் குற்றம் அது அற்று என் குறிப்பொடே
மேல்
#458
காய்ந்தவன் காய்ந்தவன் கண் அழலால் அன்று காமனை
பாய்ந்தவன் பாய்ந்தவன் பாதத்தினால் அன்று கூற்றத்தை
ஆய்ந்தவன் ஆய்ந்தவன் ஆமாத்தூர் எம் அடிகளார்
ஏய்ந்தவன் ஏய்ந்தவன் எம்பிராட்டியை பாகமே
மேல்
#459
ஓர்ந்தனன் ஓர்ந்தனன் உள்ளத்துள்ளே நின்ற ஒண் பொருள்
சேர்ந்தனன் சேர்ந்தனன் சென்று திரு ஒற்றியூர் புக்கு
சார்ந்தனன் சார்ந்தனன் சங்கிலி மென் தோள் தட முலை
ஆர்ந்தனன் ஆர்ந்தனன் ஆமாத்தூர் ஐயன் அருள் அதே
மேல்
#460
வென்றனன் வென்றனன் வேள்வியில் விண்ணவர்-தங்களை
சென்றனன் சென்றனன் சில் பலிக்கு என்று தெருவிடை
நின்றவன் நின்றவன் நீதி நிறைந்தவர்-தங்கள்-பால்
அன்று அவன் அன்று அவன் செய் அருள் ஆமாத்தூர் ஐயனே
மேல்
#461
காண்டவன் காண்டவன் காண்டற்கு அரிய கடவுளாய்
நீண்டவன் நீண்டவன் நாரணன் நான்முகன் நேடவே
ஆண்டவன் ஆண்டவன் ஆமாத்தூரையும் எனையும் ஆள்
பூண்டவன் பூண்டவன் மார்பில் புரி நூல் புரளவே
மேல்
#462
எண்ணவன் எண்ணவன் ஏழ்உலகத்து உயிர்-தங்கட்கு
கண் அவன் கண் அவன் காண்டும் என்பார் அவர்-தங்கட்கு
பெண் அவன் பெண் அவன் மேனி ஓர்பாகம் ஆம் பிஞ்ஞகன்
அண்ணவன் அண்ணவன் ஆமாத்தூர் எம் அடிகளே
மேல்
#463
பொன்னவன் பொன்னவன் பொன்னை தந்து என்னை போக விடா
மின்னவன் மின்னவன் வேதத்தின் உட்பொருள் ஆகிய
அன்னவன் அன்னவன் ஆமாத்தூர் ஐயனை ஆர்வத்தால்
என்னவன் என்னவன் என் மனத்து இன்புற்று இருப்பனே
மேல்
#464
தேடுவன் தேடுவன் செம் மலர் பாதங்கள் நாள்-தொறும்
நாடுவன் நாடுவன் நாபிக்கு மேலே ஓர் நால் விரல்
மாடுவன் மாடுவன் வன் கை பிடித்து மகிழ்ந்து உளே
ஆடுவன் ஆடுவன் ஆமாத்தூர் எம் அடிகளே
மேல்
#465
உற்றனன் உற்றவர்-தம்மை ஒழிந்து உள்ளத்து உட்பொருள்
பற்றினன் பற்றினன் பங்கய சேவடிக்கே செல்ல
அற்றனன் அற்றனன் ஆமாத்தூர் மேயான் அடியார்கட்கு ஆள்
பெற்றனன் பெற்றனன் பெயர்த்தும் பெயர்த்தும் பிறவாமைக்கே
மேல்
#466
ஐயனை அத்தனை ஆளுடை ஆமாத்தூர் அண்ணலை
மெய்யனை மெய்யர்க்கு மெய்ப்பொருள் ஆன விமலனை
மையனை மை அணி கண்டனை வன் தொண்டன் ஊரன் சொல்
பொய் ஒன்றும் இன்றி புலம்புவார் பொன் கழல் சேர்வரே
மேல்
46. திருநாகைக்காரோணம் - பண் : கொல்லிக்கௌவாணம்
#467
பத்து ஊர் புக்கு இரந்து உண்டு பல பதிகம் பாடி பாவையரை கிறி பேசி படிறு ஆடி திரிவீர்
செத்தார்-தம் எலும்பு அணிந்து சே ஏறி திரிவீர் செல்வத்தை மறைத்து வைத்தீர் எனக்கு ஒரு நாள் இரங்கீர்
முத்து ஆரம் இலங்கி மிளிர் மணி வயிர கோவை அவை பூண தந்தருளி மெய்க்கு இனிதா நாறும்
கத்தூரி கமழ் சாந்து பணிந்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே
மேல்
#468
வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனை தீற்றி விருத்தி நான் உமை வேண்ட துருத்தி புக்கு அங்கு இருந்தீர்
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டி பகட்ட நான் ஒட்டுவனோ பலகாலும் உழன்றேன்
சேம்பினொடு செங்கழுநீர் தண் கிடங்கில் திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீ_வண்ணர் நீரே
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே
மேல்
#469
பூண்டது ஓர் இள ஆமை பொரு விடை ஒன்று ஏறி பொல்லாத வேடம் கொண்டு எல்லாரும் காண
பாண் பேசி படு தலையில் பலி கொள்கை தவிரீர் பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர்
வீண் பேசி மடவார் கை வெள் வளைகள் கொண்டால் வெற்பு_அரையன் மட பாவை பொறுக்குமோ சொல்லீர்
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடு வீதி கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே
மேல்
#470
விட்டது ஓர் சடை தாழ வீணை விடங்கு ஆக வீதி விடை ஏறுவீர் வீண் அடிமை உகந்தீர்
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடி சுந்தரராய் தூ மதியம் சூடுவது சுவண்டே
வட்ட வார் குழல் மடவார்-தம்மை மயல் செய்தல் மா தவமோ மாதிமையோ வாட்டம் எலாம் தீர
கட்டி எமக்கு ஈவதுதான் எப்போது சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே
மேல்
#471
மிண்டாடி திரிதந்து வெறுப்பனவே செய்து வினைக்கேடு பல பேசி வேண்டியவா திரிவீர்
தொண்டாடி திரிவேனை தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே கந்தம் முதல் ஆடை ஆபரணம்
பண்டாரத்தே எனக்கு பணித்து அருளவேண்டும் பண்டுதான் பிரமாணம் ஒன்று உண்டே நும்மை
கண்டார்க்கும் காண்பு அரிதாய் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே
மேல்
#472
இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி பூதம் இசை பாட இடு பிச்சைக்கு எச்சு உச்சம்போது
பல அகம் புக்கு உழிதர்வீர் பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ
உலவு திரை கடல் நஞ்சை அன்று அமரர் வேண்ட உண்டு அருளிச்செய்தது உமக்கு இருக்க ஒண்ணாது இடவே
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வ கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே
மேல்
#473
தூசு உடைய அகல் அல்குல் தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடாய் வந்து
தேசு உடைய இலங்கையர்_கோன் வரை எடுக்க அடர்த்து திப்பிய கீதம் பாட தேரொடு வாள் கொடுத்தீர்
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த நிறை மறையோர் உறை வீழிமிழலை-தனில் நித்தல்
காசு அருளிச்செய்தீர் இன்று எனக்கு அருளவேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே
மேல்
#474
மாற்றம் மேல் ஒன்று உரையீர் வாளா நீர் இருந்தீர் வாழ்விப்பன் என ஆண்டீர் வழி அடியேன் உமக்கு
ஆற்றவேல் திரு உடையீர் நல்கூர்ந்தீர் அல்லீர் அணி ஆரூர் புக பெய்த அரு நிதியம் அதனில்
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும் தாரீரேல் ஒருபொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன்
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே
மேல்
#475
மண்ணுலகும் விண்ணுலகும் உமதே ஆட்சி மலை_அரையன் பொன் பாவை சிறுவனையும் தேறேன்
எண்ணிலி உண் பெருவயிறன் கணபதி ஒன்று அறியான் எம்பெருமான் இது தகவோ இயம்பி அருள்செய்வீர்
திண்ணென என் உடல் விருத்தி தாரீரேயாகில் திரு மேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளை
கண்ணறையன் கொடும்பாடன் என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே
மேல்
#476
மறி ஏறு கரதலத்தீர் மாதிமையேல் உடையீர் மா நிதியம் தருவன் என்று வல்லீராய் ஆண்டீர்
கிறி பேசி கீழ்வேளூர் புக்கு இருந்தீர் அடிகேள் கிறி உம்மால் படுவேனோ திரு ஆணை உண்டேல்
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருளவேண்டும்
கறி விரவு நெய் சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே
மேல்
#477
பண் மயத்த மொழி பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே மற்று ஆரை உடையேன்
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்கவேண்டும் ஒளி முத்தம் பூண் ஆரம் ஒண் பட்டும் பூவும்
கண் மயத்த கத்தூரி கமழ் சாந்தும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர் என்று
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அரும் தமிழ்கள் இவை வல்லார் அமர்_உலகு ஆள்பவரே
மேல்
47. ஊர்த்தொகை - பண் : பழம்பஞ்சுரம்
#478
காட்டூர் கடலே கடம்பூர் மலையே கானப்பேரூராய்
கோட்டூர் கொழுந்தே அழுத்தூர் அரசே கொழு நல் கொல் ஏறே
பாட்டு ஊர் பலரும் பரவப்படுவாய் பனங்காட்டூரானே
மாட்டு ஊர் அறவா மறவாது உன்னை பாட பணியாயே
மேல்
#479
கொங்கில் குறும்பில் குரங்குத்தளியாய் குழகா குற்றாலா
மங்குல் திரிவாய் வானோர்_தலைவா வாய்மூர் மணவாளா
சங்க குழை ஆர் செவியா அழகா அவியா அனல் ஏந்தி
கங்குல் புறங்காட்டாடீ அடியார் கவலை களையாயே
மேல்
#480
நிறை காட்டானே நெஞ்சகத்தானே நின்றியூரானே
மிறை காட்டானே புனல் சேர் சடையாய் அனல் சேர் கையானே
மறைக்காட்டானே திரு மாந்துறையாய் மாகோணத்தானே
இறை காட்டாயே எங்கட்கு உன்னை எம்மான் தம்மானே
மேல்
#481
ஆரூர் அத்தா ஐயாற்று அமுதே அளப்பூர் அம்மானே
கார் ஊர் பொழில்கள் புடை சூழ் புறவில் கருகாவூரானே
பேரூர் உறைவாய் பட்டி பெருமான் பிறவா நெறியானே
பார் ஊர் பலரும் பரவப்படுவாய் பாரூர் அம்மானே
மேல்
#482
மருகல் உறைவாய் மாகாளத்தாய் மதியம் சடையானே
அருகல் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே
கருகல் குரலாய் வெண்ணி கரும்பே கானூர் கட்டியே
பருக பணியாய் அடியார்க்கு உன்னை பவள படியானே
மேல்
#483
தாம் கூர் பிணி நின் அடியார் மேல அகல அருளாயே
வேங்கூர் உறைவாய் விளமர்நகராய் விடை ஆர் கொடியானே
நாங்கூர் உறைவாய் தேங்கூர்நகராய் நல்லூர் நம்பானே
பாங்கு ஊர் பலி தேர் பரனே பரமா பழனப்பதியானே
மேல்
#484
தேனை காவல் கொண்டு விண்ட கொன்றை செழும் தாராய்
வானை காவல் கொண்டு நின்றார் அறியா நெறியானே
ஆனைக்காவில் அரனே பரனே அண்ணாமலையானே
ஊனை காவல் கைவிட்டு உன்னை உகப்பார் உணர்வாரே
மேல்
#485
துருத்தி சுடரே நெய்த்தானத்தாய் சொல்லாய் கல்லாலா
பருத்திநியமத்து உறைவாய் வெயிலாய் பலவாய் காற்று ஆனாய்
திருத்தி திருத்தி வந்து என் சிந்தை இடம்கொள் கயிலாயா
அருத்தித்து உன்னை அடைந்தார் வினைகள் அகல அருளாயே
மேல்
#486
புலியூர் சிற்றம்பலத்தாய் புகலூர் போதா மூதூரா
பொலி சேர் புரம் மூன்று எரிய செற்ற புரி புன் சடையானே
வலி சேர் அரக்கன் தட கை ஐ_ஞான்கு அடர்த்த மதிசூடீ
கலி சேர் புறவில் கடவூராளீ காண அருளாயே
மேல்
#487
கைம்மா உரிவை அம்மான் காக்கும் பல ஊர் கருத்து உன்னி
மை மா தடம் கண் மதுரம் அன்ன மொழியாள் மட சிங்கடி
தம்மான் ஊரன் சடையன் சிறுவன் அடியன் தமிழ் மாலை
செம்மாந்து இருந்து திருவாய் திறப்பார் சிவலோகத்தாரே
மேல்
48. திருப்பாண்டிக்கொடுமுடி (நமசிவாயத் திருப்பதிகம்) - பண் : பழம்பஞ்சுரம்
#488
மற்று பற்று எனக்கு இன்றி நின் திரு பாதமே மனம் பாவித்தேன்
பெற்றலும் பிறந்தேன் இனி பிறவாத தன்மை வந்து எய்தினேன்
கற்றவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி
நல் தவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
மேல்
#489
இட்டன் நும் அடி ஏத்துவார் இகழ்ந்திட்ட நாள் மறந்திட்ட நாள்
கெட்ட நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி
வட்ட வாசிகை கொண்டு அடி தொழுது ஏத்து பாண்டிக்கொடுமுடி
நட்டவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
மேல்
#490
ஓவு நாள் உணர்வு அழியும் நாள் உயிர் போகும் நாள் உயர் பாடை மேல்
காவு நாள் இவை என்று அலால் கருதேன் கிளர் புனல் காவிரி
பாவு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி
நாவலா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
மேல்
#491
எல்லை இல் புகழ் எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி
கல்லை உந்தி வளம் பொழிந்து இழி காவிரி அதன் வாய் கரை
நல்லவர் தொழுது ஏத்தும் சீர் கறையூரில் பாண்டிக்கொடுமுடி
வல்லவா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
மேல்
#492
அஞ்சினார்க்கு அரண் ஆதி என்று அடியேனும் நான் மிக அஞ்சினேன்
அஞ்சல் என்று அடித்தொண்டனேற்கு அருள் நல்கினாய்க்கு அழிகின்றது என்
பஞ்சின் மெல் அடி பாவைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி
நஞ்சு அணி கண்ட நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
மேல்
#493
ஏடு வான் இளம் திங்கள் சூடினை என் பின் கொல் புலி தோலின் மேல்
ஆடு பாம்பு அது அரைக்கு அசைத்த அழகனே அம் தண் காவிரி
பாடு தண் புனல் வந்து இழி பரஞ்சோதி பாண்டிக்கொடுமுடி
சேடனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
மேல்
#494
விரும்பி நின் மலர் பாதமே நினைந்தேன் வினைகளும் விண்டனன்
நெருங்கி வண் பொழில் சூழிந்து எழில் பெற நின்ற காவிரி கோட்டிடை
குரும்பை மென் முலை கோதைமார் குடைந்து ஆடு பாண்டிக்கொடுமுடி
விரும்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
மேல்
#495
செம்பொன் நேர் சடையாய் திரிபுரம் தீ எழ சிலை கோலினாய்
வம்பு உலாம் குழலாளை பாகம் அமர்ந்து காவிரி கோட்டிடை
கொம்பின் மேல் குயில் கூவ மா மயில் ஆடு பாண்டிக்கொடுமுடி
நம்பனே உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
மேல்
#496
சாரணன் தந்தை எம்பிரான் எந்தை தம்பிரான் என் பொன் மா மணி என்று
பேரெண் ஆயிரகோடி தேவர் பிதற்றி நின்று பிரிகிலார்
நாரணன் பிரமன் தொழும் கறையூரில் பாண்டிக்கொடுமுடி
காரணா உனை நான் மறக்கினும் சொல்லும் நா நமச்சிவாயவே
மேல்
#497
கோணிய பிறை சூடியை கறையூரில் பாண்டிக்கொடுமுடி
பேணிய பெருமானை பிஞ்ஞக பித்தனை பிறப்பிலியை
பாண் உலா வரி வண்டு அறை கொன்றை தாரனை பட பாம்பு அரை
நாணனை தொண்டன் ஊரன் சொல் இவை சொல்லுவார்க்கு இல்லை துன்பமே
மேல்
49. திருமுருகன்பூண்டி - பண் : பழம்பஞ்சுரம்
#498
கொடுகு வெம் சிலை வடுக வேடுவர் விரவலாமை சொல்லி
திடுகு மொட்டு என குத்தி கூறை கொண்டு ஆறலைக்கும் இடம்
முடுகு நாறிய வடுகர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இடுகு நுண் இடை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே
மேல்
#499
வில்லை காட்டி வெருட்டி வேடுவர் விரவலாமை சொல்லி
கல்லினால் எறிந்திட்டும் மோதியும் கூறை கொள்ளும் இடம்
முல்லை தாது மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
எல்லை காப்பது ஒன்று இல்லையாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே
மேல்
#500
பசுக்களே கொன்று தின்று பாவிகள் பாவம் ஒன்று அறியார்
உசிர் கொலை பல நேர்ந்து நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம்
முசுக்கள் போல் பல வேடர் வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இசுக்கு அழிய பயிக்கம் கொண்டு நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே
மேல்
#501
பீறல் கூறை உடுத்து ஓர் பத்திரம் கட்டி வெட்டனராய்
சூறை பங்கியர் ஆகி நாள்-தொறும் கூறை கொள்ளும் இடம்
மோறை வேடுவர் கூடி வாழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
ஏறு கால் இற்றது இல்லையாய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே
மேல்
#502
தயங்கு தோலை உடுத்த சங்கரா சாமவேதம்ஓதீ
மயங்கி ஊர் இடு பிச்சை கொண்டு உணும் மார்க்கம் ஒன்று அறியீர்
முயங்கு பூண் முலை மங்கையாளொடு முருகன்பூண்டி மா நகர்-வாய்
இயங்கவும் மிடுக்கு உடையராய்விடில் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே
மேல்
#503
விட்டு இசைப்பன கொக்கரை கொடுகொட்டி தத்தளகம்
கொட்டி பாடும் துந்துமியொடு குடமுழா நீர் மகிழ்வீர்
மொட்டு அலர்ந்து மணம் கமழ் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இட்ட பிச்சை கொண்டு உண்பதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே
மேல்
#504
வேதம் ஓதி வெண் நீறு பூசி வெண் கோவணம் தற்று அயலே
ஓதம் மேவிய ஒற்றியூரையும் உத்தரம் நீர் மகிழ்வீர்
மோதி வேடுவர் கூறை கொள்ளும் முருகன்பூண்டி மா நகர்-வாய்
ஏது காரணம் ஏது காவல் கொண்டு எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே
மேல்
#505
பட அரவு நுண் ஏர் இடை பணை தோள் வரி நெடும் கண்
மடவரல் உமை நங்கை-தன்னை ஓர்பாகம் வைத்து உகந்தீர்
முடவர் அல்லீர் இடர் இலீர் முருகன்பூண்டி மா நகர்-வாய்
இடவம் ஏறியும் போவதாகில் நீர் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே
மேல்
#506
சாந்தம் ஆக வெண் நீறு பூசி வெண் பல் தலை கலனா
வேய்ந்த வெண் பிறை கண்ணி-தன்னை ஓர் பாகம் வைத்து உகந்தீர்
மோந்தையோடு முழக்கு அறா முருகன்பூண்டி மா நகர்-வாய்
ஏந்து பூண் முலை மங்கை-தன்னொடும் எத்துக்கு இங்கு இருந்தீர் எம்பிரானீரே
மேல்
#507
முந்தி வானவர்தாம் தொழும் முருகன்பூண்டி மா நகர்-வாய்
பந்து அணை விரல் பாவை-தன்னை ஓர்பாகம் வைத்தவனை
சிந்தையில் சிவதொண்டன் ஊரன் உரைத்தன பத்தும் கொண்டு
எம்தம் அடிகளை ஏத்துவார் இடர் ஒன்றும் தாம் இலரே
மேல்
50. திருப்புனவாயில் - பண் : பழம்பஞ்சுரம்
#508
சித்தம் நீ நினை என்னொடு சூள் அறு வைகலும்
மத்த யானையின் ஈர் உரி போர்த்த மணாளன் ஊர்
பத்தர்தாம் பலர் பாடி நின்று ஆடும் பழம் பதி
பொந்தில் ஆந்தைகள் பாட்டு அறா புனவாயிலே
மேல்
#509
கருது நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும்
எருது மேற்கொளும் எம்பெருமாற்கு இடம் ஆவது
மருதவானவர் வைகும் இடம் மற வேடுவர்
பொருது சாத்தொடு பூசல் அறா புனவாயிலே
மேல்
#510
தொக்கு ஆய மனம் என்னொடு சூள் அறு வைகலும்
நக்கான் நமை ஆளுடையான் நவிலும் இடம்
அக்கோடு அரவு ஆர்த்த பிரான் அடிக்கு அன்பராய்
புக்கார் அவர் போற்று ஒழியா புனவாயிலே
மேல்
#511
வற்கென்று இருத்தி கண்டாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும்
பொன் குன்றம் சேர்ந்தது ஓர் காக்கை பொன் ஆம் அதுவே புகல்
கல் குன்றும் தூறும் கடு வெளியும் கடல் கானல்-வாய்
புற்கென்று தோன்றிடும் எம்பெருமான் புனவாயிலே
மேல்
#512
நில்லாய் மனம் என்னொடு சூள் அறு வைகலும்
நல்லான் நமை ஆளுடையான் நவிலும் இடம்
வில்-வாய் கணை வேட்டுவர் ஆட்ட வெகுண்டு போய்
புல்வாய் கணம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே
மேல்
#513
மறவல் நீ மனம் என்னொடு சூள் அறு வைகலும்
உறவும் ஊழியும் ஆய பெம்மாற்கு இடம் ஆவது
பிறவு கள்ளியின் நீள் கவட்டு ஏறி தன் பேடையை
புறவம் கூப்பிட பொன் புனம் சூழ் புனவாயிலே
மேல்
#514
ஏசு அற்று நீ நினை என்னொடு சூள் அறு வைகலும்
பாசு அற்றவர் பாடி நின்று ஆடும் பழம் பதி
தேசத்து அடியவர் வந்து இரு போதும் வணங்கிட
பூசல் துடி பூசல் அறா புனவாயிலே
மேல்
#515
கொள்ளி வாயின கூர் எயிற்று ஏனம் கிழிக்கவே
தெள்ளி மா மணி தீ விழிக்கும் இடம் செம் தறை
கள்ளி வற்றி புல் தீந்து வெம் கானம் கழிக்கவே
புள்ளி மான் இனம் புக்கு ஒளிக்கும் புனவாயிலே
மேல்
#516
எற்றே நினை என்னொடும் சூள் அறு வைகலும்
மற்று ஏதும் வேண்டா வல்வினை ஆயின மாய்ந்து அற
கல் தூறு கார் காட்டிடை மேய்ந்த கார்க்கோழி போய்
புற்று ஏறி கூகூ என அழைக்கும் புனவாயிலே
மேல்
#517
பொடி ஆடு மேனியன் பொன் புனம் சூழ் புனவாயிலை
அடியார்அடியன் நாவல் ஊரன் உரைத்தன
மடியாது கற்று இவை ஏத்த வல்லார் வினை மாய்ந்து போய்
குடி ஆக பாடி நின்று ஆட வல்லார்க்கு இல்லை குற்றமே
மேல்
51. திரு ஆரூர் - பண் : பழம்பஞ்சுரம்
#518
பத்திமையும் அடிமையையும் கைவிடுவான் பாவியேன்
பொத்தின நோய் அது இதனை பொருள் அறிந்தேன் போய் தொழுவேன்
முத்தனை மா மணி-தன்னை வயிரத்தை மூர்க்கனேன்
எத்தனை நாள் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே
மேல்
#519
ஐவணம் ஆம் பகழி உடை அடல் மதனன் பொடி ஆக
செவ்வணம் ஆம் திரு நயனம் விழிசெய்த சிவமூர்த்தி
மை அணவு கண்டத்து வளர் சடை எம் ஆரமுதை
எவ்வணம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே
மேல்
#520
சங்கு அலக்கும் தடம் கடல்-வாய் விடம் சுட வந்து அமரர் தொழ
அங்கு அலக்கண் தீர்த்து விடம் உண்டு உகந்த அம்மானை
இங்கு அலக்கும் உடல் பிறந்த அறிவிலியேன் செறிவு இன்றி
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என ஆரூர் இறைவனையே
மேல்
#521
இங்ஙனம் வந்து இடர் பிறவி பிறந்து அயர்வேன் அயராமே
அங்ஙனம் வந்து எனை ஆண்ட அருமருந்து என் ஆரமுதை
வெம் கனல் மா மேனியனை மான் மருவும் கையானை
எங்ஙனம் நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே
மேல்
#522
செப்ப அரிய அயனொடு மால் சிந்தித்தும் தெளிவு அரிய
அ பெரிய திருவினையே அறியாதே அருவினையேன்
ஒப்பு அரிய குணத்தானை இணையிலியை அணைவு இன்றி
எ பரிசு பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே
மேல்
#523
வல் நாகம் நாண் வரை வில் அங்கி கணை அரி பகழி
தன் ஆகம் உற வாங்கி புரம் எரித்த தன்மையனை
முன் ஆக நினையாத மூர்க்கனேன் ஆக்கை சுமந்து
என் ஆக பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே
மேல்
#524
வன் சயமாய் அடியான் மேல் வரும் கூற்றின் உரம் கிழிய
முன் சயம் ஆர் பாதத்தால் முனிந்து உகந்த மூர்த்தி-தனை
மின் செயும் வார் சடையானை விடையானை அடைவு இன்றி
என் செய நான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே
மேல்
#525
முன் நெறி வானவர் கூடி தொழுது ஏத்தும் முழுமுதலை
அ நெறியை அமரர் தொழும் நாயகனை அடியார்கள்
செந்நெறியை தேவர் குல கொழுந்தை மறந்து இங்ஙனம் நான்
என் அறிவான் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே
மேல்
#526
கற்று உள வான் கனி ஆய கண்நுதலை கருத்து ஆர
உற்று உளன் ஆம் ஒருவனை முன் இருவர் நினைந்து இனிது ஏத்த
பெற்றுளன் ஆம் பெருமையனை பெரிது அடியேன் கை அகன்றிட்டு
எற்று உளனாய் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே
மேல்
#527
ஏழ்இசையாய் இசைப்பயனாய் இன்னமுதாய் என்னுடைய
தோழனுமாய் யான் செய்யும் துரிசுகளுக்கு உடன் ஆகி
மாழை ஒண் கண் பரவையை தந்து ஆண்டானை மதி இல்லா
ஏழையேன் பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே
மேல்
#528
வங்கம் மலி கடல் நஞ்சை வானவர்கள்தாம் உய்ய
நுங்கி அமுது அவர்க்கு அருளி நொய்யேனை பொருள்படுத்து
சங்கிலியோடு எனை புணர்த்த தத்துவனை சழக்கனேன்
எங்கு உலக்க பிரிந்திருக்கேன் என் ஆரூர் இறைவனையே
மேல்
#529
பேர் ஊரும் மத கரியின் உரியானை பெரியவர்-தம்
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் அடியே திறம் விரும்பி
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அகலிடத்தில்
ஊர்ஊரன் இவை வல்லார் உலகவர்க்கு மேலாரே
மேல்
52. திரு ஆலங்காடு - பண் : பழம்பஞ்சுரம்
#530
முத்தா முத்தி தர வல்ல முகிழ் மென் முலையாள் உமை_பங்கா
சித்தா சித்தி திறம் காட்டும் சிவனே தேவர் சிங்கமே
பத்தா பத்தர் பலர் போற்றும் பரமா பழையனூர் மேய
அத்தா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே
மேல்
#531
பொய்யே செய்து புறம்புறமே திரிவேன்-தன்னை போகாமே
மெய்யே வந்து இங்கு எனை ஆண்ட மெய்யா மெய்யர் மெய்ப்பொருளே
பை ஆடு அரவம் அரைக்கு அசைத்த பரமா பழையனூர் மேய
ஐயா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே
மேல்
#532
தூண்டா விளக்கின் நல் சோதீ தொழுவார்-தங்கள் துயர் தீர்ப்பாய்
பூண்டாய் எலும்பை புரம் மூன்றும் பொடியா செற்ற புண்ணியனே
பாண்டு ஆழ் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய
ஆண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே
மேல்
#533
மறி நேர் ஒண் கண் மட நல்லார் வலையில் பட்டு மதி மயங்கி
அறிவே அழிந்தேன் ஐயா நான் மை ஆர் கண்டம் உடையானே
பறியா வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர் மேய
அறிவே ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே
மேல்
#534
வேல் அங்கு ஆடு தடம் கண்ணார் வலையுள் பட்டு உன் நெறி மறந்து
மால் அங்கு ஆடி மறந்து ஒழிந்தேன் மணியே முத்தே மரகதமே
பால் அங்கு ஆடீ நெய்ஆடீ படர் புன் சடையாய் பழையனூர்
ஆலங்காடா உன்னுடைய அடியார்க்கு அடியேன் ஆவேனே
மேல்
#535
எண்ணார்-தங்கள் எயில் எய்த எந்தாய் எந்தை பெருமானே
கண்ணாய் உலகம் காக்கின்ற கருத்தா திருத்தல் ஆகாதாய்
பண் ஆர் இசைகள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அண்ணா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே
மேல்
#536
வண்டு ஆர் குழலி உமை நங்கை_பங்கா கங்கை மணவாளா
விண்டார் புரங்கள் எரிசெய்த விடையாய் வேதநெறியானே
பண்டு ஆழ் வினைகள் பல தீர்க்கும் பரமா பழையனூர் மேய
அண்டா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே
மேல்
#537
பேழ் வாய் அரவின் அணையானும் பெரிய மலர் மேல் உறைவானும்
தாழாது உன்தன் சரண் பணிய தழலாய் நின்ற தத்துவனே
பாழ் ஆம் வினைகள் அவை தீர்க்கும் பரமா பழையனூர்-தன்னை
ஆள்வாய் ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே
மேல்
#538
எம்மான் எந்தை மூத்தப்பன் ஏழ்ஏழ் படிகால் எமை ஆண்ட
பெம்மான் ஈம புறங்காட்டில் பேயோடு ஆடல் புரிவானே
பல் மா மலர்கள் அவை கொண்டு பலரும் ஏத்தும் பழையனூர்
அம்மா ஆலங்காடா உன் அடியார்க்கு அடியேன் ஆவேனே
மேல்
#539
பத்தர் சித்தர் பலர் ஏத்தும் பரமன் பழையனூர் மேய
அத்தன் ஆலங்காடன்-தன் அடிமை திறமே அன்பு ஆகி
சித்தர் சித்தம்வைத்த புகழ் சிறுவன் ஊரன் ஒண் தமிழ்கள்
பத்தும் பாடி ஆடுவார் பரமன் அடியே பணிவாரே
மேல்
53. திருக்கடவூர் - பண் : பழம்பஞ்சுரம்
#540
மரு ஆர் கொன்றை மதி சூடி மாணிக்கத்தின் மலை போல
வருவார் விடை மேல் மாதொடு மகிழ்ந்து பூத படை சூழ
திருமால் பிரமன் இந்திரற்கும் தேவர் நாகர் தானவர்க்கும்
பெருமான் கடவூர்மயானத்து பெரிய பெருமான் அடிகளே
மேல்
#541
விண்ணோர் தலைவர் வெண் புரி நூல் மார்பர் வேத கீதத்தர்
கண் ஆர் நுதலர் நகுதலையர் காலகாலர் கடவூரர்
எண்ணார் புரம் மூன்று எரிசெய்த இறைவர் உமை ஓர் ஒருபாகம்
பெண் ஆண் ஆவர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே
மேல்
#542
காயும் புலியின் அதள் உடையர் கண்டர் எண் தோள் கடவூரர்
தாயும் தந்தை பல் உயிர்க்கும் தாமே ஆன தலைவனார்
பாயும் விடை ஒன்று அது ஏறி பலி தேர்ந்து உண்ணும் பரமேட்டி
பேய்கள் வாழும் மயானத்து பெரிய பெருமான் அடிகளே
மேல்
#543
நறை சேர் மலர் ஐங்கணையானை நயன தீயால் பொடிசெய்த
இறையார் ஆவர் எல்லார்க்கும் இல்லை என்னாது அருள்செய்வார்
பறை ஆர் முழவம் பாட்டோடு பயிலும் தொண்டர் பயில் கடவூர்
பிறை ஆர் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே
மேல்
#544
கொத்து ஆர் கொன்றை மதி சூடி கோள் நாகங்கள் பூண் ஆக
மத்த யானை உரி போர்த்து மருப்பும் ஆமை தாலியார்
பத்தி செய்து பாரிடங்கள் பாடி ஆட பலி கொள்ளும்
பித்தர் கடவூர்மயானத்து பெரிய பெருமான் அடிகளே
மேல்
#545
துணி வார் கீளும் கோவணமும் துதைந்து சுடலை பொடி அணிந்து
பணி மேல் இட்ட பாசுபதர் பஞ்சவடி மார்பினர் கடவூர்
திணிவு ஆர் குழையார் புரம் மூன்றும் தீவாய்ப்படுத்த சேவகனார்
பிணி வார் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே
மேல்
#546
கார் ஆர் கடலின் நஞ்சு உண்ட கண்டர் கடவூர் உறை வாணர்
தேர் ஆர் அரக்கன் போய் வீழ்ந்து சிதைய விரலால் ஊன்றினார்
ஊர்தான் ஆவது உலகு ஏழும் உடையார்க்கு ஒற்றியூர் ஆரூர்
பேர் ஆயிரவர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே
மேல்
#547
வாடாமுலையாள்-தன்னோடும் மகிழ்ந்து கானில் வேடுவனாய்
கோடு ஆர் கேழல் பின் சென்று குறுகி விசயன் தவம் அழித்து
நாடா வண்ணம் செரு செய்து ஆவ நாழி நிலை அருள்செய்
பீடு ஆர் சடையார் மயானத்து பெரிய பெருமான் அடிகளே
மேல்
#548
வேழம் உரிப்பர் மழுவாளர் வேள்வி அழிப்பர் சிரம் அறுப்பர்
ஆழி அளிப்பர் அரி-தனக்கு ஆன் அஞ்சு உகப்பர் அறம் உரைப்பர்
ஏழை தலைவர் கடவூரில் இறைவர் சிறு மான் மறி கையர்
பேழை சடையர் மயானத்து பெரிய பெருமான் அடிகளே
மேல்
#549
மாடம் மல்கு கடவூரில் மறையோர் ஏத்தும் மயானத்து
பீடை தீர அடியாருக்கு அருளும் பெருமான் அடிகள் சீர்
நாடி நாவல் ஆரூரன்நம்பி சொன்ன நல் தமிழ்கள்
பாடும் அடியார் கேட்பார் மேல் பாவம் ஆன பறையுமே
மேல்
54. திருவொற்றியூர் - பண் : தக்கேசி
#550
அழுக்கு மெய் கொடு உன் திருவடி அடைந்தேன் அதுவும் நான் படப்பாலது ஒன்று ஆனால்
பிழுக்கை வாரியும் பால் கொள்வர் அடிகேள் பிழைப்பனாகிலும் திருவடி பிழையேன்
வழுக்கி வீழினும் திரு பெயர் அல்லால் மற்று நான் அறியேன் மறு மாற்றம்
ஒழுக்க என் கணுக்கு ஒரு மருந்து உரையாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே
மேல்
#551
கட்டனேன் பிறந்தேன் உனக்கு ஆளாய் காதல் சங்கிலி காரணம் ஆக
எட்டினால் திகழும் திரு மூர்த்தி என் செய்வான் அடியேன் எடுத்து உரைக்கேன்
பெட்டனாகிலும் திருவடி பிழையேன் பிழைப்பனாகிலும் திருவடிக்கு அடிமை
ஒட்டினேன் எனை நீ செய்வது எல்லாம் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே
மேல்
#552
கங்கை தங்கிய சடை உடை கரும்பே கட்டியே பலர்க்கும் களைகண்ணே
அங்கை நெல்லியின் பழத்திடை அமுதே அத்த என் இடர் ஆர்க்கு எடுத்து உரைக்கேன்
சங்கும் இப்பியும் சலஞ்சலம் முரல வயிரம் முத்தொடு பொன் மணி வரன்றி
ஒங்கும் மா கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே
மேல்
#553
ஈன்று கொண்டது ஓர் சுற்றம் ஒன்று அன்றால் யாவராகில் என் அன்பு உடையார்கள்
தோன்ற நின்று அருள்செய்து அளித்திட்டால் சொல்லுவாரை அல்லாதன சொல்லாய்
மூன்று கண் உடையாய் அடியேன் கண் கொள்வதே கணக்குவழக்காகில்
ஊன்றுகோல் எனக்கு ஆவது ஒன்று அருளாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே
மேல்
#554
வழித்தலை படுவான் முயல்கின்றேன் உன்னை போல் என்னை பாவிக்கமாட்டேன்
சுழித்தலை பட்ட நீர் அது போல சுழல்கின்றேன் சுழல்கின்றது என் உள்ளம்
கழித்தலை பட்ட நாய் அது போல ஒருவன் கோல் பற்றி கறகற இழுக்கை
ஒழித்து நீ அருள் ஆயின செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே
மேல்
#555
மானை நோக்கியர் கண் வலை பட்டு வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி
தேனை ஆடிய கொன்றையினாய் உன் சீலமும் குணமும் சிந்தியாதே
நானும் இத்தனை வேண்டுவது அடியேன் உயிரொடும் நரகத்து அழுந்தாமை
ஊனம் உள்ளன தீர்த்து அருள்செய்யாய் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே
மேல்
#556
மற்று தேவரை நினைந்து உனை மறவேன் நெஞ்சினாரொடு வாழவும் மாட்டேன்
பெற்றிருந்து பெறாதொழிகின்ற பேதையேன் பிழைத்திட்டதை அறியேன்
முற்றும் நீ எனை முனிந்திட அடியேன் கடவது என் உனை நான் மறவேனேல்
உற்ற நோய் உறு பிணி தவிர்த்து அருளாய் ஒற்றியூர் எனும் ஓர் உறைவானே
மேல்
#557
கூடினாய் மலைமங்கையை நினையாய் கங்கை ஆயிர முகம் உடையாளை
சூடினாய் என்று சொல்லிய புக்கால் தொழும்பனேனுக்கும் சொல்லலும் ஆமே
வாடி நீ இருந்து என் செய்தி மனனே வருந்தி யான் உற்ற வல்வினைக்கு அஞ்சி
ஊடினால் இனி ஆவது ஒன்று உண்டோ ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே
மேல்
#558
மகத்தில் புக்கது ஓர் சனி எனக்கு ஆனாய் மைந்தனே மணியே மணவாளா
அகத்தில் பெண்டுகள் நான் ஒன்று சொன்னால் அழையேல் போ குருடா என தரியேன்
முகத்தில் கண் இழந்து எங்ஙனம் வாழ்கேன் முக்கணா முறையோ மறைஓதீ
உகைக்கும் தண் கடல் ஓதம் வந்து உலவும் ஒற்றியூர் எனும் ஊர் உறைவானே
மேல்
#559
ஓதம் வந்து உலவும் கரை-தன் மேல் ஒற்றியூர் உறை செல்வனை நாளும்
ஞாலம்தான் பரவப்படுகின்ற நான்மறை அங்கம் ஓதிய நாவன்
சீலம்தான் பெரிதும் மிக வல்ல சிறுவன் வன் தொண்டன் ஊரன் உரைத்த
பாடல் பத்து இவை வல்லவர்தாம் போய் பரகதி திண்ணம் நண்ணுவர்தாமே
மேல்
55. திருப்புன்கூர் - பண் : தக்கேசி
#560
அந்தணாளன் உன் அடைக்கலம் புகுத அவனை காப்பது காரணம் ஆக
வந்த காலன்-தன் ஆருயிர்-அதனை வவ்வினாய்க்கு உன்தன் வன்மை கண்டு அடியேன்
எந்தை நீ எனை நமன் தமர் நலியின் இவன் மற்று என் அடியான் என விலக்கும்
சிந்தையால் வந்து உன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே
மேல்
#561
வையகம் முற்றும் மா மழை மறந்து வயலில் நீர் இலை மா நிலம் தருகோம்
உய்ய கொள்க மற்று எங்களை என்ன ஒலி கொள் வெண் முகிலாய் பரந்து எங்கும்
பெய்யும் மா மழை பெரு வெள்ளம் தவிர்த்து பெயர்த்தும் பன்னிரு வேலி கொண்டு அருளும்
செய்கை கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே
மேல்
#562
ஏதம் நல் நிலம் ஈர்_அறு வேலி ஏயர்_கோன் உற்ற இரும் பிணி தவிர்த்து
கோதனங்களின் பால் கறந்து ஆட்ட கோல வெண் மணல் சிவன்-தன் மேல் சென்ற
தாதை தாள் அற எறிந்த தண்டிக்கு உன் சடை மிசை மலர் அருள்செய கண்டு
பூத ஆளி நின் பொன் அடி அடைந்தேன் பூம் பொழில் திரு புன்கூர் உளானே
மேல்
#563
நல் தமிழ் வல்ல ஞானசம்பந்தன் நாவினுக்கரையன் நாளைப்போவானும்
கற்ற சூதன் நல் சாக்கியன் சிலந்தி கண்ணப்பன் கணம்புல்லன் என்று இவர்கள்
குற்றம் செய்யினும் குணம் என கருதும் கொள்கை கண்டு நின் குரை கழல் அடைந்தேன்
பொன் திரள் மணி கமலங்கள் மலரும் பொய்கை சூழ் திரு புன்கூர் உளானே
மேல்
#564
கோலம் மால் வரை மத்து என நாட்டி கோள் அரவு சுற்றி கடைந்து எழுந்த
ஆலம் நஞ்சு கண்டு அவர் மிக இரிய அமரர்கட்கு அருள்புரிவது கருதி
நீலம் ஆர் கடல் விடம்-தனை உண்டு கண்டத்தே வைத்த பித்த நீ செய்த
சீலம் கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே
மேல்
#565
இயக்கர் கின்னரர் யமனொடு வருணர் இயங்கு தீ வளி ஞாயிறு திங்கள்
மயக்கம் இல் புலி வானரம் நாகம் வசுக்கள் வானவர் தானவர் எல்லாம்
அயர்ப்பு ஒன்று இன்றி நின் திருவடி அதனை அர்ச்சித்தார் பெறும் ஆர் அருள் கண்டு
திகைப்பு ஒன்று இன்றி நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே
மேல்
#566
போர்த்த நீள் செவியாளர் அந்தணர்க்கு பொழில் கொள் ஆல் நிழல் கீழ் அறம் புரிந்து
பார்த்தனுக்கு அன்று பாசுபதம் கொடுத்து அருளினாய் பண்டு பகீரதன் வேண்ட
ஆர்ந்து வந்து இழியும் புனல் கங்கை நங்கையாளை நின் சடை மிசை கரந்த
தீர்த்தனே நின்தன் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே
மேல்
#567
மூஎயில் செற்ற ஞாயிறு உய்ந்த மூவரில் இருவர் நின் திரு கோயிலின் வாய்தல்
காவலாளர் என்று ஏவிய பின்னை ஒருவன் நீ கரிகாடு அரங்கு ஆக
மானை நோக்கி ஓர் மா நடம் மகிழ மணி முழா முழங்க அருள்செய்த
தேவதேவ நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே
மேல்
#568
அறிவினால் மிக்க அறு வகை சமயம் அவ்வவர்க்கு அங்கே ஆர் அருள் புரிந்து
எறியும் மா கடல் இலங்கையர்_கோனை துலங்க மால் வரை கீழ் அடர்த்திடடு
குறி கொள் பாடலின் இன்னிசை கேட்டு கோல வாளொடு நாள் அது கொடுத்த
செறிவு கண்டு நின் திருவடி அடைந்தேன் செழும் பொழில் திரு புன்கூர் உளானே
மேல்
#569
கம்பம் மால் களிற்றின் உரியானை காமன் காய்ந்தது ஓர் கண் உடையானை
செம்பொனே ஒக்கும் திரு உருவானை செழும் பொழில் திரு புன்கூர் உளானை
உம்பர் ஆளியை உமையவள்_கோனை ஊரன் வன் தொண்டன் உள்ளத்தால் உகந்து
அன்பினால் சொன்ன அரும் தமிழ் ஐந்தோடு ஐந்தும் வல்லவர் அருவினை இலரே
மேல்
56. திருநீடூர் - பண் : தக்கேசி
#570
ஊர்வது ஓர் விடை ஒன்று உடையானை ஒண் நுதல் தனி கண்நுதலானை
கார் அது ஆர் கறை மா மிடற்றானை கருதலார் புரம் மூன்று எரித்தானை
நீரில் வாளை வரால் குதிகொள்ளும் நிறை புனல் கழனி செல்வம் நீடூர்
பார் உளார் பரவி தொழ நின்ற பரமனை பணியா விடல் ஆமே
மேல்
#571
துன்னு வார் சடை தூ மதியானை துயக்கு உறா வகை தோன்றுவிப்பானை
பன்னு நான்மறை பாட வல்லானை பார்த்தனுக்கு அருள் செய்த பிரானை
என்னை இன்னருள் எய்துவிப்பானை ஏதிலார்-தமக்கு ஏதிலன்-தன்னை
புன்னை மாதவி போது அலர் நீடூர் புனிதனை பணியா விடல் ஆமே
மேல்
#572
கொல்லும் மூ இலை வேல் உடையானை கொடிய காலனையும் குமைத்தானை
நல்லவா நெறி காட்டுவிப்பானை நாளும் நாம் உகக்கின்ற பிரானை
அல்லல் இல் அருளே புரிவானை ஆரும் நீர் வயல் சூழ் புனல் நீடூர்
கொல்லை வெள் எருது ஏற வல்வானை கூறி நாம் பணியா விடல் ஆமே
மேல்
#573
தோடு காது இடு தூநெறியானை தோற்றமும் துறப்பு ஆயவன்-தன்னை
பாடு மா மறை பாட வல்லானை பைம் பொழில் குயில் கூவிட மாடே
ஆடு மா மயில் அன்னமோடு ஆட அலை புனல் கழனி திரு நீடூர்
வேடன் ஆய பிரான் அவன்-தன்னை விரும்பி நாம் பணியா விடல் ஆமே
மேல்
#574
குற்றம் ஒன்று அடியார் இலரானால் கூடும் ஆறு அதனை கொடுப்பானை
கற்ற கல்வியிலும் இனியானை காண பேணுமவர்க்கு எளியானை
முற்ற அஞ்சும் துறந்திருப்பானை மூவரின் முதல் ஆயவன்-தன்னை
சுற்றும் நீள் வயல் சூழ் திரு நீடூர் தோன்றலை பணியா விடல் ஆமே
மேல்
#575
காடில் ஆடிய கண்நுதலானை காலனை கடிந்திட்ட பிரானை
பாடி ஆடும் பரிசே புரிந்தானை பற்றினோடு சுற்றம் ஒழிப்பானை
தேடி மால் அயன் காண்பு அரியானை சித்தமும் தெளிவார்க்கு எளியானை
கோடி தேவர்கள் கும்பிடும் நீடூர் கூத்தனை பணியா விடல் ஆமே
மேல்
#576
விட்டு இலங்கு எரி ஆர் கையினானை வீடு இலாத வியன் புகழானை
கட்டுவாங்கம் தரித்த பிரானை காதில் ஆர் கனக குழையானை
விட்டு இலங்கு புரி நூல் உடையானை வீந்தவர் தலை ஓடு கையானை
கட்டியின் கரும்பு ஓங்கிய நீடூர் கண்டு நாம் பணியா விடல் ஆமே
மேல்
#577
மாயம் ஆய மனம் கெடுப்பானை மனத்துள்ளே மதியாய் இருப்பானை
காய மாயமும் ஆக்குவிப்பானை காற்றுமாய் கனலாய் கழிப்பானை
ஓயும் ஆறு உறு நோய் புணர்ப்பானை ஒல்லை வல்வினைகள் கெடுப்பானை
வேய் கொள் தோள் உமை_பாகனை நீடூர் வேந்தனை பணியா விடல் ஆமே
மேல்
#578
கண்டமும் கறுத்திட்ட பிரானை காண பேணுமவர்க்கு எளியானை
தொண்டரை பெரிதும் உகப்பானை துன்பமும் துறந்து இன்பு இனியானை
பண்டை வல்வினைகள் கெடுப்பானை பாகம் மா மதி ஆயவன்-தன்னை
கெண்டை வாளை கிளர் புனல் நீடூர் கேண்மையால் பணியா விடல் ஆமே
மேல்
#579
அல்லல் உள்ளன தீர்த்திடுவானை அடைந்தவர்க்கு அமுது ஆயிடுவானை
கொல்லை வல் அரவம் அசைத்தானை கோலம் ஆர் கரியின் உரியானை
நல்லவர்க்கு அணி ஆனவன்-தன்னை நானும் காதல்செய்கின்ற பிரானை
எல்லி மல்லிகையே கமழ் நீடூர் ஏத்தி நாம் பணியா விடல் ஆமே
மேல்
#580
பேர் ஓர் ஆயிரமும் உடையானை பேசினால் பெரிதும் இனியானை
நீர் ஊர் வார் சடை நின்மலன்-தன்னை நீடூர் நின்று உகந்திட்ட பிரானை
ஆரூரன் அடி காண்பதற்கு அன்பாய் ஆதரித்து அழைத்திட்ட இ மாலை
பார் ஊரும் பரவி தொழ வல்லார் பத்தராய் முத்தி தாம் பெறுவாரே
மேல்
57. திருவாழ்கொளிபுத்தூர் - பண் : தக்கேசி
#581
தலை கலன் தலை மேல் தரித்தானை தன்னை என்னை நினைக்க தருவானை
கொலை கை யானை உரி போர்த்து உகந்தானை கூற்று உதைத்த குரை சேர் கழலானை
அலைத்த செம் கண் விடை ஏற வல்லானை ஆணையால் அடியேன் அடி நாயேன்
மலைத்த செந்நெல் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே
மேல்
#582
படை-கண் சூலம் பயில வல்லானை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை
கடைக்கண் பிச்சைக்கு இச்சை காதலித்தானை காமன் ஆகம் தனை கட்டு அழித்தானை
சடை-கண் கங்கையை தாழ வைத்தானை தண்ணீர் மண்ணி கரையானை தக்கானை
மடை-கண் நீலம் மலர் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே
மேல்
#583
வெந்த நீறு மெய் பூச வல்லானை வேத மால் விடை ஏற வல்லானை
அந்தம் ஆதி அறிதற்கு அரியானை ஆறு அலைத்த சடையானை அம்மானை
சிந்தை என் தடுமாற்று அறுப்பானை தேவதேவன் என் சொல் முனியாதே
வந்து என் உள்ளம் புகும் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே
மேல்
#584
தடம் கையால் மலர் தூய் தொழுவாரை தன் அடிக்கே செல்லும் ஆறு வல்லானை
படம்கொள் நாகம் அரை ஆர்த்து உகந்தானை பல் இல் வெள்ளை தலை ஊண் உடையானை
நடுங்க ஆனை உரி போர்த்து உகந்தானை நஞ்சம் உண்டு கண்டம் கறுத்தானை
மடந்தை_பாகனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே
மேல்
#585
வளை கை முன்கை மலைமங்கை_மணாளன் மாரனார் உடல் நீறு எழ செற்று
துளைத்த அங்கத்தொடு தூ மலர் கொன்றை தோலும் நூலும் துதைந்த வரை மார்பன்
திளைக்கும் தெவ்வர் திரி புரம் மூன்றும் அவுணர் பெண்டிரும் மக்களும் வேவ
வளைத்த வில்லியை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே
மேல்
#586
திருவின்_நாயகன் ஆகிய மாலுக்கு அருள்கள்செய்திடும் தேவர் பிரானை
உருவினானை ஒன்றா அறிவு ஒண்ணா மூர்த்தியை விசயற்கு அருள்செய்வான்
செரு வில் ஏந்தி ஓர் கேழல் பின் சென்று செம் கண் வேடனாய் என்னொடும் வந்து
மருவினான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே
மேல்
#587
எந்தையை எந்தை தந்தை பிரானை ஏதம் ஆய இடர் தீர்க்க வல்லானை
முந்தி ஆகிய மூவரின் மிக்க மூர்த்தியை முதல் காண்பு அரியானை
கந்தின் மிக்க கரியின் மருப்போடு கார் அகில் கவரி மயிர் மண்ணி
வந்துவந்து இழி வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே
மேல்
#588
தேனை ஆடிய கொன்றையினானை தேவர் கைதொழும் தேவர் பிரானை
ஊனம் ஆயின தீர்க்க வல்லானை ஒற்றை ஏற்றனை நெற்றிக்கண்ணானை
கான ஆனையின் கொம்பினை பீழ்ந்த கள்ள பிள்ளைக்கும் காண்பு அரிது ஆய
வானநாடனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே
மேல்
#589
காளை ஆகி வரை எடுத்தான்-தன் கைகள் இற்று அவன் மொய் தலை எல்லாம்
மூளை போத ஒரு விரல் வைத்த மூர்த்தியை முதல் காண்பு அரியானை
பாளை தெங்கு பழம் விழ மண்டி செம் கண் மேதிகள் சேடு எறிந்து எங்கும்
வாளை பாய் வயல் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே
மேல்
#590
திருந்த நான்மறை பாட வல்லானை தேவர்க்கும் தெரிதற்கு அரியானை
பொருந்த மால் விடை ஏற வல்லானை பூதிப்பை புலி தோல் உடையானை
இருந்து உணும் தேரரும் நின்று உணும் சமணும் ஏச நின்றவன் ஆருயிர்க்கு எல்லாம்
மருந்து அனான்-தனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே
மேல்
#591
மெய்யனை மெய்யில் நின்று உணர்வானை மெய்இலாதவர்-தங்களுக்கு எல்லாம்
பொய்யனை புரம் மூன்று எரித்தானை புனிதனை புலி தோல் உடையானை
செய்யனை வெளிய திருநீற்றில் திகழும் மேனியன் மான் மறி ஏந்தும்
மை கொள் கண்டனை வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேனே
மேல்
#592
வளம் கிளர் பொழில் வாழ்கொளிபுத்தூர் மாணிக்கத்தை மறந்து என் நினைக்கேன் என்று
உளம் குளிர் தமிழ் ஊரன் வன் தொண்டன் சடையன் காதலன் வனப்பகை அப்பன்
நலம் கிளர் வயல் நாவலர் வேந்தன் நங்கை சிங்கடி தந்தை பயந்த
பலம் கிளர் தமிழ் பாட வல்லார் மேல் பறையும் ஆம் செய்த பாவங்கள்தானே
மேல்
58. திருக்கழுமலம் - பண் : தக்கேசி
#593
சாதலும் பிறத்தலும் தவிர்த்து எனை வகுத்து தன் அருள் தந்த எம் தலைவனை மலையின்
மாதினை மதித்து அங்கு ஒர்பால் கொண்ட மணியை வரு புனல் சடையிடை வைத்த எம்மானை
ஏதிலென் மனத்துக்கு ஒர் இரும்பு உண்ட நீரை எண் வகை ஒருவனை எங்கள் பிரானை
காதில் வெண்குழையனை கடல் கொள மிதந்த கழுமல வள நகர் கண்டுகொண்டேனே
மேல்
#594
மற்று ஒரு துணை இனி மறுமைக்கும் காணேன் வருந்தலுற்றேன் மறவா வரம் பெற்றேன்
சுற்றிய சுற்றமும் துணை என்று கருதேன் துணை என்று நான் தொழப்பட்ட ஒண் சுடரை
முத்தியும் ஞானமும் வானவர் அறியா முறைமுறை பலபல நெறிகளும் காட்டி
கற்பனை கற்பித்த கடவுளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே
மேல்
#595
திரு தினைநகர் உறை சேந்தன் அப்பன் என் செய்வினை அறுத்திடும் செம்பொனை அம் பொன்
ஒருத்தனை அல்லது இங்கு ஆரையும் உணரேன் உணர்வு பெற்றேன் உய்யும் காரணம்-தன்னால்
விருத்தனை பாலனை கனவிடை விரவி விழித்து எங்கும் காணமாட்டாது விட்டு இருந்தேன்
கருத்தனை நிருத்தம் செய் காலனை வேலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே
மேல்
#596
மழைக்கு அரும்பும் மலர் கொன்றையினானை வளைக்கலுற்றேன் மறவா மனம் பெற்றேன்
பிழைத்து ஒரு கால் இனி போய் பிறவாமை பெருமை பெற்றேன் பெற்றது ஆர் பெறுகிற்பார்
குழை கரும்_கண்டனை கண்டுகொள்வானே பாடுகின்றேன் சென்று கூடவும் வல்லேன்
கழை கரும்பும் கதலி பல சோலை கழுமல வள நகர் கண்டுகொண்டேனே
மேல்
#597
குண்டலம் குழை திகழ் காதனே என்றும் கொடு மழுவாள் படை குழகனே என்றும்
வண்டு அலம்பும் மலர் கொன்றையன் என்றும் வாய் வெருவி தொழுதேன் விதியாலே
பண்டை நம் பல மனமும் களைந்து ஒன்றாய் பசுபதி பதி வினவி பல நாளும்
கண்டல் அம் கழி கரை ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே
மேல்
#598
வரும் பெரும் வல்வினை என்று இருந்து எண்ணி வருந்தலுற்றேன் மறவா மனம் பெற்றேன்
விரும்பி என் மனத்திடை மெய் குளிர்ப்பு எய்தி வேண்டி நின்றே தொழுதேன் விதியாலே
அரும்பினை அலரினை அமுதினை தேனை ஐயனை அறவன் என் பிறவி வேர் அறுக்கும்
கரும்பினை பெரும் செந்நெல் நெருங்கிய கழனி கழுமல வள நகர் கண்டுகொண்டேனே
மேல்
#599
அயலவர் பரவவும் அடியவர் தொழவும் அன்பர்கள் சாயலுள் அடையலுற்று இருந்தேன்
முயல்பவர் பின் சென்று முயல் வலை யானை படும் என மொழிந்தவர் வழி முழுது எண்ணி
புயலினை திருவினை பொன்னினது ஒளியை மின்னினது உருவை என்னிடை பொருளை
கயல் இனம் சேலொடு வயல் விளையாடும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே
மேல்
#600
நினைதரு பாவங்கள் நாசங்கள் ஆக நினைந்து முன் தொழுது எழப்பட்ட ஒண் சுடரை
மனை தரு மலைமகள் கணவனை வானோர் மா மணி மாணிக்கத்தை மறை பொருளை
புனைதரு புகழினை எங்களது ஒளியை இருவரும் ஒருவன் என்று உணர்வு அரியவனை
கனைதரு கரும் கடல் ஓதம் வந்து உலவும் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே
மேல்
#601
மறையிடை துணிந்தவர் மனையிடை இருப்ப வஞ்சனை செய்தவர் பொய்கையும் மாய
துறையுற குளித்து உளது ஆக வைத்து உய்த்த உண்மை எனும் தகவின்மையை ஓரேன்
பிறையுடை சடையனை எங்கள் பிரானை பேர் அருளாளனை கார் இருள் போன்ற
கறை அணி மிடறு உடை அடிகளை அடியேன் கழுமல வள நகர் கண்டுகொண்டேனே
மேல்
#602
செழு மலர் கொன்றையும் கூவிள மலரும் விரவிய சடை முடி அடிகளை நினைந்திட்டு
அழும் மலர் கண் இணை அடியவர்க்கு அல்லால் அறிவு அரிது அவன் திருவடி இணை இரண்டும்
கழுமல வள நகர் கண்டுகொண்டு ஊரன் சடையன்-தன் காதலன் பாடிய பத்தும்
தொழு மலர் எடுத்த கை அடியவர்-தம்மை துன்பமும் இடும்பையும் சூழகிலாவே
மேல்
59. திரு ஆரூர் - பண் : தக்கேசி
#603
பொன்னும் மெய்ப்பொருளும் தருவானை போகமும் திருவும் புணர்ப்பானை
பின்னை என் பிழையை பொறுப்பானை பிழை எலாம் தவிர பணிப்பானை
இன்ன தன்மையன் என்று அறிவு ஒண்ணா எம்மானை எளிவந்த பிரானை
அன்னம் வைகும் வயல் பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே
மேல்
#604
கட்டமும் பிணியும் களைவானை காலன் சீறிய கால் உடையானை
விட்ட வேட்கை வெம் நோய் களைவானை விரவினால் விடுதற்கு அரியானை
பட்ட வார்த்தை பட நின்ற வார்த்தை வாராமே தவிர பணிப்பானை
அட்டமூர்த்தியை மட்டு அவிழ் சோலை ஆரூரானை மறக்கலும் ஆமே
மேல்
#605
கார் குன்ற மழையாய் பொழிவானை கலைக்கு எலாம் பொருளாய் உடன்கூடி
பார்க்கின்ற உயிர்க்கு பரிந்தானை பகலும் கங்குலும் ஆகி நின்றானை
ஓர்க்கின்ற செவியை சுவை-தன்னை உணரும் நாவினை காண்கின்ற கண்ணை
ஆர்க்கின்ற கடலை மலை-தன்னை ஆரூரானை மறக்கலும் ஆமே
மேல்
#606
செத்தபோதினில் முன் நின்று நம்மை சிலர்கள் கூடி சிரிப்பதன் முன்னம்
வைத்த சிந்தை உண்டே மனம் உண்டே மதி உண்டே விதியின் பயன் உண்டே
முத்தன் எங்கள் பிரான் என்று வானோர் தொழ நின்ற திமில் ஏறு உடையானை
அத்தன் எந்தை பிரான் எம்பிரானை ஆரூரானை மறக்கலும் ஆமே
மேல்
#607
செறிவு உண்டேல் மனத்தால் தெளிவு உண்டேல் தேற்றத்தால் வரும் சிக்கனவு உண்டேல்
மறிவு உண்டேல் மறுமை பிறப்பு உண்டேல் வாழ்நாள் மேல் செல்லும் வஞ்சனை உண்டேல்
பொறி வண்டு யாழ்செய்யும் பொன் மலர் கொன்றை பொன் போலும் சடை மேல் புனைந்தானை
அறிவு உண்டே உடலத்து உயிர் உண்டே ஆரூரானை மறக்கலும் ஆமே
மேல்
#608
பொள்ளல் இ உடலை பொருள் என்று பொருளும் சுற்றமும் போகமும் ஆகி
மெள்ள நின்றவர் செய்வன எல்லாம் வாராமே தவிர்க்கும் விதியானை
வள்ளல் எம்தமக்கே துணை என்று நாள்நாளும் அமரர் தொழுது ஏத்தும்
அள்ளல் அம் கழனி பழனத்து அணி ஆரூரானை மறக்கலும் ஆமே
மேல்
#609
கரி யானை உரி கொண்ட கையானை கண்ணின் மேல் ஒரு கண் உடையானை
வரியானை வருத்தம் களைவானை மறையானை குறை மா மதி சூடற்கு
உரியானை உலகத்து உயிர்க்கு எல்லாம் ஒளியானை உகந்து உள்கி நண்ணாதார்க்கு
அரியானை அடியேற்கு எளியானை ஆரூரானை மறக்கலும் ஆமே
மேல்
#610
வாளா நின்று தொழும் அடியார்கள் வான் ஆளப்பெறும் வார்த்தையை கேட்டும்
நாள்நாளும் மலர் இட்டு வணங்கார் நம்மை ஆள்கின்ற தன்மையை ஓரார்
கேளா நான் கிடந்தே உழைக்கின்றேன் கிளைக்கு எலாம் துணை ஆம் என கருதி
ஆள் ஆவான் பலர் முன்பு அழைக்கின்றேன் ஆரூரானை மறக்கலும் ஆமே
மேல்
#611
விடக்கையே பெருக்கி பல நாளும் வேட்கையால் பட்ட வேதனை-தன்னை
கடக்கிலேன் நெறி காணவும் மாட்டேன் கண் குழிந்து இரப்பார் கையில் ஒன்றும்
இடக்கிலேன் பரவை திரை கங்கை சடையானை உமையாளை ஓர்பாகத்து
அடக்கினானை அம் தாமரை பொய்கை ஆரூரானை மறக்கலும் ஆமே
மேல்
#612
ஒட்டி ஆட்கொண்டு போய் ஒளித்திட்ட உச்சிப்போதனை நச்சு அரவு ஆர்த்த
பட்டியை பகலை இருள்-தன்னை பாவிப்பார் மனத்து ஊறும் அ தேனை
கட்டியை கரும்பின் தெளி-தன்னை காதலால் கடல் சூர் தடிந்திட்ட
செட்டி அப்பனை பட்டனை செல்வ ஆரூரானை மறக்கலும் ஆமே
மேல்
#613
ஓர் ஊர் என்று உலகங்களுக்கு எல்லாம் உரைக்கல் ஆம் பொருளாய் உடன்கூடி
கார் ஊரும் கமழ் கொன்றை நல் மாலை முடியன் காரிகை காரணம் ஆக
ஆரூரை மறத்தற்கு அரியானை அம்மான்-தன் திரு பேர் கொண்ட தொண்டன்
ஆரூரன் அடி நாய் உரை வல்லார் அமரலோகத்து இருப்பவர்தாமே
மேல்
60. திரு இடைமருதூர் - பண் : தக்கேசி
#614
கழுதை குங்குமம்தான் சுமந்து எய்த்தால் கைப்பர் பாழ் புக மற்று அது போல
பழுது நான் உழன்று உள் தடுமாறி படு சுழித்தலை பட்டனன் எந்தாய்
அழுது நீ இருந்து என் செய்தி மனனே அங்கணா அரனே எனமாட்டா
இழுதையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே
மேல்
#615
நரைப்பு மூப்பொடு பிணி வரும் இன்னே நன்றி இல் வினையே துணிந்து எய்த்தேன்
அரைத்த மஞ்சள் அது ஆவதை அறிந்தேன் அஞ்சினேன் நமனார் அவர்-தம்மை
உரைப்பன் நான் உன சேவடி சேர உணரும் வாழ்க்கையை ஒன்று அறியாத
இரைப்பனேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே
மேல்
#616
புல் நுனை பனி வெம் கதிர் கண்டாற்போலும் வாழ்க்கை பொருள் இலை நாளும்
என் எனக்கு இனி இன்றைக்கு நாளை என்று இருந்து இடர் உற்றனன் எந்தாய்
முன்னமே உன சேவடி சேரா மூர்க்கன் ஆகி கழிந்தன காலம்
இன்னம் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே
மேல்
#617
முந்தி செய்வினை இம்மை-கண் நலிய மூர்க்கன் ஆகி கழிந்தன காலம்
சிந்தித்தே மனம் வைக்கவும் மாட்டேன் சிறு சிறிதே இரப்பார்கட்கு ஒன்று ஈயேன்
அந்தி வெண் பிறை சூடும் எம்மானே ஆரூர் மேவிய அமரர்கள்_தலைவா
எந்தை நீ எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே
மேல்
#618
அழிப்பர் ஐவர் புரவு உடையார்கள் ஐவரும் புரவு ஆசு அற ஆண்டு
கழித்து கால் பெய்து போயின பின்னை கடைமுறை உனக்கே பொறை ஆனேன்
விழித்து கண்டனன் மெய்ப்பொருள்-தன்னை வேண்டேன் மானுட வாழ்க்கை ஈது ஆகில்
இழித்தேன் என்தனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே
மேல்
#619
குற்றம்-தன்னொடு குணம் பல பெருக்கி கோல நுண்இடையாரொடு மயங்கி
கற்றிலேன் கலைகள் பல ஞானம் கடிய ஆயின கொடுமைகள் செய்தேன்
பற்றல் ஆவது ஓர் பற்று மற்று இல்லேன் பாவியேன் பல பாவங்கள் செய்தேன்
எற்று உளேன் எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே
மேல்
#620
கொடுக்ககிற்றிலேன் ஒண் பொருள்-தன்னை குற்றம் செற்றம் இவை முதல் ஆக
விடுக்ககிற்றிலேன் வேட்கையும் சினமும் வேண்டில் ஐம்புலன் என் வசம் அல்ல
நடுக்கம் உற்றது ஓர் மூப்பு வந்து எய்த நமன் தமர் நரகத்து இடல் அஞ்சி
இடுக்கண் உற்றனன் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே
மேல்
#621
ஐவகையர் அரையர் அவர் ஆகி ஆட்சிகொண்டு ஒரு கால் அவர் நீங்கார்
அ வகை அவர் வேண்டுவதானால் அவரவர் வழி ஒழுகி நான் வந்து
செய்வகை அறியேன் சிவலோகா தீ_வணா சிவனே எரிஆடீ
எ வகை எனக்கு உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே
மேல்
#622
ஏழை மானுட இன்பினை நோக்கி இளையவர் வயப்பட்டு இருந்து இன்னம்
வாழைதான் பழுக்கும் நமக்கு என்று வஞ்ச வல்வினையுள் வலைப்பட்டு
கூழை மாந்தர்-தம் செல்கதி பக்கம் போகமும் பொருள் ஒன்று அறியாத
ஏழையேனுக்கு ஓர் உய்வகை அருளாய் இடைமருது உறை எந்தை பிரானே
மேல்
#623
அரைக்கும் சந்தனத்தோடு அகில் உந்தி ஐவனம் சுமந்து ஆர்த்து இருபாலும்
இரைக்கும் காவிரி தென் கரை-தன் மேல் இடைமருது உறை எந்தை பிரானை
உரைக்கும் ஊரன் ஒளி திகழ் மாலை உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார்கள்
நரைப்பு மூப்பொடு நடலையும் இன்றி நாதன் சேவடி நண்ணுவர் தாமே
மேல்
61. திருக்கச்சியேகம்பம் - பண் : தக்கேசி
#624
ஆலம்தான் உகந்து அமுது செய்தானை ஆதியை அமரர் தொழுது ஏத்தும்
சீலம்தான் பெரிதும் உடையானை சிந்திப்பார் அவர் சிந்தை உளானை
ஏல வார் குழலாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
காலகாலனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே
மேல்
#625
உற்றவர்க்கு உதவும் பெருமானை ஊர்வது ஒன்று உடையான் உம்பர்_கோனை
பற்றினார்க்கு என்றும் பற்றவன்-தன்னை பாவிப்பார் மனம் பாவி கொண்டானை
அற்றம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற
கற்றை வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே
மேல்
#626
திரியும் முப்புரம் தீ பிழம்பு ஆக செம் கண் மால் விடை மேல் திகழ்வானை
கரியின் ஈர் உரி போர்த்து உகந்தானை காமனை கமலா விழித்தானை
வரி கொள் வெள் வளையாள் உமை நங்கை மருவி ஏத்தி வழிபடப்பெற்ற
பெரிய கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே
மேல்
#627
குண்டலம் திகழ் காது உடையானை கூற்று உதைத்த கொடுந்தொழிலானை
வண்டு அலம்பும் மலர் கொன்றையினானை வாள் அரா மதி சேர் சடையானை
கெண்டை அம் தடம் கண் உமை நங்கை கெழுமி ஏத்தி வழிபடப்பெற்ற
கண்டம் நஞ்சு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே
மேல்
#628
வெல்லும் வெண் மழு ஒன்று உடையானை வேலை நஞ்சு உண்ட வித்தகன்-தன்னை
அல்லல் தீர்த்து அருள்செய்ய வல்லானை அரு மறை அவை அங்கம் வல்லானை
எல்லை இல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
நல்ல கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே
மேல்
#629
திங்கள் தங்கிய சடை உடையானை தேவதேவனை செழும் கடல் வளரும்
சங்க வெண் குழை காது உடையானை சாமவேதம் பெரிது உகப்பானை
மங்கை நங்கை மலைமகள் கண்டு மருவி ஏத்தி வழிபடப்பெற்ற
கங்கையாளனை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே
மேல்
#630
விண்ணவர் தொழுது ஏத்த நின்றானை வேதம்தான் விரித்து ஓத வல்லானை
நண்ணினார்க்கு என்றும் நல்லவன்-தன்னை நாளும் நாம் உகக்கின்ற பிரானை
எண் இல் தொல் புகழாள் உமை நங்கை என்றும் ஏத்தி வழிபடப்பெற்ற
கண்ணு மூன்று உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே
மேல்
#631
சிந்தித்து என்றும் நினைந்து எழுவார்கள் சிந்தையில் திகழும் சிவன்-தன்னை
பந்தித்த வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட்டு உகந்தானை
அந்தம் இல் புகழாள் உமை நங்கை ஆதரித்து வழிபடப்பெற்ற
கந்த வார் சடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே
மேல்
#632
வரங்கள் பெற்று உழல் வாள் அரக்கர்-தம் வாலிய புரம் மூன்று எரித்தானை
நிரம்பிய தக்கன்-தன் பெரு வேள்வி நிரந்தரம் செய்த நிட்கண்டகனை
பரந்த தொல் புகழாள் உமை நங்கை பரவி ஏத்தி வழிபடப்பெற்ற
கரங்கள் எட்டு உடை கம்பன் எம்மானை காண கண் அடியேன் பெற்ற ஆறே
மேல்
#633
எள்கல் இன்றி இமையவர்_கோனை ஈசனை வழிபாடு செய்வாள் போல்
உள்ளத்து உள்கி உகந்து உமை நங்கை வழிபட சென்ற நின்றவா கண்டு
வெள்ளம் காட்டி வெருட்டிட அஞ்சி வெருவி ஓடி தழுவ வெளிப்பட்ட
கள்ள கம்பனை எங்கள் பிரானை காண கண் அடியேன் பெற்ற ஆறே
மேல்
#634
பெற்றம் ஏறு உகந்து ஏற வல்லானை பெரிய எம்பெருமான் என்று எப்போதும்
கற்றவர் பரவப்படுவானை காண கண் அடியேன் பெற்றது என்று
கொற்றவன் கம்பன் கூத்தன் எம்மானை குளிர் பொழில் திரு நாவல் ஆரூரன்
நல் தமிழ் இவை ஈர்_ஐந்தும் வல்லார் நல் நெறி உலகு எய்துவர் தாமே
மேல்
62. திருக்கோலக்கா - பண் : தக்கேசி
#635
புற்றில் வாள் அரவு ஆர்த்த பிரானை பூத நாதனை பாதமே தொழுவார்
பற்றுவான் துணை எனக்கு எளிவந்த பாவநாசனை மேவ அரியானை
முற்றலார் திரி புரம் ஒரு மூன்றும் போன்ற வென்றி மால் வரை அரி அம்பா
கொற்ற வில் அம் கை ஏந்திய கோனை கோலக்காவினில் கண்டுகொண்டேனே
மேல்
#636
அங்கம் ஆறும் மா மறை ஒரு நான்கும் ஆய நம்பனை வேய் புரை தோளி
தங்கு மா திரு உரு உடையானை தழல் மதி சடை மேல் புனைந்தானை
வெம் கண் ஆனையின் ஈர் உரியானை விண்ணுளாரொடு மண்ணுளார் பரசும்
கொங்கு உலாம் பொழில் குர வெறி கமழும் கோலக்காவினில் கண்டுகொண்டேனே
மேல்
#637
பாட்டகத்து இசை ஆகி நின்றானை பத்தர் சித்தம் பரிவு இனியானை
நாட்டக தேவர் செய்கை உளானை நட்டம் ஆடியை நம்பெருமானை
காட்டகத்து உறு புலி உரியானை கண் ஓர் மூன்று உடை அண்ணலை அடியேன்
கோட்டக புனல் ஆர் செழும் கழனி கோலக்காவினில் கண்டுகொண்டேனே
மேல்
#638
ஆத்தம் என்று எனை ஆள்உகந்தானை அமரர் நாதனை குமரனை பயந்த
வார் தயங்கிய முலை மட மானை வைத்து வான் மிசை கங்கையை கரந்த
தீர்த்தனை சிவனை செழும் தேனை தில்லை அம்பலத்துள் நிறைந்து ஆடும்
கூத்தனை குரு மா மணி-தன்னை கோலக்காவினில் கண்டுகொண்டேனே
மேல்
#639
அன்று வந்து எனை அகலிடத்தவர் முன் ஆள் அது ஆக என்று ஆவணம் காட்டி
நின்று வெண்ணெய்நல்லூர் மிசை ஒளித்த நித்தில திரள் தொத்தினை முத்திக்கு
ஒன்றினான்-தனை உம்பர் பிரானை உயரும் வல் அரணம் கெட சீறும்
குன்ற வில்லியை மெல்லியலுடனே கோலக்காவினில் கண்டுகொண்டேனே
மேல்
#640
காற்று தீ புனல் ஆகி நின்றானை கடவுளை கொடு மால் விடையானை
நீற்று தீ உருவாய் நிமிர்ந்தானை நிரம்பு பல் கலையின் பொருளாலே
போற்றி தன் கழல் தொழுமவன் உயிரை போக்குவான் உயிர் நீக்கிட தாளால்
கூற்றை தீங்கு செய் குரை கழலானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே
மேல்
#641
அன்று அயன் சிரம் அரிந்து அதில் பலி கொண்டு அமரருக்கு அருள் வெளிப்படுத்தானை
துன்று பைம் கழலில் சிலம்பு ஆர்த்த சோதியை சுடர் போல் ஒளியானை
மின் தயங்கிய இடை மட மங்கை மேவும் ஈசனை வாசம் மா முடி மேல்
கொன்றை அம் சடை குழகனை அழகு ஆர் கோலக்காவினில் கண்டுகொண்டேனே
மேல்
#642
நாளும் இன்னிசையால் தமிழ் பரப்பும் ஞானசம்பந்தனுக்கு உலகவர் முன்
தாளம் ஈந்து அவன் பாடலுக்கு இரங்கும் தன்மையாளனை என் மன கருத்தை
ஆளும் பூதங்கள் பாட நின்று ஆடும் அங்கணன்-தனை எண் கணம் இறைஞ்சும்
கோளிலி பெரும் கோயில் உள்ளானை கோலக்காவினில் கண்டுகொண்டேனே
மேல்
#643
அரக்கன் ஆற்றலை அழித்து அவன் பாட்டுக்கு அன்று இரங்கிய வென்றியினானை
பரக்கும் கார் அளித்து உண்டு உகந்தவர்கள் பரவியும் பணிதற்கு அரியானை
சிர கண் வாய் செவி மூக்கு உயர் காயம் ஆகி தீவினை தீர்த்த எம்மானை
குரக்கு இனம் குதிகொண்டு உகள் வயல் சூழ் கோலக்காவினில் கண்டுகொண்டேனே
மேல்
#644
கோடரம் பயில் சடை உடை கரும்பை கோலக்காவுள் எம்மானை மெய் மான
பாடர் அம் குடி அடியவர் விரும்ப பயிலும் நாவல் ஆரூரன் வன் தொண்டன்
நாடு இரங்கி முன் அறியும் அ நெறியால் நவின்ற பத்து இவை விளம்பிய மாந்தர்
காடு அரங்கு என நடம் நவின்றான்-பால் கதியும் எய்துவர் பதி அவர்க்கு அதுவே
மேல்
63. நம்பி என்றதிருப்பதிகம் - பண் : தக்கேசி
#645
மெய்யை முற்ற பொடி பூசி ஒர் நம்பி வேதம் நான்கும் விரித்து ஓதி ஒர் நம்பி
கையில் ஒர் வெண் மழு ஏந்தி ஒர் நம்பி கண்ணு மூன்றும் உடையாய் ஒரு நம்பி
செய்ய நம்பி சிறு செம் சடை நம்பி திரிபுரம் தீ எழ செற்றது ஓர் வில்லால்
எய்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
மேல்
#646
திங்கள் நம்பி முடி மேல் அடியார்-பால் சிறந்த நம்பி பிறந்த உயிர்க்கு எல்லாம்
அம் கண் நம்பி அருள் மால் விசும்பு ஆளும் அமரர் நம்பி குமரன் முதல் தேவர்
தங்கள் நம்பி தவத்துக்கு ஒரு நம்பி தாதை என்று உன் சரண் பணிந்து ஏத்தும்
எங்கள் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
மேல்
#647
வருத்த அன்று மத யானை உரித்த வழக்கு நம்பி முழக்கும் கடல் நஞ்சம்
அருந்தும் நம்பி அமரர்க்கு அமுது ஈந்த அருள் என் நம்பி பொருளால் வரு நட்டம்
புரிந்த நம்பி புரி நூல் உடை நம்பி பொழுதும் விண்ணும் முழுதும் பல ஆகி
இருந்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
மேல்
#648
ஊறும் நம்பி அமுதா உயிர்க்கு எல்லாம் உரிய நம்பி தெரியும் மறை அங்கம்
கூறும் நம்பி முனிவர்க்கு அரும் கூற்றை குமைத்த நம்பி குமையா புலன் ஐந்தும்
சீறும் நம்பி திரு வெள்ளடை நம்பி செம் கண் வெள்ளை செழும் கோட்டு எருது என்றும்
ஏறும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
மேல்
#649
குற்ற நம்பி குறுகார் எயில் மூன்றை குலைத்த நம்பி சிலையா வரை கையில்
பற்றும் நம்பி பரமானந்த வெள்ளம் பணிக்கும் நம்பி என பாடுதல் அல்லால்
மற்று நம்பி உனக்கு என் செய வல்லேன் மதியிலேன் படு வெம் துயர் எல்லாம்
என்றும் நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
மேல்
#650
அரித்த நம்பி அடி கைதொழுவார் நோய் ஆண்ட நம்பி முன்னை ஈண்டு உலகங்கள்
தெரித்த நம்பி ஒரு சே உடை நம்பி சில் பலிக்கு என்று அகம்-தோறும் மெய் வேடம்
தரித்த நம்பி சமயங்களின் நம்பி தக்கன்-தன் வேள்வி புக்கு அன்று இமையோரை
இரித்த நம்பி என்னை ஆளுடை நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
மேல்
#651
பின்னை நம்பும் புயத்தான் நெடு மாலும் பிரமனும் என்ற இவர் நாடியும் காணா
உன்னை நம்பி ஒருவர்க்கு எய்தல் ஆமே உலகு நம்பி உரைசெய்யும் அது அல்லால்
முன்னை நம்பி பின்னும் வார் சடை நம்பி முழுது இவை இத்தனையும் தொகுத்து ஆண்டது
என்னை நம்பி எம்பிரான் ஆய நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
மேல்
#652
சொல்லை நம்பி பொருளாய் நின்ற நம்பி தோற்றம் ஈறு முதல் ஆகிய நம்பி
வல்லை நம்பி அடியார்க்கு அருள்செய்ய வருந்தி நம்பி உனக்கு ஆட்செயகில்லார்
அல்லல் நம்பி படுகின்றது என் நாடி அணங்கு ஒருபாகம் வைத்து எண் கணம் போற்ற
இல்லம் நம்பி இடு பிச்சை கொள் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
மேல்
#653
காண்டும் நம்பி கழல் சேவடி என்றும் கலந்து உனை காதலித்து ஆட்செய்கிற்பாரை
ஆண்டு நம்பி அவர் முன்கதி சேர அருளும் நம்பி குரு மா பிறை பாம்பை
தீண்டும் நம்பி சென்னியில் கன்னி தங்க திருத்தும் நம்பி பொய் சமண் பொருள் ஆகி
ஈண்டும் நம்பி இமையோர் தொழும் நம்பி எழுபிறப்பும் எங்கள் நம்பி கண்டாயே
மேல்
#654
கரக்கும் நம்பி கசியாதவர்-தம்மை கசிந்தவர்க்கு இம்மையொடு அம்மையில் இன்பம்
பெருக்கும் நம்பி பெருக கருத்தா
மேல்
64. திருத்தினை நகர் - பண் : தக்கேசி
#655
நீறு தாங்கிய திருநுதலானை நெற்றிக்கண்ணனை நிரை வளை மடந்தை
கூறு தாங்கிய கொள்கையினானை குற்றமிலியை கற்றை அம் சடை மேல்
ஆறு தாங்கிய அழகனை அமரர்க்கு அரிய சோதியை வரி வரால் உகளும்
சேறு தாங்கிய திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே
மேல்
#656
பிணி கொள் ஆக்கையில் பிறப்பு இறப்பு என்னும் இதனை நீக்கி ஈசன் திருவடி இணைக்கு ஆள்
துணிய வேண்டிடில் சொல்லுவன் கேள் நீ அஞ்சல் நெஞ்சமே வஞ்சர் வாழ் மதில் மூன்று
அணிகொள் வெம் சிலையால் உக சீறும் ஐயன் வையகம் பரவி நின்று ஏத்தும்
திணியும் வார் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே
மேல்
#657
வடி கொள் கண் இணை மடந்தையர்-தம்-பால் மயல் அது உற்று வஞ்சனைக்கு இடம் ஆகி
முடியுமா கருதேல் எருது ஏறும் மூர்த்தியை முதல் ஆய பிரானை
அடிகள் என்று அடியார் தொழுது ஏத்தும் அப்பன் ஒப்பு இலா முலை உமை கோனை
செடி கொள் கான் மலி திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே
மேல்
#658
பாவமே புரிந்து அகலிடம்-தன்னில் பல பகர்ந்து அலமந்து உயிர் வாழ்க்கைக்கு
ஆவ என்று உழந்து அயர்ந்து வீழாதே அண்ணல்-தன் திறம் அறிவினால் கருதி
மாவின் ஈர் உரி உடை புனைந்தானை மணியை மைந்தனை வானவர்க்கு அமுதை
தேவதேவனை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே
மேல்
#659
ஒன்று அலா உயிர் வாழ்க்கையை நினைந்திட்டு உடல் தளர்ந்து அரு மா நிதி இயற்றி
என்றும் வாழல் ஆம் எமக்கு என பேசும் இதுவும் பொய் எனவே நினை உளமே
குன்று உலாவிய புயம் உடையானை கூத்தனை குலாவி குவலயத்தோர்
சென்று எலாம் பயில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே
மேல்
#660
வேந்தராய் உலகு ஆண்டு அறம் புரிந்து வீற்றிருந்த இ உடல் இது-தன்னை
தேய்ந்து இறந்து வெம் துயர் உழந்திடும் இ பொக்க வாழ்வினை விட்டிடு நெஞ்சே
பாந்தள் அம் கையில் ஆட்டு உகந்தானை பரமனை கடல் சூர் தடிந்திட்ட
சேந்தர் தாதையை திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே
மேல்
#661
தன்னில் ஆசு அறு சித்தமும் இன்றி தவம் முயன்று அவம் ஆயின பேசி
பின்னல் ஆர் சடை கட்டி என்பு அணிந்தால் பெரிதும் நீந்துவது அரிது அது நிற்க
முன் எலாம் முழுமுதல் என்று வானோர் மூர்த்தி ஆகிய முதலவன்-தன்னை
செந்நெல் ஆர் வயல் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே
மேல்
#662
பரிந்த சுற்றமும் மற்று வன் துணையும் பலரும் கண்டு அழுது எழ உயிர் உடலை
பிரிந்து போய் இது நிச்சயம் அறிந்தால் பேதை வாழ்வு எனும் பிணக்கினை தவிர்ந்து
கரும் தடம் கண்ணி_பங்கனை உயிரை காலகாலனை கடவுளை விரும்பி
செருந்தி பொன் மலர் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே
மேல்
#663
நமை எலாம் பலர் இகழ்ந்து உரைப்பதன் முன் நன்மை ஒன்று இலா தேரர் புன் சமண் ஆம்
சமயம் ஆகிய தவத்தினார் அவத்த தன்மை விட்டொழி நன்மையை வேண்டில்
உமை ஒர்கூறனை ஏறு உகந்தானை உம்பர் ஆதியை எம்பெருமானை
சிமயம் ஆர் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தினை சென்று அடை மனனே
மேல்
#664
நீடு பொக்கையின் பிறவியை பழித்து நீக்கல் ஆம் என்று மனத்தினை தெருட்டி
சேடு உலாம் பொழில் திரு தினைநகருள் சிவக்கொழுந்தின திருவடி இணைதான்
நாடு எலாம் புகழ் நாவலூர் ஆளி நம்பி வன் தொண்டன் ஊரன் உரைத்த
பாடல் ஆம் தமிழ் பத்து இவை வல்லார் முத்தி ஆவது பரகதி பயனே
மேல்
65. திருநின்றியூர் - பண் : தக்கேசி
#665
திருவும் வண்மையும் திண் திறல் அரசும் சிலந்தியார் செய்த செய்பணி கண்டு
மருவு கோச்செங்கணான்-தனக்கு அளித்த வார்த்தை கேட்டு நுன் மலர் அடி அடைந்தேன்
பெருகு பொன்னி வந்து உந்து பல மணியை பிள்ளை பல் கணம் பண்ணையுள் நண்ணி
தெருவும் தெற்றியம் முற்றமும் பற்றி திரட்டும் தென் திரு நின்றியூரானே
மேல்
#666
அணிகொள் ஆடை அம் பூண் மணி மாலை அமுதுசெய்த அமுதம் பெறு சண்டி
இணை கொள் ஏழ் எழுநூறு இரும் பனுவல் ஈந்தவன் திருநாவினுக்குஅரையன்
கணை கொள் கண்ணப்பன் என்ற இவர் பெற்ற காதல் இன்னருள் ஆதரித்து அடைந்தேன்
திணை கொள் செந்தமிழ் பைம் கிளி தெரியும் செல்வ தென் திரு நின்றியூரானே
மேல்
#667
மொய்த்த சீர் முந்நூற்றுஅறுபது வேலி மூன்றுநூறு வேதியரொடு நுனக்கு
ஒத்த பொன் மணி கலசங்கள் ஏந்தி ஓங்கும் நின்றியூர் என்று உனக்கு அளிப்ப
பக்தி செய்த அ பரசுராமற்கு பாதம் காட்டிய நீதி கண்டு அடைந்தேன்
சித்தர் வானவர் தானவர் வணங்கும் செல்வ தென் திரு நின்றியூரானே
மேல்
#668
இரவி நீள் சுடர் எழுவதன் முன்னம் எழுந்து தன் முலை கலசங்கள் ஏந்தி
சுரபி பால் சொரிந்து ஆட்டி நின் பாதம் தொடர்ந்த வார்த்தை திடம்பட கேட்டு
பரவி உள்கி வன் பாசத்தை அறுத்து பரம வந்து நுன் பாதத்தை அடைந்தேன்
நிரவி நித்திலம் அ தகு செம்பொன் அளிக்கும் தென் திரு நின்றியூரானே
மேல்
#669
வந்து ஓர் இந்திரன் வழிபட மகிழ்ந்து வான நாடு நீ ஆள்க என அருளி
சந்தி மூன்றிலும் தாபரம் நிறுத்தி சகளி செய்து இறைஞ்சு அகத்தியர்-தமக்கு
சிந்து மா மணி அணி திரு பொதியில் சேர்வு நல்கிய செல்வம் கண்டு அடைந்தேன்
செம் தண் மா மலர் திருமகள் மருவும் செல்வ தென் திரு நின்றியூரானே
மேல்
#670
காதுபொத்தரை கின்னரர் உழுவை கடிக்கும் பன்னகம் பிடிப்ப அரும் சீயம்
கோது இல் மா தவர் குழுவுடன் கேட்ப கோல ஆல் நிழல் கீழ் அறம் பகர
ஏதம் செய்தவர் எய்திய இன்பம் யானும் கேட்டு நின் இணை அடி அடைந்தேன்
நீதி வேதியர் நிறை புகழ் உலகில் நிலவு தென் திரு நின்றியூரானே
மேல்
#671
கோடு நான்கு உடை குஞ்சரம் குலுங்க நலம் கொள் பாதம் நின்று ஏத்தியபொழுதே
பீடு விண் மிசை பெருமையும் பெற்ற பெற்றி கேட்டு நின் பொன் கழல் அடைந்தேன்
பேடைமஞ்ஞையும் பிணைகளின் கன்றும் பிள்ளை கிள்ளையும் என பிறைநுதலார்
நீடு மாடங்கள் மாளிகை-தோறும் நிலவு தென் திரு நின்றியூரானே
மேல்
66. திருவாவடுதுறை - பண் : தக்கேசி
#672
மறையவன் ஒரு மாணி வந்து அடைய வாரமாய் அவன் ஆருயிர் நிறுத்த
கறை கொள் வேல் உடை காலனை காலால் கடந்த காரணம் கண்டுகண்டு அடியேன்
இறைவன் எம்பெருமான் என்ற எப்போதும் ஏத்திஏத்தி நின்று அஞ்சலி செய்து உன்
அறைகொள் சேவடிக்கு அன்பொடும் அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே
மேல்
#673
தெருண்ட வாயிடை நூல் கொண்டு சிலந்தி சித்திர பந்தர் சிக்கென இயற்ற
சுருண்ட செஞ்சடையாய் அது-தன்னை சோழன் ஆக்கிய தொடர்ச்சி கண்டு அடியேன்
புரண்டு வீழ்ந்து நின் பொன் மலர் பாதம் போற்றிபோற்றி என்று அன்பொடு புலம்பி
அரண்டு என் மேல் வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே
மேல்
#674
திகழும் மால் அவன் ஆயிரம் மலரால் ஏத்துவான் ஒரு நீள் மலர் குறைய
புகழினால் அவன் கண் இடத்து இடலும் புரிந்து சக்கரம் கொடுத்தல் கண்டு அடியேன்
திகழும் நின் திரு பாதங்கள் பரவி தேவதேவ நின் திறம் பல பிதற்றி
அகழும் வல்வினைக்கு அஞ்சி வந்து அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே
மேல்
#675
வீரத்தால் ஒரு வேடுவன் ஆகி விசைத்து ஒர் கேழலை துரந்து சென்று அணைந்து
போரை தான் விசயன்-தனக்கு அன்பாய் புரிந்து வான் படை கொடுத்தல் கண்டு அடியேன்
வாரத்தால் உன நாமங்கள் பரவி வழிபட்டு உன் திறமே நினைந்து உருகி
ஆர்வத்தோடும் வந்து அடி இணை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே
மேல்
#676
ஒக்க முப்புரம் ஓங்கு எரி தூவ உன்னை உன்னிய மூவர் நின் சரணம்
புக்கு மற்றவர் பொன்_உலகு ஆள புகழினால் அருள் ஈந்தமை அறிந்து
மிக்க நின் கழலே தொழுது அரற்றி வேதியா ஆதிமூர்த்தி நின் அரையில்
அக்கு அணிந்த எம்மான் உனை அடைந்தேன் ஆவடுதுறை ஆதி எம்மானே
மேல்
67. திருவலிவலம் - பண் : தக்கேசி
#677
ஊன் அங்கத்து உயிர்ப்பாய் உலகு எல்லாம் ஓங்காரத்து உருவாகி நின்றானை
வானம் கைத்தவர்க்கும் அளப்பரிய வள்ளலை அடியார்கள்-தம் உள்ள
தேன் அங்கத்து அமுது ஆகி உள் ஊறும் தேசனை நினைத்தற்கு இனியானை
மான் அம் கைத்தலத்து ஏந்த வல்லானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே
மேல்
#678
பல் அடியார் பணிக்கு பரிவானை பாடி ஆடும் பத்தர்க்கு அன்பு உடையானை
செல் அடியே நெருக்கி திறம்பாது சேர்ந்தவர்க்கே சித்தி முத்தி செய்வானை
நல் அடியார் மனத்து எய்ப்பினில் வைப்பை நான் உறு குறை அறிந்து அருள்புரிவானை
வல் அடியார் மனத்து இச்சை உளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே
மேல்
#679
ஆழியனாய் அகன்றே உயர்ந்தானை ஆதி அந்தம் பணிவார்க்கு அணியானை
கூழையர் ஆகி பொய்யே குடி ஓம்பி குழைந்து மெய்யடியார் குழு பெய்யும்
வாழியர்க்கே வழுவா நெறி காட்டி மறுபிறப்பு என்னை மாசு அறுத்தானை
மாழை ஒண் கண் உமையை மகிழ்ந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே
மேல்
#680
நாத்தான் உன் திறமே திறம்பாது நண்ணி அண்ணித்து அமுதம் பொதிந்து ஊறும்
ஆத்தானை அடியேன்-தனக்கு என்றும் அளவு இறந்த பல தேவர்கள் போற்றும்
சோத்தானை சுடர் மூன்றிலும் ஒன்றி துருவி மால் பிரமன் அறியாத
மாத்தானை மாத்து எனக்கு வைத்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே
மேல்
#681
நல் இசை ஞானசம்பந்தனும் நாவுக்குஅரசரும் பாடிய நல் தமிழ் மாலை
சொல்லியவே சொல்லி ஏத்து உகப்பானை தொண்டனேன் அறியாமை அறிந்து
கல் இயல் மனத்தை கசிவித்து கழல் அடி காட்டி என் களைகளை அறுக்கும்
வல் இயல் வானவர் வணங்க நின்றானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே
மேல்
#682
பாடுமா பாடி பணியும் ஆறு அறியேன் பனுவுமா பனுவி பரவும் ஆறு அறியேன்
தேடுமா தேடி திருத்தும் ஆறு அறியேன் செல்லுமா செல்ல செலுத்தும் ஆறு அறியேன்
கூடும் ஆறு எங்ஙனமோ என்று கூற குறித்து காட்டி கொணர்ந்து எனை ஆண்டு
வாடி நீ வாளா வருந்தல் என்பானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே
மேல்
#683
பந்தித்த வல்வினை பற்று அற பிறவி படு கடல் பரப்பு தவிர்ப்பானை
சந்தித்த திறலால் பணி பூட்டி தவத்தை ஈட்டிய தம் அடியார்க்கு
சிந்தித்தற்கு எளிதாய் திரு பாதம் சிவலோகம் திறந்து ஏற்ற வல்லானை
வந்திப்பார்-தம் மனத்தின் உள்ளானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே
மேல்
#684
எவ்வெவர் தேவர் இருடிகள் மன்னர் எண்ணிறந்தார்கள் மற்ற எங்கும் நின்று ஏத்த
அவ்வவர் வேண்டியதே அருள்செய்து அடைந்தவர்க்கே இடம் ஆகி நின்றானை
இவ்வவர் கருணை எம் கற்பக கடலை எம்பெருமான் அருளாய் என்ற பின்னை
வவ்வி என் ஆவி மனம் கலந்தானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே
மேல்
#685
திரியும் முப்புரம் செற்றதும் குற்ற திறல் அரக்கனை செறுத்ததும் மற்றை
பெரிய நஞ்சு அமுது உண்டதும் முற்றும் பின்னையாய் முன்னமே முளைத்தானை
அரிய நான்மறை அந்தணர் ஓவாது அடி பணிந்து அறிதற்கு அரியானை
வரையின்பாவை_மணாளன் எம்மானை வலிவலம்-தனில் வந்து கண்டேனே
மேல்
#686
ஏன்ற அந்தணன் தலையினை அறுத்து நிறைக்க மால் உதிரத்தினை ஏற்று
தோன்று தோள் மிசை களேபரம்-தன்னை சுமந்த மா விரதத்த கங்காளன்
சான்று காட்டுதற்கு அரியவன் எளியவன் தன்னை தன் நிலாம் மனத்தார்க்கு
மான்று சென்று அணையாதவன்-தன்னை வலிவலம்-தனில் வந்து கண்டேனே
மேல்
#687
கலி வலம் கெட ஆர் அழல் ஓம்பும் கற்ற நான்மறை முற்று அனல் ஓம்பும்
வலிவலம்-தனில் வந்து கண்டு அடியேன் மன்னும் நாவல் ஆரூரன் வன் தொண்டன்
ஒலி கொள் இன்னிசை செந்தமிழ் பத்தும் உள்ளத்தால் உகந்து ஏத்த வல்லார் போய்
மெலிவு இல் வான் உலகத்தவர் ஏத்த விரும்பி விண்ணுலகு எய்துவர் தாமே
மேல்
68. திருநள்ளாறு - பண் : தக்கேசி
#688
செம்பொன் மேனி வெண் நீறு அணிவானை கரிய கண்டனை மால் அயன் காணா
சம்புவை தழல் அங்கையினானை சாமவேதனை தன் ஒப்பு இலானை
கும்ப மா கரியின் உரியானை கோவின் மேல் வரும் கோவினை எங்கள்
நம்பனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
மேல்
#689
விரை செய் மா மலர் கொன்றையினானை வேத கீதனை மிக சிறந்து உருகி
பரசுவார் வினைப்பற்று அறுப்பானை பாலொடு ஆன் அஞ்சும் ஆட வல்லானை
குரை கடல் வரை ஏழ்உலகு உடைய கோனை ஞான கொழுந்தினை தொல்லை
நரை விடை உடை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
மேல்
#690
பூவில் வாசத்தை பொன்னினை மணியை புவியை காற்றினை புனல் அனல் வெளியை
சேவின் மேல் வரும் செல்வனை சிவனை தேவதேவனை தித்திக்கும் தேனை
காவி அம் கண்ணி_பங்கனை கங்கை சடையனை காமரத்து இசை பாட
நாவில் ஊறும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
மேல்
#691
தஞ்சம் என்று தன் தாள் அது அடைந்த பாலன் மேல் வந்த காலனை உருள
நெஞ்சில் ஓர் உதைகொண்ட பிரானை நினைப்பவர் மனம் நீங்ககில்லானை
விஞ்சை வானவர் தானவர் கூடி கடைந்த வேலையுள் மிக்கு எழுந்து எரியும்
நஞ்சம் உண்ட நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
மேல்
#692
மங்கை_பங்கனை மாசு இலா மணியை வான நாடனை ஏனமோடு அன்னம்
எங்கும் நாடியும் காண்பு அரியானை ஏழையேற்கு எளிவந்த பிரானை
அங்கம் நான்மறையால் நிறைகின்ற அந்தணாளர் அடி அது போற்றும்
நங்கள் கோனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
மேல்
#693
கற்பகத்தினை கனக மால் வரையை காம கோபனை கண்நுதலானை
சொல் பத பொருள் இருள் அறுத்து அருளும் தூய சோதியை வெண்ணெய்நல்லூரில்
அற்புத பழ ஆவணம் காட்டி அடியனா என்னை ஆள் அது கொண்ட
நல் பதத்தை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
மேல்
#694
மறவனை அன்று பன்றி பின் சென்ற மாயனை நால்வர்க்கு ஆலின் கீழ் உரைத்த
அறவனை அதரர்க்கு அரியானை அமரர் சேனைக்கு நாயகன் ஆன
குறவர் மங்கை-தன் கேள்வனை பெற்ற கோனை நான் செய்த குற்றங்கள் பொறுக்கும்
நறை விரியும் நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
மேல்
#695
மாதினுக்கு உடம்பு இடம் கொடுத்தானை மணியினை பணிவார் வினை கெடுக்கும்
வேதனை வேத வேள்வியர் வணங்கும் விமலனை அடியேற்கு எளிவந்த
தூதனை தன்னை தோழமை அருளி தொண்டனேன் செய்த துரிசுகள் பொறுக்கும்
நாதனை நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
மேல்
#696
இலங்கை வேந்தன் எழில் திகழ் கயிலை எடுப்ப ஆங்கு இமவான்மகள் அஞ்ச
துலங்கு நீள் முடி ஒருபதும் தோள்கள் இருபதும் நெரித்து இன்னிசை கேட்டு
வலங்கை வாளொடு நாமமும் கொடுத்த வள்ளலை பிள்ளை மா மதி சடை மேல்
நலம் கொள் சோதி நள்ளாறனை அமுதை நாயினேன் மறந்து என் நினைக்கேனே
மேல்
#697
செறிந்த சோலைகள் சூழ்ந்த நள்ளாற்று எம் சிவனை நாவலூர் சிங்கடி தந்தை
மறந்தும் நான் மற்றும் நினைப்பது ஏது என்று வனப்பகை அப்பன் ஊரன் வன் தொண்டன்
சிறந்த மாலைகள் அஞ்சினொடுஅஞ்சும் சிந்தையுள் உருகி செப்ப வல்லார்க்கு
இறந்துபோக்கு இல்லை வரவு இல்லை ஆகி இன்ப வெள்ளத்துள் இருப்பர்கள் இனிதே
மேல்
69. திருவடமுல்லைவாயில் - பண் : தக்கேசி
#698
திருவும் மெய்ப்பொருளும் செல்வமும் எனக்கு உன் சீர் உடை கழல்கள் என்று எண்ணி
ஒருவரை மதியாது உறாமைகள் செய்தும் ஊடியும் உறைப்பனாய் திரிவேன்
முருகு அமர் சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் வாயினால் உன்னை
பரவிடும் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே
மேல்
#699
கூடிய இலயம் சதி பிழையாமை கொடி இடை உமை அவள் காண
ஆடிய அழகா அரு மறைப்பொருளே அங்கணா எங்கு உற்றாய் என்று
தேடிய வானோர் சேர் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால்
பாடிய அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே
மேல்
#700
விண் பணிந்து ஏத்தும் வேதியா மாதர் வெருவிட வேழம் அன்று உரித்தாய்
செண்பக சோலை சூழ் திரு முல்லைவாயிலாய் தேவர்-தம் அரசே
தண் பொழில் ஒற்றி மா நகர் உடையாய் சங்கிலிக்கா என் கண் கொண்ட
பண்ப நின் அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே
மேல்
#701
பொன் நலம் கழனி புது விரை மருவி பொறி வரி வண்டு இசை பாட
அ நலம் கமல தவிசின் மேல் உறங்கும் அலவன் வந்து உலவிட அள்ளல்
செந்நெல் அம் கழனி சூழ் திரு முல்லைவாயிலாய் திரு புகழ் விருப்பால்
பன்னல் அம் தமிழால் பாடுவேற்கு அருளாய் பாசுபதா பரஞ்சுடரே
மேல்
#702
சந்தன வேரும் கார் அகில் குறடும் தண் மயில் பீலியும் கரியின்
தந்தமும் தரள குவைகளும் பவள கொடிகளும் சுமந்துகொண்டு உந்தி
வந்து இழி பாலி வட கரை முல்லைவாயிலாய் மாசு இலா மணியே
பந்தனை கெடுத்து என் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே
மேல்
#703
மற்று நான் பெற்றது ஆர் பெற வல்லார் வள்ளலே கள்ளமே பேசி
குற்றமே செயினும் குணம் என கொள்ளும் கொள்கையால் மிகை பல செய்தேன்
செற்று மீது ஓடும் திரிபுரம் எரித்த திரு முல்லைவாயிலாய் அடியேன்
பற்று இலேன் உற்ற படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே
மேல்
#704
மணி கெழு செ வாய் வெண் நகை கரிய வார் குழல் மா மயில் சாயல்
அணி கெழு கொங்கை அம் கயல்_கண்ணார் அரு நடம் ஆடல் அறாத
திணி பொழில் தழுவு திரு முல்லைவாயில் செல்வனே எல்லியும் பகலும்
பணி அது செய்வேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே
மேல்
#705
நம்பனே அன்று வெண்ணெய்நல்லூரில் நாயினேன்-தன்னை ஆட்கொண்ட
சம்புவே உம்பரார் தொழுது ஏத்தும் தடம் கடல் நஞ்சு உண்ட கண்டா
செம்பொன் மாளிகை சூழ் திரு முல்லைவாயில் தேடி யான் திரிதர்வேன் கண்ட
பைம்பொனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே
மேல்
#706
மட்டு உலாம் மலர் கொண்டு அடி இணை வணங்கும் மாணி-தன் மேல் மதியாதே
கட்டுவான் வந்த காலனை மாள காலினால் ஆருயிர் செகுத்த
சிட்டனே செல்வ திரு முல்லைவாயில் செல்வனே செழு மறை பகர்ந்த
பட்டனே அடியேன் படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே
மேல்
#707
சொல்ல அரும் புகழான் தொண்டைமான் களிற்றை சூழ் கொடி முல்லையால் கட்டிட்டு
எல்லை இல் இன்பம் அவன் பெற வெளிப்பட்டு அருளிய இறைவனே என்றும்
நல்லவர் பரவும் திரு முல்லைவாயில் நாதனே நரை விடை ஏறீ
பல் கலை பொருளே படு துயர் களையாய் பாசுபதா பரஞ்சுடரே
மேல்
#708
விரை தரு மலர் மேல் அயனொடு மாலும் வெருவிட நீண்ட எம்மானை
திரை தரு புனல் சூழ் திரு முல்லைவாயில் செல்வனை நாவல் ஆரூரன்
உரைதரு மாலை ஓர்அஞ்சினோடு அஞ்சும் உள் குளிர்ந்து ஏத்த வல்லார்கள்
நரை திரை மூப்பும் நடலையும் இன்றி நண்ணுவர் விண்ணவர்க்கு அரசே
மேல்
70. திருவாவடுதுறை - பண் : தக்கேசி
#709
கங்கை வார் சடையாய் கணநாதா காலகாலனே காமனுக்கு அனலே
பொங்கு மா கடல் விடம் மிடற்றானே பூத நாதனே புண்ணியா புனிதா
செம் கண் மால் விடையாய் தெளி தேனே தீர்த்தனே திரு ஆவடுதுறையுள்
அங்கணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
மேல்
#710
மண்ணின் மேல் மயங்கி கிடப்பேனை வலிய வந்து என்னை ஆண்டுகொண்டானே
கண் இலேன் உடம்பில் அடு நோயால் கருத்து அழிந்து உனக்கே பொறை ஆனேன்
தெண் நிலா எறிக்கும் சடையானே தேவனே திரு ஆவடுதுறையுள்
அண்ணலே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
மேல்
#711
ஒப்பு இலா முலையாள் ஒருபாகா உத்தமா மத்தம் ஆர்தரு சடையாய்
முப்புரங்களை தீ வளைத்து அங்கே மூவருக்கு அருள்செய்ய வல்லானே
செப்ப ஆல் நிழல் கீழ் இருந்து அருளும் செல்வனே திரு ஆவடுதுறையுள்
அப்பனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
மேல்
#712
கொதியினால் வரு காளி-தன் கோபம் குறைய ஆடிய கூத்து உடையானே
மதி இலேன் உடம்பில் அடு நோயால் மயங்கினேன் மணியே மணவாளா
விதியினால் இமையோர் தொழுது ஏத்தும் விகிர்தனே திரு ஆவடுதுறையுள்
அதிபனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
மேல்
#713
வந்த வாள் அரக்கன் வலி தொலைத்து வாழும் நாள் கொடுத்தாய் வழி முதலே
வெந்த வெண் பொடி பூச வல்லானே வேடனாய் விசயற்கு அருள்புரிந்த
இந்துசேகரனே இமையோர் சீர் ஈசனே திரு ஆவடுதுறையுள்
அந்தணா எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
மேல்
#714
குறைவு இலா நிறைவே குணக்குன்றே கூத்தனே குழை காது உடையானே
உறவு இலேன் உனை அன்றி மற்று அடியேன் ஒரு பிழை பொறுத்தால் இழிவு உண்டே
சிறை வண்டு ஆர் பொழில் சூழ் திரு ஆரூர் செம்பொனே திரு ஆவடுதுறையுள்
அறவனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
மேல்
#715
வெய்ய மா கரி ஈர் உரியானே வேங்கை ஆடையினாய் விதி முதலே
மெய்யனே அடல் ஆழி அன்று அரிதான் வேண்ட நீ கொடுத்து அருள்புரி விகிர்தா
செய்ய மேனியனே திகழ் ஒளியே செங்கணா திரு ஆவடுதுறையுள்
ஐயனே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
மேல்
#716
கோது இலா அமுதே அருள் பெருகு கோலமே இமையோர் தொழு கோவே
பாதி மாது ஒருகூறு உடையானே பசுபதீ பரமா பரமேட்டீ
தீது இலா மலையே திரு அருள் சேர் சேவகா திரு ஆவடுதுறையுள்
ஆதியே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
மேல்
#717
வான நாடனே வழித்துணை மருந்தே மாசு இலா மணியே மறைப்பொருளே
ஏன மா எயிறு ஆமையும் எலும்பும் ஈடு தாங்கிய மார்பு உடையானே
தேன் நெய் பால் தயிர் ஆட்டு உகந்தானே தேவனே திரு ஆவடுதுறையுள்
ஆனையே எனை அஞ்சல் என்று அருளாய் ஆர் எனக்கு உறவு அமரர்கள் ஏறே
மேல்
#718
வெண் தலை பிறை கொன்றையும் அரவும் வேரி மத்தமும் விரவி முன் முடிந்த
இண்டை மா மலர் செஞ்சடையானை ஈசனை திரு ஆவடுதுறையுள்
அண்டவாணனை சிங்கடி அப்பன் அணுக்க வன் தொண்டன் ஆர்வத்தால் உரைத்த
தண் தமிழ் மலர் பத்தும் வல்லார்கள் சாதலும் பிறப்பும் அறுப்பாரே
மேல்
71. திருமறைக்காடு - பண் : காந்தாரம்
#719
யாழை பழித்து அன்ன மொழி மங்கை ஒருபங்கள்
பேழை சடை முடி மேல் பிறை வைத்தான் இடம் பேணில்
தாழை பொழிலூடே சென்று பூழை தலை நுழைந்து
வாழைக்கனி கூழை குரங்கு உண்ணும் மறைக்காடே
மேல்
#720
சிகரத்திடை இள வெண் பிறை வைத்தான் இடம் தெரியில்
முகரத்திடை முத்தின் ஒளி பவள திரள் ஓதம்
தகரத்திடை தாழை திரள் ஞாழல் திரள் நீழல்
மகரத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே
மேல்
#721
அங்கங்களும் மறை நான்குடன் விரித்தான் இடம் அறிந்தோம்
தெங்கங்களும் நெடும் பெண்ணையும் பழம் வீழ் மணல் படப்பை
சங்கங்களும் இலங்கு இப்பியும் வலம்புரிகளும் இடறி
வங்கங்களும் உயர் கூம்பொடு வணங்கும் மறைக்காடே
மேல்
#722
நரை விரவிய மயிர்-தன்னொடு பஞ்சவடி மார்பன்
உரை விரவிய உத்தமன் இடம் உணரலுறு மனமே
குரை விரவிய குலை சேகர கொண்டல் தலை விண்ட
வரை புரைவன திரை பொருது இழிந்து எற்றும் மறைக்காடே
மேல்
#723
சங்கை பட நினையாது எழு நெஞ்சே தொழுது ஏத்த
கங்கை சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
அங்க கடல் அரு மா மணி உந்தி கரைக்கு ஏற்ற
வங்கத்தொடு சுறவம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே
மேல்
#724
அடல் விடையினன் மழுவாளினன் அலரால் அணி கொன்றை
படரும் சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
கடலிடை இடை கழி அருகினில் கடி நாறு தண் கைதை
மடலிடை இடை வெண் குருகு எழு மணி நீர் மறைக்காடே
மேல்
#725
முளை வளர் இள மதி உடையவன் முன் செய்த வல்வினைகள்
களை களைந்து எனை ஆளலுறு கண்டன் இடம் செந்நெல்
வளை விளை வயல் கயல் பாய்தரு குண வார் மணல் கடல்-வாய்
வளை வளையொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே
மேல்
#726
நலம் பெரியன சுரும்பு ஆர்ந்தன நம் கோன் இடம் அறிந்தோம்
கலம் பெரியன சாரும் கடல் கரை பொருது இழி கங்கை
சலம் புரி சடை முடி உடையவர்க்கு இடம் ஆவது பரவை
வலம்புரியொடு சலஞ்சலம் கொணர்ந்து எற்றும் மறைக்காடே
மேல்
#727
குண்டு ஆடியும் சமண் ஆடியும் குற்று உடுக்கையர் தாமும்
கண்டார் கண்ட காரணம் அவை கருதாது கைதொழு-மின்
எண்தோளினன் முக்கண்ணினன் ஏழ்இசையினன் அறு கால்
வண்டு ஆடு தண் பொழில் சூழ்ந்து எழு மணி நீர் மறைக்காடே
மேல்
#728
பார் ஊர் பல புடை சூழ் வள வயல் நாவலர் வேந்தன்
வார் ஊர் வன முலையாள் உமை_பங்கன் மறைக்காட்டை
ஆரூரன தமிழ் மாலைகள் பாடும் அடித்தொண்டர்
நீர் ஊர்தரு நிலனோடு உயர் புகழ் ஆகுவர் தாமே
மேல்
72. திருவலம்புரம் - பண் : காந்தாரம்
#729
எனக்கு இனி தினைத்தனை புகலிடம் அறிந்தேன்
பனை கனி பழம் படும் பரவையின் கரை மேல்
எனக்கு இனியவன் தமர்க்கு இனியவன் எழுமையும்
மனக்கு இனியவன்-தனது இடம் வலம்புரமே
மேல்
#730
புரம் அவை எரிதர வளைந்த வில்லினன் அவன்
மர உரி புலி அதள் அரை மிசை மருவினன்
அர உரி இரந்தவன் இரந்து உண விரும்பி நின்று
இரவு எரிஆடி-தன் இடம் வலம்புரமே
மேல்
#731
நீறு அணி மேனியன் நெருப்பு உமிழ் அரவினன்
கூறு அணி கொடு மழு ஏந்தி ஒர் கையினன்
ஆறு அணி அவிர் சடை அழல் வளர் மழலை வெள்
ஏறு அணி அடிகள்-தம் இடம் வலம்புரமே
மேல்
#732
கொங்கு அணை சுரும்பு உண நெருங்கிய குளிர் இளம்
தெங்கொடு பனை பழம் படும் இடம் தேவர்கள்
தங்கிடும் இடம் தடம் கடல் திரை புடைதர
எங்களது அடிகள் நல் இடம் வலம்புரமே
மேல்
#733
கொடு மழு விரகினன் கொலை மலி சிலையினன்
நெடு மதில் சிறுமையின் நிரவ வல்லவன் இடம்
படு மணி முத்தமும் பவளமும் மிக சுமந்து
இடு மணல் அடைகரை இடம் வலம்புரமே
மேல்
#734
கரும் கட களிற்று உரி கடவுளது இடம் கயல்
நெருங்கிய நெடும் பெணை அடும்பொடு விரவிய
மருங்கொடு வலம்புரி சலஞ்சலம் மணம் புணர்ந்து
இரும் கடல் அணைகரை இடம் வலம்புரமே
மேல்
#735
நரி புரி காடு அரங்கா நடம் ஆடுவர்
வரி புரி பாட நின்று ஆடும் எம்மான் இடம்
புரி சுரி வரி குழல் அரிவை ஒர்பால் மகிழ்ந்து
எரி எரிஆடி-தன் இடம் வலம்புரமே
மேல்
#736
பாறு அணி முடை தலை கலன் என மருவிய
நீறு அணி நிமிர் சடை முடியினன் நிலவிய
மாறு அணி வரு திரை வயல் அணி பொழிலது
ஏறு உடை அடிகள்-தம் இடம் வலம்புரமே
மேல்
#737
சடசட விடு பெணை பழம் படும் இட வகை
பட வடகத்தொடு பல கலந்து உலவிய
கடைகடை பலி திரி கபாலி-தன் இடம் அது
இடிகரை மணல் அடை இடம் வலம்புரமே
மேல்
#738
குண்டிகை படப்பினில் விடக்கினை ஒழித்தவர்
கண்டவர் கண்டு அடி வீழ்ந்தவர் கனை கழல்
தண்டு உடை தண்டி-தன் இனம் உடை அரவுடன்
எண் திசைக்கு ஒரு சுடர் இடம் வலம்புரமே
மேல்
#739
வரும் கலமும் பல பேணுதல் கரும் கடல்
இரும் குல பிறப்பர்-தம் இடம் வலம்புரத்தினை
அரும் குலத்து அரும் தமிழ் ஊரன் வன் தொண்டன் சொல்
பெரும் குலத்தவரொடு பிதற்றுதல் பெருமையே
மேல்
73. திரு ஆரூர் - பண் : காந்தாரம்
#740
கரையும் கடலும் மலையும் காலையும் மாலையும் எல்லாம்
உரையில் விரவி வருவான் ஒருவன் உருத்திரலோகன்
வரையின்மடமகள்_கேள்வன் வானவர் தானவர்க்கு எல்லாம்
அரையன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்
மேல்
#741
தனியன் என்று எள்கி அறியேன் தம்மை பெரிதும் உகப்பன்
முனிபவர்-தம்மை முனிவன் முகம் பல பேசி மொழியேன்
கனிகள் பல உடை சோலை காய் குலை ஈன்ற கமுகின்
இனியன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்
மேல்
#742
சொல்லில் குலா அன்றி சொல்லேன் தொடர்ந்தவர்க்கும் துணை அல்லேன்
கல்லில் வலிய மனத்தேன் கற்ற பெரும் புலவாணர்
அல்லல் பெரிதும் அறுப்பான் அரு மறை ஆறு அங்கம் ஓதும்
எல்லை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்
மேல்
#743
நெறியும் அறிவும் செறிவும் நீதியும் நான் மிக பொல்லேன்
மிறையும் தறியும் உகப்பன் வேண்டிற்று செய்து திரிவேன்
பிறையும் அரவும் புனலும் பிறங்கிய செம் சடை வைத்த
இறைவன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்
மேல்
#744
நீதியில் ஒன்றும் வழுவேன் நிட்கண்டகம் செய்து வாழ்வேன்
வேதியர்-தம்மை வெகுளேன் வெகுண்டவர்க்கும் துணை ஆகேன்
சோதியில் சோதி எம்மானை சுண்ண வெண் நீறு அணிந்திட்ட
ஆதி இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்
மேல்
#745
அருத்தம் பெரிதும் உகப்பேன் அலவலையேன் அலந்தார்கள்
ஒருத்தர்க்கு உதவியேன்அல்லேன் உற்றவர்க்கு துணை அல்லேன்
பொருத்தமேல் ஒன்றும் இலாதேன் புற்று எடுத்திட்டு இடம்கொண்ட
அருத்தன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்
மேல்
#746
சந்தம் பல அறுக்கில்லேன் சார்ந்தவர்-தம் அடி சாரேன்
முந்தி பொரு விடை ஏறி மூஉலகும் திரிவானே
கந்தம் கமழ் கொன்றை மாலை கண்ணியன் விண்ணவர் ஏத்தும்
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்
மேல்
#747
நெண்டிக்கொண்டேயும் கிலாய்ப்பன் நிச்சயமே இது திண்ணம்
மிண்டர்க்கு மிண்டு அலால் பேசேன் மெய்ப்பொருள் அன்றி உணரேன்
பண்டு அங்கு இலங்கையர்_கோனை பரு வரை கீழ் அடர்த்திட்ட
அண்டன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்
மேல்
#748
நமர் பிறர் என்பது அறியேன் நான் கண்டதே கண்டு வாழ்வேன்
தமரம் பெரிதும் உகப்பன் தக்க ஆறு ஒன்றும் இலாதேன்
குமரன் திருமால் பிரமன் கூடிய தேவர் வணங்கும்
அமரன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்
மேல்
#749
ஆசை பல அறுக்கில்லேன் ஆரையும் அன்றி உரைப்பேன்
பேசில் சழக்கு அலால் பேசேன் பிழைப்பு உடையேன் மனம்-தன்னால்
ஓசை பெரிதும் உகப்பேன் ஒலி கடல் நஞ்சு அமுது உண்ட
ஈசன் இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ கேளீர்
மேல்
#750
எந்தை இருப்பதும் ஆரூர் அவர் எம்மையும் ஆள்வரோ என்று
சிந்தைசெயும் திறம் வல்லான் திரு மருவும் திரள் தோளான்
மந்த முழவம் இயம்பும் வள வயல் நாவல் ஆரூரன்
சந்தம் இசையொடும் வல்லார் தாம் புகழ் எய்துவர் தாமே
மேல்
74. திருத்துருத்தி, திருவேள்விக்குடி - பண் : காந்தாரம்
#751
மின்னும் மா மேகங்கள் பொழிந்து இழிந்து அருவி வெடிபட கரையொடும் திரை கொணர்ந்து எற்றும்
அன்னம் ஆம் காவிரி அகன் கரை உறைவார் அடி இணை தொழுது எழும் அன்பர் ஆம் அடியார்
சொன்ன ஆறு அறிவார் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
என்னை நான் மறக்கும் ஆறு எம்பெருமானை என் உடம்பு அடும் பிணி இடர் கெடுத்தானை
மேல்
#752
கூடும் ஆறு உள்ளன கூடியும் கோத்தும் கொய் புன ஏனலோடு ஐவனம் சிதறி
மாடு மா கோங்கமே மருதமே பொருது மலை என குலைகளை மறிக்கும் ஆறு உந்தி
ஓடு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
பாடும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை பழவினை உள்ளன பற்று அறுத்தானை
மேல்
#753
கொல்லும் மால் யானையின் கொம்பொடு வம்பு ஆர் கொழும் கனி செழும் பயன் கொண்டு கூட்டு எய்தி
புல்கியும் தாழ்ந்தும் போந்து தவம் செய்யும் போகரும் யோகரும் புலரி-வாய் மூழ்க
செல்லும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
சொல்லும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை தொடர்ந்து அடும் கடும் பிணி தொடர்வு அறுத்தானை
மேல்
#754
பொறியும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொழிந்து இழிந்து அருவிகள் புன்புலம் கவர
கறியும் மா மிளகொடு கதலியும் உந்தி கடல் உற விளைப்பதே கருதி தன் கை போய்
எறியும் மா காவிர் துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
அறியும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அருவினை உள்ளன ஆசு அறுத்தானை
மேல்
#755
பொழிந்து இழி மும்மத களிற்றின மருப்பும் பொன் மலர் வேங்கையின் நல் மலர் உந்தி
இழிந்து இழிந்து அருவிகள் கடும் புனல் ஈண்டி எண்திசையோர்களும் ஆட வந்து இங்கே
சுழிந்து இழி காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
ஒழிந்திலேன் பிதற்றும் ஆறு எம்பெருமானை உற்ற நோய் இற்றையே உற ஒழித்தானை
மேல்
#756
புகழும் மா சந்தன துண்டமோடு அகிலும் பொன்மணி வரன்றியும் நல் மலர் உந்தி
அகழும் மா அரும் கரை வளம்பட பெருகி ஆடுவார் பாவம் தீர்த்து அஞ்சனம் அலம்பி
திகழும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
இகழும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை இழித்த நோய் இம்மையே ஒழிக்க வல்லானை
மேல்
#757
வரையின் மாங்கனியொடு வாழையின் கனியும் வருடியும் வணக்கியும் மராமரம் பொருது
கரையும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் காம் பீலி சுமந்து ஒளிர் நித்திலம் கை போய்
விரையும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
உரையும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை உலகு அறி பழவினை அற ஒழித்தானை
மேல்
#758
ஊரும் மா தேசமே மனம் உகந்து உள்ளி புள் இனம் பல படிந்து ஒண் கரை உகள
காரும் மா கரும் கடல் காண்பதே கருத்தாய் கவரி மா மயிர் சுமந்து ஒண் பளிங்கு இடறி
தேரும் மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
ஆரும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை அம்மை நோய் இம்மையே ஆசு அறுத்தானை
மேல்
#759
புலங்களை வளம்பட போக்கற பெருகி பொன்களே சுமந்து எங்கும் பூசல் செய்து ஆர்ப்ப
இலங்கும் ஆர் முத்தினோடு இன மணி இடறி இரு கரை பெரு மரம் பீழ்ந்து கொண்டு எற்றி
கலங்கு மா காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை செடியனேன் நாயேன்
விலங்கும் ஆறு அறிகிலேன் எம்பெருமானை மேலை நோய் இம்மையே வீடுவித்தானை
மேல்
#760
மங்கை ஓர்கூறு உகந்து ஏறு உகந்து ஏறி மாறலார் திரிபுரம் நீறு எழ செற்ற
அம் கையான் கழல் அடி அன்றி மற்று அறியான் அடியவர்க்கு அடியவன் தொழுவன் ஆரூரன்
கங்கை ஆர் காவிரி துருத்தியார் வேள்விக்குடி உளார் அடிகளை சேர்த்திய பாடல்
தம் கையால் தொழுது தம் நாவின் மேல் கொள்வார் தவ நெறி சென்று அமர்_உலகம் ஆள்பவரே
மேல்
75. திருவானைக்கா - பண் : காந்தாரம்
#761
மறைகள் ஆயின நான்கும் மற்று உள பொருள்களும் எல்லா
துறையும் தோத்திரத்து இறையும் தொன்மையும் நன்மையும் ஆய
அறையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
இறைவன் என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
மேல்
#762
வங்கம் மேவிய வேலை நஞ்சு எழ வஞ்சர்கள் கூடி
தங்கள் மேல் அடராமை உண் என உண்டு இருள்_கண்டன்
அங்கம் ஓதிய ஆனைக்கா உடை ஆதியை நாளும்
எங்கள் ஈசன் என்பார்கள் எம்மையும் ஆளுடையாரே
மேல்
#763
நீல வண்டு அறை கொன்றை நேர் இழை மங்கை ஒர் திங்கள்
சால வாள் அரவங்கள் தங்கிய செம் சடை எந்தை
ஆல நீழலுள் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
ஏலும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே
மேல்
#764
தந்தை தாய் உலகுக்கு ஓர் தத்துவன் மெய்த்தவத்தோர்க்கு
பந்தம் ஆயின பெருமான் பரிசு உடையவர் திரு அடிகள்
அம் தண் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
எந்தை என்று அடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
மேல்
#765
கணை செம் தீ அரவம் நாண் கல் வளையும் சிலை ஆக
துணை செய் மும்மதில் மூன்றும் சுட்டவனே உலகு உய்ய
அணையும் பூம் புனல் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
இணைகொள் சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
மேல்
#766
விண்ணின் மா மதி சூடி விலையிலி கலன் அணி விமலன்
பண்ணின் நேர் மொழி மங்கை பங்கினன் பசு உகந்து ஏறி
அண்ணல் ஆகிய ஆனைக்கா உடை ஆதியை நாளும்
எண்ணும் ஆறு வல்லார்கள் எம்மையும் ஆளுடையாரே
மேல்
#767
தாரம் ஆகிய பொன்னி தண் துறை ஆடி விழுத்தும்
நீரில் நின்று அடி போற்றி நின்மலா கொள் என ஆங்கே
ஆரம் கொண்ட எம் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
ஈரம் உள்ளவர் நாளும் எம்மையும் ஆளுடையாரே
மேல்
#768
உரவம் உள்ளது ஒர் உழையின் உரி புலி அதள் உடையானை
விரை கொள் கொன்றையினானை விரி சடை மேல் பிறையானை
அரவம் வீக்கிய ஆனைக்கா உடை ஆதியை நாளும்
இரவொடு எல்லி அம் பகலும் ஏத்துவார் எமை உடையாரே
மேல்
#769
வலம்கொள்வார் அவர்-தங்கள் வல்வினை தீர்க்கும் மருந்து
கலங்க காலனை காலால் காமனை கண் சிவப்பானை
அலங்கல் நீர் பொரும் ஆனைக்கா உடை ஆதியை நாளும்
இலங்கு சேவடி சேர்வார் எம்மையும் ஆளுடையாரே
மேல்
#770
ஆழியாற்கு அருள் ஆனைக்கா உடை ஆதி பொன் அடியின்
நீழலே சரண் ஆக நின்று அருள் கூர நினைந்து
வாழ வல்ல வன் தொண்டன் வண் தமிழ் மாலை வல்லார் போய்
ஏழு மா பிறப்பு அற்று எம்மையும் ஆளுடையாரே
மேல்
76. திருவாஞ்சியம் - பண் : பியந்தைக்காந்தாரம்
#771
பொருவனார் புரிநூலர் புணர் முலை உமையவளோடு
மருவனார் மருவார்-பால் வருவதும் இல்லை நம் அடிகள்
திருவனார் பணிந்து ஏத்தும் திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
ஒருவனார் அடியாரை ஊழ்வினை நலிய ஒட்டாரே
மேல்
#772
தொறுவில் ஆன் இள ஏறு துண்ணென இடி குரல் வெருவி
செறுவில் வாளைகள் ஓட செங்கயல் பங்கயத்து ஒதுங்க
கறுவு இலா மனத்தார்கள் காண்தகு வாஞ்சியத்து அடிகள்
மறு இலாத வெண் நீறு பூசுதல் மன்னும் ஒன்று உடைத்தே
மேல்
#773
தூர்த்தர் மூஎயில் எய்து சுடு நுனை பகழி அது ஒன்றால்
பார்த்தனார் திரள் தோள் மேல் பல் நுனை பகழிகள் பாய்ச்சி
தீர்த்தம் ஆம் மலர் பொய்கை திகழ் திரு வாஞ்சியத்து அடிகள்
சாத்து மா மணி கச்சு அங்கு ஒரு தலை பல தலை உடைத்தே
மேல்
#774
சள்ளை வெள்ளை அம் குருகு தான் அது ஆம் என கருதி
வள்ளை வெண் மலர் அஞ்சி மறுகி ஓர் வாளையின் வாயில்
துள்ளு தெள்ளும் நீர் பொய்கை துறை மல்கு வாஞ்சியத்து அடிகள்
வெள்ளை நுண் பொடி பூசும் விகிர்தம் ஒன்று ஒழிகிலர் தாமே
மேல்
#775
மை கொள் கண்டர் எண்தோளர் மலைமகள் உடன் உறை வாழ்க்கை
கொய்த கூவிள மாலை குலவிய சடை முடி குழகர்
கைதை நெய்தல் அம் கழனி கமழ் புகழ் வாஞ்சியத்து அடிகள்
பைதல் வெண் பிறையோடு பாம்பு உடன் வைப்பது பரிசே
மேல்
#776
கரந்தை கூவிள மாலை கடி மலர் கொன்றையும் சூடி
பரந்த பாரிடம் சூழ வருவர் எம் பரமர் தம் பரிசால்
திருந்து மாடங்கள் நீடு திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே
மேல்
#777
அருவி பாய்தரு கழனி அலர்தரு குவளை அம் கண்ணார்
குருவி ஆய் கிளி சேர்ப்ப குருகு இனம் இரிதரு கிடங்கின்
பரு வரால் குதிகொள்ளும் பைம் பொழில் வாஞ்சியத்து உறையும்
இருவரால் அறிய ஒண்ணா இறைவனது அறை கழல் சரணே
மேல்
#778
களங்கள் ஆர்தரு கழனி அளி தர களிதரு வண்டு
உளங்கள் ஆர்கலி பாடல் உம்பரில் ஒலித்திடும் காட்சி
குளங்கள் ஆல் நிழல் கீழ் நல் குயில் பயில் வாஞ்சியத்து அடிகள்
விளங்கு தாமரை பாதம் நினைப்பவர் வினை நலிவு இலரே
மேல்
#779
வாழை இன் கனிதானும் மது விம்மி வருக்கை இன் சுளையும்
கூழை வானரம் தம்மில் கூறு இது சிறிது என குழறி
தாழை வாழை அம் தண்டால் செரு செய்து தருக்கு வாஞ்சியத்துள்
ஏழை பாகனை அல்லால் இறை என கருதுதல் இலமே
மேல்
#780
செந்நெல் அங்கு அலம் கழனி திகழ் திரு வாஞ்சியத்து உறையும்
இன் அலங்கல் அம் சடை எம் இறைவனது அறை கழல் பரவும்
பொன் அலங்கல் நல் மாட பொழில் அணி நாவல் ஆரூரன்
பன் அலங்கல் நல் மாலை பாடு-மின் பத்தர் உளீரே
மேல்
77. திருவையாறு - பண் : காந்தாரபஞ்சமம்
#781
பரவும் பரிசு ஒன்று அறியேன் நான் பண்டே உம்மை பயிலாதேன்
இரவும் பகலும் நினைந்தாலும் எய்த நினையமாட்டேன் நான்
கரவு இல் அருவி கமுகு உண்ண தெங்கு அம் குலை கீழ் கருப்பாலை
அரவம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ
மேல்
#782
எங்கே போவேனாயிடினும் அங்கே வந்து என் மனத்தீராய்
சங்கை ஒன்றும் இன்றியே தலைநாள் கடைநாள் ஒக்கவே
கங்கை சடை மேல் கரந்தானே கலை மான் மறியும் கனல் மழுவும்
தங்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ
மேல்
#783
மருவி பிரியமாட்டேன் நான் வழி நின்று ஒழிந்தேன் ஒழிகிலேன்
பருவி விச்சி மலை சாரல் பட்டை கொண்டு பகடு ஆடி
குருவி ஓப்பி கிளி கடிவார் குழல் மேல் மாலை கொண்டு ஒட்டம்
தர அம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ
மேல்
#784
பழகாநின்று பணி செய்வார் பெற்ற பயன் ஒன்று அறிகிலேன்
இகழாது உமக்கு ஆட்பட்டோர்க்கு ஏக படம் ஒன்று அரை சாத்தி
குழகா வாழை குலை தெங்கு கொணர்ந்து கரை மேல் எறியவே
அழகு ஆர் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ
மேல்
#785
பிழைத்த பிழை ஒன்று அறியேன் நான் பிழையை தீர பணியாயே
மழை கண் நல்லார் குடைந்து ஆட மலையும் நிலனும் கொள்ளாமை
கதை கொள் பிரசம் கலந்து எங்கும் கழனி மண்டி கை ஏறி
அழைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ
மேல்
#786
கார் கொள் கொன்றை சடை மேல் ஒன்று உடையாய் விடையாய் நகையினால்
மூர்க்கர் புரம் மூன்று எரிசெய்தாய் முன் நீ பின் நீ முதல்வன் நீ
வார் கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு
ஆர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ
மேல்
#787
மலை-கண் மடவாள் ஒருபாலாய் பற்றி உலகம் பலி தேர்வாய்
சிலை கொள் கணையால் எயில் எய்த செம் கண் விடையாய் தீர்த்தன் நீ
மலை கொள் அருவி பல வாரி மணியும் முத்தும் பொன்னும் கொண்டு
அலைக்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ
மேல்
#788
போழும் மதியும் புன கொன்றை புனல் சேர் சென்னி புண்ணியா
சூழும் அரவ சுடர் சோதீ உன்னை தொழுவார் துயர் போக
வாழுமவர்கள் அங்கங்கே வைத்த சிந்தை உய்த்து ஆட்ட
ஆழும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ
மேல்
#789
கதிர் கொள் பசியே ஒத்தே நான் கண்டேன் உம்மை காணுதேன்
எதிர்த்து நீந்தமாட்டேன் நான் எம்மான் தம்மான் தம்மானே
விதிர்த்து மேகம் மழை பொழிய வெள்ளம் பரந்து நுரை சிதறி
அதிர்க்கும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ
மேல்
#790
கூசி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர்
தேச வேந்தன் திருமாலும் மலர் மேல் அயனும் காண்கிலார்
தேசம் எங்கும் தெளித்து ஆட தெண் நீர் அருவி கொணர்ந்து எங்கும்
வாசம் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ
மேல்
#791
கூடி அடியார் இருந்தாலும் குணம் ஒன்று இல்லீர் குறிப்பு இல்லீர்
ஊடி இருந்தும் உணர்கிலேன் உம்மை தொண்டன் ஊரனேன்
தேடி எங்கும் காண்கிலேன் திரு ஆரூரே சிந்திப்பன்
ஆடும் திரை காவிரி கோட்டத்து ஐயாறு உடைய அடிகளோ
மேல்
78. திருக்கேதாரம் - பண் : நட்டபாடை
#792
வாழ்வாவது மாயம் இது மண்ணாவது திண்ணம்
பாழ்போவது பிறவி கடல் பசி நோய் செய்த பறிதான்
தாழாது அறம் செய்ம்-மின் தடங்கண்ணான் மலரோனும்
கீழ் மேல் உற நின்றான் திரு கேதாரம் எனீரே
மேல்
#793
பறியே சுமந்து உழல்வீர் பறி நரி கீறுவது அறியீர்
குறி கூவிய கூற்றம் கொளும் நாளால் அறம் உளவே
அறிவானிலும் அறிவான் நல நறு நீரொடு சோறு
கிறி பேசி நின்று இடுவார் தொழு கேதாரம் எனீரே
மேல்
#794
கொம்பை பிடித்து ஒருக்கு காலர்கள் இருக்கால் மலர் தூவி
நண்பன் நமை ஆள்வான் என்று நடுநாளையும் பகலும்
கம்ப களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி
செம் பொன் பொடி சிந்தும் திரு கேதாரம் எனீரே
மேல்
#795
உழக்கே உண்டு படைத்து ஈட்டி வைத்து இழப்பார்களும் சிலர்கள்
வழக்கே எனில் பிழைக்கேம் என்பர் மதி மாந்திய மாந்தர்
சழக்கே பறி நிறைப்பாரொடு தவம்ஆவது செயன்-மின்
கிழக்கே சலம் இடுவார் தொழு கேதாரம் எனீரே
மேல்
#796
வாள் ஓடிய தடங்கண்ணியர் வலையில் அழுந்தாதே
நாள் ஓடிய நமனார் தமர் நணுகா முனம் நணுகி
ஆளாய் உய்ம்-மின் அடிகட்கு இடம் அதுவே எனில் இதுவே
கீளோடு அரவு அசைத்தான் இடம் கேதாரம் எனீரே
மேல்
#797
தளி சாலைகள் தவம் ஆவது தம்மை பெறில் அன்றே
குளீயீர் உளம் குருக்கேத்திரம் கோதாவிரி குமரி
தெளியீர் உளம் சீபர்ப்பதம் தெற்கு வடக்கு ஆக
கிளி வாழை ஒண் கனி கீறி உண் கேதாரம் எனீரே
மேல்
#798
பண்ணின் தமிழ் இசை பாடலின் பழ வேய் முழவு அதிர
கண்ணின் ஒளி கனக சுனை வயிரம் அவை சொரிய
மண் நின்றன மத வேழங்கள் மணி வாரிக்கொண்டு எறிய
கிண்ணென்று இசை முரலும் திரு கேதாரம் எனீரே
மேல்
#799
முளைக்கை பிடி முகமன் சொலி முது வேய்களை இறுத்து
துளை கை களிற்று இனமாய் நின்று சுனை நீர்களை தூவி
வளை கை பொழி மழை கூர்தர மயில் மான் பிணை நிலத்தை
கிளைக்க மணி சிந்தும் திரு கேதாரம் எனீரே
மேல்
#800
பொதியே சுமந்து உழல்வீர் பொதி அவம் ஆவதும் அறியீர்
மதி மாந்திய வழியே சென்று குழி வீழ்வதும் வினையால்
கதி சூழ் கடல் இலங்கைக்கு இறை மலங்க வரை அடர்த்து
கெதி பேறுசெய்து இருந்தான் இடம் கேதாரம் எனீரே
மேல்
#801
நாவின்மிசைஅரையனொடு தமிழ் ஞானசம்பந்தன்
யாவர் சிவன் அடியார்களுக்கு அடியான் அடித்தொண்டன்
தேவன் திரு கேதாரத்தை ஊரன் உரைசெய்த
பாவின் தமிழ் வல்லார் பரலோகத்து இருப்பாரே
மேல்
79. சீபர்ப்பதம் - பண் : நட்டபாடை
#802
மானும் மரை இனமும் மயில் இனமும் கலந்து எங்கும்
தாமே மிக மேய்ந்து தடம் சுனை நீர்களை பருகி
பூ மா மரம் உரிஞ்சி பொழிலூடே சென்று புக்கு
தே மா பொழில் நீழல் துயில் சீபர்ப்பத மலையே
மேல்
#803
மலை சாரலும் பொழில் சாரலும் புறமே வரும் இனங்கள்
மலை-பால் கொணர்ந்து இடித்து ஊட்டிட மலங்கி தம களிற்றை
அழைத்து ஓடியும் பிளிறீ அவை அலமந்து வந்து எய்த்து
திகைத்து ஓடி தன் பிடி தேடிடும் சீபர்ப்பதமலையே
மேல்
#804
மன்னி புனம் காவல் மடமொழியாள் புனம் காக்க
கன்னி கிளி வந்து கவை கோலி கதிர் கொய்ய
என்னை கிளி மதியாது என எடுத்து கவண் ஒலிப்ப
தென் நல் கிளி திரிந்து ஏறிய சீபர்ப்பதமலையே
மேல்
#805
மை ஆர் தடங்கண்ணாள் மடமொழியாள் புனம் காக்க
செவ்வே திரிந்து ஆயோ என போகாவிட விளிந்து
கை பாவிய கவணால் மணி எறிய இரிந்து ஓடி
செம் வாயன கிளி பாடிடும் சீபர்ப்பதமலையே
மேல்
#806
ஆனை குலம் இரிந்து ஓடி தன் பிடி சூழலில் திரிய
தான பிடி செவி தாழ்த்திட அதற்கு மிக இரங்கி
மான குற அடல் வேடர்கள் இலையால் கலை கோலி
தேனை பிழிந்து இனிது ஊட்டிடும் சீபர்ப்பதமலையே
மேல்
#807
மாற்று களிறு அடைந்தாய் என்று மத வேழம் கை எடுத்து
மூற்றி தழல் உமிழ்ந்தும் மதம் பொழிந்தும் முகம் சுழிய
தூற்ற தரிக்கில்லேன் என்று சொல்லி அயல் அறிய
தேற்றி சென்று பிடி சூள் அறும் சீபர்ப்பதமலையே
மேல்
#808
அப்போது வந்து உண்டீர்களுக்கு அழையாது முன் இருந்தேன்
எப்போதும் வந்து உண்டால் எமை எமர்கள் சுளியாரோ
இப்போது உமக்கு இதுவே தொழில் என்று ஓடி அ கிளியை
செப்பு ஏந்து இள முலையாள் எறி சீபர்ப்பதமலையே
மேல்
#809
திரியும் புரம் நீறு ஆக்கிய செல்வன்-தன கழலை
அரிய திருமாலோடு அயன்தானும் அவர் அறியார்
கரியின் இனமோடும் பிடி தேன் உண்டு அவை களித்து
திரிதந்தவை திகழ்வால் பொலி சீபர்ப்பதமலையே
மேல்
#810
ஏன திரள் கிளைக்க எரி போல மணி சிதற
ஏனல் அவை மலை சாரல் இற்று இரியும் கரடீயும்
மானும் மரை இனமும் மயில் மற்றும் பல எல்லாம்
தேன் உண் பொழில் சோலை மிகு சீபர்ப்பதமலையே
மேல்
#811
நல்லார் அவர் பலர் வாழ்தரு வயல் நாவல ஊரன்
செல்லல் உற அரிய சிவன் சீபர்ப்பதமலையை
அல்லல் அவை தீர சொன தமிழ் மாலைகள் வல்லார்
ஒல்லை செல உயர் வானகம் ஆண்டு அங்கு இருப்பாரே
மேல்
80. திருக்கேதீச்சரம் - பண் : நட்டபாடை
#812
நத்தார் புடை ஞானன் பசு ஏறி நனை கவுள் வாய்
மத்தம் மத யானை உரி போர்த்த மழுவாளன்
பத்து ஆகிய தொண்டர் தொழு பாலாவியின் கரை மேல்
செத்தார் எலும்பு அணிவான் திரு கேதீச்சுரத்தானே
மேல்
#813
சுடுவார் பொடி நீறும் நல துண்ட பிறை கீளும்
கடம் ஆர் களி யானை உரி அணிந்த கறை_கண்டன்
பட ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல்
திடமா உறைகின்றான் திரு கேதீச்சுரத்தானே
மேல்
#814
அங்கம் மொழி அன்னார் அவர் அமரர் தொழுது ஏத்த
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில்
பங்கம் செய்த பிறை சூடினன் பாலாவியின் கரை மேல்
செம் கண் அரவு அசைத்தான் திரு கேதீச்சுரத்தானே
மேல்
#815
கரிய கறை_கண்டன் நல கண் மேல் ஒரு கண்ணான்
வரிய சிறை வண்டு யாழ்செயும் மாதோட்ட நல் நகருள்
பரிய திரை எறியா வரு பாலாவியின் கரை மேல்
தெரியும் மறை வல்லான் திரு கேதீச்சுரத்தானே
மேல்
#816
அங்கத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி
வங்கம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில்
பங்கம் செய்த மடவாளொடு பாலாவியின் கரை மேல்
தெங்கு அம் பொழில் சூழ்ந்த திரு கேதீச்சுரத்தானே
மேல்
#817
வெய்ய வினை ஆய அடியார் மேல் ஒழித்தருளி
வையம் மலிகின்ற கடல் மாதோட்ட நல் நகரில்
பை ஏர் இடை மடவாளொடு பாலாவியின் கரை மேல்
செய்ய சடைமுடியான் திரு கேதீச்சுரத்தானே
மேல்
#818
ஊனத்து உறு நோய்கள் அடியார் மேல் ஒழித்தருளி
வால் நத்து உறு மலியும் கடல் மாதோட்ட நல் நகரில்
பால் நத்துறும் மொழியாளொடு பாலாவியின் கரை மேல்
ஏனத்து எயிறு அணிந்தான் திரு கேதீச்சுரத்தானே
மேல்
#819
அட்டன் அழகு ஆக அரை-தன் மேல் அரவு ஆர்த்து
மட்டு உண்டு வண்டு ஆலும் பொழில் மாதோட்ட நல் நகரில்
பட்ட அரி நுதலாளொடு பாலாவியின் கரை மேல்
சிட்டன் நமை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே
மேல்
#820
மூவர் என இருவர் என முக்கண் உடை மூர்த்தி
மா இன் கனி தூங்கும் பொழில் மாதோட்ட நல் நகரில்
பாவம் வினை அறுப்பார் பயில் பாலாவியின் கரை மேல்
தேவன் எனை ஆள்வான் திரு கேதீச்சுரத்தானே
மேல்
#821
கறை ஆர் கடல் சூழ்ந்த கழி மாதோட்ட நல் நகருள்
சிறை ஆர் பொழில் வண்டு யாழ்செயும் கேதீச்சுரத்தானை
மறை ஆர் புகழ் ஊரன் அடித்தொண்டன் உரைசெய்த
குறையா தமிழ் பத்தும் சொல கூடா கொடுவினையே
மேல்
81. திருக்கழுக்குன்றம் - பண் : நட்டபாடை
#822
கொன்று செய்த கொடுமையால் பல சொல்லவே
நின்ற பாவ வினைகள் தாம் பல நீங்கவே
சென்றுசென்று தொழு-மின் தேவர் பிரான் இடம்
கன்றினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே
மேல்
#823
இறங்கி சென்று தொழு-மின் இன்னிசை பாடியே
பிறங்கு கொன்றை சடையன் எங்கள் பிரான் இடம்
நிறங்கள் செய்த மணிகள் நித்திலம் கொண்டு இழி
கறங்கு வெள்ளை அருவி தண் கழுக்குன்றமே
மேல்
#824
நீள நின்று தொழு-மின் நித்தலும் நீதியால்
ஆளும் நம்ம வினைகள் அல்கி அழுந்திட
தோளும் எட்டும் உடைய மா மணி சோதியான்
காள_கண்டன் உறையும் தண் கழுக்குன்றமே
மேல்
#825
வெளிறு தீர தொழு-மின் வெண் பொடிஆடியை
முளிறு இலங்கு மழுவாளன் முந்தி உறைவிடம்
பிளிறு தீர பெரும் கை பெய் மதம் மூன்று உடை
களிறினோடு பிடி சூழ் தண் கழுக்குன்றமே
மேல்
#826
புலைகள் தீர தொழு-மின் புன் சடை புண்ணியன்
இலை கொள் சூலப்படையன் எந்தை பிரான் இடம்
முலைகள் உண்டு தழுவி குட்டியொடு முசுக்
கலைகள் பாயும் புறவின் தண் கழுக்குன்றமே
மேல்
#827
மடம் உடைய அடியார்-தம் மனத்தே உற
விடம் உடைய மிடறன் விண்ணவர் மேலவன்
படம் உடைய அரவன்தான் பயிலும் இடம்
கடம் உடைய புறவின் தண் கழுக்குன்றமே
மேல்
#828
ஊனம் இல்லா அடியார்-தம் மனத்தே உற
ஞானமூர்த்தி நட்டம் ஆடி நவிலும் இடம்
தேனும் வண்டும் மது உண்டு இன்னிசை பாடியே
கான மஞ்ஞை உறையும் தண் கழுக்குன்றமே
மேல்
#829
அந்தம் இல்லா அடியார்-தம் மனத்தே உற
வந்து நாளும் வணங்கி மாலொடு நான்முகன்
சிந்தைசெய்த மலர்கள் நித்தலும் சேரவே
கந்தம் நாறும் புறவின் தண் கழுக்குன்றமே
மேல்
#830
பிழைகள் தீர தொழு-மின் பின் சடை பிஞ்ஞகன்
குழை கொள் காதன் குழகன் தான் உறையும் இடம்
மழைகள் சால கலித்து நீடு உயர் வேய் அவை
கழை கொள் முத்தம் சொரியும் தண் கழுக்குன்றமே
மேல்
#831
பல் இல் வெள்ளைத்தலையன்தான் பயிலும் இடம்
கல்லில் வெள்ளை அருவி தண் கழுக்குன்றினை
மல்லின் மல்கு திரள் தோள் ஊரன் வனப்பினால்
சொல்லல் சொல்லி தொழுவாரை தொழு-மின்களே
மேல்
82. திருச்சுழியல் - பண் : நட்டபாடை
#832
ஊனாய் உயிர் புகலாய் அகலிடமாய் முகில் பொழியும்
வானாய் அதன் மதியாய் விதி வருவான் இடம் பொழிலின்
தேன் ஆதரித்து இசை வண்டு இனம் மிழற்றும் திரு சுழியல்
நானாவிதம் நினைவார்-தமை நலியார் நமன் தமரே
மேல்
#833
தண்டு ஏர் மழுப்படையான் மழவிடையான் எழு கடல் நஞ்சு
உண்டே புரம் எரிய சிலை வளைத்தான் இமையவர்க்கா
திண் தேர் மிசை நின்றான் அவன் உறையும் திரு சுழியல்
தொண்டே செய வல்லார் அவர் நல்லார் துயர் இலரே
மேல்
#834
கவ்வை கடல் கதறி கொணர் முத்தம் கரைக்கு ஏற்ற
கொவ்வை துவர் வாயார் குடைந்து ஆடும் திரு சுழியல்
தெய்வத்தினை வழிபாடு செய்து எழுவார் அடி தொழுவார்
அவ்வ திசைக்கு அரசு ஆகுவர் அலராள் பிரியாளே
மேல்
#835
மலையான்மகள் மட மாது இடம் ஆகத்தவன் மற்று
கொலை யானையின் உரி போர்த்த எம்பெருமான் திரு சுழியல்
அலை ஆர் சடை உடையான் அடி தொழுவார் பழுது உள்ளம்
நிலையார் திகழ் புகழால் நெடு வானத்து உயர்வாரே
மேல்
#836
உற்றான் நமக்கு உயரும் மதி சடையான் புலன் ஐந்தும்
செற்று ஆர் திரு மேனி பெருமான் ஊர் திரு சுழியல்
பெற்றான் இனிது உறைய திறம்பாமை திரு நாமம்
கற்றார் அவர் கதியுள் செல்வர் ஏத்தும் அது கடனே
மேல்
#837
மலம் தாங்கிய பாச பிறப்பு அறுப்பீர் துறை கங்கை
சலம் தாங்கிய முடியான் அமர்ந்த இடம் ஆம் திரு சுழியல்
நிலம் தாங்கிய மலரால் கொழும் புகையால் நினைந்து ஏத்தும்
தலம் தாங்கிய புகழ் ஆம் மிகு தவம் ஆம் சதுர் ஆமே
மேல்
#838
சைவத்த செ உருவன் திருநீற்றன் உரும் ஏற்றன்
கை வைத்த ஒரு சிலையால் அரண் மூன்றும் எரிசெய்தான்
தெய்வத்தவர் தொழுது ஏத்திய குழகன் திரு சுழியல்
மெய் வைத்து அடி நினைவார் வினை தீர்தல் எளிது அன்றே
மேல்
#839
பூ ஏந்திய பீடத்தவன்தானும் அடல் அரியும்
கோ ஏந்திய வினயத்தொடு குறுக புகல் அறியார்
சே ஏந்திய கொடியான் அவன் உறையும் திரு சுழியல்
மா ஏந்திய கரத்தான் எம சிரத்தான்-தனது அடியே
மேல்
#840
கொண்டாடுதல் புரியா வரு தக்கன் பெரு வேள்வி
செண்டு ஆடுதல் புரிந்தான் திரு சுழியல் பெருமானை
குண்டாடிய சமண் ஆதர்கள் குடை சாக்கியர் அறியா
மிண்டாடிய அது செய்ததுவானால் வரு விதியே
மேல்
#841
நீர் ஊர்தரு நிமலன் திருமலையார்க்கு அயல் அருகே
தேர் ஊர்தரும் அரக்கன் சிரம் நெரித்தான் திரு சுழியல்
பேர் ஊர் என உறைவான் அடிப்பெயர் நாவலர்_கோமான்
ஆரூரன தமிழ் மாலை பத்து அறிவார் துயர் இலரே
மேல்
83. திருவாரூர் - பண் : புறநீர்மை
#842
அந்தியும் நண்பகலும் அஞ்சுபதம் சொல்லி
முந்தி எழும் பழைய வல்வினை மூடா முன்
சிந்தை பராமரியா தென் திரு ஆரூர் புக்கு
எந்தை பிரானாரை என்று-கொல் எய்துவதே
மேல்
#843
நின்ற வினை கொடுமை நீங்க இருபொழுதும்
துன்று மலர் இட்டு சூழும் வலம்செய்து
தென்றல் மணம் கமழும் தென் திரு ஆரூர் புக்கு
என்தன் மனம் குளிர என்று-கொல் எய்துவதே
மேல்
#844
முன்னை முதல் பிறவி மூதறியாமையினால்
பின்னை நினைந்தனவும் பேதுறவும் ஒழிய
செந்நெல் வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு
என் உயிர்க்கு இன்னமுதை என்று-கொல் எய்துவதே
மேல்
#845
நல்ல நினைப்பு ஒழிய நாள்களில் ஆருயிரை
கொல்ல நினைப்பனவும் குற்றமும் அற்று ஒழிய
செல்வ வயல் கழனி தென் திரு ஆரூர் புக்கு
எல்லை மிதித்து அடியேன் என்று-கொல் எய்துவதே
மேல்
#846
கடு வரி மா கடலுள் காய்ந்தவன் தாதையை முன்
சுடு பொடி மெய்க்கு அணிந்த சோதியை வன் தலை வாய்
அடு புலி ஆடையனை ஆதியை ஆரூர் புக்கு
இடு பலி கொள்ளியை நான் என்று-கொல் எய்துவதே
மேல்
#847
சூழ் ஒளி நீர் நிலம் தீ தாழ் வளி ஆகாசம்
வான் உயர் வெம் கதிரோன் வண் தமிழ் வல்லவர்கள்
ஏழ்இசை ஏழ்நரம்பின் ஓசையை ஆரூர் புக்கு
ஏழ்உலகு ஆளியை நான் என்று-கொல் எய்துவதே
மேல்
#848
கொம்பு அன நுண்இடையாள் கூறனை நீறு அணிந்த
வம்பனை எ உயிர்க்கும் வைப்பினை ஒப்பு அமரா
செம்பொனை நல் மணியை தென் திரு ஆரூர் புக்கு
என் பொனை என் மணியை என்று-கொல் எய்துவதே
மேல்
#849
ஆறு அணி நீள் முடி மேல் ஆடு அரவம் சூடி
பாறு அணி வெண் தலையில் பிச்சை கொள் நச்சு அரவன்
சேறு அணி தண் கழனி தென் திரு ஆரூர் புக்கு
ஏறு அணி எம் இறையை என்று-கொல் எய்துவதே
மேல்
#850
மண்ணினை உண்டு உமிழ்ந்த மாயனும் மா மலர் மேல்
அண்ணலும் நண்ண அரிய ஆதியை மாதினொடும்
திண்ணிய மா மதில் சூழ் தென் திரு ஆரூர் புக்கு
எண்ணிய கண் குளிர என்று-கொல் எய்துவதே
மேல்
#851
மின் நெடும் செஞ்சடையான் மேவிய ஆரூரை
நல் நெடும் காதன்மையால் நாவலர்_கோன் ஊரன்
பல் நெடும் சொல் மலர் கொண்டு இட்டன பத்தும் வல்லார்
பொன் உடை விண்ணுலகம் நண்ணுவர் புண்ணியரே
மேல்
84. திருக்கானப்பேர் - பண் : புறநீர்மை
#852
தொண்டர் அடி தொழலும் சோதி இளம் பிறையும் சூது அன மென்முலையாள் பாகமும் ஆகி வரும்
புண்டரிக பரிசு ஆம் மேனியும் வானவர்கள் பூசலிட கடல் நஞ்சு உண்ட கருத்து அமரும்
கொண்டல் என திகழும் கண்டமும் எண் தோளும் கோல நறும் சடை மேல் வண்ணமும் கண்குளிர
கண்டு தொழப்பெறுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே
மேல்
#853
கூதலிடும் சடையும் கோள் அரவும் விரவும் கொக்கு இறகும் குளிர் மா மத்தமும் ஒத்து உன தாள்
ஓதல் உணர்ந்து அடியார் உன் பெருமைக்கு நினைந்து உள் உருகா விரசும் ஓசையை பாடலும் நீ
ஆதல் உணர்ந்து அவரோடு அன்பு பெருத்து அடியேன் அங்கையில் மா மலர் கொண்டு என்கணது அல்லல் கெட
காதல் உற தொழுவது என்று-கொலோ அடியேன் கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே
மேல்
#854
நான் உடை மாடு எனவே நன்மை தரும் பரனை நல் பதம் என்று உணர்வார் சொல் பதம் ஆர் சிவனை
தேனிடை இன்னமுதை பற்று அதனில் தெளிவை தேவர்கள் நாயகனை பூ உயர் சென்னியனை
வானிடை மா மதியை மாசு அறு சோதியனை மாருதமும் அனலும் மண்தலமும் ஆய
கானிடை மாநடன் என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே
மேல்
#855
செற்றவர் முப்புரம் அன்று அட்ட சிலை தொழில் ஆர் சேவகம் முன் நினைவார் பாவகமும் நெறியும்
குற்றம் இல் தன் அடியார் கூறும் இசை பரிசும் கோசிகமும் அரையில் கோவணமும் அதளும்
மல் திகழ் திண் புயமும் மார்பிடை நீறு துதை மாமலைமங்கை உமை சேர் சுவடும் புகழ
கற்றனவும் பரவி கைதொழல் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே
மேல்
#856
கொல்லை விடை குழகும் கோல நறும் சடையில் கொத்து அலரும் இதழி தொத்தும் அதன் அருகே
முல்லை படைத்த நகை மெல்லியலாள் ஒருபால் மோகம் மிகுத்து இலங்கும் கூறு செய் எப்பரிசும்
தில்லைநகர் பொது உற்று ஆடிய சீர் நடமும் திண் மழுவும் கை மிசை கூர் எரியும் அடியார்
கல்லவட பரிசும் காணுவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே
மேல்
#857
பண்ணு தலை பயன் ஆர் பாடலும் நீடுதலும் பங்கய மாது அனையார் பத்தியும் முத்தி அளித்து
எண்ணு தலை பெருமான் என்று எழுவார் அவர்-தம் ஏசறவும் இறை ஆம் எந்தையையும் விரவி
நண்ணுதலை படும் ஆறு எங்ஙனம் என்று அயலே நைகிற என்னை மதித்து உய்யும் வணம் அருளும்
கண்நுதலை கனியை காண்பதும் என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே
மேல்
#858
மாவை உரித்து அதள் கொண்டு அங்கம் அணிந்தவனை வஞ்சர் மனத்து இறையும் நெஞ்சு அணுகாதவனை
மூவர் உரு தனது ஆம் மூல முதல் கருவை மூசிடும் மால் விடையின் பாகனை ஆகம் உற
பாவகம் இன்றி மெய்யே பற்றுமவர்க்கு அமுதை பால் நறு நெய் தயிர் ஐந்து ஆடு பரம்பரனை
காவல் எனக்கு இறை என்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே
மேல்
#859
தொண்டர் தமக்கு எளிய சோதியை வேதியனை தூய மறைப்பொருள் ஆம் நீதியை வார் கடல் நஞ்சு
உண்டு அதனுக்கு இறவாது என்றும் இருந்தவனை ஊழி படைத்தவனோடு ஒள் அரியும் உணரா
அண்டனை அண்டர்-தமக்கு ஆகம நூல் மொழியும் ஆதியை மேதகு சீர் ஓதியை வானவர்-தம்
கண்டனை அன்பொடு சென்று எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே
மேல்
#860
நாதனை நாதம் மிகுத்த ஓசை அது ஆனவனை ஞான விளக்கு ஒளி ஆம் ஊன் உயிரை பயிரை
மாதனை மேதகு தன் பத்தர் மனத்து இறையும் பற்று விடாதவனை குற்றம் இல் கொள்கையனை
தூதனை என்தனை ஆள் தோழனை நாயகனை தாழ் மகர குழையும் தோடும் அணிந்த திரு
காதனை நாய் அடியேன் எய்துவது என்று-கொலோ கார் வயல் சூழ் கானப்பேர் உறை காளையையே
மேல்
#861
கன்னலை இன்னமுதை கார் வயல் சூழ் கான பேர் உறை காளையை ஒண் சீர் உறை தண் தமிழால்
உன்னி மனத்து அயரா உள் உருகி பரவும் ஒண் பொழில் நாவலர்_கோன் ஆகிய ஆரூரன்
பன்னும் இசை கிளவி பத்து இவை பாட வல்லார் பத்தர் குணத்தினராய் எத்திசையும் புகழ
மன்னி இருப்பவர்கள் வானின் இழிந்திடினும் மண்டல நாயகராய் வாழ்வது நிச்சயமே
மேல்
85. திருக்கூடலையாற்றூர் - பண் : புறநீர்மை
#862
வடிவு உடை மழு ஏந்தி மத கரி உரி போர்த்து
பொடி அணி திரு மேனி புரி குழல் உமையோடும்
கொடி அணி நெடு மாட கூடலையாற்றூரில்
அடிகள் இ வழி போந்த அதிசயம் அறியேனே
மேல்
#863
வையகம் முழுது உண்ட மாலொடு நான்முகனும்
பை அரவு இள அல்குல் பாவையொடும் உடனே
கொய் அணி மலர் சோலை கூடலையாற்றூரில்
ஐயன் இ வழி போந்த அதிசயம் அறியேனே
மேல்
#864
ஊர்-தொறும் வெண் தலை கொண்டு உண் பலி இடும் என்று
வார் தரு மென்முலையாள் மங்கையொடும் உடனே
கூர் நுனை மழு ஏந்தி கூடலையாற்றூரில்
ஆர்வன் இ வழி போந்த அதிசயம் அறியேனே
மேல்
#865
சந்து அணவும் புனலும் தாங்கிய தாழ் சடையன்
பந்து அணவும் விரலாள் பாவையொடும் உடனே
கொந்து அணவும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அந்தணன் வழி போந்த அதிசயம் அறியேனே
மேல்
#866
வேதியர் விண்ணவரும் மண்ணவரும் தொழ நல்
சோதி அது உரு ஆகி சுரி குழல் உமையோடும்
கோதிய வண்டு அறையும் கூடலையாற்றூரில்
ஆதி இ வழி போந்த அதிசயம் அறியேனே
மேல்
#867
வித்தக வீணையொடும் வெண் புரி நூல் பூண்டு
முத்து அன வெண் முறுவல் மங்கையொடும் உடனே
கொத்து அலரும் பொழில் சூழ் கூடலையாற்றூரில்
அத்தன் இ வழி போந்த அதிசயம் அறியேனே
மேல்
#868
மழை நுழை மதியமொடு வாள் அரவம் சடை மேல்
இழை நுழை துகில் அல்குல் ஏந்து_இழையாளோடும்
குழை அணி திகழ் சோலை கூடலையாற்றூரில்
அழகன் இ வழி போந்த அதிசயம் அறியேனே
மேல்
#869
மறை முதல் வானவரும் மால் அயன் இந்திரனும்
பிறை நுதல் மங்கையொடும் பேய் கணமும் சூழ
குறள் படை அதனோடும் கூடலையாற்றூரில்
அறவன் இ வழி போந்த அதிசயம் அறியேனே
மேல்
#870
வேலையின் நஞ்சு உண்டு விடை அது தான் ஏறி
பால் அன மென்மொழியாள் பாவையொடும் உடனே
கோலம் அது உரு ஆகி கூடலையாற்றூரில்
ஆலன் இ வழி போந்த அதிசயம் அறியேனே
மேல்
#871
கூடலையாற்றூரில் கொடிஇடையவளோடும்
ஆடல் உகந்தானை அதிசயம் இது என்று
நாடிய இன் தமிழால் நாவல ஊரன் சொல்
பாடல்கள் பத்தும் வல்லார்-தம் வினை பற்று அறுமே
மேல்
86. திருவன்பார்த்தான் பனங்காட்டூர் - பண் : சீகாமரம்
#872
விடையின் மேல் வருவானை வேதத்தின் பொருளானை
அடையில் அன்பு உடையானை யாவர்க்கும் அறிய ஒண்ணா
மடையில் வாளைகள் பாயும் வன்பார்த்தான் பனங்காட்டூர்
சடையில் கங்கை தரித்தானை சாராதார் சார்பு என்னே
மேல்
#873
அறையும் பைம் கழல் ஆர்ப்ப அரவு ஆட அனல் ஏந்தி
பிறையும் கங்கையும் சூடி பெயர்ந்து ஆடும் பெருமானார்
பறையும் சங்கு ஒலி ஓவா படிறன் தன் பனங்காட்டூர்
உறையும் எங்கள் பிரானை உணராதார் உணர்வு என்னே
மேல்
#874
தண் ஆர் மா மதி சூடி தழல் போலும் திரு மேனிக்கு
எண் ஆர் நாள் மலர் கொண்டு அங்கு இசைந்து ஏத்தும் அடியார்கள்
பண் ஆர் பாடல் அறாத படிறன் தன் பனங்காட்டூர்
பெண் ஆண் ஆய பிரானை பேசாதார் பேச்சு என்னே
மேல்
#875
நெற்றிக்கண் உடையானை நீறு ஏறும் திரு மேனி
குற்றம் இல் குணத்தானை கோணாதார் மனத்தானை
பற்றி பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்
பெற்றொன்று ஏறும் பிரானை பேசாதார் பேச்சு என்னே
மேல்
#876
உரம் என்னும் பொருளானை உருகில் உள் உறைவானை
சிரம் என்னும் கலனானை செங்கண்மால் விடையானை
வரம் முன்னம் அருள்செய்வான் வன்பார்த்தான் பனங்காட்டூர்
பரமன் எங்கள் பிரானை பரவாதார் பரவு என்னே
மேல்
#877
எயிலார் பொக்கம் எரித்த எண் தோள் முக்கண் இறைவன்
வெயிலாய் காற்று என வீசி மின்னாய் தீ என நின்றான்
மயில் ஆர் சோலைகள் சூழ்ந்த வன்பார்த்தான் பனங்காட்டூர்
பயில்வானுக்கு அடிமை-கண் பயிலாதார் பயில்வு என்னே
மேல்
#878
மெய்யன் வெண் பொடி பூசும் விகிர்தன் வேதமுதல்வன்
கையில் மான் மழு ஏந்தி காலன் காலம் அறுத்தான்
பை கொள் பாம்பு அரை ஆர்த்த படிறன் தன் பனங்காட்டூர்
ஐயன் எங்கள் பிரானை அறியாதார் அறிவு என்னே
மேல்
#879
வஞ்சம் அற்ற மனத்தாரை மறவாத பிறப்பிலியை
பஞ்சி சீறடியாளை பாகம் வைத்து உகந்தானை
மஞ்சு உற்ற மணி மாட வன்பார்த்தான் பனங்காட்டூர்
நெஞ்சத்து எங்கள் பிரானை நினையாதார் நினைவு என்னே
மேல்
#880
மழையானும் திகழ்கின்ற மலரோன் என்று இருவர்தாம்
உழையா நின்றவர் உள்க உயர் வானத்து உயர்வானை
பழையானை பனங்காட்டூர் பதி ஆக திகழ்கின்ற
குழை காதற்கு அடிமை-கண் குழையாதார் குழைவு என்னே
மேல்
#881
பார் ஊரும் பனங்காட்டூர் பவளத்தின் படியானை
சீர் ஊரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் அடித்தொண்டன் அடியன் சொல் அடி நாய் சொல்
ஊர்ஊரன் உரைசெய்வார் உயர் வானத்து உயர்வாரே
மேல்
87. திருப்பனையூர் - பண் : சீகாமரம்
#882
மாட மாளிகை கோபுரத்தொடு மண்டபம் வளரும் வளர் பொழில்
பாடல் வண்டு அறையும் பழன திரு பனையூர்
தோடு பெய்து ஒரு காதினில் குழை தூங்க தொண்டர்கள் துள்ளி பாட நின்று
ஆடும் ஆறு வல்லார் அவரே அழகியரே
மேல்
#883
நாறு செங்கழுநீர் மலர் நல்ல மல்லிகை சண்பகத்தொடு
சேறு செய் கழனி பழன திரு பனையூர்
நீறு பூசி நெய் ஆடி தம்மை நினைப்பவர்-தம் மனத்தர் ஆகி நின்று
ஆறு சூட வல்லார் அவரே அழகியரே
மேல்
#884
செம் கண் மேதிகள் சேடு எறிந்து தடம் படிதலின் சேல் இனத்தொடு
பைம் கண் வாளைகள் பாய் பழன திரு பனையூர்
திங்கள் சூடிய செல்வனார் அடியார்-தம் மேல் வினை தீர்ப்பராய்விடில்
அங்கு இருந்து உறைவார் அவரே அழகியரே
மேல்
#885
வாளை பாய மலங்கு இளம் கயல் வரி வரால் உகளும் கழனியுள்
பாளை ஒண் கமுகம் புடை சூழ் திரு பனையூர்
தோளும் ஆகமும் தோன்ற நட்டம் இட்டு ஆடுவார் அடித்தொண்டர்-தங்களை
ஆளும் ஆறு வல்லார் அவரே அழகியரே
மேல்
#886
கொங்கையார் பலரும் குடைந்து ஆட நீர் குவளை மலர்தர
பங்கயம் மலரும் பழன திரு பனையூர்
மங்கை பாகமும் மால் ஒர்பாகமும் தாம் உடையவர் மான் மழுவினொடு
அங்கை தீ உகப்பார் அவரே அழகியரே
மேல்
#887
காவிரி புடை சூழ் சோணாட்டவர்தாம் பரவிய கருணை அம் கடல் அ
பா விரி புலவர் பயிலும் திரு பனையூர்
மா விரி மடநோக்கி அஞ்ச மத கரி உரி போர்த்து உகந்தவர்
ஆவில் ஐந்து உகப்பார் அவரே அழகியரே
மேல்
#888
மரங்கள் மேல் மயில் ஆல மண்டபம் மாட மாளிகை கோபுரத்தின் மேல்
திரங்கல் வன்முகவன் புக பாய் திரு பனையூர்
துரங்க வாய் பிளந்தானும் தூ மலர் தோன்றலும் அறியாமல் தோன்றி நின்று
அரங்கில் ஆட வல்வார் அவரே அழகியரே
மேல்
#889
மண் எலாம் முழவம் அதிர்தர மாட மாளிகை கோபுரத்தின் மேல்
பண் யாழ் முரலும் பழன திரு பனையூர்
வெண் நிலா சடை மேவிய விண்ணவரொடு மண்ணவர் தொழ
அண்ணல் ஆகி நின்றார் அவரே அழகியரே
மேல்
#890
குரங்கு இனம் குதிகொள்ள தேன் உக குண்டு தண் வயல் கெண்டை பாய்தர
பரக்கும் தண் கழனி பழன திரு பனையூர்
இரக்கம் இல்லவர் ஐந்தொடுஐம் தலை தோள் இருபது தாள் நெரிதர
அரக்கனை அடர்த்தார் அவரே அழகியரே
மேல்
#891
வஞ்சி நுண் இடை மங்கை பங்கினர் மா தவர் வளரும் வளர் பொழில்
பஞ்சின் மெல்லடியார் பயிலும் திரு பனையூர்
வஞ்சியும் வளர் நாவலூரன் வனப்பகை அவள் அப்பன் வன் தொண்டன்
செம் சொல் கேட்டு உகப்பார் அவரே அழகியரே
மேல்
88. திருவீழிமிழலை - பண் : சீகாமரம்
#892
நம்பினார்க்கு அருள்செய்யும் அந்தணர் நான்மறைக்கு இடம் ஆய வேள்வியுள்
செம்பொன் ஏர் மடவார் அணி பெற்ற திரு மிழலை
உம்பரார் தொழுது ஏத்த மா மலையாளொடும் உடனே உறைவிடம்
அம் பொன் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
மேல்
#893
விடம் கொள் மா மிடற்றீர் வெள்ளை சுருள் ஒன்று இட்டு விட்ட காதினீர் என்று
திடம் கொள் சிந்தையினார் கலி காக்கும் திரு மிழலை
மடங்கல் பூண்ட விமானம் மண் மிசை வந்து இழிச்சிய வான நாட்டையும்
அடங்கல் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
மேல்
#894
ஊனை உற்று உயிர் ஆயினீர் ஒளி மூன்றுமாய் தெளி நீரொடு ஆன் அஞ்சின்
தேனை ஆட்டு உகந்தீர் செழு மாட திரு மிழலை
மானை மேவிய கையினீர் மழு ஏந்தினீர் மங்கை பாகத்தீர் விண்ணில்
ஆன வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
மேல்
#895
பந்தம் வீடு இவை பண்ணினீர் படிறீர் மதி பிதிர் கண்ணியீர் என்று
சிந்தைசெய்து இருக்கும் செங்கையாளர் திரு மிழலை
வந்து நாடகம் வான நாடியர் ஆட மால் அயன் ஏத்த நாள்-தொறும்
அம் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
மேல்
#896
புரிசை மூன்றையும் பொன்ற குன்ற வில் ஏந்தி வேத புரவி தேர் மிசை
திரிசெய் நான்மறையோர் சிறந்து ஏத்தும் திரு மிழலை
பரிசினால் அடி போற்றும் பத்தர்கள் பாடி ஆட பரிந்து நல்கினீர்
அரிய வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
மேல்
#897
எறிந்த சண்டி இடந்த கண்ணப்பன் ஏத்து பத்தர்கட்கு ஏற்றம் நல்கினீர்
செறிந்த பூம் பொழில் தேன் துளி வீசும் திரு மிழலை
நிறைந்த அந்தணர் நித்தம் நாள்-தொறும் நேசத்தால் உமை பூசிக்கும் இடம்
அறிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
மேல்
#898
பணிந்த பார்த்தன் பகீரதன் பல பத்தர் சித்தர்க்கு பண்டு நல்கினீர்
திணிந்த மாடம்-தொறும் செல்வம் மல்கு திரு மிழலை
தணிந்த அந்தணர் சந்தி நாள்-தொறும் அந்தி வான் இடு பூச்சிறப்பு அவை
அணிந்து வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
மேல்
#899
பரந்த பாரிடம் ஊரிடை பலி பற்றி பாத்து உணும் சுற்றம் ஆயினீர்
தெரிந்த நான்மறையோர்க்கு இடம் ஆய திரு மிழலை
இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசு நித்தம் நல்கினீர்
அரும் தண் வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
மேல்
#900
தூய நீர் அமுது ஆய ஆறு அது சொல்லுக என்று உமை கேட்க சொல்லினீர்
தீயர் ஆக்கு உலையாளர் செழு மாட திரு மிழலை
மேய நீர் பலி ஏற்றது என் என்று விண்ணப்பம் செய்பவர்க்கு மெய்ப்பொருள்
ஆய வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுதிரே
மேல்
#901
வேத வேதியர் வேத நீதியர் ஓதுவார் விரி நீர் மிழலையுள்
ஆதி வீழி கொண்டீர் அடியேற்கும் அருளுக என்று
நாத கீதம் வண்டு ஓது வார் பொழில் நாவலூரன் வன் தொண்டன் நல் தமிழ்
பாதம் ஓத வல்லார் பரனோடு கூடுவரே
மேல்
89. திருவெண்பாக்கம் - பண் : சீகாமரம்
#902
பிழை உளன பொறுத்திடுவர் என்று அடியேன் பிழைத்த-கால்
பழி அதனை பாரேதே படலம் என் கண் மறைப்பித்தாய்
குழை விரவு வடி காதா கோயில் உளாயே என்ன
உழை உடையான் உள் இருந்து உளோம் போகீர் என்றானே
மேல்
#903
இடை அறியேன் தலை அறியேன் எம்பெருமான் சரணம் என்பேன்
நடை உடையன் நம் அடியான் என்று அவற்றை பாராதே
விடை உடையான் விட நாகன் வெண்நீற்றன் புலியின் தோல்
உடை உடையான் எனை உடையான் உளோம் போகீர் என்றானே
மேல்
#904
செய் வினை ஒன்று அறியாதேன் திருவடியே சரண் என்று
பொய் அடியேன் பிழைத்திடினும் பொறுத்திட நீ வேண்டாவோ
பை அரவா இங்கு இருந்தாயோ என்ன பரிந்து என்னை
உய்ய அருள்செய்ய வல்லான் உளோம் போகீர் என்றானே
மேல்
#905
கம்பு அமரும் கரி உரியன் கறை_மிடற்றன் காபாலி
செம்பவள திரு உருவன் சே_இழையோடு உடன் ஆகி
நம்பி இங்கே இருந்தீரே என்று நான் கேட்டலுமே
உம்பர் தனி துணை எனக்கு உளோம் போகீர் என்றானே
மேல்
#906
பொன் இலங்கு நறும் கொன்றை புரி சடை மேல் பொலிந்து இலங்க
மின் இலங்கு நுண்இடையாள் பாகமா எருது ஏறி
துன்னி இருபால் அடியார் தொழுது ஏத்த அடியேனும்
உன்னதமாய் கேட்டலுமே உளோம் போகீர் என்றானே
மேல்
#907
கண்நுதலான் காமனையும் காய்ந்த திறல் கங்கை மலர்
தெண் நிலவு செம் சடை மேல் தீ மலர்ந்த கொன்றையினான்
கண்மணியை மறைப்பித்தாய் இங்கு இருந்தாயோ என்ன
ஒண் நுதலி பெருமானார் உளோம் போகீர் என்றானே
மேல்
#908
பார் நிலவு மறையோரும் பத்தர்களும் பணி செய்ய
தார் நிலவு நறும் கொன்றை சடையனார் தாங்க அரிய
கார் நிலவு மணி_மிடற்றீர் இங்கு இருந்தீரே என்ன
ஊர் அரவம் அரைக்கு அசைத்தான் உளோம் போகீர் என்றானே
மேல்
#909
வார் இடம் கொள் வனமுலையாள்-தன்னோடு மயானத்து
பாரிடங்கள் பல சூழ பயின்று ஆடும் பரமேட்டி
கார் இடம்கொள் கண்டத்தன் கருதும் இடம் திரு ஒற்றி
யூர் இடம்கொண்டு இருந்த பிரான் உளோம் போகீர் என்றானே
மேல்
#910
பொன் நவிலும் கொன்றையினாய் போய் மகிழ் கீழ் இரு என்று
சொன்ன எனை காணாமே சூளுறவு மகிழ் கீழே
என்ன வல்ல பெருமானே இங்கு இருந்தாயோ என்ன
ஒன்னலரை கண்டால் போல் உளோம் போகீர் என்றானே
மேல்
#911
மான் திகழும் சங்கிலியை தந்து வரு பயன்கள் எல்லாம்
தோன்ற அருள்செய்து அளித்தாய் என்று உரைக்க உலகம் எலாம்
ஈன்றவனே வெண் கோயில் இங்கு இருந்தாயோ என்ன
ஊன்றுவது ஓர் கோல் அருளி உளோம் போகீர் என்றானே
மேல்
#912
ஏர் ஆரும் பொழில் நிலவு வெண்பாக்கம் இடம்கொண்ட
கார் ஆரும் மிடற்றானை காதலித்திட்டு அன்பினொடும்
சீர் ஆரும் திரு ஆரூர் சிவன் பேர் சென்னியில் வைத்த
ஆரூரன் தமிழ் வல்லார்க்கு அடையா வல்வினைதானே
மேல்
90. கோயில் - பண் : குறிஞ்சி
#913
மடித்து ஆடும் அடிமை-கண் அன்றியே மனனே நீ வாழும் நாளும்
தடுத்தாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
கடுத்து ஆடு கரதலத்தில் தமருகமும் எரி அகலும் கரிய பாம்பும்
பிடித்து ஆடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றோம் அன்றே
மேல்
#914
பேராது காமத்தில் சென்றார் போல் அன்றியே பிரியாது உள்கி
சீர் ஆர்ந்த அன்பராய் சென்று முன் அடி வீழும் திருவினாரை
ஓராது தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பேராளர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே
மேல்
#915
நரியார்-தம் கள்ளத்தால் பக்கு ஆன பரிசு ஒழிந்து நாளும் உள்கி
பிரியாத அன்பராய் சென்று முன் அடி வீழும் சிந்தையாரை
தரியாது தருமனார்-தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பெரியோர்கள் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே
மேல்
#916
கருமை ஆர் தருமனார் தமர் நம்மை கட்டிய கட்டு அறுப்பிப்பானை
அருமை ஆம் தன் உலகம் தருவானை மண்ணுலகம் காவல் பூண்ட
உரிமையால் பல்லவர்க்கு திறை கொடா மன்னவரை மறுக்கம் செய்யும்
பெருமை ஆர் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே
மேல்
#917
கரு மானின் உரி ஆடை செம் சடை மேல் வெண் மதிய கண்ணியானை
உரும் அன்ன கூற்றத்தை உருண்டு ஓட உதைத்து உகந்து உலவா இன்பம்
தருவானை தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பெருமனார் புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே
மேல்
#918
உய்த்து ஆடி திரியாதே உள்ளமே ஒழி கண்டாய் ஊன் கண்ணோட்டம்
எத்தாலும் குறைவு இல்லை என்பர் காண் நெஞ்சமே நம்மை நாளும்
பைத்து ஆடும் அரவினன் படர் சடையன் பரஞ்சோதி பாவம் தீர்க்கும்
பித்தாடி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே
மேல்
#919
முட்டாத முச்சந்தி மூஆயிரவர்க்கும் மூர்த்தி என்ன
பட்டானை பத்தராய் பாவிப்பார் பாவமும் வினையும் போக
விட்டானை மலை எடுத்த இராவணனை தலை பத்தும் நெரிய காலால்
தொட்டானை புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே
மேல்
#920
கல் தானும் குழையும் ஆறு அன்றியே கருதுமா கருதகிற்றார்க்கு
எற்றாலும் குறைவு இல்லை என்பர் காண் உள்ளமே நம்மை நாளும்
செற்றாட்டி தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
பெற்றேறி புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே
மேல்
#921
நாடு உடைய நாதன்-பால் நன்று என்றும் செய் மனமே நம்மை நாளும்
தாடு உடைய தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
மோடு உடைய சமணர்க்கும் முடை உடைய சாக்கியர்க்கும் மூடம் வைத்த
பீடு உடைய புலியூர் சிற்றம்பலத்து எம்பெருமானை பெற்றாம் அன்றே
மேல்
#922
பார் ஊரும் அரவு அல்குல் உமை நங்கை அவள் பங்கன் பைம் கண் ஏற்றன்
ஊர்ஊரன் தருமனார் தமர் செக்கில் இடும்போது தடுத்து ஆட்கொள்வான்
ஆரூரன் தம்பிரான் ஆரூரன் மீ கொங்கில் அணி காஞ்சிவாய்
பேரூரர் பெருமானை புலியூர் சிற்றம்பலத்தே பெற்றாம் அன்றே
மேல்
91. திருவொற்றியூர் - பண் : குறிஞ்சி
#923
பாட்டும் பாடி பரவி திரிவார்
ஈட்டும் வினைகள் தீர்ப்பார் கோயில்
காட்டும் கலமும் திமிலும் கரைக்கே
ஓட்டும் திரை வாய் ஒற்றியூரே
மேல்
#924
பந்தும் கிளியும் பயிலும் பாவை
சிந்தை கவர்வார் செம் தீ_வண்ணர்
எம்தம் அடிகள் இறைவர்க்கு இடம் போல்
உந்தும் திரை வாய் ஒற்றியூரே
மேல்
#925
பவள கனி வாய் பாவை_பங்கன்
கவள களிற்றின் உரிவை போர்த்தான்
தவழும் மதி வேர் சடையாற்கு இடம் போல்
உகளும் திரை வாய் ஒற்றியூரே
மேல்
#926
என்னது எழிலும் நிறையும் கவர்வான்
புன்னை மலரும் புறவில் திகழும்
தன்னை முன்னம் நினைக்க தருவான்
உன்னப்படுவான் ஒற்றியூரே
மேல்
#927
பணம் கொள் அரவம் பற்றி பரமன்
கணங்கள் சூழ கபாலம் ஏந்தி
வணங்கும் இடை மென்மடவார் இட்ட
உணங்கல் கவர்வான் ஒற்றியூரே
மேல்
#928
படை ஆர் மழுவன் பால் வெண்நீற்றன்
விடை ஆர் கொடியன் வேத நாவன்
அடைவார் வினைகள் அறுப்பான் என்னை
உடையான் உறையும் ஒற்றியூரே
மேல்
#929
சென்ற புரங்கள் தீயில் வேவ
வென்ற விகிர்தன் வினையை வீட்ட
நன்றும் நல்ல நாதன் நரை ஏறு
ஒன்றை உடையான் ஒற்றியூரே
மேல்
#930
கலவ மயில் போல் வளை கை நல்லார்
பலரும் பரவும் பவள படியான்
உலகின் உள்ளார் வினைகள் தீர்ப்பான்
உலவும் திரை வாய் ஒற்றியூரே
மேல்
#931
பற்றி வரையை எடுத்த அரக்கன்
இற்று முரிய விரலால் அடர்த்தார்
எற்றும் வினைகள் தீர்ப்பார் ஓதம்
ஒற்றும் திரை வாய் ஒற்றியூரே
மேல்
#932
ஒற்றி ஊரும் அரவும் பிறையும்
பற்றி ஊரும் பவள சடையான்
ஒற்றியூர் மேல் ஊரன் உரைத்த
கற்று பாட கழியும் வினையே
மேல்
92. திருப்புக்கொளியூர் அவிநாசி - பண் : குறிஞ்சி
#933
எற்றால் மறக்கேன் எழுமைக்கும் எம்பெருமானையே
உற்றாய் என்று உன்னையே உள்குகின்றேன் உணர்ந்து உள்ளத்தால்
புற்று ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
பற்று ஆக வாழ்வேன் பசுபதியே பரமேட்டியே
மேல்
#934
வழிப்போவார்-தம்மோடும் வந்து உடன்கூடிய மாணி நீ
ஒழிவது அழகோ சொல்லாய் அருள் ஓங்கு சடையானே
பொழில் ஆரும் சோலை புக்கொளியூரில் குளத்திடை
இழியா குளித்த மாணி என்னை கிறி செய்ததே
மேல்
#935
எங்கேனும் போகினும் எம்பெருமானை நினைந்த-கால்
கொங்கே புகினும் கூறை கொண்டு ஆறு அலைப்பார் இலை
பொங்கு ஆடு அரவா புக்கொளியூர் அவிநாசியே
எம் கோனே உனை வேண்டிக்கொள்வேன் பிறவாமையே
மேல்
#936
உரைப்பார் உரை உகந்து உள்க வல்லார்-தங்கள் உச்சியாய்
அரைக்கு ஆடு அரவா ஆதியும் அந்தமும் ஆயினாய்
புரை காடு சோலை புக்கொளியூர் அவிநாசியே
கரை-கால் முதலையை பிள்ளை தர சொல்லு காலனையே
மேல்
#937
அரங்கு ஆவது எல்லாம் மாய் இடுகாடு அது அன்றியும்
சரம் கோலை வாங்கி வரி சிலை நாணியில் சந்தித்து
புரம் கோட எய்தாய் புக்கொளியூர் அவிநாசியே
குரங்கு ஆடு சோலை கோயில்கொண்ட குழை காதனே
மேல்
#938
நாத்தானும் உனை பாடல் அன்றி நவிலாது எனா
சோத்து என்று தேவர் தொழ நின்ற சுந்தர சோதியாய்
பூ தாழ் சடையாய் புக்கொளியூர் அவிநாசியே
கூத்தா உனக்கு நான் ஆட்பட்ட குற்றமும் குற்றமே
மேல்
#939
மந்தி கடுவனுக்கு உண் பழம் நாடி மலைப்புறம்
சந்திகள்-தோறும் சல புட்பம் இட்டு வழிபட
புந்தி உறைவாய் புக்கொளியூர் அவிநாசியே
நந்தி உனை வேண்டி கொள்வேன் நரகம் புகாமையே
மேல்
#940
பேணாது ஒழிந்தேன் உன்னை அலால் பிற தேவரை
காணாது ஒழிந்தேன் காட்டுதியேல் இன்னம் காண்பன் நான்
பூண் நாண் அரவா புக்கொளியூர் அவிநாசியே
காணாத கண்கள் காட்ட வல்ல கறை_கண்டனே
மேல்
#941
நள்ளாறு தெள்ளாறு அரத்துறை-வாய் எங்கள் நம்பனே
வெள்ளாடை வேண்டாய் வேங்கையின் தோலை விரும்பினாய்
புள் ஏறு சோலை புக்கொளியூரில் குளத்திடை
உள் ஆட புக்க மாணி என்னை கிறி செய்ததே
மேல்
#942
நீர் ஏற ஏறும் நிமிர் புன் சடை நின்மல மூர்த்தியை
போர் ஏறு அது ஏறியை புக்கொளியூர் அவிநாசியை
கார் ஏறு கண்டனை தொண்டன் ஆரூரன் கருதிய
சீர் ஏறு பாடல்கள் செப்ப வல்லார்க்கு இல்லை துன்பமே
மேல்
93. திருநறையூர் சித்தீச்சரம் - பண் : குறிஞ்சி
#943
நீரும் மலரும் நிலவும் சடை மேல்
ஊரும் அரவம் உடையான் இடம் ஆம்
வாரும் அருவி மணி பொன் கொழித்து
சேரும் நறையூர் சித்தீச்சரமே
மேல்
#944
அளை பை அரவு ஏர் இடையாள் அஞ்ச
துளை கை கரி தோல் உரித்தான் இடம் ஆம்
வளை கை மடவார் மடுவில் தட நீர்
திளைக்கும் நறையூர் சித்தீச்சரமே
மேல்
#945
இகழும் தகையோர் எயில் மூன்று எரித்த
பகழியொடு வில் உடையோன் பதிதான்
முகிழ் மென்முலையார் முகமே கமலம்
திகழும் நறையூர் சித்தீச்சரமே
மேல்
#946
மற கொள் அரக்கன் வரை தோள் வரையால்
இற கொள் விரல் கோன் இருக்கும் இடம் ஆம்
நற கொள் கமலம் நனி பள்ளி எழ
திறக்கும் நறையூர் சித்தீச்சரமே
மேல்
#947
முழு நீறு அணி மேனியன் மொய் குழலார்
எழு நீர்மை கொள்வான் அமரும் இடம் ஆம்
கழுநீர் கமழ கயல் சேல் உகளும்
செழு நீர் நறையூர் சித்தீச்சரமே
மேல்
#948
ஊன் ஆர் உடை வெண் தலை உண் பலி கொண்டு
ஆன் ஆர் அடல் ஏறு அமர்வான் இடம் ஆம்
வான் ஆர் மதியம் பதி வண் பொழில்-வாய்
தேன் ஆர் நறையூர் சித்தீச்சரமே
மேல்
#949
கார் ஊர் கடலில் விடம் உண்டு அருள்செய்
நீர் ஊர் சடையன் நிலவும் இடம் ஆம்
வார் ஊர் முலையார் மருவும் மறுகில்
தேர் ஊர் நறையூர் சித்தீச்சரமே
மேல்
#950
கரியின் உரியும் கலைமான் மறியும்
எரியும் மழுவும் உடையான் இடம் ஆம்
புரியும் மறையோர் நிறை சொல் பொருள்கள்
தெரியும் நறையூர் சித்தீச்சரமே
மேல்
#951
பேணா முனிவன் பெரு வேள்வி எலாம்
மாணாமை செய்தான் மருவும் இடம் ஆம்
பாண் ஆர் குழலும் முழவும் விழவில்
சேண் ஆர் நறையூர் சித்தீச்சரமே
மேல்
#952
குறியில் வழுவா கொடும் கூற்று உதைத்த
எறியும் மழுவாள் படையான் இடம் ஆம்
நெறியில் வழுவா நியமத்தவர்கள்
செறியும் நறையூர் சித்தீச்சரமே
மேல்
#953
போர் ஆர் புரம் எய் புனிதன் அமரும்
சீர் ஆர் நறையூர் சித்தீச்சரத்தை
ஆரூரன் சொல் இவை வல்லவர்கள்
ஏர் ஆர் இமையோர் உலகு எய்துவரே
மேல்
94. திருச்சோற்றுத்துறை - பண் : கௌசிகம்
#954
அழல் நீர் ஒழுகி அனைய சடையும்
உழை ஈர் உரியும் உடையான் இடம் ஆம்
கழை நீர் முத்தும் கனக குவையும்
சுழல் நீர் பொன்னி சோற்றுத்துறையே
மேல்
#955
பண்டை வினைகள் பறிய நின்ற
அண்ட முதல்வன் அமலன் இடம் ஆம்
இண்டை கொண்டு அன்பு இடையறாத
தொண்டர் பரவும் சோற்றுத்துறையே
மேல்
#956
கோல அரவும் கொக்கின் இறகும்
மாலை மதியும் வைத்தான் இடம் ஆம்
ஆலும் மயிலும் ஆடல் அளியும்
சோலை தரு நீர் சோற்றுத்துறையே
மேல்
#957
பளிக்கு தாரை பவள வெற்பில்
குளிக்கும் போல் நூல் கோமாற்கு இடம் ஆம்
அளிக்கும் ஆர்த்தி அல்லால் மதுவம்
துளிக்கும் சோலை சோற்றுத்துறையே
மேல்
#958
உதையும் கூற்றுக்கு ஒல்கா விதிக்கு
வதையும் செய்த மைந்தன் இடம் ஆம்
திதையும் தாதும் தேனும் ஞிமிறும்
துதையும் பொன்னி சோற்றுத்துறையே
மேல்
#959
ஓத கடல் நஞ்சினை உண்டிட்ட
பேதை பெருமான் பேணும் பதி ஆம்
சீத புனல் உண்டு எரியை காலும்
சூத பொழில் சூழ் சோற்றுத்துறையே
மேல்
#960
இறந்தார் என்பும் எருக்கும் சூடி
புறங்காட்டு ஆடும் புனிதன் கோயில்
சிறந்தார் சுற்றம் திரு என்று இன்ன
துறந்தார் சேரும் சோற்றுத்துறையே
மேல்
#961
காமன் பொடியா கண் ஒன்று இமைத்த
ஓம கடலார் உகந்த இடம் ஆம்
தே மென்குழலார் சேக்கை புகைத்த
தூமம் விசும்பு ஆர் சோற்றுத்துறையே
மேல்
#962
இலையால் அன்பால் ஏத்துமவர்க்கு
நிலையா வாழ்வை நீத்தார் இடம் ஆம்
தலையால் தாழும் தவத்தோர்க்கு என்றும்
தொலையா செல்வ சோற்றுத்துறையே
மேல்
#963
சுற்று ஆர்தரு நீர் சோற்றுத்துறையுள்
முற்றா மதி சேர் முதல்வன் பாதத்து
அற்றார் அடியார் அடி நாய் ஊரன்
சொல் தான் இவை கற்றார் துன்பு இலரே
மேல்
95. திருவாரூர் - பண் : செந்துருத்தி
#964
மீளா அடிமை உமக்கே ஆளாய் பிறரை வேண்டாதே
மூளா தீ போல் உள்ளே கனன்று முகத்தால் மிக வாடி
ஆளாய் இருக்கும் அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால்
வாளா ஆங்கு இருப்பீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே
மேல்
#965
விற்று கொள்வீர் ஒற்றி அல்லேன் விரும்பி ஆட்பட்டேன்
குற்றம் ஒன்றும் செய்தது இல்லை கொத்தை ஆக்கினீர்
எற்றுக்கு அடிகேள் என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
மற்றை கண்தான் தாராது ஒழிந்தால் வாழ்ந்துபோதீரே
மேல்
#966
அன்றில் முட்டாது அடையும் சோலை ஆரூர் அகத்தீரே
கன்று முட்டி உண்ண சுரந்த காலி அவை போல
என்றும் முட்டா பாடும் அடியார் தம் கண் காணாது
குன்றில் முட்டி குழியில் விழுந்தால் வாழ்ந்துபோதீரே
மேல்
#967
துருத்தி உறைவீர் பழனம் பதியா சோற்றுத்துறை ஆள்வீர்
இருக்கை திரு ஆரூரே உடையீர் மனமே என வேண்டா
அருத்தி உடைய அடியார் தங்கள் அல்லல் சொன்ன-கால்
வருத்தி வைத்து மறுமை பணித்தால் வாழ்ந்துபோதீரே
மேல்
#968
செம் தண் பவளம் திகழும் சோலை இதுவோ திரு ஆரூர்
எம்தம் அடிகேள் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு
சந்தம் பலவும் பாடும் அடியார் தம் கண் காணாது
வந்து எம்பெருமான் முறையோ என்றால் வாழ்ந்துபோதீரே
மேல்
#969
நினைத்தாள் அன்ன செம் கால் நாரை சேரும் திரு ஆரூர்
புனை தார் கொன்றை பொன் போல் மாலை புரி புன் சடையீரே
தனத்தால் இன்றி தாம்தாம் மெலிந்து தம் கண் காணாது
மனத்தால் வாடி அடியார் இருந்தால் வாழ்ந்துபோதீரே
மேல்
#970
ஆயம் பேடை அடையும் சோலை ஆரூர் அகத்தீரே
ஏ எம்பெருமான் இதுவே ஆம் ஆறு உமக்கு ஆட்பட்டோர்க்கு
மாயம் காட்டி பிறவி காட்டி மறவா மனம் காட்டி
காயம் காட்டி கண் நீர் கொண்டால் வாழ்ந்துபோதீரே
மேல்
#971
கழியாய் கடலாய் கலனாய் நிலனாய் கலந்த சொல் ஆகி
இழியா குலத்தில் பிறந்தோம் உம்மை இகழாது ஏத்துவோம்
பழிதான் ஆவது அறியீர் அடிகேள் பாடும் பத்தரோம்
வழிதான் காணாது அலமந்து இருந்தால் வாழ்ந்துபோதீரே
மேல்
#972
பேயோடேனும் பிரிவு ஒன்று இன்னாது என்பர் பிறர் எல்லாம்
காய்தான் வேண்டில் கனிதான் அன்றோ கருதி கொண்ட-கால்
நாய்தான் போல நடுவே திரிந்தும் உமக்கு ஆட்பட்டோர்க்கு
வாய்தான் திறவீர் திரு ஆரூரீர் வாழ்ந்துபோதீரே
மேல்
#973
செருந்தி செம்பொன் மலரும் சோலை இதுவோ திரு ஆரூர்
பொருந்தி திரு மூலட்டானமே இடமா கொண்டீரே
இருந்தும் நின்றும் கிடந்தும் உம்மை இகழாது ஏத்துவோம்
வருந்தி வந்தும் உமக்கு ஒன்று உரைத்தால் வாழ்ந்துபோதீரே
மேல்
#974
கார் ஊர் கண்டத்து எண் தோள் முக்கண் கலைகள் பல ஆகி
ஆரூர் திரு மூலட்டானத்தே அடி பேர் ஆரூரன்
பார் ஊர் அறிய என் கண் கொண்டீர் நீரே பழிப்பட்டீர்
வார் ஊர் முலையாள் பாகம் கொண்டீர் வாழ்ந்துபோதீரே
மேல்
96. திருவாரூர் பரவையூர்மண்டளி - பண் : பஞ்சமம்
#975
தூ வாயா தொண்டு செய்வார் படு துக்கங்கள்
காவாயா கண்டுகொண்டார் ஐவர் காக்கிலும்
நா வாயால் உன்னையே நல்லன சொல்லுவேற்கு
ஆவா என் பரவையுண்மண்டளி அம்மானே
மேல்
#976
பொன்னானே புலவர்க்கு நின் புகழ் போற்றல் ஆம்
தன்னானே தன்னை புகழ்ந்திடும் தற்சோதி
மின்னானே செக்கர் வானத்து இள ஞாயிறு
அன்னானே பரவையுண்மண்டளி அம்மானே
மேல்
#977
நா மாறாது உன்னையே நல்லன சொல்லுவார்
போம் ஆறு என் புண்ணியா புண்ணியம் ஆனானே
பேய் மாறா பிணம் இடுகாடு உகந்து ஆடுவாய்க்கு
ஆம் ஆறு என் பரவையுண்மண்டளி அம்மானே
மேல்
#978
நோக்குவேன் உன்னையே நல்லன நோக்காமை
காக்கின்றாய் கண்டுகொண்டார் ஐவர் காக்கினும்
வாக்கு என்னும் மாலை கொண்டு உன்னை என் மனத்து
ஆர்க்கின்றேன் பரவையுண்மண்டளி அம்மானே
மேல்
#979
பஞ்சு ஏரும் மெல்லடியாளை ஒர்பாகமாய்
நஞ்சு ஏரும் நல் மணி_கண்டம் உடையானே
நெஞ்சு ஏர நின்னையே உள்கி நினைவாரை
அஞ்சேல் என் பரவையுண்மண்டளி அம்மானே
மேல்
#980
அம்மானே ஆகம சீலர்க்கு அருள் நல்கும்
பெம்மானே பேர் அருளாளன் பிடவூரன்
தம்மானே தண் தமிழ் நூல் புலவாணர்க்கு ஓர்
அம்மானே பரவையுண்மண்டளி அம்மானே
மேல்
#981
விண்டானே மேலையார் மேலையார் மேல் ஆய
எண்தானே எழுத்தொடு சொல் பொருள் எல்லாம் முன்
கண்டானே கண்-தனை கொண்டிட்டு காட்டாயே
அண்டானே பரவையுண்மண்டளி அம்மானே
மேல்
#982
காற்றானே கார் முகில் போல்வது ஒர் கண்டத்து எம்
கூற்றானே கோல் வளையாளை ஒர்பாகம் ஆம்
நீற்றானே நீள் சடை மேல் நிறை உள்ளது ஓர்
ஆற்றானே பரவையுண்மண்டளி அம்மானே
மேல்
#983
செடியேன் நான் செய்வினை நல்லன செய்யாத
கடியேன் நான் கண்டதே கண்டதே காமுறும்
கொடியேன் நான் கூறும் ஆறு உன் பணி கூறாத
அடியேன் நான் பரவையுண்மண்டளி அம்மானே
மேல்
#984
கரந்தையும் வன்னியும் மத்தமும் கூவிளம்
பரந்த சீர் பரவையுண்மண்டளி அம்மானை
நிரம்பிய ஊரன் உரைத்தன பத்து இவை
விரும்புவார் மேலையார் மேலையார் மேலாரே
மேல்
97. திருநனிபள்ளி - பண் : பஞ்சமம்
#985
ஆதியன் ஆதிரையன் அயன் மால் அறிதற்கு அரிய
சோதியன் சொற்பொருளாய் சுருங்கா மறை நான்கினையும்
ஓதியன் உம்பர்-தம் கோன் உலகத்தினுள் எ உயிர்க்கும்
நாதியன் நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே
மேல்
#986
உறவிலி ஊனமிலி உணரார் புரம் மூன்று எரிய
செறி விலி தன் நினைவார் வினை ஆயின தேய்ந்து அழிய
அற இலகும் அருளான் மருள் ஆர் பொழில் வண்டு அறையும்
நற விரி கொன்றையினான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே
மேல்
#987
வான் உடையான் பெரியான் மனத்தாலும் நினைப்பு அரியான்
ஆனிடை ஐந்து அமர்ந்தான் அணு ஆகி ஓர் தீ உரு கொண்டு
ஊன் உடை இ உடலம் ஒடுங்கி புகுந்தான் பரந்தான்
நான் உடை மாடு எம்பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே
மேல்
#988
ஓடு உடையன் கலனா உடை கோவணவன் உமை ஓர்
பாடு உடையன் பலி தேர்ந்து உண்ணும் பண்பு உடையன் பயில
காடு உடையன் இடமா மலை ஏழும் கரும் கடல் சூழ்
நாடு உடை நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே
மேல்
#989
பண்ணற்கு அரியது ஒரு படைஆழிதனை படைத்து
கண்ணற்கு அருள்புரிந்தான் கருதாதவர் வேள்வி அவி
உண்ணற்கு இமையவரை உருண்டு ஓட உதைத்து உகந்து
நண்ணற்கு அரிய பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே
மேல்
#990
மல்கிய செம் சடை மேல் மதியும் அரவும் உடனே
புல்கிய ஆரணன் எம் புனிதன் புரி நூல் விகிர்தன்
மெல்கிய வில் தொழிலான் விருப்பன் பெரும் பார்த்தனுக்கு
நல்கிய நம்பெருமான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே
மேல்
#991
அங்கம் ஒர் ஆறு அவையும் அரு மா மறை வேள்விகளும்
எங்கும் இருந்து அந்தணர் எரி மூன்று அவை ஓம்பும் இடம்
பங்கய மா முகத்தாள் உமை_பங்கன் உறை கோயில்
செங்கயல் பாயும் வயல் திரு ஊர் நனிபள்ளி அதே
மேல்
#992
திங்கள் குறும் தெரியல் திகழ் கண்ணியன் நுண்ணியனாய்
நம் கண் பிணி களைவான் அரு மா மருந்து ஏழ்பிறப்பும்
மங்க திரு விரலால் அடர்த்தான் வல் அரக்கனையும்
நங்கட்கு அருளும் பிரான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே
மேல்
#993
ஏன மருப்பினொடும் எழில் ஆமையும் பூண்டு உகந்து
வான மதிள் அரணம் மலையே சிலையா வளைத்தான்
ஊனம் இல் காழி-தன்னுள் உயர் ஞானசம்பந்தற்கு அன்று
ஞானம் அருள்புரிந்தான் நண்ணும் ஊர் நனிபள்ளி அதே
மேல்
#994
காலமும் நாழிகையும் நனிபள்ளி மனத்தின் உள்கி
கோலம் அது ஆயவனை குளிர் நாவல ஊரன் சொன்ன
மாலை மதித்து உரைப்பார் மண் மறந்து வானோர் உலகில்
சால நல் இன்பம் எய்தி தவலோகத்து இருப்பவரே
மேல்
98. திருநன்னிலத்துப்பெருங்கோயில் - பண் : பஞ்சமம்
#995
தண் இயல் வெம்மையினான் தலையில் கடை-தோறும் பலி
பண் இயல் மென்மொழியார் இட கொண்டு உழல் பண்டரங்கன்
புண்ணிய நான்மறையோர் முறையால் அடி போற்றி இசைப்ப
நண்ணிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே
மேல்
#996
வலம் கிளர் மா தவம் செய் மலைமங்கை ஒர்பங்கினனாய்
சலம் கிளர் கங்கை தங்க சடை ஒன்றிடையே தரித்தான்
பலம் கிளர் பைம் பொழில் தண் பனி வெண் மதியை தடவ
நலம் கிளர் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே
மேல்
#997
கச்சியன் இன் கருப்பூர் விருப்பன் கருதி கசிவார்
உச்சியன் பிச்சை_உண்ணி உலகங்கள் எல்லாம் உடையான்
நொச்சி அம் பச்சிலையால் நுரை நீர் புனலால் தொழுவார்
நச்சிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே
மேல்
#998
பாடிய நான்மறையான் படு பல் பிணக்காடு அரங்கா
ஆடிய மா நடத்தான் அடி போற்றி என்று அன்பினராய்
சூடிய செம் கையினார் பல தோத்திரம் வாய்த்த சொல்லி
நாடிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே
மேல்
#999
பிலம் தரு வாயினொடு பெரிதும் வலி மிக்கு உடைய
சலந்தரன் ஆகம் இரு பிளவு ஆக்கிய சக்கரம் முன்
நிலம் தரு மாமகள்_கோன் நெடு மாற்கு அருள்செய்த பிரான்
நலம் தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே
மேல்
#1000
வெண் பொடி மேனியினான் கரு நீல மணி_மிடற்றான்
பெண் படி செஞ்சடையான் பிரமன் சிரம் பீடு அழித்தான்
பண்பு உடை நான்மறையோர் பயின்று ஏத்தி பல்கால் வணங்கும்
நண்பு உடை நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே
மேல்
#1001
தொடை மலி கொன்றை துன்றும் சடையன் சுடர் வெண் மழுவாள்
படை மலி கையன் மெய்யில் பகட்டு ஈர் உரி போர்வையினான்
மடை மலி வண் கமல மலர் மேல் மட அன்னம் மன்னி
நடை மலி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே
மேல்
#1002
குளிர்தரு திங்கள் கங்கை குரவோடு அர கூவிளமும்
மிளிர்தரு புன் சடை மேல் உடையான் விடையான் விரை சேர்
தளிர் தரு கோங்கு வேங்கை தட மாதவி சண்பகமும்
நளிர்தரு நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே
மேல்
#1003
கமர் பயில் வெஞ்சுரத்து கடும் கேழல் பின் கானவனாய்
அமர் பயில்வு எய்தி அருச்சுனனுக்கு அருள்செய்த பிரான்
தமர் பயில் தண் விழவில் தகு சைவர் தவத்தின் மிக்க
நமர் பயில் நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே
மேல்
#1004
கரு வரை போல் அரக்கன் கயிலை மலை கீழ் கதற
ஒரு விரலால் அடர்த்து இன்னருள் செய்த உமாபதிதான்
திரை பொரு பொன்னி நல் நீர் துறைவன் திகழ் செம்பியர்_கோன்
நரபதி நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனே
மேல்
#1005
கோடு உயர் வெம் களிற்று திகழ் கோச்செங்கணான் செய் கோயில்
நாடிய நன்னிலத்துப்பெருங்கோயில் நயந்தவனை
சேடு இயல் சிங்கி தந்தை சடையன் திரு ஆரூரன்
பாடிய பத்தும் வல்லார் புகுவார் பரலோகத்துளே
மேல்
99. திருநாகேச்சரம் - பண் : பஞ்சமம்
#1006
பிறை அணி வாள்_நுதலாள் உமையாள் அவள் பேழ்கணிக்க
நிறை அணி நெஞ்சு அனுங்க நீல மால் விடம் உண்டது என்னே
குறை அணி குல்லை முல்லை அனைந்து குளிர் மாதவி மேல்
சிறை அணி வண்டுகள் சேர் திரு நாகேச்சரத்து அரனே
மேல்
#1007
அரும் தவம் மா முனிவர்க்கு அருள் ஆகி ஓர் ஆல் அதன் கீழ்
இருந்து அறமே புரிதற்கு இயல்பு ஆகியது என்னை-கொல் ஆம்
குருந்து அயலே குரவம் அரவின் எயிறு ஏற்று அரும்ப
செருந்தி செம்பொன் மலரும் திரு நாகேச்சரத்து அரனே
மேல்
#1008
பாலனது ஆருயிர் மேல் பரியாது பகைத்து எழுந்த
காலனை வீடுவித்து கருத்து ஆக்கியது என்னை-கொல் ஆம்
கோல மலர் குவளை கழுநீர் வயல் சூழ் கிடங்கில்
சேலொடு வாளைகள் பாய் திரு நாகேச்சரத்து அரனே
மேல்
#1009
குன்ற மலை குமரி கொடி ஏர் இடையாள் வெருவ
வென்றி மத கரியின் உரி போர்த்ததும் என்னை-கொல் ஆம்
முன்றில் இளம் கமுகின் முது பாளை மது அளைந்து
தென்றல் புகுந்து உலவும் திரு நாகேச்சரத்து அரனே
மேல்
#1010
அரை விரி கோவணத்தோடு அரவு ஆர்த்து ஒரு நான்மறை நூல்
உரை பெருக உரைத்து அன்று உகந்து அருள்செய்தது என்னே
வரை தரு மா மணியும் வரை சந்து அகிலோடும் உந்தி
திரை பொரு தண் பழன திரு நாகேச்சரத்து அரனே
மேல்
#1011
தங்கிய மா தவத்தின் தழல் வேள்வியின்-நின்று எழுந்த
சிங்கமும் நீள் புலியும் செழு மால் கரியோடு அலற
பொங்கிய போர் புரிந்து பிளந்து ஈர் உரி போர்த்தது என்னே
செங்கயல் பாய் கழனி திரு நாகேச்சரத்து அரனே
மேல்
#1012
நின்ற இ மா தவத்தை ஒழிப்பான் சென்று அணைந்து மிக
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே
பங்கய மா மலர் மேல் மது உண்டு வண் தேன் முரல
செங்கயல் பாய் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே
மேல்
#1013
வரி அர நாண் அது ஆக மா மேரு வில் அது ஆக
அரியன முப்புரங்கள் அவை ஆர் அழல் மூட்டல் என்னே
விரிதரு மல்லிகையும் மலர் சண்பகமும் அளைந்து
திரிதரு வண்டு பண்செய் திரு நாகேச்சரத்து அரனே
மேல்
#1014
அங்கு இயல் யோகு-தன்னை அழிப்பான் சென்று அணைந்து மிக
பொங்கிய பூங்கணைவேள் பொடி ஆக விழித்தல் என்னே
பங்கய மா மலர் மேல் மது உண்டு பண் வண்டு அறைய
செங்கயல் நின்று உகளும் திரு நாகேச்சரத்து அரனே
மேல்
#1015
குண்டரை கூறை இன்றி திரியும் சமண் சாக்கிய பேய்
மிண்டரை கண்ட தன்மை விரவு ஆகியது என்னை-கொலோ
தொண்டு இரைத்து வணங்கி தொழில் பூண்டு அடியார் பரவும்
தெண் திரை தண் வயல் சூழ் திரு நாகேச்சரத்து அரனே
மேல்
#1016
கொங்கு அணை வண்டு அரற்ற குயிலும் மயிலும் பயிலும்
தெங்கு அணை பூம் பொழில் சூழ் திரு நாகேச்சரத்து அரனை
வங்கம் மலி கடல் சூழ் வயல் நாவல் ஆரூரன் சொன்ன
பங்கம் இல் பாடல் வல்லார் அவர்-தம் வினை பற்று அறுமே
மேல்
100. திருநொடித்தான்மலை (திருக்கைலாயமலை) - பண் : பஞ்சமம்
#1017
தான் எனை முன் படைத்தான் அது அறிந்து தன் பொன் அடிக்கே
நான் என பாடல் அந்தோ நாயினேனை பொருட்படுத்து
வான் எனை வந்து எதிர்கொள்ள மத்த யானை அருள்புரிந்து
ஊன் உயிர் வேறு செய்தான் நொடித்தான்மலை உத்தமனே
மேல்
#1018
ஆனை உரித்த பகை அடியேனொடு மீள-கொலோ
ஊனை உயிர் வெருட்டி ஒள்ளியானை நினைந்திருந்தேன்
வானை மதித்த அமரர் வலம்செய்து எனை ஏற வைக்க
ஆனை அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே
மேல்
#1019
மந்திரம் ஒன்று அறியேன் மனை வாழ்க்கை மகிழ்ந்து அடியேன்
சுந்தர வேடங்களால் துரிசே செயும் தொண்டன் எனை
அந்தர மால் விசும்பில் அழகு ஆனை அருள்புரிந்த
தும் தரமோ நெஞ்கமே நொடித்தான்மலை உத்தமனே
மேல்
#1020
வாழ்வை உகந்த நெஞ்சே மடவார்-தங்கள் வல்வினை பட்டு
ஆழ முகந்த என்னை அது மாற்றி அமரர் எல்லாம்
சூழ அருள் புரிந்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு
வேழம் அருள்புரிந்தான் நொடித்தான்மலை உத்தமனே
மேல்
#1021
மண்ணுலகில் பிறந்து நும்மை வாழ்த்தும் வழியடியார்
பொன்னுலகம் பெறுதல் தொண்டனேன் இன்று கண்டொழிந்தேன்
விண்ணுலகத்தவர்கள் விரும்ப வெள்ளை யானையின் மேல்
என் உடல் காட்டுவித்தான் நொடித்தான்மலை உத்தமனே
மேல்
#1022
அஞ்சினை ஒன்றி நின்று அலர் கொண்டு அடி சேர்வு அறியா
வஞ்சனை என் மனமே வைகி வான நல் நாடர் முன்னே
துஞ்சுதல் மாற்றுவித்து தொண்டனேன் பரம் அல்லது ஒரு
வெஞ்சின ஆனை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே
மேல்
#1023
நிலை கெட விண் அதிர நிலம் எங்கும் அதிர்ந்து அசைய
மலையிடை யானை ஏறி வழியே வருவேன் எதிரே
அலை கடல் ஆல் அரையன் அலர் கொண்டு முன் வந்து இறைஞ்ச
உலை அணையாத வண்ணம் நொடித்தான்மலை உத்தமனே
மேல்
#1024
அர ஒலி ஆகமங்கள் அறிவார் அறி தோத்திரங்கள்
விரவிய வேத ஒலி விண் எலாம் வந்து எதிர்ந்து இசைப்ப
வரம் மலி வாணன் வந்து வழிதந்து எனக்கு ஏறுவது ஓர்
சிரம் மலி யானை தந்தான் நொடித்தான்மலை உத்தமனே
மேல்
#1025
இந்திரன் மால் பிரமன் எழில் ஆர் மிகு தேவர் எல்லாம்
வந்து எதிர்கொள்ள என்னை மத்த யானை அருள்புரிந்து
மந்திர மா முனிவர் இவன் ஆர் என எம்பெருமான்
நம் தமர் ஊரன் என்றான் நொடித்தான்மலை உத்தமனே
மேல்
#1026
ஊழி-தொறு ஊழி முற்றும் உயர் பொன் நொடித்தான்மலையை
சூழ் இசை இன் கரும்பின் சுவை நாவல ஊரன் சொன்ன
ஏழ்இசை இன் தமிழால் இசைந்து ஏத்திய பத்தினையும்
ஆழி கடல் அரையா அஞ்சையப்பர்க்கு அறிவிப்பதே
மேல்
101. திருநாகைக்காரோணம் - பண் : காந்தாரம்
#1027
பொன் ஆம் இதழி விரை மத்தம் பொங்கு கங்கை புரி சடை மேல்
முன்னா அரவம் மதியமும் சென்னி வைத்தல் மூர்க்கு அன்றே
துன்னா மயூரம் சோலை-தொறும் ஆட தூர துணை வண்டு
தென்னா என்னும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே
மேல்
#1028
வரை கை வேழம் உரித்தும் அரன் நடமாட்டானால் மனை-தோறும்
இரக்கை ஒழியீர் பழி அறியில் ஏற்றை விற்று நெல் கொள்வீர்
முரை கை பவள கால் காட்ட மூரி சங்கத்தொடு முத்தம்
திரை கை காட்டும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே
மேல்
#1029
புல்லும் பெறுமே விடை புணர சடை மேல் ஒரு பெண் புக வைத்தீர்
இல்லம்-தோறும் பலி என்றால் இரக்க இடுவார் இடுவாரே
முல்லை முறுவல் கொடி எடுப்ப கொன்றை முகம் மோதிரம் காட்ட
செல்லும் புறவின் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே
மேல்
#1030
மாண்டார் எலும்பும் கலும்பும் எலாம் மாலை ஆக மகிழ்ந்து அருளி
பூண் தார் பொறி ஆடு அரவு ஆமை புரம் மூன்று எரித்தீர் பொருள் ஆக
தூண்டா விளக்கு மணி மாட வீதி-தோறும் சுடர் உய்க்க
சேண் தார் புரிசை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே
மேல்
#1031
ஒருவர்க்கு ஒருவர் அரிதாகில் உடை வெண் தலை கொண்டு ஊர்ஊரன்
இருவர்க்கு ஒருவர் இரந்து உண்டால் எளிதே சொல்லீர் எத்தனையும்
பரு வன் கனகம் கற்பூரம் பகர்ந்த முகந்து பப்பரவர்
தெருவில் சிந்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே
மேல்
#1032
தோடை உடுத்த காது உடையீர் தோலை உடுத்து சோம்பாதே
ஆடை உடுத்து கண்ட-கால் அழகிது அன்றே அரிது அன்று
ஓடை உடுத்த குமுதமே உள்ளங்கை மறிப்ப புறங்கை அனம்
சேடை உடுத்தும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே
மேல்
#1033
கடு நஞ்சு உண்டு இரக்கவே கண்டம் கறுத்தது இ காலம்
விடும் நஞ்சு உண்டு நாகத்தை வீட்டில் ஆட்டை வேண்டா நீர்
கொடு மஞ்சுகள் தோய் நெடு மாடம் குலவு மணி மாளிகை குழாம்
இடு மிஞ்சு இதை சூழ் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே
மேல்
#1034
பள்ளம் பாறும் நறும் புனலை சூடி பெண் ஓர்பாகமா
வெள்ளை நீறே பூசுவீர் மேயும் விடையும் பாயுமே
தொள்ளை ஆம் நல் கரத்து ஆனை சுமந்து வங்கம் சுங்கமிட
தெள்ளும் வேலை தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே
மேல்
#1035
மத்தம் கவரும் மலர் கொன்றை மாலை மேல் மால் ஆனாளை
உய்த்து அங்கு அவரும் உரைசெய்தால் உமக்கே அன்றே பழி உரையீர்
முத்தம் கவரும் நகை இளையார் மூரி தானை முடி மன்னர்
சித்தம் கவரும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே
மேல்
#1036
மறை அன்று ஆலின் கீழ் நால்வர்க்கு அளித்தீர் களித்தார் மதில் மூன்றும்
இறையில் எரித்தீர் ஏழ்உலகும் உடையார் இரந்து ஊண் இனிதேதான்
திறை கொண்டு அமரர் சிறந்து இறைஞ்சி திரு கோபுரத்து நெருக்க மலர்
சிறை வண்டு அறையும் தென் நாகை திரு காரோணத்து இருப்பீரே
மேல்
#1037
தேர் ஆர் வீதி தென் நாகை திரு காரோணத்து இறையானை
சீர் ஆர் மாட திரு நாவலூர் கோன் சிறந்த வன் தொண்டன்
ஆரா அன்போடு உரைசெய்த அஞ்சொடு அஞ்சும் அறிவார்கள்
வார் ஆர் முலையாள் உமை_கணவன் மதிக்க இருப்பார் வானகத்தே
மேல்
|
|
மேல் சுந்தரர் வரலாறு திருநாவலூர் என்னும் திருத்தலம் நீர்வளமும், நிலவளமும் நிறைந்தது. எக்காலத்தும் செழிப்போடு காணப்படும் இந்நகரில் தெய்வநலமும் சைவ நெறியும் பெருமை பெற்று ஓங்கியிருந்தன. இத்தலத்தில், ஆதிசைவர் மரபில், சகல நற்குணங்களும் ஒருங்கே அமையப்பபெற்ற சடையனார் என்பவருக்கும், நற்குண நங்கை இசைஞானியார் என்பவருக்கும் திருமுருகனே வந்து அவதாரம் செய்தாற்போல், சுந்தரமூர்த்தி நாயனார் தோன்றினார். எம்பெருமான் திருவருளால் அவதாரம் செய்த மகனுக்கு பெற்றோர்கள் நம்பியாரூரார் என்று இறைவன் திருநாமத்தையே சூட்டினர். நம்பியும், காப்புப் பருவம், செங்கீரைப் பருவம், தாலப் பருவம், சப்பாணிப் பருவம், முத்தப் பருவம் போன்ற பருவங்களை எல்லாம் கடந்து மேனியிலே பிரகாசமும், முகத்திலே தெய்வ ஒளியும் தோன்ற உருவெடுத்து விளங்கலானாள். நம்பியின் முடியிலே இரத்தினச்சுட்டியும், அழகு மார்பிலே நவரத்தினப் பொன்மணிகளும், மென்சீர் அடிகளிலே கொஞ்சும் சதங்கையும், திருவரையில் செம்பொன் அரை நாணும் அவரது அழகிற்கு அழகு செய்தன. ஒரு நாள் நம்பி ஆரூரர் வீதியிலே, சிறு தேர் உருட்டி தளிர்நடை போட்டு விளையாடிக் கொண்டிருந்தார். அப்பொழுது திருமுனைப்பாடி நாட்டை அரசாண்டு வந்த நரசிங்கமுனையர் திருநாவலூர்ப் பெருமானைத் தரிசித்து விட்டு தேரில் வந்து கொண்டிருந்தார். அவர் சிறு தேர் உருட்டி விளையாடும் ஆரூரரைக் கண்டார். அப்பால்மணம் மாறாப் பாலகனின் பேரழகை கண்டு அளவிலா மகிழ்ச்சி பூண்ட அரசர், தேரினின்றும் இறங்கி வந்து ஆரூரரை வாரி எடுத்து உச்சி முகர்ந்தார். அக்குழந்தையை எப்படியும் தம்மோடு அழைத்து சென்று விடுவது என்ற முடிவிற்கு வந்தார். அரசர், அக்கணமே அக்குழந்தையைத் தூக்கிக் கொண்டு, சடையனார் இல்லத்திற்குள் சென்றார். குழந்தையை தூக்கிக் கொண்டு வரும் அரசனைக் கண்டு பெற்றோர்கள் அதிசயித்தனர். விரைந்தோடு வந்து வேந்தனை வரவேற்றனர். சடையனாரும் நரசிங்கமுனையரும் பால்ய சிநேகிதர்கள். சுந்தரர் தனது நண்பனின் செல்வன் என்பதனை அறிந்து அரசன் இரட்டிப்பு மகிழ்ச்சி பூண்டான். அரசன் சடையனாரிடம், நண்பா! உங்கள் குழந்தையின் அழகில் நான் பேரன்பு பூண்டேன். அதனால் இக்குழந்தையை மகனாக வளர்க்கும் பாக்கியத்தை எனக்குத் தர வேண்டும், என்று பரிவும் பாசமும் பொங்கக் கேட்டான். மன்னனின் அன்பு மொழிக்கு அடிமையான பெற்றோர்கள் மறுமொழி ஏதும் பேச விரும்பவில்லை. தங்களது குமரன் அரண்மனையில் வளர வேண்டும் என்பது தெய்வ சங்கல்பம் போலும் என்று எண்ணினர். மனநிறைவோடு ஆரூயிர்ச் செல்வனை, அரசருடன் அனுப்பி வைத்தனர். அரசன் ஆனந்தத்துடன், சுந்தர செல்வனைச் சுமந்து கொண்டு, தனது தேரில் புறப்பட்டார். மேல்ஆரூரர், அரண்மனையில் அரசகுமாரனைப்போல் வாழத் தொடங்கினார். சின்னஞ்சிறு வயதிலேயே, அரசர்க்குரிய அத்தனை கலைகளிலும் நல்ல தேர்ச்சி பெற்றார். மதநூல்களையும், ஆகம நூல்களையும் பயின்றார். உரிய பருவத்தில் ஆரூரருக்கு முப்புரி நூல் அணிந்து மகிழ்ந்தான் மன்னன்! இவ்வாறு பெற்றோர்களின் அன்பாலும், அரசரின் அரவணைப்பாலும் ஆரூரர் வளர்ந்து வரலானார். பெற்றோர்கள், ஆரூரருக்குத் திருமணம் செய்து வைக்கத் தீர்மானித்தனர். தங்கள் எண்ணத்தை அரசரிடம் கூறினர். அரசரும் அவர்கள் விருப்பம் போல் திருமணப் பெண்ணைத் தேர்ந்து எடுத்து மணம் முடிக்கக் கூறினான். அக்கணமே பெற்றோர்கள் ஆரூரருக்கு ஏற்ற மணப்பெண்ணைத் தேடலாயினர். திருநாவலூருக்கு அடுத்தாற் போல் புத்தூர் என்ற ஊரிலுள்ள, சடங்கவி சிவாச்சாரியார் என்பவரின் புதல்வியை ஆரூரருக்குப் பார்த்து மணம் முடிப்பதற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர். திருமணமும் நிச்சயமானது; நல்ல நாளும் பார்க்கப்பட்டது. அயலூர் நண்பர்களுக்கும், உற்றார் உறவினர்களுக்கும் திருமண அழைப்பு ஓலையை அனுப்பினார்கள். பெண் வீட்டாரது ஊரான புத்தூரிலேயே திருமணத்திற்கான எல்லா ஏற்பாடுகளும், மிக்க சிறப்போடும், கோலாகலத்தோடும் நடந்த வண்ணமாகவே இருந்தன. திருமணத்திற்கு முதல் நாள் ஆரூரர் திருநாவலூரில் இருந்து வெண்புரவியில், புத்தூருக்கு உற்றாரும், உறவினரும் புடைசூழ இன்னிசை நாதம் முழங்க, மேளதாளத்துடன் புறப்பட்டார். ஆரூரர், மன்னர் குலத்திற்குரிய, விலை உயர்ந்த ஆடை ஆபரணங்கள் அணிந்திருந்தாலும் அந்தணர் கோலத்திற்குரிய அலங்காரத்தையும் செய்து கொண்டிருந்தார். சரிகைக் கரை போடப்பட்டுள்ள வெண்பட்டு உடுத்தியிருந்தார். காதுகளிலே வைரக் கடுக்கன்கள் அணிந்திருந்தார். மணமிக்க சந்தனக் கலவையை மார்பிலே பூசியிருந்தார். அத்திருமார்பில் ஒளிமிகுந்து மாணிக்கங்கள் இழைத்த அணிகலன்களோடு, நறுமலர் மாலைகளையும் அணிந்திருந்தார். மங்கல முரசங்கள் முழங்கிட-பண் இசைக்கும் பாவையர் பரதமாட-மங்கல மங்கையர் பாலிகை ஏந்தி வர, கட்டிளங் கோதையர் திருமணப் பெண்ணுக்கு, சீர் வரிசைகளைப் பொன் தட்டுகளில் தாங்கிவர, சுந்தரரின் மணவிழா பவனி புத்தூரை நெருங்கிக் கொண்டிருந்தது. சடங்கவியார் தம் மகள் திருமணத்தை மிகச் சிறப்போடு நடத்துவதற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார். ஊர் எல்லையிலிருந்தே பெரும் பந்தல் அமைத்து, ஆங்காங்கே, பூச்சரங்கள் அழகாகக் கட்டப்பட்டு, மாவிலைகளோடு கூடிய தோரணங்களும் அணி செய்யப்பட்டிருந்தன. வாழை, கமுகுகளும் நாட்டப்பட்டு விளங்குகிறது. மங்கல மனைகள் தோறும், நிறைகுடங்கள் வைக்கப்பட்டிருந்தன. வீதிகள் எங்கும் தூய்மை நிறைந்திருக்க பன்னீர் தெளிக்கப்பட்டு மாக்கோலமும், இடையிடையே சந்தனக்கோலமும் போடப்பட்டிருந்தன. பல்வகை வாத்தியங்கள் முழங்கிய வண்ணமாகவேயிருந்தன. வைகறைப் பொழுதில் ஆரூரர், புத்தூர் எல்லையை வந்தடைந்தார். பெண் வீட்டார்கள், ஆரூரரை எல்லையிலேயே தூப, தீப பாலிகை ஏந்தி வரவேற்றனர். வழி எங்கும் நறுமணப் பொடியையும், நறுமலரையும் வீசினார்கள். பன்னீர் தெளித்தார்கள். வானத்துப் பேரொளி வையத்தில் வந்து இறங்கினாற் போல் ஒளிமயத்தோடு புரவி மீது வந்து கொண்டிருந்த ஆரூரர், திருமணச்சோலைக்குள் நல்ல ஓரையிலே எழுந்தருளினார். திருமணப் பந்தலிலே, அழகே உருவெடுத்து அமர்ந்திருந்த ஆரூரரின் எழிற் தோற்றத்தைக் கண்டு, திருமணத்திற்கு வந்திருந்த அனைவருமே திகைத்து நின்றனர். பலரும் பலவாறு புகழ்ந்து பேசி மகிழ்ந்தனர். மேல்மணநாள் காணப்போகும் ஆரூரரை சிவபெருமான் தடுத்தாட்கொள்ளத் திருவுள்ளங் கொண்டார். அக்கணமே அந்தண வடிவம் தாங்கி புறப்பட்டார். தள்ளாடி தள்ளாடி நடக்கும் தளர்ந்த வயது! வெள்ளி முடிபோன்ற நரைத்த திருசடை! செவிகளிலே கண்டிகையும் குழையும்! திருமார்பிலே முப்புரி நூல்! திருத்தோளிலே வெண்ணிற உத்திரீயம்! நெற்றியிலும், திருமேனியிலும் புனிதமான திருவெண்ணீற்று ஒளி! ஆதவனின் வெம்மையைத் தணிக்க ஓர் திருக்கையிலே தாழங்குடை! மற்றொரு திருக்கையிலே தருப்பை முடிந்த மூங்கில் தடி! இங்ஙனம் தாம் ஏற்ற முதிய அந்தணர் வடிவத்திற்கு ஏற்ப, திருக்கோலத்தை மாற்றிருந்தார் எம்பெருமானார். மங்கல சடங்குகள் வழிமுறைக்கு ஏற்ப நடந்த வண்ணமிருந்தன, மங்கலமுரசம் முழங்கும் நல்ல ஓரையில் ஓர் இடிமுழக்கம்! இறைவர் ஒரு முதிய அந்தணர் கோலத்தோடு எழுந்தருளினார். பந்தலுக்குள் எழுந்தருளும் போதே, நான் கூறப்போகும் இம்மொழியை யாவரும் கேளுங்கள் என்று கூறிக்கொண்டேதான் வந்தார் எம்பெருமான்! அனைவரும் அம்முதியவரைப் பார்த்தனர். மூப்பணிந்த அந்தணரின் முகப்பொலிவைக் கண்டு நம்பியாரூர், பணிவன்போடு எழுந்து நின்று, கரங்கூப்பி வணங்கியவாறு, ஐயனே! தங்கள் வரவு நல்வரவாகுக! நாங்கள் என்ன தவம் செய்தோமோ, இம்மண நாளன்று தேவரீர் எழுந்தருள என்று கூறினார். அம்மொழியைக் காதில் போட்டுக் கொள்ளாதவர் போல் அம்முதியவர், அப்பனே! உனக்கும் எனக்கும் முற்காலத்தேயுள்ள ஓர் தொடர்பு காரணமாக, ஒரு பெரும் வழக்குள்ளது. அவ்வழக்கைத் தீர்த்து விட்டு, நீ உன் திருமணத்தை நடத்த ஏற்பாடு செய்யலாம் என்று மொழிந்தார். முதியவர் மொழிந்ததைக் கேட்டு, அனைவரும் திகைக்க-சுந்தரர் மட்டும் சற்றும் கலங்காமல், ஐயனே! உமக்கும் எமக்கும் வழக்கு இருக்குமேயானால், நீவிர் சொல்வது போல், முதலில் அதை முடித்துவிட்டு, பின்னர் திருமணம் செய்து கொள்கிறேன். வழக்கை இயம்புவீராக! என்றார். வேதியர், அந்த அவையில் உள்ளோரை நோக்கி, அந்தணர் குலத்தோரே! எம்மொழியைக் கேளுங்கள். இந்நாவலூரான் என் அடிமை! என்றார். மங்களகரமான மணச்சடங்குகள் நடந்து கொண்டிருந்த வேளையில், இப்படியொரு பரபரப்பு நடப்பதை எண்ணி, செய்வதறியாது திகைத்துப்போன ஆரூரர், வேதியரை நோக்கியவாறு சலனத்தோடு இருந்தாரே தவிர, அவரால் இதற்கொரு வழிமார்க்கம் காண முடியவில்லை. வேதியர் தம் கையிலிருந்த நீட்டோலையைக் காண்பித்தவாறே, நீங்கள் எவரும் என்னைப் பார்த்து நகைக்கவும் வேண்டாம்; பதைக்கவும் வேண்டாம். எனக்கு இவனது பாட்டன், பண்டைய நாளிலேயே எழுதிக்கொடுத்த அடிமை ஓலை இதோ என் கையில் இருக்கிறது என்று சினம் பொங்கக் கூறினார். ஆரூரருக்கு வியப்பு மேலிட்டது. உதட்டிலே புன்னகை தவழ, வேதியரை இன்னாரென்று அறிய இயலாத நிலையில், ஐயா! வேதியரே! உமக்கு நன்றாக பித்து பிடித்திருக்கிறது. இல்லாவிடில், குற்றமற்ற என்னை உங்களுக்கு அடிமை என்று சொல்லிக் கொள்வீர்களா? பாவம்! பரிதாபத்திற்குரியவர்! நீர் என்ன பித்தனோ? என்று கேட்டார். இறைவன் சினம் பொங்கினாற்போல் சற்று கடுமையாக சுந்தரரைப் பார்த்து, யான் பித்தனுமாகுக; அன்றிப் பேயனுமாகுக! நீ என்னைப் பற்றி எவ்வளவு தூரம் இழிவாக மொழிந்தாலும் சிறிதுகூட வெட்கப்படவும் மாட்டேன்; கவலைப்படவும் மாட்டேன். என்னை உனக்குத் தெரியாது. நான் யார் என்பதை உன்னால் அறியவும் முடியாது. வீணாக விளையாட்டு மொழிகளைப் பேசி என் கோபத்தை கிளறாதே! மணவறையில் உட்கார்ந்து கொண்டு வித்தகம் பேசுகிறாயே எதற்கு? உன் கடன் எனக்குப் பணிசெய்து கிடப்பதே என்பதை நினைவிற் கொள்! என்றார். மேல்இதுவரை வேதியரிடம் குதர்க்கவாதம் புரிந்த ஆரூரர் சிந்திக்கத் தொடங்கினார். இவரது அருள் தோற்றம் ஆரூரரின் இதயத்தை எதனாலோ உருக்கியது. அவர் இதயத்தில் அன்பு பெருக்கெடுத்தது. அதே சமயத்தில் வேதியரின் பிதற்றல் வார்த்தைகளும், வயது முதிர்ந்த தோற்றமும் உள்ளத்தை உருக்கினாலும், அடிமை என்று அவர் மொழிந்த சொல் சுந்தரருக்கு சினத்தை மூட்டியது. இவ்வாறெல்லாம் மனம் குழம்பிய சுந்தரர். எப்படியும் முதியவரிடம் இருக்கும் அடிமை ஓலையை வாங்கிப் பார்த்து விடுவது என்ற தீர்மானத்திற்கு வந்தார். நீங்கள் கூறுவதை உண்மையான வார்த்தைகளா என்று பார்ப்போம். எங்கே அடிமை ஓலையைக் காட்டுங்கள் ஆரூர் கேட்டார். வேதியர் கோபம் பொங்க, அடிமை ஓலை கண்டு படித்துணரும் பேராற்றல் உடையவனோவாயோ? வேண்டுமென்றால் அவை அறிய ஓலையைக் காண்பிப்பேனே தவிர, தனிப்பட்ட முறையில் உன்னிடம் மட்டும் கொடுக்க முடியாது. துணிவிருந்தால் அவைக்களம் வா! பார்த்துக் கொள்ளலாம் என்றார். நம்பியாரூரரின் கோபம் எல்லை மீறியது. அவர் வெகுண்டு எழுந்து, அந்தணர் கையிலிருந்த அடிமை ஓலையைப் பலாத்காரமாகப் பறிக்க முற்பட்டார். அந்தணர் மணப்பந்தலைச் சுற்றி, நாற்புறமும் ஓடினார். ஆரூரரும் தொடர்ந்து ஓடினார். இருவரும் திருமணப் பந்தலுக்குள் சுற்றி, சுற்றி ஓடிவந்தார்கள். சுந்தரர் ஒருவாறு அவரைப் பிடித்தார். சுந்தரர் கையிலிருந்த அடிமை ஓலையைப் பிடுங்கி, அந்தணர் அடிமையாகி ஏவல் புரிவதா? எந்த வேதத்தில் சொல்லியிருக்கிறது என்பதைப் பார்த்துவிடுவோம் என்று கேட்ட வண்ணம் அவ்வோலையை சுக்கு சுக்காகக் கிழித்தெறிந்தார். ஓடி ஓடிச் சோர்ந்தவர் போல் காட்சி அளித்த இறைவன் சுந்தரரின் செயலைக் கண்டித்தார். எவ்வளவு பெருத்த அநியாயம்? இந்த திருமணப் பந்தலில் என் குறையைக் கேட்டு, உண்மைக்கு வாதாட எவருமே இல்லையா! இது கொடிய அநியாயம் என்று முறையிட்டுக் கூச்சலிட்டார். மறையொலிக்கும் மாயவன், குறையொலித்து நின்றார். கூனிக் குறுகி நின்ற சுந்தரர், செய்வதறியாது திகைப்பவர் போல் சற்று நிமிர்ந்து அவையோரைப் பார்த்தார். அப்பொழுது திருமணச் சடங்கிற்று வந்திருந்தவர்களில் சிலர், வேதியரை அணுகி, ஐயா பெரியவரே! உமது வழக்கு மிகவும் விசித்திரமாகத்தான் இருக்கிறது. உலகில் எங்குமே இல்லா புது வழக்கம்! அது போகட்டும். தூய மணநாள் அன்று வேண்டுமென்றே இப்படியொரு கதை கட்டி, கல்யாணத்தை தடுக்க கங்கணம் கட்டிக் கொண்டு வந்து நிற்கும் நீவிர் யார்? எங்கே இருக்கிறீர்? யாது உம் பூர்வாங்கம்? என்று கேள்விமேல் கேள்விகளைக் கேட்டனர். நான் அருகிலுள்ள வெண்ணெய்நல்லூரில் பிறந்து வளர்ந்தவன். இவன் பாட்டன் இவன் எனக்கு அடிமை என்று எழுதிக் கொடுக்காவிடில், எதற்காக நம்பியாரூரன், அறநெறி தவறி, என் கையிலிருந்த ஓலையைக் கிளித்தெறிய வேண்டும்? அவன் குற்றமுள்ள நெஞ்சம் தானே இப்படியொரு நஞ்சான செயலை செய்ய வைத்திருக்கிறது? இவன் என் அடிமைதான் என்பதை உறுதிப்படுத்தி உலகறியச் செய்ய இதைவிட எங்களுக்கு ஆதாரம் வேறென்ன வேண்டும்? என்று விடையளித்தார் எம்பெருமான்! அப்படியென்றால், இந்த வழக்கை வெண்ணெய் நல்லூரிலேயே தீர்த்துக் கொள்ளலாம் வாரும் என்று கூறினார் சுந்தரர்! அங்ஙனமே ஆகட்டும். இப்போது நீ கிழித்த ஓலை நகலேயாகும். மூல ஓலையைப் பத்திரமாக வைத்திருக்கிறேன். வெண்ணெய்நல்லூரிலுள்ள அவையோர் முன்னால் மூல ஓலையைக் காண்பித்து நீ என் அடிமை என்பதை நிரூபிக்கிறேன் என்ற மறையோன், தள்ளாதவரைப் போல தடியை ஊன்றிக் கொண்டு புறப்பட்டார். மேல்இரும்பைக் காந்தம் கவர்ந்தாற்போல் ஆரூரரும் பின் சென்றார். சுற்றமும், நட்பும் ஆரூரரைப் பின்தொடர்ந்து சென்றன. திருமண மன்றம் வழக்காடும் மன்றமானது. மணப்பந்தல் சோகத்தில் மூழ்கியது. அந்தணர் முன்வர அனைவரும் வெண்ணெய்நல்லூர் அவையை வந்தடைந்தனர். அவையோர் முன்னால் அந்தணர் தமது வழக்கைச் சமர்ப்பித்தார். செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர்களே! இந்நாவலூரன் என் அடிமை! அதற்கு சான்றாக இருந்த அடிமை ஓலையை, என்னிடமிருந்து பிடுங்கி, கிழித்து எறிந்துவிட்டான். அவைக்கு இவனை அழைத்து வந்துள்ளேன். இந்த ஏழை அந்தணரின் முறைபாட்டை சீர் தூக்கிப் பார்த்து உண்மைக்கு தீர்ப்பளியுங்கள். முதியவரே! யாது மொழிந்தீர்? அந்தணர் அடிமையாவது என்பது இவ்வுலகில் இதுவரை நடந்த வழக்கமாகத் தெரியவில்லையே! இதுபோன்ற வழக்கை அவை மட்டுமல்ல, இந்த அகிலமே இப்பொழுதுதான் சந்திக்கிறது. புதுமையான வழக்குதான் இது! முதியவர் மொழிந்ததைக் கேட்டு அவையோர் நகைத்துக் கொண்டே மேற்கண்டவாறு கூறினர். இவன் கிழித்த ஓலை, இன்று நேற்று எழுதப்பட்டதல்ல. பண்டுதொட்டு பாதுகாக்கப்பட்டு வருவது! ஒரு உடன்பாட்டின் மூலம் இவன் பாட்டன் எனக்கு எழுதிக் கொடுத்தது! இப்படியிருக்க எப்படி என் வழக்கை நீங்கள் அர்த்தமற்றது என்று கேலி பேச முடியும்? அப்படியா? நன்று வேதியரே நன்று, என்று அந்தணருக்கு ஆறுதல் மொழி பகர்ந்த அவையோர், நம்பியாரூரரை நோக்கி முதியோர்கள் உடன்பாட்டுடன் எழுதிய ஓலையை வலிய வாங்கிக் கிழித்தது பிழை! வயது முதிர்ந்த, இப்பெரியோர் தமது வழக்கைக் கூறிவிட்டார். இதுபற்றி உம்முடைய எண்ணம் யாதோ? என்று கேட்டனர். முதியவரின் மாயத்திற்கு முன்னால் நான் என்ன சொல்ல இருக்கிறது? இவர் வழக்கு எனக்கே விளங்காத புதிராக இருக்கிறது! ஆரூரர் சுற்றி வளைத்து, அவையில் பேச விரும்பாது, சுருக்கமாகவே கூறி முடித்தார். எல்லா நூல்களையும் கற்று உணர்ந்த பெரியோர்கள், நம்பியாரூரர் ஆதிசைவர்! அவர் ஒருபோதும் முறை தவறி நடக்கமாட்டார் என்பதை எண்ணி பார்த்து வேதியரிடம், முதியவரே! இவ்வழக்கு மிக்க கொடியது! இவர் உம்முடைய அடிமை என்பதை ஆதாரத்தோடு அவை அறியச் செய்தல் வேண்டும். ஆட்சி முறையிலாவது அன்றி சாட்சி, மூலமாவது அன்றி உடன்படிக்கை ஓலை மூலமாவது, உமது வாதத்தை உண்மை என்று நிரூபித்துக் காட்டுவீராகுக! என்று பணித்தனர். அவையோர் ஒருமித்துக் கூறியதைக் கேட்டு, வேதியர் மகிழ்ச்சி பொங்க, அவையோரைப் பார்த்து, முன்னர் இவன் கிழித்தது நகல் ஓலையே! இவன் இப்படி செய்தாலும் செய்வான் என்று அறிந்துதான், மூல ஓலையை முன்கூட்டியே பத்திராக வைத்துள்ளேன்! என்றார். அப்படியானால் மூல ஓலையைக் காட்டுங்கள். காட்டுகிறேன். ஆனால் இவன் முன்போல மீண்டும் இந்த மூல ஓலையையும் கிழித்துவிட்டால் நான் என்ன செய்வேன்? அவையோர் முன்னால், இத்தகைய தவறான நிகழ்ச்சி எதுவும் நடக்காமல் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீவிர் தைரியமாக ஓலையைக் காட்டலாம். வேதமுதல்வன், ஆரூரருக்கு பயப்படுபவரைப் போல் பாவனை செய்தவண்ணம், மூலஓலையை எடுத்து அவையோரிடம் கொடுத்தார். அவையோர் ஆணைப்படி, கணக்கன் ஓலையை வாங்கிப் படித்தான். அவ்வோலையில் பின்வருமாறு எழுதியிருந்தது. திருநாவலூரில் இருக்கும் ஆதிசைவனாகிய ஆரூரன் என்னும் பெயருடைய நான், திருவெண்ணெய்நல்லூர் பித்தனுக்கு எழுதிக் கொடுத்தது. நானும் என் வழிவரும் மரபினோரும் வழிவழியாய் இவருக்கு அடிமை தொழில் செய்து வருவோம் என்பதற்காக உள்ளும் புறமும் ஒருமைப்பட்டு எழுதிக் கொடுத்தேன். இதற்கு இஃது என் கையெழுத்து. இம்மணிவாசகத்தைக் கணக்கன் வாசிக்கக் கேட்ட அவையோர், ஓலையை வாங்கிப் பார்த்தனர். சாட்சிக் கையெழுத்து இட்டார்கள் கூட இஃது தங்கள் கையெழுத்துதான் என்பதனை ஒப்புக் கொண்டனர்.ஆரூரரின் பாட்டனாரின் கையெழுத்தைச் சரிபார்க்கும் பொருட்டு, அவர் எழுதிய வேறு சில ஓலைகளையும் கொண்டுவரச் சொல்லி அதையும் சரிபார்த்தனர்.அவையோர் அந்தணர் கூறுவது முறைதான் என்று ஒப்புக்கொண்டனர். மேல்ஆரூரன் அந்தணருக்கு அடிமையாய்ப் பணிசெய்வது தான் கடமை, என்று தங்கள் தீர்ப்பை வழங்கினார்கள். ஆரூரர்க்கு ஒன்றுமே புரியவில்லை. என்றாலும் மறையவர் தீர்ப்புப்படி அந்தணருக்கு அடிமையாகி, அவையோர் தீர்ப்புக்கு தலை வணங்கினார். அவையோர், அம்முதியவரைப் பார்த்து, ஐயனே! ஓலையில் நீவிர் வெண்ணெய்நல்லூர் என்று குறிப்பிட்டுள்ளீர்களே, இவ்வூரில் உமது இருப்பிடம் எங்கே என்று எங்களுக்குக் காட்டுவீராக என்று கேட்டனர். எம்பெருமான், அவர்களை அழைத்துக் கொண்டு தம் இருப்பிடத்தைக் காட்டுவதற்காக வேண்டி அவ்வூரிலுள்ள திருவட்டுறை என்கின்ற திருக்கோவிலை நோக்கி புறப்பட்டார். சுந்தரர் உள்பட அனைவரும் அந்தணரைப் பின் தொடர்ந்தனர். திருவெண்ணெய் நல்லூரிலுள்ள அக்கோயிலுள் அம்முதியோர் புகுந்து மறைந்தார். ஆரூரரும் அவர்பின் வந்தவர்களும் நெடுநேம் காத்திருந்தார்கள். அந்தணரைக் காணாமல் ஒருவர் பின் ஒருவராக வெளியேறினார்கள். ஆனால் ஆரூரர் மட்டும், வாயிலிலேயே நின்று கொண்டிருந்தார். இப்பெரியவர் கோயிலுள் புகுந்து திரும்பாதது ஏன்? என்று ஆரூரர் எம்பெருமான் மீது பூண்டுள்ள அளவற்ற அன்பின் காரணமாக சிந்திக்கத் தொடங்கினார். ஆரூரர் மட்டும் தனியே அந்தணரைத் தேடி கோயிலெங்கும் அலைந்தார். அவர் கண்களில் நீர் மல்கியது. கோயிலøச் சுற்றி சுற்றி வந்து உடல் தளர்ந்தது. வேதம் நான்கிலும் மெய்ப்பொருளாகிய எம்பெருமான்தான் இன்று தன்னை ஆட்கொண்ட அந்தணர் என்பதை உணர்ந்த ஆரூரர், எப்படியும் என் ஐயனை இன்று காணவேண்டும் என்று அன்பின் மிகுதியால் நினைத்துக் கொண்டார். ஆலயத்தினை வலம் வந்தார். எங்கு தேடியும் தேவாதி தேவனைக் காணவில்லை. அப்பொழுது கோயிலுள் பேரொளி பிறந்தது. முதிய அந்தணர் வடிவிலே, வந்து ஆரூரரை அடிமைகொண்ட ஆனந்தக் கூத்தன், அருள் வடிவமாய்-ஆனந்த மூர்த்தியாய் - உமையாளுடன் விடை மீது காட்சி அளித்தார். ஆலயத்தில் மணி பலத்த ஓசையை எழுப்பியது. தேவாதி தேவர்கள் மலர்மாரி பொழிந்தனர். தேவகணங்கள் இசை முழக்கம் செய்தனர். ஆரூரானுக்கு ஆனந்தக் காட்சியளித்த அம்மையப்பர் திருவாய் மலர்ந்து, அன்பிற்கினிய ஆலால சுந்தரா! பூர்வத்திலேயே நீ என் அரிய தொண்டன், அன்று நீ மாதர் மயக்கத்தில் மதி இழந்தமையால் தான் மானிடப்பிறவி எடுக்க நேர்ந்தது. மீண்டும் பிறவிப் பெருங்கடல் உன்னைத் தொடராவண்ணம் உன் விருப்பப்படியே உன்னை தடுத்தாட் கொண்டோம் என்று அருளினார். தாய்ப்பசுவின் குரலைக் கேட்டு களிக்கும் கன்று போல் குழைந்தார் ஆரூரர்! அவருக்கு ஏற்பட்ட பேரானந்தத்திற்கு எல்லையே இல்லை. அவர் உடல் புளகம் போர்த்தது. தலைமீது தூக்கிய கரங்களை அவரால் தாழ்த்தவே முடியவில்லை. அப்படியே வணங்கி எழுந்தார். இறைவன் ஆரூரரை வாழ்த்தி, நீ எம்முடன் வன்மையாகப் பேசியதால் வன்றொண்டான் என்று உனக்குத் திருநாமம் சூட்டுகிறேன். எம்மை நீ தமிழ்ப்பாக்களால் அர்ச்சனை செய்வாயாக! என்று அன்பு கட்டளை இட்டார். சுந்தரர், ஆண்டவனின் கருணை வெள்ளத்தில் மூழ்கினார். பக்தி பிரவாகத்தில் மூழ்கி வழி தெரியாமல் தவித்தார். தடுத்தாட்கொண்ட தம்பிரான் தமிழாற் பாடுக என்றதால் சுந்தரர் சிந்தை மகிழ்ந்து எம்பெருமானின் சேவடிகளை வணங்கி நின்றார். நான்முகனாலும், திருமாலாலும் அறிய முடியாத வரும், ஐந்தெழுத்தின் உட்பொருளாக விளங்குபவருமாகிய சிவபெருமான், தம்மைப் பாடு என்று அருளியது கேட்டு, வேதியனாகி வந்து என்னை வழக்கினால் வென்று அடிமை கொண்ட தேவரீர் திருவுள்ளத்தை எளியோன் உணர்ந்து கொள்ளவில்லை. இருப்பினும் உள்ளத்துக்கு உணர்வு அளித்து, என்னை ஆண்டருளிய ஆதியே! அரனே! அருட்பெருங்கடலே! யான் யாதும் அறிந்திலேனே! இச்சிறியோன் யாது கூறிப் பாடவல்லேன்? தேவரீரது கருணையை என்னென்பேன்? என்று சுந்தரர் விண்ணப்பித்து, உருகி நின்றார். இறைவன் தம்பிரான் தோழரைப் பார்த்து, உன்னை ஆட்கொண்ட போது எம்மை பித்தா! என்று அழைத்தாய், ஆதலின் பித்தா என்று அடி எடுத்துப்பாடுவாயாக! என்று திருவாய் மலர்ந்து அருளினார். சுந்தமூர்த்தி சுவாமிகள், உள்ளமும் உடலும் பொங்கிப் பூரிக்க ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவாறே, பித்தா பிறைசூடி பெருமானே அருளாளா! என்று அடி எடுத்து, தடுத்தாட்கொண்ட தம்பிரான் மீது திருப்பதிகம் ஒன்றைப் பாடத் தொடங்கினார். சுந்தரரின் இசைத்தமிழ் இன்ப வெள்ளத்திலே மூழ்கி மிதந்த எம்பெருமான், சுந்தரர்க்கு திருவருள் புரிந்து மறைந்தார். சுந்தரர், சிந்தை மகிழ திருநாவலூர் திரும்பினார். அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமான் மீதும் திருப்பதிகங்களைப் பாடினார். மேல்எம்பெருமான், சுந்தரமூர்த்தி சுவாமிகளைத் தடுத்தாட் கொண்டதால் அவரது திருமணம் தடைப்பட்டது. சடங்கவியாருடைய அருந்தவப் புதல்வியும், ஆரூரரையே மனக்கோயிலில் தெய்வமாக இருத்தி, அவரது நினைவாலேயே சிவலோகத்தைச் சுலபமாகச் சேரும் பிறவாப் பெருவாழ்வைப் பெற்றார்கள். திருநாவலூர் கோயிலில் எழுந்தருளியிருக்கும் எம்பெருமானின் பாதகமலங்களைப் பணிந்து வழிபட்டு வந்த சுந்தரர், தலங்கள் தோறும் யாத்திரை செய்து பரமனைப் பைந்தமிழால் பாடிப் பரவசமடைய எண்ணினார். ஒரு நாள் அங்கிருந்து புறப்பட்டு, அருகேயுள்ள துறையூரை வந்தடைந்தார். துறையூருறையும் அண்ணலைப் பணிந்து, தவநெறியைத் தந்தருள வேண்டும் என்று பைந்தமிழ் பாப்பாடி வழிபட்டார். இறைவனும் தவநெறியை அவருக்கு அருளினார். பின்னர் அங்கிருந்து தில்லைக்குப் புறப்பட்டார். பெண்ணை ஆற்றைக் கடந்து திருவதிகை என்னும் தலத்தை அடைந்தார் சுந்தரர். அத்திருத்தலம், நாவுக்கரசரால் உலகம் போற்ற உழவாரப் படைக்கொண்டு, எம்பெருமானுக்கு சிவத்தொண்டு புரிந்த புண்ணியத்தலம். அதை உணர்ந்த சுந்தரர், தமக்கு அந்த இடத்தில் தங்குவதற்கு தகுந்த இடம் கிடையாது என்று அஞ்சியவாறு, அருகிலுள்ள சித்தவடம் என்னும் இடத்திற்கு சென்று தங்கினார். எம்பெருமான் திருநாமத்தை மனதில் நினைத்தபடியே துயின்றார்.அப்பொழுது, திருவதிகைப் பெருமான், முதிய வேதியர் வடிவம் தாங்கி, எவருமறியாவண்ணம் சுந்தரர் துயிலும் மடத்துள் எழுந்தருளினார். சுந்தரர் சிரமீது தமது திருவடி படுமாறு வைத்து, தாமும் தூங்குபவர் போல் கிடந்தார். பரமனின் பாதம்பட்டு சுந்தரர் விழித்தெழுந்தார். தமது தலையருகே, இரு திருப்பாதங்கள் இருக்க கண்டார். சுந்தரர் சற்று தலையை உயர்த்திப் பார்த்தார். அங்கு எவரோ படுத்திருக்கக் கண்டார். சுந்தரர் அவரை நோக்கி, ஐயா! உம்முடைய பாதங்கள் என் தலை மீது படும்படியாக வைத்து துயின்றது ஏனோ? என்று கேட்டார். அப்பொழுதுதான் விழித்தவர் போல் அப்பெரியவர், எம் முதுமையால் நடந்த இச்சிறு பிழையைப் பொறுத்திடல் வேண்டும் என்று அன்போடு கேட்டுக் கொண்டார். சுந்தரர், அப்பெரியவர் கூறியதின் உண்மையை உணர்ந்து, மற்றோர் இடம் சென்று முன் போல் துயில் கொண்டார். இம்முறையும் அம்மாயவன், வேண்டுமென்றே சுந்தரர் அருகே சென்று, அவருடைய தலை மீது தமது பாதம் படும்படியாக துயின்றார். சுந்தரர் முன்போல் எழுந்து பார்த்தார். பெரியவரின் பாதங்களைக் கண்டார். எது கருதி இவ்வேதியர் இவ்வாறு செய்கிறார்? என்று தனக்குள் எண்ணியவாராக அவரை நோக்கி, தாங்கள் யார்? என்று கேட்டார். என்னை நீ இன்னாரென்று அறியவில்லையே? என்று கூறியவாறு மாயமாக மறைந்தார். எம்பெருமான் மறைந்ததும் சுந்தரர் மனம் உருகினார். வேத முதல்வனே! மாதொரு பாகனே! ஆலமுண்ட அண்ணலே! உமது இத்திருவிளையாடல்களை அறியாது போனேனே! இறுமாப்படைந்தேனே! எம்பெருமானே! உமது பாதகமலங்கள் என் தலைமீது டப எத்துணைத் தவம் செய்தேனோ? தில்லை நடராஜத் தேவனே! எம்மை ஆட்கொண்ட அம்பலத்து அரசே! உமது திருவடிகளை இவ்வெளியோன் சிரமீது வைத்து தீட்சை தந்தருளினீரே! என்றெல்லாம் தம் அறியாமையை எண்ணி வருந்தினார். தம்மானை அறியாத சாதியார் உளரே என்று தொடங்கித் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். பின்னர் தாளாத மன வேதனையுடன் துயின்றார். மறுநாள் அங்கிருந்து தில்லைக்குப் புறப்பட்டு சென்றார். தில்லையின் எல்லையில் நின்று தூலலிங்கமாகிய கோபுரத்தைக் கண்டு ஆராக்காதல் பூண்டு நிலமதில் வீழ்ந்து வணங்கி, சிரமீது கரந்தூக்கி நின்றார் சுந்தரர். தில்லைவாழ் அந்தணர்கள் எம்பெருமானின் திருவருளால் சுந்தரரின் வருகையை முன்னதாகவே அறிந்திருந்தனர். அவர்கள் அவரை மிக்கச் சிறப்போடும் கோலாகலத்தோடும் எல்லையில் எதிர்கொண்டு வரவேற்றனர். சுந்தரர் தில்லைவாழ் அந்தணர்களை வணங்கி பேரன்புப் பெருக்கோடு சிற்றம்பலத்தை அடைந்தார். மேல்பொன்னம்பலத்தைக் கூப்பிய கரத்துடன் பன்முறை வலம்வந்த சுந்தரர் வேதச் சிலம்பு ஒலிக்க ஆனந்தத் தாண்டவம் ஆடும் சிற்றம்பலத்துப் பேரரசரின் திருச்சந்நதியைக் கண்டார். பக்திப் பெருக்கின் அருள் ஒளியில், விழிகளைத் தவிர மற்ற எல்லா அவயங்களும் ஒடுங்கிப் போயின. கண்களிலே பேரின்பம் பெருக ஈசனைக் கண்குளிரக் கண்டார்; உளம் குழைய சேவித்தார். மது உண்ட வண்டு போலானார். மனம், புத்தி, சித்தம், அகங்காரம் என்ற நான்கு கரணங்களின் செயல்களும், சிந்தையில் ஒன்றி ஒடுங்க, தில்லையம்பலத்தரசரின் ஆனந்தக் காட்சியில் மூழ்கினார்; பக்தி வெள்ளத்தில் பொங்கித் ததும்பினார்; பதிகங்கள் பல பாடி மகிழ்ந்தார் சுந்தரர்! அப்பொழுது வானவீதி வழியாக இறைவன், சுந்தரா! எம்மை சந்திக்க நீ ஆரூருக்கு வருவாயாக! என்று அசரீரியாக மொழிந்தார். எம்பெருமானின் இவ்வாணையைச் சென்னி மீது சுமந்து புறப்பட்ட ஆரூரர், தில்லையை விட்டுச் செல்ல மனமில்லாமல் எல்லையில் நின்றவாறே உளம் உருகினார். நமச்சிவாய நாமத்தை மனதிலே தியானித்துக் கொண்டே கொள்ளிட நதியைக் கடந்து புறப்பட்டார். சீர்காழியை அணுகிய சுந்தரர், ஞானசம்பந்தர் அவதாரம் செய்த அத்தலத்துள் செல்ல அஞ்சி நடுங்கினார். அந்நகரின் எல்லைப் புறத்தே நின்று வணங்கினார். அப்பொழுது, திருத்தோணியப்பர் உமையாளுடன் இடபத்தின் மேல் எழுந்தருளினார். அந்தப் பேரின்பக் காட்சியைக் கண்டுகளித்து கொண்டிருந்த சுந்தரர், தோணியப்பரை பதிகம் ஒன்றைப் பாடிப் போற்றினார். அங்கிருந்து புறப்பட்ட சுந்தரர், திருக்கோலக்கா, திருப்புன்கூர், மாயூரம், அம்பர்மாகாளம், திருப்புகலூர் முதலிய சிவத்தலங்களைத் தரிசித்தவண்ணம் திருவாரூரின் எல்லையை வந்தடைந்தார். நீராருஞ் சடைமுடிமேல் நிலவணிந்த அண்ணல், சுந்தரரின் வருகையை, திருவாரூர் சிவனடியார்களுக்கு முன்கூட்டியே உணர்த்த எண்ணினார்.ஐயன் அவ்வன்பர்களது கனவில் எழுந்தருளி, என் அழைப்பிற்கு இணங்கி எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்ட தொண்டன் நம்பியாரூரன் மகிழ்வுடன் இங்கு வருகின்றான். அவனை எதிர்கொண்டு அழைத்து வருவீர்களாகுக! என்று பணித்தார். அக்கணமே தொண்டர்கள், எம்பெருமானின் கட்டளையை, அவ்வூர் மக்கள் அனைவருக்கும் அறிவித்தனர். தொண்டர்களும், சிவ அன்பர்களும், சுந்தரரது பெருமையை வியந்து, அவரை வரவேற்க நகரை நன்கு அலங்கரித்தனர். அறம்பேணும் வீடுகளிலும், பக்தித்திறம் காணும் பெருவீதிகளிலும் மாலைகளும், தோரணங்களும், வாழை மரங்களும் அழகோடு கட்டினர். வீதிகளைக் கோமய நீரால் சுத்தப்படுத்திப் பனிநீரைப் பொழிந்தனர். வீட்டுத் திண்ணைகளில் சந்தனக் குழம்பால் மெழுகி, மாக்கோலமிட்டு, பொரிகளையும், பொற்சுண்ணங்களையும், முத்துக்களையும் பரப்பி, மணிவிளக்கும், சரவிளக்கும் நிறைகுடமும், பொற்பாலிகைகளும் வைத்தனர். ஆங்காங்கே பெரும் பந்தல்கள் அமைத்தனர். மலர்மாலைகளைக் கட்டித் தொங்கவிட்டனர். திருவாரூர் தேவலோகம் போல் காட்சி அளித்தது. பெருங்கடல் ஊருக்குள் நுழைந்தாற்போல் சிவ அன்பர்களும், தொண்டர்களும் பொங்கி வழிந்தனர். சுந்தரரைப் பூரண பொற்கும்ப கலசங்களோடு வணங்கி வரவேற்றனர். பேரிகை முழங்க மங்கல வாத்தியங்கள் ஒலி எழுப்ப சிவ சிவ என்ற வேத ஒலி விண்ணை முட்டியது. தேவர்கள் ஆகாயத்திலிருந்து ஆரவாரம் செய்து பூமழை பொழிந்தனர். தேவதுந்துபிகள் முழங்கின. கந்தர்வர்களும், தேவ தேவாதியர்கள் வாழ்த்தி துதி பாடினர். அன்பர்களும், அடியார்களும் புடைசூழ திருக்கோயிலுக்குப் புறப்பட்ட சுந்தரர், எந்தை இருப்பதும் ஆரூர்! அவர் எம்மையும் ஆள்வரோ? கேளீர்! என்ற பதிகத்தைப் பாடியவண்ணம் கோயிலுள் நுழைந்தார். தேவாசிரிய மண்டபத்தை வணங்கித் துதித்தார். எம்பெருமானை நினைத்து நினைத்து ஊனும், உயிரும் உருகி உருகி கண்ணீர் வடித்தார் சுந்தரர்! ஆறாக் காதலை ஆரூர்ப் பெருமான் மீது மழையெனப் பொழிந்தார். எல்லையில்லா பக்திப் பெருக்கிலே, சிரமீது கரங்குவித்து, பரம்பொருளின் பாதகமலங்களில் வீழ்ந்து வணங்கினார். செந்தமிழ்த்தேன் சிந்த பக்தி சுவையோடு, இன்னிசை கலந்த, பதிகம் ஒன்றைப் பாடினார். எம்பிரானுடைய திருவடி எனும் திருப்பாற்கடலிலே மூழ்கினார். அப்பொழுது திருவாரூர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமான், ஆலால சுந்தரனே! நாம் உமக்குத் தோழராகிவிட்டோம். அன்று உம்மைத் திருநாவலூர் மணப்பந்தலிலே தடுத்தாட் கொண்டோம். ஆனால், இப்பொழுது முன்போல் மணக்கோலம் பூண்டு வாழ்வில் என்றென்றும் மகிழ்ச்சியுடன் இருக்க அருள்கின்றோம் என்று வானவழியே அசரீரி வாக்கினால் உணர்த்தினார்! விண்வழியே வண்ணப் பிறையணிந்த வேணிபிரான் மொழிந்ததைக் கேட்டு சுந்தரர் சிந்தை குளிர்ந்தார். மேல்திருவாரூர்ப் பெருமானே! என்னை ஆட்கொண்டு, அருளிய உன் கருணையை என்னென்பது! உன் அன்பின் திறத்தினை எப்படித்தான் பாடிப் புகழ்வேன்? ஆரூர் அமர்ந்த திருமாமணியே! உம்மை எப்படி மகிழ்ந்து பாடுவேன் என்று இறைஞ்சினார். இறைவனால் தோழராக்கிக் கொள்ளப்பட்ட சுந்தரர் அன்று முதல் தம்பிரான் தோழர் என்ற திருநாமத்தைப் பெற்றார். அனைவரும், சுந்தரரை அவ்வாறே அழைப்பாராயினர். சுந்தரர் திருவாரூரில் சிலகாலம் தங்கியிருந்து, தியாகேசப் பெருமானை இனிது சேவித்து, தேனினும் இனிய தண் தமிழ்ப் பாக்களால், பாமாலை சாத்தினார். கைலாய மலையிலே, ஆலால சுந்தரர் விரும்பிப் பார்த்த உமாதேவியாரின் சேடியர் இருவருள் ஒருத்தியாகிய கமலினி என்பவள், திருவாரூரில், உருத்திர கணிகையர் மரபில் பரவையார் என்னும் பெயருடன் பிறந்து வளர்ந்து வரலானாள். பரவையார், இளமை முதற்கொண்டே சிவனாரிடத்தும், அவர் தம் அடியார்களிடத்தும் எல்லையில்லா பக்தி கொண்டிருந்தாள். தினந்தோறும் வைகறைத் துயிலெழுந்து, தூய நீராடி, கோயிலுக்கு சென்று தியாகேசப் பெருமானை தரிசித்து வந்தாள் பரவையார். வழக்கம்போல பரவையார் தமது சேடிகளுடன் கோயிலுக்கு வந்திருந்தாள். அது சமயம் சுந்தரரும், அன்பர்கள் புடைசூழ ஆலயம் வந்திருந்தார். கோயிலுள் பரவையாரும் சுந்தரரும் ஒருவரையொருவர் நேருக்கு நேர் நோக்குகின்ற சந்தர்ப்பம் ஏற்பட்டது. சுந்தரர், பரவையாரின் அழகைக் கண்டு சற்று நேரம் மெய் மறந்து நின்றார். பரவையாரும் சுந்தரரின் சுந்தர ரூபலாவண்யத்தில் தன்னை மறந்து ஒரு கணம் சிலையாக நின்றாள். இருவரது கண்களும் சந்தித்தன. உள்ளங்களும் உறவாடின. சுந்தரரின் அழகிலே மதிமயங்கிய பரவையார், முருகப்பெருமானோ? அன்றி மன்மதனோ? வித்தியாதரனோ? அரனாரின் அருள்பெற்ற அடியவனோ? இவர் இன்னாரென்பதே புரியவில்லையே! எந்த ஆடவரையும் தீண்டாத என் மனம், எப்படியோ இவர்பால் சென்று பனிபோல் ஓடிவிட்டதே! என்றெல்லாம் மனத்தால் எண்ணி வியந்தாள். காதல் கனிந்துருக, தளிர்க்கால்கள் தளர்நடை பயில, தன் உள்ளத்தை அவர்பால் ஈந்து இல்லத்திற்கு புறப்பட்டாள் பரவையார்! பரவையார் சென்ற பின்னர், மனதிலே அவளை நினைத்துருகலானார் சுந்தரர். அருகில் இருந்தோரைக் கேட்டு பரவையாரின் பெயரையும், அவள் இருப்பிடத்தையும், பெற்றோர்களையும் பற்றித் தெரிந்து கொண்டார் சுந்தரர்! பக்தி உள்ளத்தில் காதல் விதை ஊன்ற, பரமன் நினைவோடும், பரவையார் நினைவோடும் இறைவனை வணங்கி, தேவாசிரிய மண்டபத்தை வந்தடைந்தார். பரவையார் நினைவாக அங்கேயே தங்கிவிட்டார் சுந்தரர். பகலவன் மேற்குக் கடலில் மறைந்தான். எம்பெருமானின் திருவைந்தெழுத்தை உணரப் பெறாத அறிவற்ற வஞ்சகர் நெஞ்சம்போல், பெரிய வானத்தில் இருள் சூழந்து படர்ந்தது. திருவெண்ணீற்றின் தூய ஒளி போன்ற திங்கள், பாருக்குப் பாலைப் பொழிந்த வண்ணம் வானத்திலே பொங்கி எழுந்தது. நிலவிலே அல்லி மலர்ந்தது. குளிர் தென்றல் மிதமாக வீசிக் கொண்டிருந்தது. தேவாசிரிய மண்டபத்திலிருந்த சுந்தரர்க்கு குளிர் நிலவும், குளிர் தென்றலும், காமன் தொடுத்த கணையால் துன்பத்தை கொடுத்தன. அதே வெள்ளி நிலவின் பொன்னொளியில் பரவையாரும், நிலாமுற்ற மேடையில் நவரத்தினங்களால் அழகு செய்யப்பட்ட அழகிய மலர் தூவிய மஞ்சத்தில், தோழியருடன் அமர்ந்திருந்தாள். பரவையாருக்கும் சுந்தரர் நிலைதான்! பரவையார் தோழியரைப் பார்த்து, என் உயிர்த்தோழியர்களே! நாம் பூங்கோயிலுக்குள் நுழையும் போது சந்தித்த அந்த சுந்தர அழகன் யார்? என்று ஏக்கத்தோடு வினவினாள். அதற்கு தோழியருள் ஒருத்தி ஓ! அவரா தலைவி! அவர்தான் தம்பிரான் தோழர் என்பவர். அவர் எம்பெருமான் திருவருளால் தடுத்தாட்கொள்ளப்பட்டவர். எம்பெருமானின் அன்புத்தொண்டர்! உங்கள் சுந்தரர்-நம்பியாரூரர்! என்று விடையிறுத்தாள். தோழியர் மொழிந்ததைக் கேட்டு, பரவையார் சுந்தரர் மீது மேலும் மையல் கொண்டாள். காதல் மேலிட்டு பெருமூச் செறிந்தாள். மன்மதன் தொடுத்த மலர்க்கணையில் மனம் வாடி மலர்ப்படுக்கையில் மயங்கிய நிலையில் வீழ்ந்தாள் பரவையார். உணவு செல்லவில்லை; உறக்கம் கொள்ளவில்லை, மலர் பிடிக்கவில்லை; பஞ்சணை நொந்தது. மனம் வாடினாள். வருந்தினாள். காதல் கடலில் வீழ்ந்து கரையேறமுடியாது தவித்தாள். மேல்ஆலாலசுந்தரரையும், கமலினியையும் இம்மண்ணுலகில் பிறக்குமாறு கட்டளையிட்டருளிய பெருமான் அன்றிரவு தம் அடியவர் கனவில் எழுந்தருளி, பரவையாருக்கும், சுந்தரருக்கும் திருமணம் செய்து வையுங்கள் என்று பணித்தார். பின்னர் இறைவன் சுந்தரர் கனவில் எழுந்தருளி, பரவையாரை உனக்கு மணம் செய்து வைக்குமாறு எமது அடியவர்கட்கு ஆணையிட்டுள்ளோம் என்று அருளியபடியே, பரவையார் கனவிலும் தோன்றி, உன்னைத் தம்பிரான்தோழன் திருமணம் புரிந்து கொள்வான் என்றும் திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். பொழுது புலர்ந்தது! சிவநேச செல்வர்கள் திரளாக வந்து சுந்தரரை வணங்கினர். இறைவன் கனவிலே தோன்றி தங்களுக்கு பணித்த அன்பு கட்டளையைக் கூறினர். சுந்தரர் அகமும் முகமும் மலர்ந்தார். அதுபோலவே அவ்வன்பர்கள், பரவையாரையும் சந்தித்து சர்வேசுவரனின் சித்தத்தைச் சொல்லினர். பரவையாரும் பரவசம் மிகக் கொண்டாள். அனைவரும் இவர்கள் திருமணத்திற்கான ஏற்பாடுகளைத் தொடங்கினர்.ஓர் சுபயோக சுபமுகூர்த்தத்தில் மண்ணும் விண்ணும் வியக்கும் வண்ணம் சுந்தரர்க்கும் பரவையாருக்கும் மிக்க சிறப்புடன் திருமணம் நடந்தேறியது.பரவையாரும் சுந்தரரும் மலரும் மணமும் போல-மகரயாழும் இசையும் போல-அடியார்களும் திருவெண்ணீறும் போல-இல்லறத்தில் இணைந்தனர்.இருவரும் சிவபக்தியுடன் இல்லறத்தை இனிது நடத்த வரலாயினர். இல்லற தர்மப்படி அடியார்களுக்கு விருந்தளிக்கும் திருத்தொண்டினைத் தவறாது நடத்தினர் இத்தெய்வீகத் தம்பதிகள். அடியார் சேவையும், ஆண்டவன் சேவையும் அவர்களுக்கு அகமகிழ்வை கொடுத்தது. ஒருநாள் சுந்தரர் மட்டும் தனியாக கோயிலுக்கு வந்தார். கோயிலிலுள்ள தேவாசிரிய மண்டபத்தில் தொண்டர்கள் பலர் கூடியிருந்தனர். இறைவனை வழிபடுவது எளிது; அவர்தம் அடியார்களை வழிபடுவது அரிது; அடியார்களை வணங்குவதற்குரிய தகுதியும், பக்தியும் நமக்கு ஏற்படவில்லையே என்று எண்ணினார். அவர்களை மனத்தால் போற்றினார். இவ்வடியார்களுக்கெல்லாம் நான் அடியேனாகும் நாள்தான் என்றோ? என்று எண்ணியவாறு, அடியார்களை மனத்தால் தியானித்தவாறு சற்று ஒதுங்கிச் சென்றார். தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருந்த அடியார்களுள் விறல் மிண்ட நாயனாரும் ஒருவர். இவர் சுந்தரரது செயலைத் தவறாகப் புரிந்து கொண்டார். சுந்தரது, ஒப்பற்ற நல்ல எண்ணத்தை உணர முடியாது போன விறல்மிண்டர் அவர் மீது சினங்கொண்டார். சுந்தரர் செவிகளில் விழுமாறு, முதலில் வணங்கத்தக்க தேவாதி தேவர்கள் இந்த தேவாசிரிய மண்டபத்தில் கூடியிருப்பதைப் புறக்கணித்துவிட்ட கோயிலுக்குள் சென்று என்ன பயன்? வன்றொண்டன் அடியார்களுக்கு புறம்பானவன். அவனை வலிய ஆட்கொண்ட வீதிவிடங்கப் பெருமானும் இவ்வடியார்களுக்கு புறம்பானவன் என்று கடுமையாக சொன்னார். விறல்மிண்டர் மொழிந்தது கேட்டு, சுந்தரர், விறல்மிண்டர் அடியார்களிடத்து கொண்டுள்ள பக்தி எத்துணை சிறப்புடையது என்று எண்ணிப் பெருமை கொண்டார். அந்த எண்ணத்துடனேயே கோயிலுக்குள் சென்றார். வீதிவிடங்கப் பெருமானை தொழுது, சுவாமி! அடியார்களுக்கெல்லாம் அடியானாகும் பேரின்ப நிலையைத் தந்தருள வேண்டும்! என்று பிரார்த்தித்தார் சுந்தரர். அக்கணமே எம்பெருமான் எழுந்தருளி, தமது அடியார்கள் பெருமையையும், திறத்தினையும் மொழிந்து, அவர்களைப் பற்றி பொருள்மிக்க பைந்தமிழ் பாக்களால் பாடுமாறு திருவாய் மலர்ந்தார். ஐயனின் ஆணைகேட்டு, அஞ்சி நடுங்கிய ஆரூரர், ஐயனே! திருத்தொண்டர்களைப் பாடுவதற்கு இந்த எளியேன் எவ்வித தகுதியும் உடையவன் அல்லன். அடியார்களின் வரலாற்றினையும், பெருமையினையும், பக்தியின் சிறப்பினையும் சற்றும் அறியாதவனாகிய நான், எவ்வாறு அவர்களை விரித்துரைக்கும் திருப்பதிகத்தைப் பாடுவேன்? ஐயனே! இவ்வடியார்களைத் துதித்து இவர்களின் பெருமையையும் புகழையும் செந்தமிழ்ப் பாக்களால் பாடிடும் திறத்தினை அடியேனுக்கு தந்தருளல் வேண்டும்! என்று பக்திப் பெருக்கோடு இறைஞ்சி நின்றார். மேல்உலகம் உய்ய, வேதங்களை அருளிச் செய்த எம்பெருமான், தில்லைவாழ் அந்தணர் தம் அடியார்க்கும் அடியேன் என்று அடி எடுத்துக் கொடுத்து பாடும்படி பணித்தருளினார். சுந்தரர் மெய்யுருக, பரமனின் பாதகமலங்களைப் பணிந்தவாறு, தேவாசிரிய மண்டபம் சென்றார். திருத்தொண்டர்களை வணங்கினார். எம்பெருமான் திருவருளினால் தொண்டர்களின் தூய சரித்திரத்தைத் தொகுத்து விரித்துக்கூறும் திருப்பதிகத்தை இனிய தமிழில் பாடி மனம் குளிர்ந்தார் சுந்தரர்! அத்திருப்பதிகமே திருத்தொண்டத் தொகையாகும். இவ்வாறு, எம்பெருமான் திருவருளினாலே திருத்தொண்டத்தொகையைப் பாடியருளிய சுந்தரர், முப்பொழுதும் முக்கண் அண்ணலின் தாள் பணிந்து பரவையாரோடு இனிது வாழ்ந்து வந்தார். அந்நாளில், நாவலூரை அடுத்துள்ள குண்டையூர் என்னும் தலத்தில் பரமனிடத்தும், அடியார்களிடத்தும் பேரன்புடைய குண்டையூர்க்கிழார் என்பவர் வாழ்ந்து வந்தார். இப்பெரியார், சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் எல்லையில்லா அன்பும், பக்தியும் பூண்டிருந்தார். தொண்டர்களுக்கு விருந்தளித்துத் திருத்தொண்டு புரிந்துவரும் சுந்தரமூர்த்தி நாயனாரின், திருத்தொண்டிற்கு தேவையான அளவு நெல், பருப்பு, வெல்லம் முதலிய பொருட்களை குண்டையூர்க்கிழார், தட்டாமல் அனுப்பிக் கொண்டிருந்தார். ஒருமுறை மழையின்றி பயிர்கள் வாடின. நாட்டில் பஞ்சம் ஏற்பட்டது. இதனால், பரவையார் மாளிகைக்கு குண்டையூர் கிழாரால் வழக்கம்போல் தானியங்களைத் தாராளமாக அனுப்ப முடியாது போனது. அப்பெரியார் மனம் புண்பட்டார். எம்பெருமானிடம் தமது குறையை சொல்லி இறைஞ்சினார். கண்ணுதலார் அடியார் கனவில் எழுந்தருளி, அன்பு உளம் வருந்தற்க! சுந்தரர் பொருட்டு உமக்கு வேண்டியளவு நெல்லினைத் தந்துள்ளோம் என்று திருவாய் மலர்ந்தார். எம்பெருமான் குபேரனுக்கு கட்டளையிட்டு வானத்தை மறைக்குமளவிற்கு, நெல்லை மலை போல் குண்டையூர் முழுவதும் குவிந்திடச் செய்தார். குண்டையூர்க்கிழார் அந்த நெல்மலையைக் கண்டு அதிசயித்தார். சுந்தரரின் பெருமையையும், எம்பெருமானின் திருவருளையும் எண்ணிப் பார்த்து, மகிழ்ந்த குண்டையூர்க் கிழார், இந்நெல் மலையை எங்ஙனம் திருவாரூர் பரவையார் திருமாளிகைக்கு அனுப்புவது என்று நினைத்து திகைத்தார். இத்தகைய வியக்கத்தக்க இறைவனின் அருட்கருணையை, சுந்தரமூர்த்தி சுவாமிகளிடம் தெரிவிக்கும் பொருட்டு திருவாரூருக்கு புறப்பட்டார் குண்டையூரார். அதற்குள் எம்பெருமான், சுந்தரமூர்த்தி நாயனார் கனவில் எழுந்தருளி, குண்டையூரில் நெல்லை மலை போல் குவித்துள்ளோம் என்று அருள்வாக்கு சொன்னார். குண்டையூரில் எம்பெருமான் நடத்திய அதிசயத்தை காணும் பொருட்டு, குண்டையூருக்குப் புறப்பட்டார் சுந்தரர்.வழியிலேயே அடியார்கள் இருவரும் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டனர். ஆரத்தழுவி அகமகிழ்வு பூண்டனர். குண்டையூர்க்கிழார் சுந்தரரை வணங்கி எதிர் கொண்டு அழைத்து, தேவரீருக்கு எவ்வித இடர்பாடுமின்றி நெடுங்காலமாக அடியேன், செய்துவரும் திருத்தொண்டிற்கு இப்பொழுது சற்று தடை ஏற்பட்டிருந்தது. அது கண்டு, கண்ணுதலார் கருணைகாட்டி, தேவரீர் அன்பிற்காக எமக்கு நெல்மலையைக் குவித்தருளினார். அந்த நெல்மலை, மனிதர்களால் அகற்றப்பட முடியாத அளவிற்கு ஓங்கி உயர்ந்து காணப்படுகிறது. அதனை எவ்வாறு தேவரீர் மாளிகைக்கு அனுப்புவது! என்று விண்ணப்பம் செய்தார். சுந்தரர் அடியாரின் அன்பிற்கு தலைவணங்கினார். அவரோடு இனிது உரையாடிய வண்ணம் குண்டையூர் வந்தடைந்தார் சுந்தரர்! நெல்மலையைக் கண்டு வியந்தார்! அவர், குண்டையூர்க்கிழாருடன், திருக்கோளிலி என்னும் பகுதிக்கு சென்றார். அங்கு எழுந்தருளியிருக்கும் இறைவனைப் பணிந்து, நெல்மலையை திருவாரூருக்கு சேர்க்கும் பொருட்டு, நீள நினைத்தடியே எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். அப்பொழுது வானத்திலே அசரீரி ஒலித்தது. மேல்இன்றிரவு நம்முடைய பூதகணங்கள், பரவையார் மனையளவு மட்டுமின்றி திருவாரூர் முழுவதும் நிறையுமாறு நெல் மலையினைக் கொண்டு போய் சேர்க்கும். இறைவன் விண்வழியே மொழிந்தது கேட்டு சுந்தரர் மனம் மகிழ்ந்தார். சுந்தரர், குண்டையூர்க்கிழார் இல்லத்திற்கு சென்று அவரோடு அமுதுண்டு மகிழ்ந்து இருந்தார்.மறுநாள் குண்டையூர்க் கிழாரிடம் விடை பெற்றுக் கொண்டு திருவாரூருக்கு புறப்பட்டார் சுந்தரர். அன்றிரவு சிவபெருமானின் ஆணைப்படி பூதகணங்கள் குண்டையூரிலுள்ள நெல்மலையை எடுத்துச் சென்று பரவையார் மாளிகையிலும், திருவாரூர்ப் பெருவீதிகளிலும் நிரப்பினர். பொழுது புலர்ந்தது. ஊர் முழுவதும் நிரம்பியிருக்கும் நெற்குவியலை கண்ட மக்கள், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் பெருமையை வானளாவப் புகழ்ந்தனர். சுந்தரமூர்த்தி சுவாமிகள், அவரவர் வீட்டின் முன்னே உள்ள நெற்குவியலை அவரவர்களே, தத்தம் இல்லத்தில் சேமித்து வைத்துக் கொள்ளலாம் என்று ஊர் முழுவதும் அறிவித்தார். சுந்தரர், உலகம் வியக்கப் பல அதிசயங்களை நிகழ்த்திய வண்ணம் புகழ் பொங்க வாழ்ந்து வந்தார். இந்நாளில், குண்டையூர்க்கிழாரைப் போலவே, ஆரூரரிடம் உழவலன்பு பூண்டுள்ள அன்பன் ஒருவர் திருவாரூரை அடுத்துள்ள திருநாட்டியாத்தான் குடி என்னும் திருத்தலத்தில் வாழ்ந்து வந்தார். அவர் பெயர் கோட்புலி நாயனார். ஒருமுறை கோட்புலி நாயனார் விரும்பி அழைத்ததன் பொருட்டு, சுந்தரர், பல சிவத்தலங்களை வணங்கியவாறு திருநாட்டியத்தன் குடிக்குப் புறப்பட்டார். கோட்புலியார், சுந்தரரை எதிர்கொண்டு அழைத்து மகிழ்வுடன் தமது திருமாளிகைக்கு அழைத்து சென்றார். கோட்புலியார், சுந்தரரை நவரத்தின மணிகளினாலாகிய பசும்பொற் பீடத்தில் அமரச் செய்து அவரது பாதகமலங்களைத் தூய நீராட்டினார். அப்பாத நீரை தம் மீதும், தமது குடும்பத்தார் மீதும் தெளித்துக் கொண்டார். மாளிகை முழுவதும் தெளித்தார். கலவைச் சந்தனம், அகிற் சாந்து, கஸ்தூரிக் குழம்பு வகைகள், பலவித பரிவட்டங்கள் முதலியவற்றையும் வரிசையாக வைத்து முறைப்படி வழிபட்டுத் தொழுதார். திருவமுது செய்வித்து பெருமகிழ்ச்சி பூண்டார். தமது அருந்தவப் புதல்வியர்களாகிய சிங்கடியார், வனப்பகையார் இருவரையும் சுந்தரர் திருவடிகளை வழிபடச் செய்தார். எம்மையாட்கொள்ளும் எந்தையே! இவ்விருவரும் எம் புதல்வியர்கள்! இவள் சிங்கடியார். இவள் வனப்பகையார். இவ்விருவரையும் ஐயன் அடிமைகளாக ஏற்றுக்கொண்டு, அவர்கள் உய்யுமாறு அருள்புரிதல் வேண்டும் என்று பணிவன்புடன் கேட்டுக் கொண்டார் கோட்புலியார். சுந்தரர் அப்பெண்மணிகளை வாழ்த்தி தம்முடைய மக்களாக ஏற்றுக் கொண்டார். அவர்கள் வேண்டுவனவற்றை எல்லாம் அளித்தார். எல்லோருமாக சிவாலயத்துக்கு சென்றனர். சுந்தரர், கோட்புலி நாயனாரின் தொண்டினை சிறப்பித்து பதிகம் ஒன்றைப் பாடினார். ஓரிரு தினங்களில், அவரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்ட சுந்தரர், திருவலிவலம் வழியாக திருவாரூரை வந்தடைந்தார். திருவாரூரில் தங்கியிருந்து அனுதினமும் தியாகேச பெருமானைத் தண் தமிழ்ப் பதிகங்களால் வழிபட்டு வந்தார். திங்கள் பல தாண்டின. திருவாரூரில் பங்குனி உத்திரத் திருவிழா நெருங்கியது. ஆண்டுதோறும் அம்பலத்தரசரின் இவ்வானந்தத் திருவிழா, விண்ணவரும் மண்ணவரும் வியக்கும் வண்ணம் மிக்க கோலாகலத்துடன் நடைபெறும். இத்திருவிழா காலத்தில் பரவையார், பரமனடியார்களுக்கு தான தருமங்கள் செய்வாள். அம்பலத்திலே ஆண்டவன் சன்னிதானத்தில் அழகு நடனம் ஆடிக் களிப்பாள். இவ்வாண்டும் அதுபோலவே அடியார்களைப் போற்றுதற்குத் தேவையான பொன்னும், பொருளும் திரட்ட சுந்தரர் அன்பர்களோடு பரவையாரிடம் விடைபெற்றுக் கொண்டு, புகலூருக்கு புறப்பட்டார். புகலூர் தலத்தை அடைந்த சுந்தரர், அவ்விடத்தில் குடிகொண்டிருக்கும் சடைமுடிப் பெருமானிடம், தாம் வந்துள்ள கருத்தினை கூறி பதிகம் ஒன்றைப் பாடினார். அன்றிரவு ஆரூரர், அன்பர்களுடன், ஆலயத்திற்கு அருகிலுள்ள எந்த மடத்திலும் சென்று துயிலாமல் முற்றத்தில் துயில்கொள்ள விருப்பங்கொண்டார். திருக்கோயிலின் புறத்தே, திருப்பணிக்காக அடுக்கி வைக்கப்பட்டிருந்த சுட்ட செங்கற்கள் பலவற்றைக் கொணர்ந்து உயரமாக பீடம் அமைத்து அதன் மீது தமது வெண்பட்டாடையை விரித்து படுத்துக் கொண்டார். சுந்தரர், துயிலுணர்வு நீங்கி எழுந்து பார்த்தபோது, எம்பெருமானுடைய பேரருளினால் செங்கற்கட்டிகள் அனைத்தும் செம்பொன் கட்டிகளாக திகழக் கண்டார். பேரின்பப் பெருக்குடன் அகமகிழ்ந்த சுந்தரர், அன்பர்களுடன் ஆனந்தக் கூத்தாடினார். பைந்தமிழ்ப் பாக்களால் பரமனின் பாதங்களைப் பணிந்தார். அங்கிருந்து பொற்குவியலுடன் சுந்தரர் பல சிவத்தலங்களை சேவித்த வண்ணம் திருவாரூரை வந்தடைந்தார். பரவையாரிடம் புகலூர் பெருமானின் திருவருளை வியந்து கூறி ஆனந்தம் பூண்டார். மேல்ஒருசில நாட்களில், மீண்டும் பரவையாரிடம் விடை பெற்றுக்கொண்டு புறப்பட்டார். நன்னிலத்துப் பெருங்கோயிலை வந்தடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் பெருமானின் திருவடியைத் தொழுது பதிகப் பாமாலையினைப் புனைந்து பணிந்தேத்தினார். அன்றிரவு எம்பெருமான், சுந்தரரின் கனவில் எழுந்தருளி திருமழிப்பாடிக்கு வர மறந்தனையோ? என்று திருவாய் மலர்ந்து அருளி மறைந்தார். சுந்தரர் விழித்தெழுந்தார். எம்பெருமானின் ஆணை கேட்டு புளகாங்கிதமடைந்தார். அப்பொழுதே அன்பர்களுடன் புறப்பட்டு, காவிரியைக் கடந்து, வடகரையை அடைந்து திருமழப்பாடி என்னும் தலத்தை வந்து சேர்ந்தார். அங்குள்ள பெருமானைப் பணிந்து, பொன்னார் மேனியனே புலித்தோலையரைக் கசைத்து எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடி பெருமையுற்றார். ஓரிரு நாட்களில் அங்கிருந்து புறப்பட்டார். காவிரியாற்றின் இருபக்கங்களிலும் உள்ள திருப்பதியங்களை வழிபட்ட வண்ணம் மேற்கு நோக்கி சென்ற திருவானைக்காவை அடைந்தார். அத்தலத்திலுள்ள தொண்டர்கள் ஆரூரரை வரவேற்று மகிழ்ந்தனர். அன்பர்கள் புடைசூழ, ஆரூரர் அருள் சுரக்க பக்திப் பாடல்களை பாடிக்கொண்டே கோயிலை அடைந்து, பெருமானை வழிபட்டு பதிகங்கள் பல பாடினர். பிறகு அவ்வூரை விட்டுப் புறப்பட்டார். திருப்பாச்சிலாச்சிரமம் என்னும் தலத்தை அடைந்தார். பரமனிடம் பொன் வேண்டிப் பாடினார்! பரமன் சுந்தரரை சோதிக்கக் கருதி பொன்னை கொடுத்தருளாது நின்றார். இறைவனையே தமது தோழராய் கொண்ட சுந்தரர் பொன் தராத அரனை-அவரிடம் தமக்குள்ள அன்பின் உரிமையால் கடிந்து கொள்ளக் கருதி, வைத்தனன் தனக்கே தலையுமென் நாவும் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஒவ்வொரு பாடலின் கடைசி அடிதோறும், இவர் இல்லாமற் போய்விட்டாரோ? என்று பொருள்படுமாறு, இரவலா தில்லையோ பிராமனார் என்று இகழ்ந்து பாடினார். ஆனால், சுந்தரருக்கே மனம் பெறாத காரணத்தினால், இத்திருப்பதிகத்தின் திருக்கடை காப்பில் ஏசின அல்ல எனப்பாடி தாம் இகழ்ந்துரைத்ததைப் பொறுத்தருள்படி வேண்டினார். சுந்தரருடைய பேரன்பின் சக்தியில் உளம் இரங்கிய பெருமான், பொற்குவை கொடுத்தருளினார். சுந்தரர், எம்பெருமான் அருளிய பொற்குவையடன், புறப்பட்டு திருப்பைஞ்ஞலியை அடைந்தார். அரனார் மலரடி போற்றினார். எம்பெருமான் சுந்தரர்க்கு கங்காள வேடத்துடன் திருக்காட்சி கொடுத்து அருளினார். சுந்தரர், உள்ளம் உருக பதிகம் ஒன்றைப் பாடினார். அங்கிருந்து புறப்பட்டு திருஈங்கோய் மலையைத் தரிசித்துக் கொண்டே கொங்கு நாட்டில் காவிரியின் தென்கரையில் விளங்கும் திருப்பாண்டிக் கொடுமுடி என்னும் திருத்தலத்தை வந்தடைந்தார். அங்கு எழுந்தருளியிருக்கும் கொடுமுடி நாதரைப் போற்றி மற்றுப் பற்றெனக் கின்றி நின்றிருப்பாதமே மனம் பாவித்தேன் எனத் தொடங்கும் நமச்சிவாயப் பதிகம் ஒன்று பாடி உலகமெல்லாம் உய்ய அருள் செய்தார். பின்னர், காஞ்சி நதிக்கரையில் அமைந்துள்ள திருப்போரூர் கோயிலை வந்தடைந்தார். அங்கு எம்பெருமானைக் காணவில்லை. மனம் புண்பட்டார். அங்கிருந்த நந்தி தேவரின் குறிப்பால், எம்பெருமான் இருக்குமிடத்தை அறிந்துகொண்ட சுந்தரர் வயற்பக்கம் வந்தார். அங்கு அவர் கண்ட காட்சி அவரை மெய்மறக்க செய்தது! வயற்புறத்தில் திரிபுரம் எரித்தவன், உழவுத்தொழில் செய்யும் பணியாளனாகவும், அவன் உடம்பில் பாதியைப் பெற்ற பார்வதி தேவியோ பணிப் பெண்ணாகவும் திருக்கோலம் கொண்டிருந்தார்கள். இலக்குமி, சரஸ்வதி, இந்திராணி முதலிய தேவியர்கள், சிவகணத் தலைவர்களும் வயலில் உழுவதும், நீர் பாய்ச்சுவதும் நாற்று நடுவதுமாக இருந்தனர். மேல்மதுரையிலே திருவிளையாடல்கள் பலபுரிந்த திருசடையான், இன்று தம் பொருட்டு உழவன் திருக்கோலம் பூண்டு நடத்தும் திருக்கூத்து கண்டு ஐயன் மீது ஆராக் காதலுடன் மறையவனரசன் செட்டி தன் தாதை எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். இங்ஙனம் வயலில் வருந்தி உழுவது யார் பொருட்டு ஐயனே என்று நிலத்தில் வீழ்ந்து பணிந்து வினவியதும், எம்பெருமான் தில்லையம்பலத்திலே நின்றாடுகின்ற தமது நர்த்தனக் கோலத்தினைச் சுந்தரர்க்கு கோயிலுள் காட்டியருளினார். அங்கு சில நாட்கள் தங்கியிருந்து இறை வழிபாடுகளை இடையறாது நடத்திய சுந்தரர் அவ்விடத்தை நீத்து திருவெஞ்சாமக்கூடல், திருக்கற்குடிமலை, திருப்புறம்பய் வழியாக சிவதரிசனம் செய்துகொண்டே கூடலையாற்றூர் என்னும் பதியை அணுகினார். அவ்வூர் அருகே சென்றவர் அங்கு எழுந்தருளியிருக்கும் எம்பெருமானை வணங்காமல், முதுகுன்றத்தினை நோக்கிப் புறப்படலானார். அப்பொழுது எம்பெருமான் அந்தணர் வடிவம் கொண்டு சுந்தரர் முன்னால் எதிர்ப்பட்டார். சுந்தரர் அவரிடம், ஐயனே! திருமுதுகுன்றூருக்கு செல்லும் வழியினை எமக்கு சொல்லும் என்று வினவ அவ்வேதியர், இவ்வழி கூடலையாற்றுக்குப் போகும் வழியாகும் என்று விடை பகர்ந்த வண்ணம் சுந்தரர்க்கு அவ்வூர் எல்லைவரை வழித்துணையாக வழிகாட்டிச் சென்று மறைந்தருளினார். இஃது இறைவனின் திருவருட்செயல்தான் என்று எண்ணிய சுந்தரர் கூடலையாற்றுப் பெருமானைத் தொழுது பாமாலைப் பாடி பின்னர் முதுகுன்றூரை வந்தடைந்தார். முதுகுன்றூர் திருக்கோயிலின் கோபுரத்தை, எல்லையில் நின்றவண்ணம் தொழுது போற்றிய சுந்தரர் திருக்கோயில் புகுந்து, வலம் வந்து வணங்கி, நஞ்சிடை எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். பொருள் வேட்கையால் பரமனின் பதம் போற்றி மெய்யை முற்றுப்பொடி பூசி என்று தொடங்கும் நம்பி என்ற திருப்பதிகத்தைப் பாடினார். பனிமதிச் சடையார், சுந்தரரின் பாமாலையில் திருவுள்ளம் மகிழ்ந்துருகி, பன்னிரெண்டாயிரம் பொற்காசுகளை கொடுத்தருளினார். பொற்காசுகளைப் பெற்று பெருமகிழ்ச்சி பூண்ட அன்பன், இவற்றை எடுத்து செல்வது எங்ஙனம்? என்று சித்தம் கலங்கியபோது, எம்பெருமான் விண்வழியே, இப்பொற்காசுகளை மணிமுத்தாற்றில் மூழ்கச் செய்து திருவாரூர் திருக்குளத்திலே எடுத்துக்கொள்வாயாக என்று அசரீரி வாக்கால் அருளி மறைந்தார். சுந்தரர், பொன்னின் ஒரு பகுதியை அடையாளமாக வெட்டி எடுத்துக்கொண்டு மணிமுத்தாற்றில் பொன்னை விடுத்தார். அத்திருவிடத்தில் சில காலம் தங்கியிருந்து தொண்டுகள் பல புரிந்து தொடர்ந்து தமது சில யாத்திரையைத் தொடங்கினார். முதுகுன்றைவிட்டுப் புறப்பட்டசுந்தரர் தில்லையிலே நடனம்புரியும் பரமனின் அற்புத நடனத்தைக் கண்டு களித்து மகிழப் பெரு விருப்பங்கொண்டார்.சித்தத்தை தில்லையில் இருத்திய சுந்தரர், கடம்பூர் முதலிய சிவதலங்களை வணங்கி வழிபட்ட வண்ணம், பேரின்ப வீடு காண அரும்பணி ஆற்றும் அந்தண சிறாக்கள் கூடிவாழும் தில்லையம்பதியை வந்தடைந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் சுந்தரரை வரவேற்று அம்பலத்துள் அழைத்துச் சென்றனர். சுந்தரர் கண்ணீர் பெருக அம்பலத்தரசின் திருவருட்தாளினை வீழ்ந்து வணங்கி, மடித்தாடு மடிமைக்கண் அன்றியே என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். எம்பெருமானைப் பார்த்து பார்த்து பரவசமடைந்தார். தில்லைவாழ் அந்தணர்களோடு சிலகாலம் தங்கியிருந்து பரமனின் திவ்யதரிசனத்தை அகமாறக் கண்டார். அங்கிருந்து புறப்பட்டு கருப்பறியலூர், பழமண்ணிப் படிக்கரை வழியாகத் திருவாரூர் வந்தடைந்தார். திருக்கோயில் கோபுரத்தை வணங்கிய சுந்தரர் அடியார்களுடன் புற்றிடங்கொண்ட பெருமானைப் பாமாலை சாத்தி வணங்கினார். ஓரிரு தினங்களில் அவ்வூர் அன்பர்களிடம் விடைபெற்றுக் கொண்டு தம்முடன் வந்த தொண்டர்களுடன், சிவநாமத்தை ஜபித்தவாறு ஊர் திரும்பினார். பரவையார் திருமாளிகையை அடைந்த சுந்தரரை, பரவையார் அகமும், முகமும் மலர வரவேற்றாள். அவரது பாதகமலங்களில் நறுமலர்களைத் தூவி வணங்கினாள். மேல்சுந்தரர் பரவையாரிடம், முதுகுன்றூர் பெருமான் நமக்கு அளித்த பொற்குவியலை மணிமுத்தாற்றில் இட்டோம். இப்பொழுது எம்பெருமான் திருவருளால் அப்பொற்குவியலை இத்திருத்தலத்திலுள்ள கமலாலயப் பொய்கையிலே எடுத்துக்காட்டுவேன். எம்முடன் பொற்றாமரைக் குளத்திற்கு வருவாயாக என்று கூறியவாறு முதுகூரில் நடந்தவற்றை விளக்கினார்.அம்மையார் முகம் கமலம் போல் மலர்ந்தது. அம்மையார் பெரும் வியப்பில் மூழ்கினாள். ஐயனே! தாங்கள் இயம்புவது எமக்கு பெருத்த வியப்பினைக் கொடுக்கிறது. தாங்கள் கூறுவது எங்ஙனம் சாத்தியமாகும்? என்று ஐயத்துடன் கேட்டாள். அவள் இதழ்களில் புன்னகையும் மலரத்தான் செய்தது. சுந்தரர், பரவையாரையும் அழைத்துக் கொண்டு கோயிலுக்கு புறப்பட்டார். பூங்கோயிலினுள் சென்று வான்மீகிநாதரின் பாத கமலங்களைப் பதிகம்பாடிப் போற்றினார். கோயிலை வலம் வந்தார். மேற்கு திசையில் அமைந்துள்ள கமலாலயக் குளத்தை அடைந்தார். கமலாலயத்தில் சுந்தரர் பொற்குவியல் எடுக்கப் போகும் செய்தி எங்கும் பரவியது. அந்த அதிசயத்தைக் காண திருக்குளத்தைச் சுற்றி அன்பர்கள் கூட்டம்! சுந்தரர் பரவையாரைக் கரையில் ஒருபுறம் அமரச் செய்து குளத்துள் இறங்கினார். எம்பெருமானைத் தியானித்த வண்ணம் பொற்குவியலைத் தேடலானார். அவரது பூங்கரத்தில் பொன் என்பதே தென்படவில்லை. சுந்தரர் நீரிடை மூழ்கி, துருவி துருவித் தேடினார். மிக்க சிரமத்துடன் தேடியும் நாடிவந்த பொன் மட்டும் கைக்குக் கூடிவரவில்லை. வாடிய முகத்தோடு, சுந்தரர் நிற்பது கண்டு பரவையார், ஆற்றினில் இட்டுவிட்டு குளத்தினில் தேடுகின்றீரே! என்று நகைப்போடு கேட்டவாறு புன்னகை பூத்தாள். சுந்தரரின் பைந்தமிழ்ப் பாமாலையில் பெரு விருப்பங்கொண்ட எம்பெருமான், வேண்டுமென்றே தான் பொற்றாமரைக் குளத்தில் பொன்னைத் தருவிக்காமல் இருந்தார். ஐயனின் திருவிளையாடல்தான் இதுவும்! என்பதை உணர்ந்தார் சுந்தரர். பழமலைநாதரை மனதில் நினைத்தவண்ணம் பொன்செய்த மேனியீர் எனத் தொடங்கும் பதிகத்தை அன்பு கனிந்துருக, பக்தி பெருகிவர, செந்தமிழ்ப் பூவினால் பாமாலைகளாய்த் தொகுத்து பரமனின் அணிமார்பில் சாத்தினார். பொற்குவியல் அவரது கைக்கு கிட்டவில்லை! சுந்தரர்க்கு வேதனை மேலிட்டது! முதுகுன்றத்தில் தந்தருளிய பொற்குவியலைப் பெற முடியாது வருந்தும் எம் துயரத்தை இப்பரவையார் எதிரிலேயே தீர்த்தருளும் என்ற கருத்துடைய எட்டாவது பாடலைப் பாடினார். அப்படியும் பரமன் மனம் உருகி தமக்கு அருள் சுரக்காதது கண்டு வருந்தினார். அருட்பெருங்கூத்தனே! ஆனந்தத் தாண்டவனே! பழமலைநாதரே! பொற்குவியலை இப்பரவையார் முன்னே தந்தருள்வாயாக! என்னும் பொருள்பட, ஏத்தாதிருந்தறியேன் எனத் தொடங்கும் ஒன்பதாவது பாட்டால் இறைவனைத் துதித்துப் பாடியதும், இறைவன் சுந்தரர்க்கு திருவருள் புரிந்தார். பொற்குவியலை அவரது கரத்திற்குத் தட்டு பட செய்தார். மகிழ்ச்சி பொங்க, பொன்னோடு கரையேறினார் சுந்தரர். பொற்றாமரை குளத்தில் கூடியிருந்தோர் பெரும் வியப்பில் ஆழ்ந்தனர். பரவையார் அதிசயித்து நின்றாள். சுந்தரர், பொன்னின் மாற்றினை உரைத்துப் பார்த்து தாம் அடையாளமாக எடுத்து வந்த பொன்னோடு ஒப்பிட்டுப் பார்த்தார். சற்று மாற்றுக் குறைந்திருக்கக் கண்டு, இதுவும் திருநாவலுரான் திருவிளையாடலே என்று எண்ணியவராய் மீண்டும் திருப்பாடல் ஒன்றைப் பாடினார். அக்கணமே பொன்னின் மாற்று சரியானது. சுந்தரர் மகிழ்ச்சி கடலில் மூழ்கினார். பரவையார், இறைவன் தமது நாயகியிடம் கொண்டுள்ள திருவருளை நினைத்து வியந்தார். அனைவரும் ஆனந்தக் கூத்தாடினார்கள். குளத்தில் சூழ்ந்திருந்த தொண்டர் பலர், சுந்தரமூர்த்தி சுவாமிகளின் திருவடியைப் போற்றினர். அவரை வாழ்த்தி மகிழ்ந்தனர். அவ்வாண்டு பங்குனி உத்திரப் பெருவிழாவை சுந்தரரும் பரவையாரும் வெகு விமர்சையாக கொண்டாடினர். சுந்தரரும் பரவையாரும் சில காலம் சிவத்தொண்டுகளைப் புரிந்து வாழ்ந்து வந்தனர். சுந்தரர் திருத்தல யாத்திரை புறப்பட எண்ணினார். ஒருநாள் பரவையாரிடம் விடை பெற்றுக் கொண்ட தொண்டர்கள் புடைசூழ திருத்தலங்களை தரிசிக்கப் புறப்பட்டார். திருநள்ளாறு, திருக்கடவூர், திருவலம்புறம், திருச்சாய்க்காடு, திருவெண்காடு, திருநனிப்பள்ளி, திருச்செம்பொன்பள்ளி, திருநின்றியூர், திருநீடுர், திருப்புன்கூர், திருக்கோலக்கா முதலிய பதிகளில் எழுந்தருளியிருக்கும் தேவதேவரின் தூய திருவடிகளைப் பணிந்து துதித்தார். திருப்பதிகம் பலவும் பாடி உள்ளம் உருகினார். சீர்காழியை வந்தடைந்தார். திருத்தோணியப்பரைத் தொழுது வணங்கி பதிகம் பாடினார். மேல்திருஞானசம்பந்தர் திருவடிகளை மனத்தால் தியானித்தவண்ணம் குருகாவூர் என்னும் திருப்பதியை நோக்கி புறப்பட்டார். குருகாவூர் செல்லுகையில் சுந்தரரும் அவர் தம் தொண்டர்களும் வழிநடந்த களைப்பினாலும், தாகத்தினாலும், பசியினாலும் உடல் தளர்ந்தனர். இங்ஙனம் இவர்கள் துயறுருவதை உணர்ந்த சிவபெருமான் இவர்கள் வரும் வழியே குளிர்ப்பந்தல் ஒன்றை அமைத்தார். தாம் வேதியர் வடிவம் பூண்டு, சுந்தரரின் முன்னே எழுந்தருளினார். சுந்தரரும், அடியார்களும் தணலில் வெந்து வாடிய மலர் போல், உடல்வாடி வந்து கொண்டிருக்கும் பொழுது சற்றுத் தொலைவில் குளிர்ப்பந்தல் ஒன்று இருப்பது கண்டு அப்பந்தலை விரைந்து வந்து அடைந்தனர். அங்கு நின்று கொண்டிருந்த வேதியரை வணங்கி அனைவரும் உள்ளே சென்று அமர்ந்தனர். வேதியர் வேடத்திலிருந்த வேதமுதல்வன், சுந்தரர்க்கும் அவரது கூட்டத்தாருக்கும் உணவும், தண்ணீரும் அளித்தார். அனைவரும், வேதியரைப் போற்றி துதித்தனர். சிவநாமத்தை தியானித்த வண்ணம் களைப்பு மேலிட துயின்றனர். சுந்தரர்க்குத் தொண்டு புரிந்த தில்லைநாதர், மறைந்தார். தம்மோடு தண்ணீர்ப் பந்தலையும் மறையச் செய்தார். துயிலெழுந்த சுந்தரரும், தொண்டர்களும் பந்தலையும், அந்தணரையும் காணாது திகைத்தனர். இதுவும் எம்பெருமானின் திருவருட் கருணை என்பதை உணர்ந்து மனம் மகிழ்ந்தார் சுந்தரர்! இத்தனையாம் ஆற்றை அறிந்திலேன் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். அங்கிருந்து தமது யாத்திரையை தொடர்ந்தார். குருகாவூர், வெள்ளடை, திருக்கழிப்பாலை போன்ற தலங்களை தரிசித்தவாறு தில்லையை அடைந்தார். தில்லைவாழ் அந்தணர்கள் சுந்தரரை எதிர்கொண்டு அழைத்தனர். அவர்களோடு சேர்ந்து நடராஜ தரிசனத்தைக் கண்டுகளித்தார் சுந்தரர். அங்கிருந்து புறப்பட்டு நாவலூர் வழியாக திருக்கழுக்குன்றத்தை வந்தடைந்தார். திருக்கழுக்குன்ற சிவாலய தரிசனத்தை முடித்துக் கொண்டு திருக்கச்சூர் என்னும் தலத்தை வந்தடைந்தார். அத்தலத்தில் காட்சிதரும் மாதொருபங்கனைப் பணிந்தவாறு, பசியினாலும், வழி நடந்த களைப்பினாலும், உடல் வாட்டத்துடன் மதிற்புறத்தே வந்து தங்கினார். பசியால் வருந்திடும் சுந்தரரின் பசியினைத் தீர்க்கத் திருவுள்ளம் கொண்ட திருக்கச்சூர் பெருமான் முன்போல் வயது முதிர்ந்த அந்தணர் வடிவம் பூண்டார். கையிலே திருவோடு ஒன்றை ஏந்திக்கொண்டு, மதிர்ப்புறத்தே வந்தார். அவ்வேதியர், சுந்தரரைப் பார்த்து, நீர் உம் அன்பர்களுடன் பசியால் மிகவும் வருந்தி இளைப்புற்றிருக்கின்றீர். உங்கள் பசி வேட்கை நீங்கும்படி இப்பொழுதே சென்று நான் உமக்கு, சோறு இரந்து வந்து கொடுக்கிறேன். நீர் எங்கும் போய்விடாமல் எமக்காக இங்கேயே சற்று நேரம் அமர்ந்திரும் என்று செப்பினார். சுந்தரரும் வேதியரின் இன்மொழிக்கு மறுமொழி செப்பினாரில்லை. வேதமுதல்வன், வெள்ளிய தூய வெண்ணீற்றின் அழகு திகழவும், அழகிய முப்புரிநூலின் பேரொளி அசைந்து விளங்கவும், பாதகமலங்கள் நிலவுலகில் தோயவும், கண்டவர் மனமெல்லாம் உருகவும், கடும் பகலில், திருக்கச்சூர் வாழும் அந்தணர்களின் வீடுதோறும் சென்று சோற்றினை இரந்து பெற்றார். தடுத்தாட்கொண்டருளிய தம்பிரான் தோழரின் பசியைப் போக்க, இத்தகைய அன்புச் செய்ல் புரிந்த ஈசன், பிச்சை எடுத்துப் பெற்ற அமுதுடன் ஆரூரார் முன் வந்தார். அமுதினைக் கொடுத்தார். இவ்வமுதினையும், காய்கறிகளையும் உண்டு பசியைத் தீர்த்துக் கொள்வீர்களாக! என்று முகம் மலர திருவாய் மலர்ந்தார் ஈசன். சுந்தரரும், அடியார்களும் அமுதினை உண்டு மகிழ்ந்தனர். அதற்குள், அருள் வடிவமான அண்ணலார் மறைந்தார். வேதியர் மறைந்தது கண்டு சுந்தரர் மனம் வாடினார். எம்பெருமான், தம்பொருட்டு செய்த அருஞ்செயலை எண்ணிக் கலங்கினார். நாதச்சிலம்பணிந்த சேவடி நோவ நண்பகலில் நிலவுலகில் எழுந்தருளிய ஐயனின் பெருங்கருணையை எண்ணிப் பார்த்து மனம் உருகினார். விழிகளில் நீர் வழிய, முதுவாயோரி எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடிப் பணிந்தார். அங்கு திருக்கூட்டத்தாருடன் சில நாட்கள் தங்கியிருந்தார். அங்கிருந்து புறப்பட்டு காஞ்சிபுரத்தை வந்தடைந்தார். சுந்தரரின் வருகையைப் பற்றி முன்னதாகவே அறிந்த காஞ்சிநகரத்து மெய்யன்பர்கள் சுந்தரரை எதிர் கொண்டழைக்க மேளவாத்தியங்களுடன் காஞ்சி நகரின் எல்லைக்கு வந்தனர். சுந்தரரைப் பூரண பொற்கும்ப கலசங்களுடன் மலர் தூவி எதிர்கொண்டழைத்து நகரத்துக்குள் பிரவேசித்தனர். சுந்தரர் அன்பர்களும், அடியார்களும் புடைசூழ, மங்கல இசைகள், வேத முழக்கத்தோடு சேர்ந்து ஒலிக்க, அலங்காரமாக விளங்கும் பெருமாட வீதி வழியே திருக்கோயிலை வந்தடைந்தார். சுந்தரர், சிரமீது கரங்கூப்பிக் கொண்டு, அகத்தெழுந்து எழில் மேவும் அணி மாளிகைகள் பலவற்றையும் தனித்தனியே வலம் வந்து வழிபட்டவாறே, திரு ஏகம்பர் திருச்சன்னதிக்குள் சென்றார். மேல்காமாட்சி அம்மையார் வழிபடும் ஏகம்பவாணரின் திருவடியை வீழ்ந்து வணங்கி பக்தி வெள்ளத்தில் மூழ்கினார். அருள்வடிவமாய் நின்றார். பக்திப்பெருக்கால் பரவசமாகிப் பாடிப் பரவினார். சுந்தரர் காமாட்சி அம்மனையும் தரிசித்து சிந்தை குளிர்ந்தார். காஞ்சிபுரத்திலேயே திருத்தொண்டர்களுடன் சில நாட்கள் தங்கியிருந்து அடுத்துள்ள பல சிவன் கோயில்களையும் வழிபட்டு வந்த சுந்தரர், மீண்டும் தமது சிவயாத்திரையைத் தொடர்ந்தார். திருவன் பார்த்தான், பனங்காட்டூர், திருமாற்பேறு, வல்லம் முதலிய தலங்களை தரிசித்து துதித்த வண்ணம் காளத்தி மலையை அடைந்தார். கண்ணப்பருக்கு அருள் தந்து, தம் அடிச் சேர்த்துக் கொண்ட குடுமித்தேவரின் திருவடியைப் போற்றி, செண்டாடு விடையாய் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடி மகிழ்ந்தார். அங்கிருந்து புறப்பட்டு திருவொற்றியூரை வந்தடைந்தார் சுந்தரர்! சுந்தரர் திருக்கோபுரத்தை வணங்கியவாறு திருமாளிகையினை வலம் வந்து, பாட்டும் பாடிப் பரவி எனத் தொடங்கும் திருப்பதிகம் ஒன்றைப் பாடினார். திருவொற்றியூரானை விட்டுப் பிரிய மனம் வராத சுந்தரர், திருக்கூட்டத்தாருடன் திருவொற்றியூரிலேயே தங்கலானார். திருவொற்றியூர் என்னும் தலத்தருகே, ஞாயிறு என்னும் ஊரில், வளம் கொழிக்கும் வேளாண்மரபில் ஞாயிறுகிழார் என்னும் பெயருடைய பெருஞ்செல்வர் ஒருவர் வாழ்ந்து வந்தார். இப்பெரியார் செய்த அருந்தவப் பயனாய், திருக்கயிலை மலையில் உமையாளுக்குத் திருத்தொண்டு புரிந்து வந்து மங்கையர் இருவரில் ஒருவரான அநிந்திதையார், அன்புத் திருமகளாய் வந்து பிறந்திருந்தாள். ஞாயிறுகிழார், தமது அழகு மகளுக்கு சங்கிலியார் என்னும் நாமத்தை சூட்டி மகிழ்ந்தார். சங்கிலியார், இறைவன் அருளால் அழகோடும், பக்தியோடும், சிறந்த ஆற்றலோடும், தெய்வத்தன்மை மிக்க பொற்புடைச் செல்வியாய் விளங்கினாள். நாளொரு மேனி கண்டாள். பொழுதொருவண்ணம் கண்டாள். எழில்பொங்கும் மங்கைப் பருவத்தையும் கண்டாள். திருமணப் பருவம் எய்திய சங்கிலியாருக்கு, தங்கள் குலநலத்துக்கும், பண்பிற்கும் தக்கபடி ஒருவரைத் தேர்ந்தெடுத்து மணமுடிப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தனர் பெற்றோர். பெற்றோர்களின் இத்தகைய உள்ளக் கருத்தினை அவர்களது உரையாடல் பலவற்றுள்ளிருந்து உணர்ந்து கொண்ட சங்கிலியார், பெரும் வேதனையடைந்தாள். தனது லட்சியத்தை பெற்றோர்களிடம் கூற முடியாமல் தவித்தாள். ஒருநாள், தனது எண்ணத்தைக் கூறக்கூடச் சக்தியற்ற நிலையில், அஞ்சி நடுங்கியவளாய் மயக்கமுற்றாள்.எதிர்பாராமல், மகள் மயக்கமுற்று விழுந்ததைக் கண்ட ஞாயிறுகிழாரும், அவரது மனைவியாரும் உள்ளத் தடுமாற்றத்துடன், விரைந்து சென்று குளிர்ந்த நீரைக் கொண்டு வந்து, அம்மையாரின் முகத்தில் தெளித்தனர். சங்கிலியாரும் சற்று நேரத்தில் மூர்ச்சை தெளிந்து எழுந்தாள். பெற்றோர்கள் வேதனையால் பெருமூச்செறிந்தனர். அன்பு மகளே! உனக்கு யாது குறை? எது கருதி இவ்வாறு மயக்கம் ஏற்படும் நிலையை அடைந்தாய்? உள்ளத்தில் எதையாவது எண்ணிச் சொல்ல முடியாமல் தவிக்கின்றாயா? சொல்! தயங்காதே! என்றனர். சங்கிலியார், சற்றும் தயங்காமல் மனதை உறுதிப்படுத்தியவாறு, பெற்றோர்களிடம் தமது உள்ளக் கிடக்கையை வெளியிட்டாள். என் திருமணம் பற்றி நீங்கள் பேசி வருவதை நான் அறிந்தேன். எவருக்காகிலும் என்னை மணம் முடித்து விடவேண்டும் என்பது என் முடிவிற்கு சற்றும் பொருந்தாது. எம்பெருமானின் திருவருளைப் பரிபூரணமாகப் பெற்ற திருவருட் செல்வருக்குத்தான் உரியவளாவேனே தவிர, மற்றெவர்க்கும் அல்ல. அதனால் என்னைத் தடுக்காதீர்கள். நான் திருவொற்றியூரை அடைந்து சிவபெருமான் திருவருள் வழியிலேயே ஒழுகி நிற்க ஆசைப்படுகிறேன். எனக்கு சம்மதம் சொல்லுங்கள். பெற்றோர்களுக்கு இடி இடித்தாற்போல் இருந்தது. பயமும், பீதியும், பரிவும், பாசமும், அச்சமும் எல்லாம் ஒன்றோடொன்று சேர்ந்து அவர்களைக் கதி கலங்கச் செய்தது. இருப்பினும் அவர்கள், சங்கிலியார் கூறியவற்றை வெளியே தெரியாவண்ணம் அப்படியே மறைத்து விட்டனர். மேல்சங்கிலியாரின் வைராக்கிய குணத்தை உணரப் பெறாதவனாகிய ஒரு செல்வந்தன், சங்கிலியாரைத் தனக்கு மணம் பேச சிலரை ஞாயிறுகிழாரிடம் அனுப்பி வைத்தான். மணம் பேச வந்தவர்களை எங்ஙனம் திருப்பி அனுப்பி வைப்பது என்பது புரியாது, தர்மசங்கடமான நிலைக்கு ஆளான பெற்றோர், சங்கிலியாரைப் பற்றிய உண்மையான விவரங்களைக் கூறுவது சிறப்புடையதன்று என்று நினைத்தவராய், அவர்களிடம் தந்திரமாகப் பேசி, மிக்க சாமர்த்தியமாக திரும்ப அனுப்பினர். இதே சமயத்தில் அச்செல்வந்தன் எதிர்பாராமல் மரணம் அடைந்தான். இந்நிகழ்ச்சி ஞாயிறுகிழார் செவிகளுக்கு எட்டியது. அவரும் மனம் புண்பட்டார். இவ்விவரம் உற்றார் உறவினருக்கும் தெரியவந்தன. இதனால் சங்கிலியாரைப் பற்றிய பல தப்பான எண்ணங்களும், பேச்சுக்களும் மக்கள் மத்தியில் புயலெனப் புகுந்தது. இந்நிகழ்ச்சி நடந்த பிறகு சங்கிலியாரை மணம் பேச உறவினர்களோ, சுற்றத்தார்களோ எவருமே வரவில்லை. பெற்றோர்கள், தெய்வத்தன்மை மிக்க சங்கிலியாரை இனியும் அவளது விருப்பத்திற்கு மாறாக வீட்டில் வைத்துக் கொண்டு இருக்க விரும்பவில்லை. அவளது உள்ளக்கருத்திற்கு ஏற்ப, திருவொற்றியூர் கோயிலில் கொண்டு போய்ச் சேர்த்து விடுவது என்று எண்ணினர். திருவொற்றியூரில் கன்னிமாடம் ஒன்றை அமைத்து சங்கிலியாரை அங்கேயே வாசம் புரிய வழி செய்தனர் பெற்றோர்கள். திருவொற்றியூரில் இறைவன் கோயிலின் பக்கத்தில் கட்டியிருந்த கன்னிமாடத்தில், சங்கிலியார் அருந்தவசியைப் போல் வாழ்வை நடத்தினாள். அம்மையாருக்குப் பணிவிடை செய்ய சேடிகளும், ஏவல் புரியும் பெண்டிர்களும் இருந்தனர். எம்பெருமான் நினைவாகவே வாழ்ந்து வரும் சங்கிலியார், வைகறைப் பொழுது தூய நீராடி, அழகிய நெற்றியில் திருவெண்ணீற்றை அணிந்து கொண்டு, சேடிகளுடன் மலர்வனம் செல்வாள். விதவிதமான வாசமிகு மலர்களை நிறையப் பறித்து வந்து, வெவ்வேறாக பிரித்து எடுத்து கொள்வாள். அவற்றை சற்றும் கசங்காமல் எடுத்துக் கொண்டு வந்து தனி இடத்தில் அமர்ந்து பல்வேறு திருமாலைகளாக உரிய காலத்திற்கு ஏற்றபடிக் காட்டுவாள். வழிபாட்டுக் காலங்களில் திருமாலைகளை, திருவொற்றியூர்ப் பெருமானின் பாத கமலங்களிலே அன்போடு சாத்தி வழிபடுவாள். உள்ளன்போடு, திருவைந்தெழுத்து மந்திரத்தை இடைவிடாமல் ஓதிக்கொண்டிருப்பாள். இங்ஙனம், கன்னிமாடத்தில் சங்கிலியார் சங்கரனின் செஞ்சேவடிகளுக்குத் திருத்தொண்டு புரிந்தவாறு வாழ்ந்து வரலானாள். சங்கிலியார், கன்னி மாடத்தில் தங்கியிருக்கும் தருணத்தில் சுந்தரர், திருவொற்றியூருக்குத் தமது திருக்கூட்டத்தாருடன் வந்து சேர்ந்தார். மடம் ஒன்றில் தங்கியிருந்து நாடோறும் எம்பெருமானை வணங்கி வந்தார். ஒருநாள், சுந்தரர் அன்பர்களுடன், ஆலயத்தை வலம் வந்த வண்ணம் மண்டபத்தினுள் புகுந்தார். அவ்வமயம், சங்கிலியார் எம்பெருமானுக்குச் சாத்துவதற்காக, வாசமிகு நறுமலர் மாலையைக் கையில் ஏந்திய வண்ணம் திரை மறைவிலிருந்து வெளியே வந்தாள். நொடிப் பொழுதில் சங்கிலியார், மாலையை அர்ச்சகரிடம் கொடுத்து விட்டு, மின்னல் போலத் திரைக்குள் மறைந்து கன்னிமாடம் சென்றாள். தென்றலாக வந்து மின்னலாக மறைந்த சங்கிலியாரைத் தம் ஊழ்வினைப் பயனாலேயே கண்ணுற்றார் சுந்தரர். அந்த எழிற் பாவையின் ரூப லாவண்யத்தில் தம்மை மறந்து நின்றார். தம் எதிரிலே வானவில் போல் அழகுறத் தோன்றி மறைந்த எழுதாத ஓவியத்தின் ஒப்பற்ற பொன்மேனி அழகில் மனம் பேதலித்துப் போனார். கோவைபடாத முத்தினையும், வண்டுகள் மொய்க்காத மென்மையான அரும்பினையும் ஒத்த சங்கிலியாரைச் சந்தித்த சுந்தரர், மனம் தடுமாறினார். உணர்வு மங்கினார், மையல் நோயின் துன்பம் தாளாது அருகிலிருந்தவர்களிடம் சங்கிலியாரைப் பற்றி விசாரித்தார். இங்கு திரைமறைவிலிருந்து தோன்றி மறைந்தவள் யார்? பொன்னும், மணியும் ஒளியிடும் புத்தொளியின் புதுச்சுவையோடு, அமிழ்தத்தையும் கலந்து, தண்நிலவின் நீர்மையாலே குழைத்துச் செய்த அழகுப் புதுமை பூத்துக் குலுங்குகின்ற புதுமலர் போன்ற பெண்ணொருத்தி என்னை உள்ளம் திரியும்படிச் செய்தனள். அப்பெண்மனி யார்? அவள் எங்குள்ளாள்? என்று வினவினார் சுந்தரர். அருகிலுள்ளோர், அவள் பெயர் சங்கிலியார் என்பதையும், தெய்வத் தன்மை பொருந்திய அவள் அருந்தவத்தினால், எம்பெருமானின் பாதகமலங்களைப் போற்றி வணங்கி வரும் கன்னியராவாள் என்று விடையிறுத்தனர். சங்கிலியாரைப் பற்றிய விவரங்களைத் தெளிவாகத் தெரிந்துகொண்ட சுந்தரர், பரவையாரைப் பரமன் அருளாள் மணம் புரிந்தாற்போல் சங்கிலியாரையும் அடைந்தே தீருவேன் என்று தமக்குள் தீர்க்கமானதோர் முடிவிற்கு வந்தார். மேல்எம்பெருமானே! உமையாளைப் பொன் திருமேனியில் மறைத்ததுமன்றித் திருச்சடையில் கங்கையையும் மறைத்து எழுந்தருளும் மறை முதல்வனே! எமக்குற்ற துன்பத்தைத் தீர்த்தருள வல்லவர் நீவிர் ஒருவரே! அன்று பரவையாரை எமக்குத் திருமணம் செய்து வைத்த தேவாதி தேவா! இன்று, உமது பாதகமலங்களுக்குச் சாத்த பூமாலையினைத் தொடுத்துக் கட்டி மகிழும் சங்கிலியார் எனும் அழகுக்கோதை, எனது உள்ளமெனும் பூமாலையினை அவிழ்த்து எமக்கு அவள்பால் ஆராக் காதலைத் தோற்றுவிட்டாள். இத்தருணமும் ஐயன், எமக்காக எழுந்தருளி என் உள்ளத்தைக் கொள்ளை கொண்ட சங்கிலியாரை எமக்கு அளித்து என் துயரைப் போக்க வேண்டும். உம் திருத்தாளினை எண்ணுகின்ற எனது மன வலிமையை உடைந்து போகுமாறு அவள் செய்துவிட்டாள். இனியாது செய்வதென்பது அறியாது மனம் பேதலித்து நிற்கும் என்னைக் காத்து, அருள் புரியும் என்று இறைஞ்சினார் சுந்தரர். அன்றிரவு சங்கிலியார் நினைவாகவே, ஒருபுறத்தே துயின்றார் சுந்தரர்! எம்பெருமான், சுந்தரரின் கனவிலே எழுந்தருளி, அன்ப! இந்நிலவுலகில் யாவருக்கும் கிட்டாத அருந்தவத்தினையுடைய சங்கிலியாரை, உனது விருப்பப்படி மணம் முடித்து வைப்போம் என்றார். மறை முதல்வன், வேதியர் வடிவம் கொண்டு, சங்கிலியார் கனவிலும் எழுந்தருளினார். சங்கிலியார் செஞ்சடை அண்ணலின் பொன்சேவடிகளைப் பணிந்து, தேவரீர்! இந்த அடிமை உய்யும் பொருட்டு எழுந்தருளிய பெரும் பேற்றுக்கு யாது கைம்மாறு செய்வேன்? என்று சொல்லிப் பரவசமுற்றாள். சிறந்த தவத்தினையுடைய சங்கிலியே! எம்பால் அன்புடையவனும், மேருமாமலையைவிட மேம்பட்ட தவத்தினையுடையவனும், வெண்ணெய்நல்லூரில் எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்டவனும் ஆகிய சுந்தரன் எனும் தொண்டன், உன்னை அடையக்கருதி எம்மிடம் வந்து இரந்து நின்றான். அவன் விருப்பத்தை நிறைவேற்றும் பொருட்டே யாம் இங்கு வந்துள்ளோம். நீ அவனை மணந்து வாழ்ந்து மகிழ்வாயாக! என்று எம்பெருமான் திருவாய் மலர்ந்தார். எம்பெருமானே! என் ஐயனே! உமது திருவருட் கட்டளையைச் சிரமேற் கொண்டேன். ஆனால், அவர் பரவையாரை மணந்து திருவாரூரில் சுகமாக, மகிழ்ச்சி பொங்க வாழ்கிறார் என்பது உலகறிந்த உண்மையாயிற்றே. அங்ஙனமிருக்க என்னை அவருக்குக் கொடுத்தருளுவது எங்ஙனம் சாத்தியமாகும்? தேவரீர் திருவுள்ளம் கொண்டு, அதற்கு ஒரு வழிமார்க்கம் செய்து என்னை அவருக்கு அடிமையாக்க அருள் செய்தல் வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக் கொண்டாள் சங்கிலியார்! சங்கிலியே! சுந்தரன் உன்னை விட்டுப் பிரியாமல் இருப்பதற்கு, உன்னிடம் ஒரு உறுதிமொழி அளிக்குமாறு செய்கிறேன் என்று அருளி மறைந்தார். எம்பெருமான் முன்போல் சுந்தரர் கனவில் எழுந்தருளினார். சுந்தரர் பரமனைத் தொழுது நின்றார். ஆரூரா! உன் விருப்பத்தைச் சங்கிலியாரிடம் கூறினோம்; ஆனால், அவளை நீ மணம் செய்து கொள்வதில் ஒரு நிபந்தனை ஏற்பட்டுள்ளது. ஐயனே! இந்த அடியேன் ஏற்க வேண்டிய நிபந்தனை யாதோ? சுந்தரா! நீ சங்கிலியை மணப்பதற்கு அவளுக்கொரு சபதம் செய்து கொடுத்தல் வேண்டும். எம்பிரானே! மாதவம் புரியும் மங்கையான சங்கிலியை மணக்க, ஐயனின் ஆணைப்படி எவ்வித சபதம் செய்தல் வேண்டும்? அவளைவிட்டுப் பிரியாமல் என்றென்றும் அவளுடனேயே இருப்பேன், என்று உறுதிமொழி கொடுத்தல் வேண்டும். எம்பெருமானே! திருத்தலங்கள் தோறும் சென்று ஐயனைத் தரிசிக்காமல் என்னால் இருக்க முடியாது. அதனால், தங்கள் ஆணைப்படி, சங்கிலிக்கு நான் உன்னைப் பிரியேன் என்ற சபதம் செய்து கொடுப்பதற்காக, தங்கள் திருமுன்னே அவளோடு வரும்பொழுது, அடியேன் பொருட்டு ஐயன் திருக்கோயிலை விட்டு அகன்று மகிழ மரத்தின் கீழே எழுந்தருளல் வேண்டும் என்று வேண்டிக் கொண்டார் சுந்தரர்! அங்ஙனமே செய்வோம் என்றார் எம்பெருமான். செஞ்சடைவண்ணர், முன்போல் சங்கிலியார் முன்னால் எழுந்தருளி, சாரும் தவத்துச் சங்கிலியே, கேள்! சுந்தரன் என்னுடைய திருச்சந்நிதி முன்பாக வந்து நின்று உனக்கு சபதம் செய்து தருகிறேன் என்பான். அது சமயம் நீ அவனது விருப்பத்திற்கு இசையாது, அவனை மகிழ மரத்திற்கு கீழே நின்று சபதம் செய்து தருமாறு கேட்டுக்கொள்வாயாக! என்றார். சங்கிலியார், எம்பெருமானின் திருவடியைத் தொழுது எழுந்து, கரங்கூப்பி, மாலவனால் அறிவதற்கரியவரே! இத்தகைய ரகசியத்தை எமக்கு அருளிச் செய்து காத்தமையால் யான் ஐயனின் அடியேனாக ஏற்றுக்கொள்ளப் பெற்றேன் என்று கூறினாள். எம்பெருமான் சங்கிலியாரை வாழ்த்தி மறைந்தார். இவ்வாறு தமது அன்புத்தொண்டர்களுக்காக அற்புதத் திருவிளையாடல் நடத்தி ஆனந்தித்தார் திருவொற்றியூர் பெருமான்! மேல்சங்கிலியார் விழித்தெழுந்தாள். சுற்றும் முற்றும் பார்த்தாள். அதுவரை தம் எதிரிலேயே எழுந்தருளி ஆட்கொண்ட எம்பெருமானைக் காணாது கலங்கினாள். இறைவனின் அன்பின் திறத்தினை எண்ணி, எண்ணி பெரும் வியப்பு கொண்டாள். சற்று நேரம் யாது செய்வதென்பதறியாது மனம் குழம்பிப் போன சங்கிலியார், உறக்கம் வராமல் தவித்தாள். சற்று சிந்தித்தாள். சட்டென்று ஏதோ ஒரு முடிவிற்கு வந்து தம் அருகே படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் சேடியர்களை எழுப்பினாள். அவர்களும் திடுக்கிட்டு விழித்தெழுந்தனர். அத்தோழியர்களிடம் இறைவர் தமது கனவில் எழுந்தருளி திருவாய் மலர்ந்து அருளிய நிகழ்ச்சியைப் பற்றிக் கூறினாள். மறுநாள் சங்கிலியார், தோழியருடன் திருமாலைகள் சாத்துவதற்காக வேண்டியளவு நறுமலர்களைப் பறித்துக் கொண்டாள். திருக்கோயிலை வந்தடைந்ததாள். சுந்தரரும், சங்கிலியாரை எதிர்பார்த்து கோயிலுக்கு வந்திருந்தார். அவளருகே சென்று, எம்பெருமான் தமது கனவில் எழுந்தருளி திருவருள் புரிந்ததனை இயம்பினார். அம்மொழி கேட்டு சங்கிலியார் நாணத்தால் கன்னம் சிவக்க, புன்னகையை சிந்திவிட்டு, இட்ட அடி நோக, எடுத்த அடி கொப்பளிக்க, செக்க சிவந்த மென்சீரடி எடுத்து அன்னம்போல நடந்து கோயிலுள் புகுந்தாள். சுந்தரர் சங்கிலியார் பின்சென்று, ஆயிழையீர்! எம்பெருமான் திருவாய் மலர்ந்து அருளியதற்கு ஏற்ப, உம்மை மணந்து என்றும் பிரிந்து போகாத நிலையில் இவ்வூரிலேயே வாழ்கிறேன் என்று ஆணையிட்டுத் தருகிறேன். அதனால் எம்பெருமான் திருமுன்பு வருவீர்களாக! என்று கேட்டுக் கொண்டார். எமது பெருமானே! இதற்காக இறைவன் முன்பு ஆணையிட்டுத் தருவதென்பது தகாத செயலாகும் என்றனர் சேடியர்! சேடியர் சொல்லியவற்றைக் கேட்டு, சுந்தர் பெண்களே! எம்பெருமானின் திருமுன் சபதம் செய்து தருவதை விட வேறு சிறந்த இடம் எங்குள்ளது? மகிழ மரத்தின் கீழே இருந்து சத்தியம் செய்து கொடுத்தால் அதுவே எங்களுக்கும், எங்கள் தலைவிக்கும் போதுமானதாகும். சுந்தரர் சற்று திடுக்கிட்டார். மகிழ மரத்தடியில் அல்லவா எம்பெருமானை எழுந்தருளியிருக்கச் சொன்னோம் என்றெண்ணி நிலை தடுமாறினார். இருந்தும் சுந்தரர் தமது தயக்கத்தையோ, ஐயத்தையோ வெளிப்படுத்தவில்லை! தோழியர்கள் விருப்பத்திற்கு மாறாக நடக்க விரும்பவில்லை. துணிந்து அவர்கள் வினவியதற்கு ஏற்ப மகிழ மரத்தடியில் சபதம் செய்து கொடுப்பது என்ற தீர்மானத்திற்கு வந்தார். அவர்களை அழைத்துக் கொண்டு மகிழ மரத்தருகே சென்றார். சுந்தரர் மகிழ மரத்தை வலம் வந்து எம்பெருமானை மனதில் தியானித்தார். திருவொற்றியூரை விட்டு அகன்று உன்னை என்றும் பிரியேன் என்று சங்கிலியாருக்கு திருத்தமாக சத்திய சபதம் செய்து கொடுத்தார் சுந்தரர்! சங்கிலியார், எடுத்த பிறவியின் முழுப்பயனையும் பெற்றுவிட்ட பேரின்பக் களிப்பில், சுந்தரர் திருவடி வீழ்ந்து வணங்கினாள். சேடியர்களுடன் சுந்தரரிடம் விடைபெற்றுச் சென்றாள். சுந்தரர், இறைவனின் பாதகமலங்களைப் பணிந்து பதிகம் பாடி துதித்தார். அன்றிரவே எம்பெருமான், சுந்தரர்க்கும், சங்கிலியாருக்கும் திருமணத்தை நடத்திவைக்கும் பொருட்டு, திருவொற்றியூரிலுள்ள சிவத்தொண்டர் கனவில் எழுந்தருளி, எம்மால் தடுத்தாட் கொள்ளப்பட்ட வன்றொண்டனுக்கும், மாதவமிக்க மங்கை நல்லாள் சங்கிலிக்கும் திருமணத்தை நடத்தை வைப்பீர்களாகுக என்று கட்டளையிட்டார். மறுநாள், அச்சிவத்தொண்டர்கள் சங்கிலியாருக்கும், சுந்தரருக்கும் திருமணத்தை நடத்துவதற்கான ஏற்பாட்டைத் தொடங்கினர். சங்கிலியார் பெற்றோர்களிடம் விவரத்தைக் கூறினாள். அவர்களும் மகிழ்ந்தனர். மங்களகரமான நன்னாளன்று உலகமே வியக்கும் வண்ணம் சுந்தரருக்கும், சங்கிலியாருக்கும் மிக்கச் சிறப்புடன் திருமணம் நடந்தது. இறைவனின் அருள்பெற்ற சங்கிலியாரும், சுந்தரரும் இல்லற வாழ்க்கையை இனிது நடத்தினர். சங்கிலியார் பூமாலையால் பரமனைப் பணிய, சுந்தரர் பைந்தமிழ் பாமாலையால் பரமனைப் பணிந்தார். இருவரும் நாடோறும் திருவொற்றியூர் ஆலயத்தை வலம் வந்து, நலந்தந்த நாதன் மலரடியைத் தொழுது வணங்கி சிவத்தொண்டுகள் பல புரிந்து இல்லறமெனும் இன்பக் கடலில் மூழ்கி மிதந்து எல்லையில்லா இன்பம் பூண்டு வாழ்ந்து வரலாயினர். வசந்த காலம் வந்தது! திருவாரூர் வீதிவிடங்கப் பெருமானுக்கு வசந்த காலத்தில் தான் பெருவிழா நடைபெறுவது வழக்கம். பொங்கு தமிழ் வளர்கின்ற பொதிய மலையிலே தோன்றி சந்தன மரங்களிடையே தவழ்ந்து, மலைச்சாரல்களிடையே வளர்ந்து வரும் தென்றல் காற்று சுந்தரர் மேனியில் பட்டு இன்பக் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. இத்தகைய வசந்த காலத் தென்றலில் சுந்தமூர்த்தி நாயனார் சங்கிலியாருடன் சுந்தரகீதம் பாடிய வண்ணம் சொக்கி மகிழ்ந்து கொண்டிருந்தார். அவரது உள்ளுணர்வு வசந்த காலத்தில் திருவாரூரில் நடைபெறும் திருவிழாக் காட்சியையும், அத்திருவிழாக் கோலத்தில் தியாகேசப் பெருமான் எழுந்தருளியிருக்கும் மாட்சியையும், பரவையார் பக்திப் பெருக்கோடு பரமன் முன்னால் பரதம் ஆடி அக மகிழ்வதைப் போன்ற காட்சியையும் தோன்றச் செய்தது. பூங்கோயிலினுள் அமர்ந்தாரை-புற்றிடங் கொண்டாரை-எந்நேரமும் அடியார்களை எண்ணி அருள்புரிகின்ற அம்பலவாணரை இவ்விடத்து நான் மறந்திருந்தேனே என்று தியாகேசப்பெருமானின், பிரிவாற்றாமையால் சித்தம் கலங்கினார் சுந்தரர். மேல்பத்திமையையும் அடிமையையும் கைவிடுவான் என்று தொடங்கி, எத்தனை நாளும் பிரிந்திருக்கேன் என்னாரூர் இறைவனையே என்ற குறிப்பை உணர்த்தும் தமிழ்ப் பாமாலையைப் பாடினார். அவரால் திருவொற்றியூரில் இருக்கவே முடியவில்லை. சங்கரர் நினைவால் சிந்தை குளிர்ந்த சுந்தரர் சங்கிலியாருக்குக் கொடுத்த சபதத்தை மறந்தார். எப்படியும் திருவாரூருக்குப் புறப்பட்டுப் போய்விடுவது என்ற திடமான முடிவிற்கு வந்தார். ஒருநாள் சுந்தரர் சங்கிலியாருக்கு தெரியாமல் திருவொற்றியூர் எல்லையைக் கடந்து அடி எடுத்து வைத்தார். சங்கிலியாருக்குக் கொடுத்த உறுதிமொழியை மீறியதால் அக்கணமே சுந்தரரது கண்கள் இரண்டும் ஒளியை இழந்தன. நாயனார் மூர்ச்சித்தார்.சுந்தரர் அப்போதே தமது தவற்றை உணர்ந்தார். சங்கிலியாருக்கு அளித்த உறுதிமொழியை முறித்துவிட்டதினால் தான் இறைவன் தன் கண் ஒளியைப் பறித்துக் கொண்டார் என்பதையும் சுந்தரர் உணர்ந்தார். அழுக்கு மெய்கொடு என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடிப் பரமனைப் பணிந்தார். இறைவன் சுந்தரர்க்கு அருள் செய்யாது வாளா இருந்தார்.எப்படியும் திருவாரூரை அடைந்து தியாகேசப் பெருமானைத் தொழுது வழிபடுவது என உறுதி பூண்டார். ஒருவாறு தட்டுத்தடுமாறி, முல்லைவாயில் தலத்தில் கோயில் கொண்டுள்ள கருநட்ட கண்டரைத் தரிசித்தவாறு திருவெண்பாக்கம் என்னும் பழம்பதியை வந்தடைந்தார் சுந்தரர்! திருவெண்பாக்கத்து எம்பெருமானைக் கண்டுகளிக்க கண்ணுக்கு ஒளி இல்லாமற் போய்விட்டதே எனச் சித்தம் கலங்கிய நாயனார், பரமனைத் துதித்து, பிறைமுடிப் பெருமானே நீவிர் இத்திருக்கோயிலின் உள்ளேதான் எழுந்தருளியிருக்கின்றீரோ? என்று உளம் வருந்த இறைஞ்சி நின்றார். சுந்தரரின் கனிமொழியைக் கேட்டு, பிரம்படி பட்ட பரமன் ஊன்றுகோல் ஒன்று அவரது கைகளில் வந்து தங்குமாறு அருள்புரிந்தார். சுந்தரா! யாம் கோயிலின் உள்ளேதான் இருக்கின்றோம் என்ற கருத்தமைய, யாம் உள்ளோம். நீர் போகீர் என்று இணக்கமில்லாத மொழிகளால் விடை பகர்ந்தார். விடையேறும் பெருமான் அன்னியனிடம் கூறுவது போல் சற்று கடுமையாக மொழிந்ததைக் கேட்டு, சுந்தரர் வேதனை தாளாமல் பிழையுறன பொறுத்திடுவர் எனத் தொடங்கும் பாடலால் மெய்யுருகினார். எம்பெருமானின் அருள் உள்ளம் இந்த அளவிற்குத்தான் இத்தலத்தில் தமக்கு கிட்டியதுபோலும் என்று உள்ளத்திலே எண்ணியவாறு, ஊன்றுகோலை ஊன்றிக் கொண்டு புறப்பட்டார். சுந்தரர் திருவாலங்காடு, திருவூறல் போன்ற சிவத்தலங்களை வழிபட்டவாறு காஞ்சிமா நகரத்தினை வந்தடைந்தார். எழில்மிகு சோலைகளால் சுந்தரத் தோற்றமளிக்கும் திருக்கச்சிக்காமக் கோட்டத்தில் உள்ள காமாட்சி அம்மையாரின் சன்னதியை வணங்கித் துதித்த சுந்தரமூர்த்தி நாயனார், அப்படியே ஏகம்பவாணர் சன்னதியையும் அடைந்தார். விண்ணவர் வாழ நஞ்சுண்ட கயிலைமலைக் கண்ணாளா! கச்சி ஏகம்பனே! பவளவண்ணரே! மறைகட்கும் எட்டாத மாமுனியே! உமது ஆனந்த ரூபத்தைத் தரிசித்து மகிழ, கடையேனாகிய எனது பிழையைப் பொறுத்து அருளி பார்வையைத் தந்து காத்திட வேண்டும். அன்று நல்லூர் மணப்பந்தலிலே என்னை தடுத்தாட் கொண்ட அண்ணலே! இன்று உன் அருட்கோலத்தைக் கண்டு மகிழத் துடிக்கும் உன் தோழனுக்குப் பார்வையைத் தரலாகாதோ? ஐயனே! என் உணர்வை நீ உணராதவன் அல்லவே! என்றெல்லாம் பலவாறு கதறிக் கதறி இறைஞ்சி நின்றார். காமாட்சி அம்மையாருடைய தளிர்க் கரங்களால் வழிபாடு செய்து பணிந்த ஏகம்பவாணரின் பாத கமலங்களைப் பணிந்தார். துதித்து பாமாலை பாடினார். சுந்தரரின் பாமாலைக்கு பரமன் மனம் குளிர்ந்தார். காமாட்சி அம்மையார் தழுவக் குழைந்த திருசடைப்பெருமான் சுந்தரருக்கு இடக்கண் பார்வையினை மட்டும் கொடுத்து, தமது திருக்கோலத்தை காட்டி அருளினார். சுந்தரர் கண் பெற்ற பெருமிதத்தில் ஆடினார்; பாடினார்; நிலமதில் வீழ்ந்து பன்முறை வணங்கி, வணங்கி எழுந்தார். ஆலந் தானுகந் தமது செய்தானை என்று தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். ஏகம்பவாணரின் மலர்த்தாளினைத் துதித்தார் சுந்தரர். மேல்சுந்தரர் தொண்டர்களுடன் சில நாட்கள் அப்பதியிலேயே தங்கி, சிவ வழிபாடு புரிந்து வந்தார். பின்னர் அங்கிருந்து தமது சிவ யாத்திரையைத் துவங்கினார். இரவென்றும், பகலென்றும் பாராமல் வழி நடந்தார். அவர் உடலில் நோய் கண்டது. நடை தளர்ந்தார். அப்படியும் சிவதரிசனத்தை மட்டும் கைவிடவில்லை.எண்ணற்ற சிவத்தலங்களைத் தரிசித்து, பதிகங்கள் பல பாடியவாறே மாத்தூர், திருநெல்வாயில் வழியாக காவிரியாற்றைக் கடந்து திருவாடுதுறை திருத்துருத்தியினை அடைந்தார்.சிவக்கோயிலை பன்முறை வலம் வந்து எம்பெருமானின் செஞ்சேவடிகளை தரிசித்து, நம்மை துன்புறுத்தி வரும் உடம்பின் மேல் உற்ற பிணியை ஒழித்துக் காக்க வேண்டும் என்று பணிந்து நின்றார்.சுந்தரரின் அன்பிற்குக் கட்டுப்பட்ட திருத்துருத்தி மேவும் விரிசடைத் தம்பிரான், ஆரூரா! அஞ்சாதே! இக்கோயிலின் வடபுறத்திலுள்ள குளத்தில் நீராடினால் உன் உடம்பில் பற்றியுள்ள வெப்பு நோய் விலகும் என்று அருளினார்.அரனாரின் அன்புமொழி கேட்டு ஆனந்தப் பெருக்கோடு சுந்தரர் கோயிலின் வடபுறத்திலுள்ள குளத்தில் ஐந்தெழுத்து மந்திரத்தை மனதிலே தியானித்தவண்ணம் மூழ்கி எழுந்தார்.எம்பெருமானின் அருளால் அவரது மேனியில் இடைக்காலத்து ஏற்பட்ட புதிய வெப்பு நோய் நீங்கப் பெற்ற மாணிக்கம் போல் பேரொளி வீசும் பொன்மேனியைப் பெற்றார்.சிவனருள் பெற்ற அச்சிவச்செல்வர், தேன் உண்ட வண்டு போல் இன்பம் பெற்றார்.மின்னுமா மேகம் எனத் தொடங்கும் பதிகத்தை ஏழிசைகளில் எடுத்துரைத்து எல்லையில்லா இன்பம் கண்டார். எம்பெருமானின் அருளை நினைத்தவராய்த் தொண்டர்களுடன் திருவாரூரை நோக்கி புறப்பட்டார். திருவாரூர் எல்லையை வந்தடைந்த சுந்தரர், தியாகேசப்பெருமான் எழுந்தருளியிருக்கும் பூங்கோயிலின் பெருங்கோபுரத்தைக் கண்டு மகிழ்ந்தார். பொழுது சாயும் வேளையில் திருவாரூரினுள்ளே நுழைந்தார். தொண்டர்கள் புடைசூழ, திருப்பரவையுண் மண்டலி என்னும் ஆலயத்தை வலம் வந்து வழிபட்டு, தூவாயத் தொண்டு என்று தொடங்கும் செந்தமிழ்ப் பாமாலையினை சாத்தி சிந்தை குளிர்ந்தார் சுந்தரர்! குருகுபாய எனத் தொடங்கும் சிவப்பதிகத்தைப் பாடியவாறே சிவன் அடியார்களுடன், தேவாசிரிய மண்டபத்தை அடைந்த சுந்தரர், கோபுரத்தைத் தரிசித்தவாறே புற்றிடங்கொண்ட நாதரின் சிலம்பணிந்த தாளினைப் பணிந்து போற்றினார். எம்பெருமானே! இன்னுமா தங்கள் தோழர்க்குத் தீராத துயரம். துயரக்கடலில் அல்லலுற்று வருந்தும் இவ்வடியேனைக் கரைசேர்த்து, மற்றொரு கண்ணுக்கும் ஒளி தந்தருளுவீர்! என்று இறைஞ்சி நின்ற சுந்தரர், மீளா வடிவை எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். அப்படியும் இறைவனின் மனமிரங்காதது கண்டு, அருட்பெருஞ்சோதியே! உமது திருமலர்த்தாளினை இடையறாது, பைந்தமிழ்ப் பாமாலையால் வழிபடும் தொண்டனுக்கு ஏற்படும் தீராத துன்பங்கண்டு நீ ஒருபோதும் பொறுத்திருக்க மாட்டாயே! அக்கணமே அன்பர்களின் துயரத்தைத் தீர்த்து வைத்து மகிழ்வாயே! அப்படியிருக்க எம்மை காத்தருளலாகாதது ஏனோ? என்று குறிப்புடனே, அடிமையும், தோழமையும் கலந்த அருத்திறத்தோடு கூடிய இன்பத் தமிழ்ப்பதிகம் ஒன்றைப் பாடிப் பரமனைப் பணிந்தார். சுந்தரமூர்த்தி நாயனாரின் திருப்பதிகங்களில் சிந்தை குளிர்ந்த செஞ்சுடர் வண்ணர், சித்தம் இரங்கி, அவருக்கு வலக்கண் பார்வையினையும் கொடுத்து அருள்புரிந்தார். கதிரவனைக் கண்டு தாமரை மலர்ந்தாற் போல் பரமன் அருளிலே சுந்தரர் முகம் மலர, ஒளி பெற்ற பேரானந்தத்தில் பரமனைப் பணிந்து உலகையே மறந்தார்.கண் பெற்ற சுந்தரர், தாம் கண்மூடித்தனமாக பரவையாருக்குச் செய்த துரோகச் செயலை எண்ணிப் பார்த்தார். அவர் மனம் வேதனையாலும், வெட்கத்தாலும் கூனிக் குறுகியது. பரவையார் மாளிகைக்கு செல்ல அஞ்சியவராய், தேவாசிரிய மண்டபத்திலேயே தங்கிவிட்டார் சுந்தரர். மேல்சுந்தரர் பிரிந்து சென்ற பிறகு பரவையார், பிரிவாற்றாமை தாளாது, எல்லையில்லாத் துன்பமடைந்தாள். அம்மையாருக்கு இரவு பகலாகவும், பகல் இரவாகவும் கழிந்தன. மனதிலே நிம்மதியென்பது கடுகளவு கூட இல்லாமற் போது. அன்பரைப் பிரிந்து தணல் மேல் புழுப் போல் துவண்டு கொண்டிருக்கும் நாளில்தான், திருவொற்றியூரில் சுந்தரர் சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்டார் என்ற செய்தி பரவையாருக்கு எட்டியது. பரவையார் மேலும் வேதனையும் பெருங்கோபமும் கொண்டாள். இரவும், பகலும் மாலையிட்ட மணாளனின் நினைவாகவே நெஞ்சு நெகிழ்ந்து, சிறகொடிந்த பறவைபோல்-பற்றுக்கோல் அற்ற முல்லைக் கொடிபோல்- பாலைவனத்திலே காயும் நிலவு போல்-பாய்மரம் இல்லாத மரக்கலம் போல் அவதிப்பட்டு கொண்டிருந்தாள் பரவையார். வண்டுகள் மொய்க்கும் அன்றலர்ந்த மென்மலர் தூவிய பட்டு விரித்த ரத்தின மணிக்கட்டில் நித்திரை கொள்ளாது எந்நேரமும் விழித்தேயிருந்தாள். இவ்வாறு பரவையார் வாழ்ந்து வரும் நாளிலே, தேவாசிரிய மண்டபத்திலே தங்கியிருந்த சுந்தரர், பரவையார் மாளிகைக்குச் செல்ல அஞ்சியவராய், தமது ஏவலாளர் சிலரை அனுப்பி, தமது வருகையை அம்மையாரிடம் தெரிவிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். பரவையார் மாளிகையை அடைந்த ஏவலாளர்களால், உள்ளே சென்று பரவையாரைப் பார்க்கக் கூட முடியவில்லை. எப்படியோ விஷயம் அறிந்த தோழியர்கள் தலைவியின் கட்டளைப்படி கதவடைத்து அனுப்பி விட்டார்கள். ஏவலாளர்கள் ஏமாற்றத்தோடு சுந்தரரை அணுகி, ஐயனே! தாங்கள் திருவொற்றியூரில் சங்கிலியாரோடு வாழ்ந்து வந்த வரலாற்றைத் தெரிந்து வைத்திருக்கும் அம்மையார் எங்களைப் பார்க்க மறுத்ததோடல்லாமல், தோழியர்களிடம் சொல்லிக் கதவையும் தாழிடச் செய்துவிட்டார்கள் என்றனர். சுந்தரர் சித்தம் தடுமாறினார், பரவையார் பிணக்கை போக்கி, அவர்களது திருமாளிகைக்குச் செல்வதுதான் எங்ஙனம்? என்று தமக்குள் எண்ணி மனம் கலங்கினார். நெடு நேரம் சிந்தித்தார். முடிவில், உலக இயல்பினைக் கற்றுத் தெளிந்த திறமைமிக்க மாதர்களை, பரவையாரிடம் தூது அனுப்பி வைத்தார். பரவையார் மாளிகையை அடைந்த அம்மாதர்கள் பரவையாரை நேரில் சந்தித்து, தங்கள் வணக்கத்தைத் தெரிவித்து கொண்டனர். நற்றமிவக்க நங்கையே! எம்பிரானால் தடுத்தாட் கொள்ளப்பட்ட தங்கள் நாயகர் தம்பிரான் தோழர், மீண்டும் தங்களுடன் சேர்ந்து வாழ வந்துள்ளார்கள். உங்கள் பெருமையையும் அவரது பெருமையையும் அளவிட முடியாதது. அங்ஙனமிருக்க, நீங்கள் உங்கள் நாயகர் மீது இவ்வாறு ஊடல் கொண்டு, பிணக்கம் கொள்வது நம் பண்பிற்கு ஒவ்வாதது. இறைவனின் அருளால் மீண்டும் கண்களைப் பெற்றது உங்களை எண்ணி மனம் உருகிக் கண்ணீர் வடிப்பதற்கல்ல; உங்கள் அழகு நடனத்தையும், ஒளிமிக்க கமலவதனத்தையும் கண்டு களிப்பதற்காகத் தான். அதனால் அம்மையார் எங்கள் பொருட்டாவது ஐயன் மீது கொண்டுள்ள கோபத்தை தணித்து கொள்ளுங்கள் என்று பலவாறு அம்மாதர்கள் கூறினர். அவர்களது அறிவுரைகளைப் பரவையார் சற்றும் செவிமடுக்கவில்லை. என்னை மறந்து, வேறு பெண்ணை மணம் செய்துகொண்டு, எனக்குத் தீராத துயரத்தையும் ஆறாத கவலையையும் அளித்த அவரது குற்றத்தை மறைக்க நீங்கள் எவ்வளவுதான் அறிவுரைகள் பகர்ந்தாலும் என்னால் ஒருபோதும் ஏற்க முடியாது. நீங்கள் மேலும் மேலும் பேசிப் பேசி என் மனதை புண்படுத்துவீர்களானால் நான் உயிரை இழப்பது திண்ணம். தயவு செய்து போய்விடுங்கள் என்று ஒரேயடியாக, சினத்தோடு மறுத்து அவர்களைத் திரும்ப அனுப்பி விட்டார் பரவையார். பரவையார் பேச்சிற்கு மறுமொழி பேசாமல், ஏமாற்றத்தோடு வெளியே வந்த மாதர்கள், சுந்தரரிடம் நிகழ்ந்தவை அனைத்தையும் கூறிச் சென்றனர். சுந்தரர், மன சோர்வுற்றார். இரவு கழிந்து கொண்டேயிருந்தது. நடு ஜாமம் வந்தது. இருந்தும் சுந்தரருக்கு உறக்கம் சற்றுகூட வரவில்லை. அவருடன் சூழ்ந்திருந்த அன்பர்கள் அனைவரும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்தனர். கவலை தோய்ந்த முகத்தோடு, இறைவனைத் தியானித்த வண்ணம் கண்விழித்திருந்த சுந்தரர், தமது குறையை இறைவனிடம் முறையிடுவது என்று எண்ணினார். சுந்தரர், ஒளி கொடுத்த திங்கள் வளர்நாயகரைப் பணிந்து, என்னைத் தடுத்தாட்கொண்ட தம்பிரானே! அன்பர்க்கு அன்பனே! எமக்கு தேவரீர் இப்படியும் ஒரு சோதனையைக் கொடுத்து திருவிளையாடல் புரியலாமா? முன்வினைப் பயனால், இப்பிறப்பில் தேவரீர் அருளோடு மணம் புரிந்து கொண்ட பரவையார் என்னைத் திரும்ப ஏற்க மறுப்பதைத் தாங்கள் அறியாததல்லவே! எம்பிரானே! பரவையாருக்கு எம்மோடுள்ள பிணக்கை போக்கி உய்யும் வழிசெய்யும் திறத்தவர் உம்மையன்றி வேறு எவர் எனக்குள்ளார்? விண்ணவர்களுக்காக விடமுண்ட நீலகண்ட நாயகரே! இந்நடுராத்திரியில் இவ்வடியேனுக்காக இங்கு எழுந்தருளி, காத்தருளலாகாதா? என்று வேண்டினார். அக்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்துள்ள பரம் பொருளான கயிலையரசன், சுந்தரரின் துயரத்தைத் தீர்க்க திருவுள்ளம் கொண்டார். அந்த நள்ளிரவு நேரத்தில் எம்பெருமான் சுந்தரர் முன்னால் பேரொளிப் பிழம்பாகக் காட்சி அளித்தார். சுந்தரர் பக்தி வெள்ளம் போல் பெருக, இறைவனது சேவடிகளைப் பணிந்து போற்றினார். புற்றிடங்கொண்ட பெருமான், தம்மைப் பற்றிக் கொண்ட தோழருக்கு அருள் செய்து, அன்பனே! இந்த நடு ஜாமத்தில் அபயக்குரல் எது கருதி? அப்பனே! உனக்கு நேர்ந்ததுதான் என்ன? என்று ஒன்றுமறியாதவரைப் போல் கேட்டார். இறைவன் இவ்வாறு கேட்டதும் தம்பிரான் தோழர் உடல் நடுங்க, மெய்சிலிர்க்க, பித்தா! பிறைசூடி! பெருமானே! அன்பர் மனங்களில் எந்நேரமும் எழுந்தருளியிருக்கும் அருளாளா! தயாபரா! நீ அறியாததொன்றில்லையே! உமது சக்தியில்தானே அகில உலகமும் சுற்றிச் சுழலுகிறது. மேல்சங்கரா! எனக்கு இன்று ஏற்பட்டுள்ள துன்பத்தைப் பொறுத்து ஆட்கொள்ள வேண்டியது தேவரீருடைய கடமையாகும். ஐயனின் ஆணைப்படி மகிழமரத்தின் கீழே சபதம் செய்து சங்கிலியாரைத் திருமணம் செய்து கொண்டு நான் திருவொற்றியூரில் வாழ்ந்த செய்தி எப்படியோ பரவையாருக்கு எட்டிவிட்டது. அதனால், பரவையார் என் மீது கோபம் கொண்டுள்ளதோடல்லாமல், என்னால் தனது உயிரையே இழப்பதாகவும் கூறுகிறாளாம். இந்த எளியோன் தேவரீரின் அடியேன்! ஐயன்தான் எனக்குத் தாயும் தந்தையும்! துன்பக் கடலினின்றும் நீந்திக் கரையேறுவதற்குரிய மரக்கலம் இல்லாது மனம் கலங்கும் என்னைக் காக்க வேண்டும். இவ்விரவிலேயே, இவ்வெளியேனுக்காகப் பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி, என் நிலையை விளக்கி, அவளுடைய கோபத்தைத் தணித்து எம்மோடு கூடி வாழச் செய்திடல் வேண்டும் என்று பணிவன்போடு கேட்டுக் கொண்டார். சுந்தரா! கவலையை மறப்பாயாக! நான் இப்பொழுதே பரவையாரிடம் தூது சொல்கிறேன் என்று மொழிந்தார் பரமன். அந்த அருள் வார்த்தையிலே சிந்தை குளிர்ந்த சுந்தரர் எல்லையற்ற உவகையோடு, ஐயனே! பரவையார் மாளிகைக்கு விரைந்து சென்று அவரது ஊடலைத் தீர்த்து கூடல் கொள்ளச் செய்து வருவீராகுக! என்று மீண்டும் அன்புக் கட்டளையிட்டார். எம்பெருமான், அந்த அர்த்தயாம வேளையில் தமது திருவடிகள் நிலவுலகில் பொருந்தப் பரவையார் மாளிகையை நோக்கிப் புறப்பட்டார். விண்ணிலிருந்து மலர்மாரி பொழிந்தவண்ணமாகவே இருந்தது. எம்பெருமானைப் பின் தொடர்ந்து தேவாசிரிய மண்டபத்திலே எழுந்தருளியுள்ள அமரர்களும், சிவகணங்களும், அருந்தவசிகளும், நந்தியெம்பெருமானும், குபேரன் முதலானோரும் பரமனைத் துதித்தவாறு பின்னால் சென்றனர். திருவாரூர் சிவலோகம் போல் காட்சி அளிக்க, சிவனார் மணிவீதி வழியாக தூது புறப்பட்டார். அவருடைய திருச்சடையைச் சுற்றி விளையாடும் பாம்புகளும், மாணிக்க ஒளி வீசத் தொடர்ந்து படமெடுத்துப் பின் வந்தன. இளம்பிறை நிழலில் மலர்ந்துள்ள கொன்றைப் பூக்களில் தேன் பருகும் வண்டுகளும், ரீங்காரம் செய்த வண்ணம் தொடர்ந்து வந்தன. கூடவே சுந்தரமூர்த்தி சுவாமிகளின் மனமும் பின் தொடர்ந்தது. வேதங்கள் பின்தொடர, பரவையார் மாளிகையை அடைந்த இறைவன், அனைவரையும் புறத்தே தங்குமாறு ஆணையிட்டு விட்டு, தாம் மட்டும் ஓர் அர்ச்சகரைப் போல் வடிவம் கொண்டு, மாளிகையை அடைந்தார். உள்ளே தாழ்போட்டுள்ள கதவைத் தட்டியவண்ணம், பரவையே! கதவினைத் திறந்திடுவாய்! எனச் செம்பவளவாய் திறந்து அழைத்தார் அம்பலவாணர். உறக்கம் வராமல் மலர் மஞ்சத்தில் படுத்திருந்த பரவையார் திடுக்கிட்டு எழுந்தார். அர்ச்சகரின் குரலோசை கேட்டு அம்மையார், இந்த அர்த்த ஜாமத்தில் நம்மைத் தேடி அர்ச்சகர் வரவேண்டிய காரணம் என்ன? என்று எண்ணியவளாய் விரைந்து வந்து கதவைத் திறந்தாள். அர்ச்சகர் வடிவில் வந்துள்ள இறைவனை வணங்கி, வரவேற்ற பரவையார், ஊர் உறங்கும் இவ்வேளையில் தேவரீர் இவ்வடியாளின் இருப்பிடத்திற்கு எழுந்தருளிய காரணம் யாதோ? என்று பணிவன்புடன் கேட்டாள். பரவையே! வந்த காரணத்தைக் கூறுவேன்; ஆனால் நீ மட்டும் மறுக்காமல் எமது கோரிக்கையை ஏற்றுக் கொள்ள வேண்டும். ஆணையிடுங்கள் சுவாமி! பரவையே கேள்! சுந்தரர் சற்றுத் தவறியதற்காக நீ அவரை முற்றும் வெறுத்து இங்ஙனம் ஊடல் கொள்வது முறையாகாது. உனது பிரிவினால் மிக்கத் துயருரும் நாவலூர் நம்பி உன் நினைவாகவே தேவாசிரிய மண்டபத்தில் வந்து தங்கியுள்ளார். அவர் மீண்டும் இங்கு வந்து உன்னோடு கூடி வாழ்தல் வேண்டும். இதற்கு நீ இசைந்து விடுவதுதான் நல்லது. நன்று! நன்று! தாங்கள் செப்புவது! சிவத்தலங்களை தரிசிக்கப் போகிறேன் என்று என்னிடம் விடை பெற்றுச் சென்றார். எப்படியும் பங்குனித் திருநாள் அன்று விரைந்து வந்துவிடுவார் என்று எதிர்பார்த்து ஏமாந்தேன். அவரோ திருவொற்றியூரில் சங்கிலியார் என்னும் பெண்ணை மணந்து வாழ்ந்துள்ளார். இனிமேல் அவருக்கும் எனக்கும் எவ்விதத் தொடர்பும் கிடையாது. இதற்காகவா, இந்த இரவு வேளையில் தாங்கள் இங்கு வந்தீர்கள்? பரவையே! கோபம் தணிந்து, உன் நாயகனின் குற்றத்தைப் பொறுத்துக் கொள், என்று நான் எடுத்துச் சொல்வது உனக்கு புரியவில்லையா? நங்கையே! என் பொருட்டாவது சுந்தரரை ஏற்றுக் கொள்ளலாகாதா? அதுதான் உனக்கு தகுதியான செயலும் கூட.<BR>ஐயனே! இவ்வாறு திரும்ப திரும்ப என்னிடம் கதை கூறுவது தங்கள் பெருமைக்கு ஒருபோதும் ஒவ்வாது. இதற்கு நான் இணங்கப்போவதாக இல்லை. தயவுசெய்து போய் வாருங்கள் என்று கடுமையாக, தமது முடிவான பதிலைக் கூறினாள். அதற்குமேல், பரவையாரிடம் வாதாட விரும்பாத அரனார் அவளிடம் விடைபெற்றுப் புறப்பட்டார். எம்பெருமானை, பரவையார் மாளிகைக்குத் தூதராக அனுப்பிவிட்டு, அவரது வரவை எதிர்பார்த்திருந்த சுந்தரர், கங்கையை முடித்த சங்கரா! சற்றும் அறிவில்லாத இவ்வடியேன், தங்கள் திருப்பாதம் நோகுமாறு இப்பாதி இரவு வேளையில், பரவை மாளிகைக்கு அவளது புலவி தீர்த்துவரும் பொருட்டு தூதராக அனுப்பிவிட்டேனே! நான் செய்த இப்பொல்லாத பிழைக்கு மன்னிப்பே கிடையாது. இதற்கென்று தங்களை வணங்கி வேண்டினேனே! அபச்சாரம்! என் ஐயனுக்கு எவ்வளவு கொடிய பாவத்தை செய்துவிட்டேன் என்று வாய்விட்டுக் கதறி வருந்தினார். உடனே பரவையார் நினைவு ஏற்படவே, பரவையார் மாளிகையில், இறைவன் எப்படியும் எனக்காக வாதாடி, அவளது இசைவினைப் பெற்றே மீளுவார்; கண்டிப்பாக பரவையாரது சிறு ஊடலைத் தீர்த்து விட்டுத்தான் வருவார் என்று எண்ணி மகிழ்ச்சி கொண்டார் சுந்தரர். நேரம் நகர்ந்து கொண்டேயிருந்தது. சுந்தரர்க்கு ஓரிடத்தில் இருப்புக் கொள்ளவில்லை. அப்படியும் இப்படியுமாக அல்லல் பட்டுக் கொண்டிருந்தார். எம்பெருமான் வரும் வழியே தமது விழியையும் மனதையும் செல்லவிட்டார். அந்த நிலையில் மன்மதனின் மலர்க்கணை, மாரி போல் சுந்தரர் மீது பொழிந்தன. அவை மேலும் துன்பத்தைக் கொடுத்தன. இத்தருணத்தில் இறைவன், அர்ச்சகர் கோலத்தை மறைத்து பிறையணிந்த அண்ணலாக சுந்தரர் முன்னால் தோன்றினார். அணையை உடைத்துக் கொண்டு பாய்ந்து ஓடிவரும் வெள்ளப் பிரவாகம் போல் சுந்தரர், ஆசை பொங்கிப் பெருகி வர, எம்மை ஆட்கொண்ட அண்ணலே! இந்தப் பாதி இரவில் மலர்ப்பாதம் நோக பரவையார் மாளிகைக்கு எழுந்தருளி, எமக்காக வேண்டி அவளது பிணக்கைப் போக்கி வெற்றிப் பெருமிதத்தோடு எழுந்தருளியுள்ளீர்களே சுவாமி! ஐயனின் கருணையை என்னென்பேன்! என்று அகமும் முகமும் மலரக் கூறினார். மேல்சுந்தரர் செப்பியது கேட்டு செஞ்சடை வண்ணர், சுந்தரா! உன் ஆற்றலையும், அருந்திறத்தினையும் அளவிட முடியாத அளவிற்கு அடுக்கடுக்காக எடுத்துக் கூறினேன். அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகி விட்டதே. பரவையார் எமது மொழியைச் செவிசாய்க்க மறுத்து, வெறுப்போடு என்னைத் திரும்ப அனுப்பி விட்டாள் என மொழிந்தார். முக்கண்ணர் அருளியதைக் கேட்டு மனம் கலங்கிய சுந்தரர், நடுக்கமுற்று கண்கலங்கி, கரங்கூப்பி வணங்கியவாறு, தேவரீர் திருமொழியை மறுக்க வல்லவள் பரவையார் அல்லவே! ஐயன் அருள் கூர்ந்தால் அகிலத்தில் ஆகாதது ஒன்றில்லையே! தேவரீர்! இதற்காகவா வலிய வந்து எம்மை தடுத்தாட் கொண்டீர்கள்? முப்புரம் எரித்த மறையவனே! அமரர் வாழ ஆலகால விடமுண்ட அருமாமணியே! பாலனுக்காகக் காலனை உதைத்து, மார்கண்டேயன் என்னும் தொண்டனை அடிமை கொண்டருளிய அம்பலத்தரசே! என் மீது மட்டும் தங்கள் அருட்கண் மலரவில்லையா? சுவாமி! எம்மை வேண்டத்தகாதவன் என்று கருதி, திரும்ப வந்து விட்டீர்களோ? இறைவா! எனக்காக வேண்டி மீண்டும் ஒருமுறை பரவையாரிடம் சென்று அவளது சினத்தைப் போக்குவீர். எனது நோயையும், துயரத்தையும் நேரில் கண்டும், உமது திருவுள்ளம் இரங்கவில்லையா? இன்றிரவு ஐயன் அருள் செய்து என்னைப் பரவையாரோடு சேர்க்காவிட்டால் என்னுயிர் நீங்கி விடும் என்பது மட்டும் உறுதி என்று புலம்பி கண்ணீரால் எம்பெருமானின் பாதகமலங்களைக் குளிரச் செய்தார். தமது திருவடிகளில் சரணமென்று வீழ்ந்து பணிந்து கிடக்கும் சுந்தரரை அருளோடு பார்த்த எம்பெருமான், சுந்தரா எழுந்திரு! வருந்தாதே! உன் துயரத்தை நான் உணர்வதுபோல், எப்படியும் பரவையையும் உணருமாறு செய்கிறேன். மீண்டும் உன் பொருட்டு அவளிடம் சென்று வருகிறோம். கவலையை மறந்து திடமாக இரு. என்று மதுரமொழிபகர்ந்தவாறு பரவையார் மாளிகைக்கு மீண்டும் புறப்பட்டார் சங்கரர்! அர்ச்சகர் வடிவில் வந்த அரனார் சென்ற பிறகு பரவையார் மனதில் எதனாலோ, இனம் தெரியாத ஒருவித கலக்கம் ஏற்பட்டது. அந்தணர் வடிவுடன் எழுந்தருளியவர் திருவாரூர் திருக்கோயிலில் எழுந்தருளியிருக்கும் தியாகேசப் பெருமானே தான் என்ற உண்மையயை பரவையாருக்கு உணர்த்துவது போல் வியக்கதக்க நிகழ்ச்சிகள் பல பரவையார் மாளிகையில் தோன்றின. அது கண்ட பரவையார் மனம் திருக்கிட்டாள். எம்பெருமானுக்கு பெரும் பிழை இழைத்து விட்டோமே! ஐயோ! அபச்சாரம் நடந்துவிட்டது, கெட்டேன்! என் நாயகருக்காக, சிவவேதியர் கோலத்துடன் வந்தணைந்தவரை இன்னாரென்று அறியமுடியாத அளவிற்கு என் அகக் கண்களும், புறக்கண்களும் குருடாகிவிட்டனவே! பரமனுக்கு பெரும் துன்பத்தை கொடுத்த பாவியாகிவிட்டேனே! என்று பலவாறு கருதிப் புலம்பி, நிலை தளர்ந்து தோழியர்களுடன் உறக்கமின்றி வாயிலை நோக்கியவாறு அமர்ந்திருந்தாள் பரவையார். அது சமயம் இறைவன் மீண்டும் பூதகண நாதர்கள் சூழ, பரவையார் மாளிகைக்கு எழுந்தருளினார். பரவையார் விரைந்து சென்று பரமனின் பொற்பாதங்களை வணங்கி, வரவேற்று எதிர்கொண்டு மாளிகையுள் அழைத்துச் சென்றாள். பரவையார் மாளிகை, மகாதேவனின் அருள் ஒளியினால் திருக்கயிலாயத் திருமாமலைபோல் ஜெகஜோதியாகப் பிரகாசித்தது.பரவையார் கரமிரண்டையும் தாமரை குவித்தாற் போன்று சிரமீது தூக்கியவண்ணம், கண்களில் நீர்மல்க, அஞ்சி நடுநடுங்கி நின்று கொண்டிருந்தாள். பெருமான், பரவையாரை திருநோக்கம் செய்தார். பரவையே! என் தோழனான நம்பியாரூரன் எம்மை அடிமைகொண்ட உரிமையால், தூதராக ஏவ, மீண்டும் இப்பொழுது உன்னிடம் வந்துள்ளோம்! முன்போல் இம்முறையும் மறுத்துவிடாதே! உனது பிரிவால் என் தோழன் சொல்ல முடியாத நிலையில் அளவு கடந்து வருந்துகின்றான். நீ அவனை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும் என்று திருவாய் மலர்ந்தார் கண்ணுதற் கடவுள். அன்பே வடிவெடுத்த அரனார் முன்னே, அச்சமே வடிவாகி, உளம் தடுமாற, வணங்கிப் பவுடன் நின்று கொண்டிருந்த பரவையார், ஐயனே! முன்பு அந்தணர் வடிவத்தில் எழுந்தருளிய அண்ணலே! முற்பிறப்பில் நான் செய்த அருந்தவப்பயனை என்னென்பேன்! தேவரீர் இந்த ஏழையின் மாளிகைக்குத் திருவடி தேய எழுந்தருளும் அளவிற்குத் தவறு புரிந்தேனே! அறியாது செய்த என் பிழையைப் பொறுத்தருள வேண்டும். இனியும் தேவரீர் திருமொழிக்கு அடியேன் இசையாமல் வேறு என்செய்ய வல்லேன்? என்று கூறி நிலமதில் வீழ்ந்து வணங்கி எழுந்தாள். எம்பெருமான் பரவையார் மொழிந்ததைக் கேட்டு நங்கையே! உனது பண்பிற்குத் தக்கவாறு நீ மொழிந்தது நன்றே! என்று பாராட்டி, மாயமாய் மறைந்தருளினார். பரவையார், எம்பெருமான் மறைந்த திசைநோக்கித் தொழுவண்ணம் நின்று கொண்டிருந்தாள். அவளது மனதில் சுந்தரரின் தூயவடிவம் பிரகாசித்தது. பரவையார் பொறுமையே வடிவமாய், நாயகரின் நினைவினால் சிலையாகி நின்றாள். சுந்தரர் முன்னால் எம்பெருமான் எழுந்தருளினார். சுந்தரர் நிலமதில் வீழ்ந்து அவரது மலரடிகளைப் பணிந்து, எம்பெருமானே! இம்முறை எம் பரவையாரிடமிருந்து யாது குறை கொண்டு வந்தீர்கள்? என்று ஆவலோடு வேட்கை மேலிட வினவினார். எம்பெருமான் சுந்தரரைப் பார்த்து, நம்பியாரூரனே! உன் மீது பரவையார் கொண்டிருந்த தீராத கோபத்தைத் தணிய செய்தோம். இனிமேல், எவ்வித தடையுமின்றி நீ அவளைச் சென்று அடைந்து முன்போல் மகிழ்ந்து வாழலாம் என்று அருளி பூங்கோயிலுள் புகுந்தார். மறுநாள் சுந்தரர் பரமனை வணங்கி பரவையாரது மாளிகைக்கு அன்பர்களுடனும் அடியார்களுடனும் புறப்பட்டார். மலர்மாலை, கலவைச் சந்தனம், கஸ்தூரி சாந்து, தங்க ஆபரணங்கள், பட்டாடைகள் முதலிய பல நற்சடங்கிற்கான பொருட்களை ஏந்தியவண்ணம் அன்பர்கள் முன்னால் சென்று கொண்டிருக்க, மங்கல இசைகள் ஒலி எழுப்ப இறைவன் திருநாமம் விண்ணெட்ட முழங்க சுந்தரர், சுந்தரகோலத்தோடு பவனி புறப்பட்ட காட்சியைக் கண்டு வியக்காதவரில்லை. சுந்தரர் எழுந்தருளப் போகும் பெருமிதத்தில், பரவையார் பொழுது புலரும் நேரத்துள் தமது மாளிகையை அழகுற விளங்கச் செய்தாள். மாளிகை எங்கும் நெய் விளக்குகளை ஏற்றி, பொற் சுண்ணங்களையும் மலர் தாதுக்களையும் சிந்தினர். தூபங்களையும், புண்ணியப் புது நீரை நிறைத்து வைத்த பொற்குடங்களையும் வரிசையாக வைத்தனர். வண்டுகள் ரீங்காரமிடும் நறுமலர் மாலைகளையும், ஒளிமிகும் மணிமாலைகளையும் அடுத்தடுத்து அழகிற்கு அழகு செய்தாற்போல் தொங்கவிட்டனர். வெண்கடுகுப் புகையாலும், நெய்யுடன் கலந்த அகிற் புகையாலும் மாளிகை முழுவதும் தெய்வமணம் கமழச் செய்தனர். வண்ண மலர் தூவி, வாழ்த்தொலி எழுப்பி, சுந்தரரை வரவேற்க, பரவையார் தோழியர்களோடு வாயிலருகே நின்று கொண்டிருந்தாள். மங்கல இசை ஒலி எழுப்ப, தொண்டர்களுடன் மாளிகையை வந்தடைந்தார் சுந்தரர். பரவையார் காதல் வெள்ளத்தில் மூழ்கித் திளைத்தவராய், புத்தம் புது மலர்களை, சுந்தரரின் சேவடிகளிலே கொட்டிக் குவித்து வணங்கி வரவேற்றாள். சுந்தரர் மகிழ்ச்சி பொங்க, பரவையாரின் திருக்கரத்தைப் பற்றிக்கொண்டு மாளிகைக்குள் சென்றார். முன்போல் உடலும் உயிரும் ஒன்றாயினர். பரவையாரும், சுந்தரரும் வாழ்க்கைக் கடலில் பக்தி எனும் ஓடத்தில் அமர்ந்து பரமனின் திருவடி என்னும் கரையை அடைய வழி செய்யத் தொடங்கினர். பரவையார், பரமனைப் பணிவதோடு, தமது நாயகரான சுந்தரரின் திருவடிகளையும் வணங்கி வழிபட்டாள். இவ்வாறு இருவரும் இல்லறம் எனும் நல்லறத்தில் நலம்பெற வாழ்ந்து வரலாயினர். சித்தத்தைச் சிவன்பாற் வைத்து நித்தம் நித்தம் புற்றிடங்கொண்ட பெருமானின் ஞானக் கதிர்களாகிய திருத்தாள்களை போற்றிப் பணிந்து வந்தவாறு பரவை நாச்சியாருடன் இன்புற்று வாழ்ந்து வந்தார் சுந்தரர். இவ்வாறு வாழ்ந்து வரும் நாளில் இவருக்கு சேரமான் பெருமாள் நாயனாரைக் கண்டுவர வேண்டும் என்ற காதல் உள்ளத்திலே ஊற்றெடுத்து பெருகியது. மேல்ஒரு நன்னாள் பரவையாரிடம் விடை பெற்றுப் பூங்கோவில் அமர்ந்து பெருமானின் பொற்கழல்களை பணிந்து அடியார் புடைசூழ திருவஞ்சைக்களம் புறப்பட்டார்.<BR>சோழநாட்டுத் தலங்களை கண்குளிரக் கண்டு வணங்கியவாறு கொங்கு நாட்டிலுள்ள திருப்புக கொளியூரை அடைந்தார். வேதியர் வாழ்கின்ற தேரோடும் திருவீதி வழியாக வந்து கொண்டிருந்த சுந்தரர் அவ்வீதியில் எதிர் எதிராக அமைந்துள்ள இரு வீட்டில் நடந்த நிகழ்ச்சியை கண்ணுற்றார். ஒரு வீட்டில் அலங்காரமும் ஆனந்தமும் பொங்கிப் பெருகி, மங்கல வாத்தியங்கள் முழங்கியவாறு இருக்க மற்றொரு வீட்டில் அமங்கலமான தோற்றமும், அழுகையும் நெஞ்சை உருக்கும் சோகக் காட்சியும் இருக்கக் கண்டார். சுந்தரர், அங்குள்ளோரிடம், இவ்விரு வீட்டார்க்கும் உள்ள இன்ப துன்பங்களுக்கு காரணம் யாது? என்று வினவினார். அதற்கு அந்தணர்கள், சுவாமி! இவ்விரு வீட்டிலும் இருந்த இரு சிறுவர்கள், அருகிலுள்ள மடுவிற்கு நீராடச் சென்றார்கள். அதில் ஒருவனை முதலை விழுங்கி விட்டது. தப்பிப் பிழைத்த மற்றொருவனுக்கு இப்பொழுது உரிய பருவம் வந்ததும் பெற்றோர்கள் முப்புரி நூல் அணியும் சடங்கினைச் செய்து மகிழ்கிறார்கள் என்றனர். இதற்குள் அச்சிறுவனை இழந்து அழுது கொண்டிருந்த பெற்றோர்கள், சுந்தரர் எழுந்தருளியுள்ளார் என்று கேள்வியுற்று வேதனையை மறந்த நிலையில் விரைந்தோடி வந்து அவரது திருவடித் தாமரைகளைப் பணிந்தனர். அருகிலுள்ளோர் மூலம் சிறுவனை இழந்த பெற்றோர்கள் இவர்கள்தான் என்பதைத் தெரிந்து கொண்ட சுந்தரர், சோகம் நீங்கி; முகமலர்ச்சியுடன் தம்மை வந்து வணங்கிய பெற்றோர்களைக் கண்டு, நீங்களா மகனை இழந்தவர்கள்? என்று வியப்பு மேலிடக் கேட்டார். ஆமாம் சுவாமி ! அந்நிகழ்ச்சி நடந்து ஆண்டுகள் பல தாண்டிவிட்டன. ஆனால் இப்பொழுது ஐயன் எழுந்தருளியது கண்டு, நாங்கள் மட்டற்ற மகிழ்ச்சி அடைகின்றோம். இம்மையில் நாங்கள் பெற்ற பேறு எவர் பெறுவர் என்று கூறி மீண்டும் அவரது திருவடிகளில் வீழ்ந்து வணங்கினர். அப்பெற்றோர்களின் அன்பிற்கும், பக்திக்கும் கட்டுப்பட்ட சுந்தரர் அவர்களது துயரை எப்படியும் தீர்ப்பது என்ற உறுதியில் அவர்களிடம் குழந்தையை விழுங்கிய மடு எங்குள்ளது? என்று கேட்டார். பெற்றோர்கள் சுவாமிகளை அழைத்துக்கொண்டு மடுவிற்குப் புறப்பட்டனர். சுந்தரரைத் தொடர்ந்து சிவ அன்பர்களும் சென்றனர். மடுவின் கரையை அடைந்தனர். பெற்றோர்கள் சுந்தரரை வணங்கி, சுவாமி ! எங்கள் குலக் கொழுந்தை விழுங்கிய மடு இதுதான் என்று கூறினார். சுந்தரர் பெருமாளைத் தியானித்தார். ஆக்கவும், அழிக்கவும் வல்ல அவினாசியப்பரை துதித்து ஏற்றான் மறக்கேன் எனத் தொடங்கும் பதிகம் ஒன்றைப் பாடினார். தேமதூரத் தமிழில் நான்காவது பாட்டைப் பாடி முடிப்பதற்குள் பெரு முதலை ஒன்று நீரிலிருந்து வெளிப்பட்டு பிள்ளையைக் கரையில் கொண்டுவந்து உமிழ்ந்தது. அன்பு பெற்றோர்கள் ஓடிச்சென்று தங்களது பச்சிளம் பாலகனை வாரித் தழுவி உச்சிமோந்து அகமும், முகமும் மலர சிறுவனுடன் சுந்தரர் திருவடியைத் தொழுதனர். சுந்தரரின் தெய்வீகச் சக்தியைக் கண்டு பக்தர்கள் அதிசயித்து வியந்து போற்றினர். சுந்தரமூர்த்தி நாயனார் வாழ்க என்ற கோஷம் வானைப் பிளந்தது. சுந்தரர் அவர்களை வாழ்த்தி அருளினார். அவிநாசியப்பர் ஆலயம் சென்று, பாடிப் பேரின்பம் பூண்டு, மீண்டும் தமது பயணத்தைத் தொடர்ந்தார் சுந்தரர். சுந்தரரின் வியக்கத்தக்க அருட்செயலையும், தமது நகருக்கு எழுந்தருளுவதையும் கேள்வியுற்ற சேரர் கொடுங்கோளூரைக் கவின்பெற அலங்கரிக்கத் தக்க ஏற்பாடுகளைச் செய்தார். சுந்தரர் வருகையை நாடு முழுவதும் பறையறைந்து அறிவித்தார். சேரப் பெருந்தகையார் யானை மீது புறப்பட்டார். அணி, தேர், புரவி, ஆட்பெரும் படையுடனும் மற்ற பரிவாரங்களுடனும், சிவ அன்பர்களுடனும், புறப்பட்ட சேர வேந்தன், சுந்தரரை எதிர்கொண்டு அழைக்க எல்லையிலேயே காத்திருந்தார். சுந்தரர் அன்பர்களுடன், தமது சிவயாத்திரையை முடித்தவாறு எல்லையை வந்தடைந்ததும் சேரப் பெருந்தகையார் யானையினின்றும் இறங்கினார். விரைந்தோடிச் சென்று சுந்தரரை ஆரத்தழுவினார். சுந்தரரும், சேரமான் பெருமாள் நாயனாரை ஆரத்தழுவி அகமகிழ்ந்தார். கடல் வெள்ளம்போல் திரண்டு வந்த மக்கள் விண்ணெட்ட வாழ்த்தொலி எழுப்பினர்.முரசு ஒலிக்க - சங்கு முழக்க - பறை அலற - மேள தாளங்கள் சிவநாமத்தோடு பொங்கி எழ, சேரமான் பெருமாள் சுந்தரரைத் தாம் அமர்ந்து வந்த யானை மீது அமரச் செய்தார். தாமும் பின்னால் அமர்ந்து, வெண் கொற்றக் குடையினைப் பிடித்தார். அனைவரும் அரண்மனையை அடைந்தனர். மன்னனின் எல்லையில்லாப் பக்திக்குத் தலைவணங்கி எல்லையில் கூடியிருந்த பக்தர்கள் ஆனந்தக் கண்ணீர் வடித்தனர். இரு ஞானமூர்த்திகளும் அரண்மனைக்குள் எழுந்தருளினர். சேரமான் பெருமாள் சுந்தரரைத் தமது அரியணையில் அமரச் செய்து வழிபாடு புரிந்து இன்புற்றார். இரு சிவச் செல்வர்களும் மாகோதை மாநகரில் இருந்தவாறே அடுத்துள்ள சிவத்தலங்கள் பலவற்றிற்குச் சென்று பதிகம் பாடிப் பரமனைக் கண்டுகளித்து வந்தனர். மாகோதை நகரில் குடிகொண்டிருக்கும் எம்பெருமானை வழிபட்டு வரும் சேரரும், சுந்தரரும், ஆலயத்துள் செல்லும் முன் அடுத்துள்ள அழகிய பொய்கையில் நீராடிச் செல்வது வழக்கம். ஒருநாள் இருவரும் பொய்கையில் நீராடிக் கொண்டிருக்கும்பொழுது சுந்தரர் மட்டும், சற்று முன்னதாகவே நீராடலை முடித்துக்கொண்டு இறைவன் திருமுன்னே வழிபடச் சென்றார். சுந்தரரின் உடல் புளகம் போர்த்தது; உள்ளத்திலே அருள் உயர்வு பொங்கி எழுந்தது. சைவப் பழமான சுந்தரர் பேரொளிப் பிழம்புபோல் ஆனார். அவர் கண்களில் கண்ணீர் பெருகியது. மேல்எம்பெருமான் திருமுன் பன்முறை வீழ்ந்து வீழ்ந்து வணங்கி எழுந்தார். அவரை அறியாத உள்ளக்கிளர்ச்சியும், உடல் நெகிழ்ச்சியும் அவருக்கு உலக மாயையிலிருந்து விடுபடும் பேரின்ப சக்தியைக் கொடுத்தது. அருளே வடிவான சுந்தரர் தலைக்குத் தலைமாலை என்னும் பதிகத்தைக் கயிலையரசன் செவிகுளிரப் பாடிப் பரவினார். சுந்தரரின் செந்தமிழ்த் தேன் அமுதத்தை அள்ளிப் பருகி மெய்யுருகிய நீலகண்டர் தமது அன்பு ஆலால சுந்தரரைத் திரும்பவும் தம்மோடு அழைத்துக் கொள்ளத் திருவுள்ளங் கொண்டார். அதற்கேற்ப எம்பெருமான் அமரர்களை அழைத்து ஆலாலசுந்தரரை வெள்ளை யானையில் அழைத்து வருவீர்களாக! என்று ஆணையிட்டார். அமரர்கள் வெள்ளை யானையுடன் புறப்பட்டு திருவஞ்சைக்களம் அடைந்தனர். ஆரூரைக் கண்டு வணங்கினர். ஆண்டவனின் ஆணையைக் கூறி வெள்ளையானையில் அமர்ந்து கயிலைக்கு எழுந்தருளுமாறு கேட்டுக் கொண்டனர். அரனார் அருள் வாக்கிலே, செய்வதறியாது நின்ற சுந்தரர் எம்பெருமானை நினைத்து துதித்தார். தேவர்கள், அவரை வலம் வந்து வெள்ளை யானையின் மீது எழுந்தருளச் செய்தனர். சுந்தரர் தமது தோழராம் சேரர் நினைவாக வெள்ளை யானை மீதமர்ந்து விண்ணை நோக்கிப் புறப்பட்டார். அமரர்கள் மலர்மாரி பொழிந்தனர். பொய்கையினின்றும் வந்த சேரவேந்தன் சுந்தரரைக் காணாது திகைத்தார். சுந்தரர் திருக்கயிலை மலைக்கு வெள்ளை யானையில் எழுந்தருளுவதைத் தமது தபோ வலிமையால் அறிந்து கொண்டார் சேர மன்னர்; அக்கணமே தாமும் ஆரூரரைத் தொடர்ந்து செல்லத் திருவுள்ளங் கொண்டார். சோழன் வெண்புரவியில் அமர்ந்தார். குதிரையின் செவியில் நமச்சிவாய மந்திரத்தை இடையறாது ஓதினார். குதிரை காற்றினும் கடுகப் புறப்பட்டது. வெள்ளை யானையை அணுகி, வலம் வந்தது. மன்னர் சுந்தரரை வணங்கி வழிபட்டார். மன்னர் புரவியில், யானைக்கு முன்னதாகவே கயிலைமலையை நோக்கிப் புறப்பட்டார். சுந்தரர் தம்மை வணங்கி முன்னால் செல்லும் மன்னனைக் கண்டார். தமக்குள் புன்முறுவல் பூத்தார். வெள்ளை யானையில் வந்து கொண்டிருந்த சுந்தரர் தானெனை முன் படைத்தான் எனத் தொடங்கும் பதிகத்தைப் பாடியவாறு கயிலைமலைக் கோவிலின் தென்திசை வாயிலை அடைந்தார். வேகமாக வந்த சேரமான் வாயில் அடைத்திருப்பது கண்டு திகைத்தார். அங்கேயே சுந்தரர் வருகையை எதிர்பார்த்து நின்றார். சுந்தரர் வந்தார். அங்கே நின்று கொண்டிருந்த சேரமான் பெருமாள் சுந்தரரை நமஸ்கரித்தார். இரு சிவச் செம்மல்களும் தமது வாகனங்களை விட்டிறங்கி, திருவாயில்கள் பலவற்றைக் கடந்து, திருவணுக்கன் திருவாயிலை அடைந்தார்கள். சேரர் அவ்வாயிலில் தடைபட்டு நின்றார். சுந்தரர் மட்டும் இறைவன் திருவருளாள் எம்பெருமான் திருமுன் சென்றார். பொன்மயமான கயிலை மாமலையில் வேத முழக்கங்களும், துந்துபி நாதங்களும் ஒலித்த வண்ணமாகவே இருந்தன.முனிவர்கள் சிரமீது கரம் உயர்த்தி சுந்தரரை வரவேற்றனர். தேவகணங்கள், கந்தர்வர்கள் கற்பக மலர் தூவித் துதித்துக் கொண்டிருக்க, எம்பெருமான் கற்பக வல்லியோடு எழுந்தருளியிருந்தார். இத்திருக்கோலக் காட்சியைக் கண்டு கண்களில் நீர் மல்க தாய்ப் பசுவைக் கண்டு விரைந்து வரும் இளங்கன்றைப் போல் ஆராக் காதலோடு ஐயன் திருமுன் சென்று அவரது கமலமலர்ப் பாதங்களை பணிந்து துதித்து நின்றார் சுந்தரர்! ஆலால சுந்தரரைக் கண்ட திருசடை அண்ணல், ஆனந்தப் பெருக்கோடு, ஆரூரனே நீ வந்தனையோ? என்று திருவாய் மலர்ந்து அருளினார். ஐயனின் அமுதமொழிக் கேட்டு அகமும் முகமும் மலர்ந்த சுந்தரர், ஐயனே ! இந்த ஏழையின் பிழை பொறுத்து, எம்மைத் தடுத்தாட் கொண்ட தெய்வமே! முடிவிலாத் தூய முத்தி நெறியினை அருளிய பெருங்கருணையை எடுத்தருளும் திறத்தினை எமக்கருள வில்லையே? என்று சொல்லி பலமுறை பணிந்து எழுந்து சிவானந்தப் பாற்கடலில் அழுந்தி நின்றார். பேரின்பப் பெருக்கில் மெய்யுருகி நின்ற தம்பிரான் தோழர், எம்பெருமானிடம், நிலவணிந்த நீரணி வேணிய! நின் மலர்க்கழல் சாரும் பொருட்டுச் சாரும் தவத்தையுடைய சேரமான் பெருமாள் திருவணுக்கன் திருவாயிற் புறத்தே தடைபட்டு நிற்கின்றார் என பணிவோடு பகர்ந்தார். சங்கரர் நந்திதேவரை அழைத்துச் சேரரை அழைத்துவர ஆணையிட்டருளினார். நந்திதேவர் இறைவன் ஆணைப்படி சேரரை அழைத்து வந்தார். எம்பெருமான் திருமுன் வந்த சேரமான் பெருமாள் நாயனார் உள்ளமும் உடலும் பொங்கப் பூரிக்க மெய்ம்மறந்து எம்பெருமானின் திருத்தாள்களில் பன்முறை வீழ்ந்து வணங்கி எழுந்தார். எம்பெருமானின் கொவ்வைச் செவ்வாயில் குமிண் சிரிப்பு தவழ சேரரை நோக்கி, எமது அழைப்பின்றி நீ ஏன் இவ்வளவு தொலைவு வந்தாய்? என திருவாய் மலர்ந்து அருளினார். சிரமீது கரங்குவித்து நின்ற சேரமன்னன் எம்பெருமான் திருமுன் தமது பிரார்த்தனையைச் சமர்ப்பித்தார். இவ்வெளியோன் ஆரூரர் கழல் போற்றி ஐயன் திருமுன் அணையப் பெற்றேன். ஐயனின் கருணை வெள்ளத்தால், அடியேன் திருமுன்னே வந்து நின்று சேவித்து நிற்கும் பொன்னான பேறு பெற்றேன். இப்பொழுது இந்த எளியோனுக்குத் தேவரீர்! திருவருள் புரிய வேண்டும்.ஆரூரரின் அரிய நட்பை இவ்வடியேனுக்கு தந்தருளிய வேத முதல்வனே ! எம்பெருமான் மீது பூண்டுள்ள ஆராக்காதலால் இவ்வடியேன் திருவுலா என்னும் பிரபந்தம் ஒன்று பாடினேன். அதனை ஐயன் திருச்செவி சாத்தி அருளப் பணிவோடு கேட்கின்றேன் என்று பிரார்த்தித்தார். எம்பெருமான் சொல்லுக ! எனச் சேரர்க்கு ஆணையிட்டருளினார். புலமைமிக்கச் சேரப் பெருந்தகையார் அருள்மிக்க ஞானவுலா என்னும் திருக்கயிலாய உலாவை மெய்யுருகப் பாடினார். எம்பெருமான் ஞான உலாவினைக் கேட்டு மகிழ்ந்தார். சேரரையும், சுந்தரரையும் சிவகணத் தலைவர்களாக, தமது திருவடி நிழலில் இருக்குமாறு வாழ்த்தி அருளினார். சேரமான் பெருமாள் நாயனார் சிவபிரானின் செஞ்சேவடிகளைத் துதித்து திருத்தொண்டு புரியலானார். சுந்தரமூர்த்தி நாயனார், முன்போல் ஆலால சுந்தரராய், இறைவனின் அணுக்கத் தொண்டராய்த் திருத்தொண்டு புரிந்து வரலானார். பூவுலகில் இருந்த பரவையாரும், சங்கிலியாரும் உலகப் பற்றை விட்டகன்று முன்போல் கமலினி, அனிநிந்தையாருமாகி உமாதேவியாரின் சேவடி போற்றும் சேடிகள் ஆயினர். சுந்தரமூர்த்தி நாயனார் குடும்பமே ஒரு நாயன்மார் குடும்பம் ஆகும். தந்தை சடையனார், தாய் இசைஞானியார், சுந்தரர் இவர்கள் மூவருமே நாயன்மார் என்ற பெருமையைப் பெற்றவர்கள். குருபூஜை : சுந்தரரின் குருபூஜை ஆடி மாதம் சுவாதி நட்சத்திரத்தில் கொண்டாடப்படுகிறது. மேல் |
No comments:
Post a Comment